திங்கள், 12 டிசம்பர், 2011

வரலாறு என்பது ஆயுதம்.

கடந்த கால மனிதவரலாறு என்பது நாம் நினைக்கிற மாதிரி அமைந்திருந்தால் எவ்வளவு வசதி, துரதிஷ்டவசமாக கடந்த காலம் ஒவ்வொருவரின் நம்பிக்கை அல்லது சித்தாந்தத்தின் படி இருக்கவில்லை.

ஆரியர்கள் மத்தியஆசியாவிலிருந்து இந்திய துணைக்கண்டத்தில் குடியேறினர் என்பதை பள்ளியில் வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறோம். இந்திய வரலாற்றாசியர்களுக்கு ரிக்வேதம் மிகச்சிறந்த சான்றாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆரிய-திராவிட பிரிவினைத் தூண்டுவதற்கு அவசியமில்லை. திராவிட இயக்க அரசியல் என்பது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தான் தோன்றியது. வெள்ளையர்களுக்கு இந்தியாவை இரு கூறுகளாக வன்மம் நீடித்திருக்க அவர்களுக்குத் தேவைப்பட்டது மதப்பிரிவினை. இங்கே நிலவிய இந்து-முஸ்லீம் மதவேறுபாட்டை அவர்கள் பயன்படுத்தி கூர்தீட்டினார்கள்.

மதம் என்பது நம்பிக்கையாளர்களுக்கு அது ஒரு வழிபாடு, ஆனால் அதை வைத்து அரசியல் அதிகாரம் பெறுவதற்கு பெரும்பான்மை மக்களை ஒருமுகப்படுத்த இல்லாத கடந்தகால பெருமைகளை உணர்த்த கடந்தகால வரலாறு தேவைப்படுகிறது. அதற்கு அகண்டபாரதத்தை அமைப்பதற்கும் மத அடிப்படையிலான இந்து தேசத்தை கட்டமைக்க ஆரியர்கள் குடியேறியர்கள் என்பது அவர்களுக்கு கசக்கிறது. அதனால் சிந்துவெளி நாகரீகத்தை ஆரிய நாகரீகமாக மாற்ற வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் முயற்சி செய்கிறார்கள். வரலாறு என்பது ஆய்வுக்குரியது, மதம் என்பது நம்பிக்கை சம்பந்தமானது. பெரும்பான்மையோர் நம்புகிறார்கள் என்பதற்காக வரலாற்றை திருத்தமுடியாது.

அரசியல் என்பது எல்லோருக்குள்ளும் இருக்கிறது, அது வரலாற்றிசியர்கள், சமூகவியலாளர்கள் , அறிவுஜீவிகள் கலைத்துறையினர் என்று யாரையும் விட்டுவைக்காது. ராகுல் சாங்கிருத்யாயன் ஒரு கம்யூனிச நாவலாசிரியர் என்பதற்காக அவர் சொல்வது எல்லாம் `இந்துத்துவா`விற்கு எதிரான கருத்துக்கள் அல்ல. மனிதகுல வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் ஆராய்ந்தவர். வேத்கால வரலாற்றை அறிவதற்காக ரிக்வேதத்தை ஆராய்ந்தவர். இந்தியாவில் ரொமிலாதாப்பர், ஆர்.எஸ்.சர்மா, டி.டி.கோசாம்பி, இர்பான் ஹபீப் போன்றவர்கள் வரலாற்றாசியர்கள் மார்க்சிய வரலாற்றியசியர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதை எப்போதும் மறுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இடதுசாரிகள் சாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் அரசியல் நடத்தவில்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட இனம், மொழி, சாதி, மதம் உயர்ந்தது அல்லது அவர்கள் பூர்வகுடிகள் இல்லை என்ற அரசியல் அவர்களுக்குத் தேவையில்லை. திராவிடநாடு என்பதற்காக அரசியல் செய்வதற்கு ஆரிய-திராவிட ஆராய்ச்சியும் திராவிடர்கள் தான் பூர்வகுடிகள் என்ற கருத்து, வரலாறு தேவையாய் இருக்கிறது. அதேபோல் இந்துத்துவா அரசியலுக்கு ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது தேவைப்படுகிறது. துரதிஷ்டவசமாக ஆரியர்கள் சப்தசிந்து பகுதியில் பிரவேசித்தபோதுதான் ரிக்வேதத்தை இயற்றினார்கள்.

இந்தியா என்பது ஒரு குடியேற்ற நாடு, யார் முன்னர் வந்தார்கள் பின்னர் வந்தார்கள் என்பது தான் வரலாற்றிற்குத்தேவை. மனித இனம் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தான் உலகெம்ங்கும் பரவியிருக்கிறது என்பதையும் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆப்பிரிக்கர்கள் எனது மூதாதையர் அல்லது ஆரியர்கள் ரத்தம் நம் உடம்பில் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆரியர்கள் கங்கைச் சமவெளியில் பிரவேசித்தபின்பு இந்தியாவில் நிலப்பிரபுத்துவம் ஆரம்பமாகிறது. இன்றிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் இன்றளவிற்கு தனியான இனமாக இல்லை, ரத்தக்கலப்பு ஏற்பட்டுவிட்டது. பூர்வகுடிகளிடம் ஆரியர்கள் முதலில் வர்ண வேற்றுமை பாராட்டினார்கள், ரத்தக்கலப்பு ஏற்பட்டுவிடகூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள் ஆனால் அது நீடிக்கவில்லை. சிந்துவெளி மக்களை வெற்றிகொண்ட பிறகு ஆரியர்கள் இமயமலை அடிவாரத்தில் இருந்த அசுர மன்னம் சம்பரன் திவோதஸை அலைக்கழித்துவந்தான். சம்பரன் கிராத இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் `கருப்பு நிறத்தோர்` பட்டியலில் சேர்த்தார்கள். சிந்துவெளி பண்பாட்டளர்கள் பின்பற்றிய பெண்தெய்வ வழிபாடு, பசுபதி வழிபாடு, ஆண்குறி (சிவலிங்க) வழிபாட்டை ஆரியர்கள் வெறுத்தனர்.
ஆரியர்கள் மேய்ச்சல் வாழ்க்கையை நடத்தியவர்கள், கங்கைச்சமவெளியில் வருவதற்கு முன்புவரை அவர்களிடம் அடிமைகள் வைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அவர்கள் மாமிச உணவை சாப்பிட்டார்கள் அதுவும் இன்று இந்துத்துவா அரசியலுக்கு புனிதமான `பசு`வின் இறைச்சியை உண்டார்கள். குதிரை, ஆடு,இளங்கன்று என்று எதையும் விட்டுவைக்கவில்லை ஏனென்றால் விவசாயம் அறிந்திராத ஒரு சமூகம் புலால் உணவை சாப்பிட்டதில் வியப்பில்லை. சோமபானம் என்ற மதுவை உண்டு ஆடல் பாடல் என மாலை வேளைகளை கொண்டாடினார்கள். மேய்ச்சல் என்பதே எளிதாக புலால் உணவிற்காக பால் தேவைக்ககவும் செய்தார்கள். இன்று அதையெல்லாம் `இந்துத்துவா அரசியலுக்காக ஆரியர்களின் வாழ்க்கை முறையை மாற்றவேண்டியிருக்கிறது. ஆரியர்களிடம் வருணப்பாகுபாடு இருக்கவில்லை, ஒரே குடும்பத்தில் ஒருவர் பிராமண்ராகவும், ஒருவர் ஷத்திரியாராகவும் மற்ரொருவர் வைசியராகவும் இருந்துள்ளார்கள். ஆரியர்களுக்கும் இந்தியப்பூர்வகுடிகளுக்கும் இடையே இனக்கலப்பு ஏற்பட்டுத் தோன்றிய நிபுணர்களான புதிய வர்க்கத்தின்ரே முடிவில் எல்லா ஆரியச்சடங்குகளுக்கும் ஏகபோக உரிமை கொண்டாடினர், அவர்களே பிராமணர்கள். வேதம் சப்த-சிந்து என்றழைக்கப்படுகிற ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதியில் ஆரியர்கள் பிரவேசித்தபோது இயற்றப்பட்டதால் தான் என்னவோ அந்தப்பகுதியை அகண்ட பாரத வரைபடத்தில் அஜெண்டாக சேர்த்துக் கொண்டார்கள்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

தேவ-அசுர யுத்தத்தின் வேர் எங்கே?

“மனிதன் எந்த உணவை உண்கிறானோ அதே உணவையே அவனது தேவனும் உண்கிறான். மனிதன் எந்த உருவில் இருக்கிறானோ அதே உருவத்தில் அவனுடைய தேவனும் இருக்கிறான்” என்கிறது ரிக் வேதம்.

தந்தை பெரியார், இராமாயணம் மற்றும் வைதீக மதத்தின் புராணங்களில் வருகின்ற தேவர்- அசுரர் யுத்தங்களை ஆரிய-திராவிட யுத்தம் என்று சொன்னார்.தீபாவளி பண்டிகைக்காக கொல்லப்படும் நரகாசுரன் ஆகட்டும், முருகனால் சூரசம்ஹாரத்தில் கொல்லப்படுகிற அரக்கன் ஆனாலும் சரி அது ஆரிய-திராவிட போர்களின் கதைதான். ஆனால் வெட்கம் கெட்ட தமிழர்கள் தம் இனத்தவரான அரக்கனை கொல்கிற ஆரிய விழாவை தீபாவளி என கொண்டாடுகிறோம் என வருந்தினார். நம்முடைய இதிகாசங்கள் என்னவோ மஹாபாரத்தை பல இலட்சங்கள் வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், இராமாயாணத்தையும் அதே பாணியில் திரேதா யுகத்தில் நடந்த கதை எனவும் சொல்கிறார்கள். `சோ` எழுதிய மஹாபாரதம் பேசுகிறது நூலில் நகுல-சகாதேவர்கள் 13 ஆண்டு வனவாசத்தில் தமிழகத்தில் சேர-சோழர் அல்லது பாண்டியனை பார்த்ததாக எழுதியிருக்கிறார், இது எப்படியிருக்கு? ஆனால் மஹாபாரத்தின் கதையின் காலம் சூது வாது, ஏமாற்று, வஞ்சகம் நிறைந்த அரசாட்சி கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை இருக்கலாம் என ஆய்வாள்ர்கள் சொல்கிறார்கள். ராமாயாணமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் அரச குமாரரின் கதை என்கிறார்கள். மனிதகுல வரலாற்றில் ஆராய்ந்தால் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் ‘மனிதனாகவே’ இல்லை. ஆனால் நம்முடைய புராணங்களில் வரும் கடவுளர்களுக்கு மீசையோ, தாடியோ கிடையாது. சித்திரங்கள் ஏன் அப்படி வரையப்பட்டன என்றால் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட வரிகள் தான் சாட்சி. இந்த இதிகாசங்களை உருவாக்கியவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி கடவுளையும் கற்பனை செய்தார்கள். ஆனால் இராமாயாணக்கதையிலும், மஹாபாரதத்திலும் அரக்கர்கள் என்பவர்கள் குண்டாகவும், சுருட்டை தலைமுடியுடன், முருக்கிய மீசை கொண்ட தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். இப்போதும் சமூகத்தில் மீசை வைக்கதவர்கள் அவர்கள் வணங்கும் கடவுளின் உருவத்தை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள் போலும். சூத்திரர்கள் வணங்குகிற கடவுள்கள் எல்லாம் சாராயம் குடிப்பவையாகவும், பச்சை ரத்தம் குடிப்பவையாகவும் இருக்கும்போது பிராமணர்கள் வழிபடும் கடவுளர்கள் வேதகாலத்தில் குடித்த சோமபானத்தையும் பசு மாமிசத்தையும் மறந்து சாந்த சொரூபிகளாக சர்க்கரை பொங்கல் சாப்பிடுவர்களாக மாற்றிவிட்டனர்.

கதைக்கு வருவோம்....

ஆரியர்கள் தங்களை தேவர்களின் வழிவந்தவர்கள் அதனால் தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள், எதிர்கொண்ட சிந்துவெளிமக்களை அசுரர் என்று குறிப்பிட்டார்கள். இந்தச் சண்டைகளின் நினைவுகள் தாம் ரிக்-வேதத்தில் தேவ-அசுர யுத்தம் என்று விவரிக்கப்படுகிறது. சிந்துவெளி நாகரீகமக்கள் எதிர்கொண்டது போலவே கி.மு.2500களில் பாரசீகத்தின் பாலைவனத்தின் நடுவே கிடைத்த செழிப்பான மண்ணில் ஒரு விவசாய சமூகம் உருவாகியிருந்தது. அந்த விளைச்சலையும், சேமிப்பையும் இரவு நேரங்களில் கொள்ளையடிக்க வந்த நாடோடிக் கூட்டங்களை எதிர்த்து விரட்டிக்கொண்டிருந்தது. அந்த நாடோடிக்கூட்டத்திற்கு பாரசீக விவசாய சமூகம் இட்டபெயர் தேவா (Daevas) என்பதாகும். பாரசீக மொழியில் தன் பொருள் ராட்சஷர் அல்லது திருடர். அங்கு தோன்றிய மதம் செளராஷ்ட்ரம், அதனை பார்ஸீ என்றும் குறிப்பிடுவார்கள். இந்த மதத்தின் வேதநூல் ஜெண்ட் அவெஸ்தா (Zend Avesta).ரிக் வேதத்தில் உள்ள தேவ-அசுர யுத்தம் சிந்தனைகளுக்கு மூல காரணமான்வை அவெஸ்தாவில் உள்ளன.

அவெஸ்தா ஒளிதரும் கடவுளான அஹூரா மஜ்தா-வை மையமாக கொண்டுள்ளது. ஒளி என்பது விவசாயிகளுக்கு பாதுகாப்பாகவும், இருட்டு என்பது அவர்களின் எதிரிகளான திருடர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளது. ஒளிதான் தங்களை காப்பதாக அவெஸ்தா நம்பியது. இருட்டை அறவே வெறுத்த பாரசீக குடிகள் இரவைப் படைத்தவனை அருவருப்புடன் அங்கிரா மைன்யூ (angra mainyu) என்றழைத்தனர். தேவர்களின் தலைவனை அந்திரா என்றழைத்தனர். ஒளியினால் பாதுகாக்கப்படும் அஹூராக்களின் உடமைகளை திருட வரும் எதிரிகளை நிந்தனை செய்ய தேவ என்ற சொல்லைப் பயன்படுத்திய அவர்கள் திருடவரும் அனைவரையும் தேவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். இந்த திருடர்களின் வாழ்விடம் தமது பூமிக்கு வடக்கெ இருக்கிறது என்று அவெஸ்தா கூறுகிறது. இந்த விவசாயிகளுக்கு வழிகாட்டியாய் ஒருவன் வருகிறான், அவன் திருடுபவர்களைப் பிடித்து மரணதண்டனை கொடுக்கிறான் அவன் பெயர் யிம(yima). மத்திய ஆசியப் பகுதியில் வாழ்ந்த இந்த தேவர்களுக்கு, தென் திசையிலிருந்த இந்த பாரசீகத்து யிம அச்சத்தைக் கொடுத்தான். காலப்போக்கில் தென் திசையே யிம திசையாகிப்போய்விட்டது.

பாரசீகத்து விவசாயிகளால் அடித்துவிரட்டப்பட்ட இந்த தேவர்கள் காடுமலைகளை கடந்து சிந்துவெளியில் பிரவேசித்தார்கள். அவர்களின் சந்ததிகள் தான் சிந்துவெளியில் பிரவேசித்திருப்பார்கள். இங்கே சிந்துவெளியில் புதுவிதமான அஹூரா (விவசாயி)க்களை காண நேர்ந்தது. பாரசீகத்து அஹூரா, சிந்துவெளியில் அஸூரா ஆயிற்று. பாரசீகர்களுக்கு ஸ வை உச்சரிக்க வராது, அதனாலேயெ சிந்து என்பது `ஹிந்த்` ஆயிற்று. தேவர்களின் தலைவனான அந்திரா இந்திரனாகவும் யிம எமனாகவும் மாறிப்போனார்கள். பாரசீகத்தின் அஹூராக்கள் பலம் வாய்ந்த நிலையில் இருந்த்தால் தேவர்களை அடித்துவிரட்டும் சக்தி பெற்றிருந்தார்கள். துச்சமாய் கொன்று போட்டார்கள், பைசாசங்கள் என்று இழித்துரைத்தார்கள். ஆனால் சிந்துவிலோ , வந்து சேர்ந்த தேவர்களின் பலம் கூடியிருந்தது. அதனால் வென்றவர்கள் தேவர்கள்-உயர்ந்தவர்கள் ஆனார்கள். அதேபோல் அசுரர் என்பவர் ஒளியின் பிள்ளைகள், நாகரீகம் மிக்கவர்கள் என்ற பொருளுக்குப் பதிலாக ராட்சஷர் என்ற தலைகீழான அர்த்தம் ஏற்பட்டு அதுவே இன்றும் நிலைத்து நீடித்துவருகிறது.

- அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள வாழ்வை வழி மறிப்பது எது? என்ற நூலிலிருந்து..

புதன், 16 நவம்பர், 2011

வால்கா முதல் கங்கை வரை

மனிதகுல வரலாற்றின் கி.மு.6000 முதல் இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம் வரையிலான மனிதகுல வரலாற்றை மார்க்சீயம் அல்லது பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்குகிற நூல் தான் வால்கா முதல் கங்கை வரை. இந்த நூல் தமிழில் அது பதிப்பாகிய 1954 லிருந்து 2009 வரை 28 பதிப்புகள் போடப்பட்டிருக்கின்றன. அறிஞர் அண்ணா இந்த நூலை தமிழர்கள் எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றார். அதற்காக இந்த நூல் ஒன்றும் திராவிடத்தை உயர்த்திப்பிடித்தது என்றும் சொல்லமுடியாது. இந்த நூலை எழுதிய ராகுல்ஜி பிறந்தது 19ம் நூற்றாண்டின் இறுதியில் உ.பி.யில் ஒரு வைதீக பிராமணக் குடும்பத்தில், இளமைக்காலத்தில் புத்தமதத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஒரு புத்தபிட்சுவாகவே மாறினார். பின்னர் மார்க்சிய நூல்களை கற்றார். இவர் எழுதிய நூல்களை வாசிக்கும்போது இவர் படிக்காத விசயமென்று எதுவுமே இல்லை எனலாம். இந்த நூலை சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் சிறையிலிருக்கும்போது எழுதினார், அதை மொழிபெயர்த்த கண.முத்தையா அவர்களும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காக பர்மா சிறையில் இருந்தபோது இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தார். ராகுல்ஜி சுமார் 35 மொழிகளில் புலமைவாய்ந்தவர். ஹிந்தி, சம்ஸ்கிருதம், பாலி, கிரேக்கம், ருஷ்யமொழி, சிங்களம், ராமானுஜரின் தத்துவத்தை கற்பதற்காக தமிழையும் கற்றறிந்தார். இவர் 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெளத்தம், ரிக்வேதம், மார்க்சியம், பொருளாதாரம், அயல்தேசத்தின் தத்துவங்கள் மதங்கள் இவர் எழுதிய நூல்கள்.

வால்கா முதல் கங்கை வரை நூல் மனிதகுல வரலாற்றை 20 கதைகளில் விளக்குகிறார். குகைகளில் வாழ்ந்த மனித இனம், அப்போது பேச்சு என்பதே இல்லை அதன் இன்னொரு வடிவமான எழுத்து தோன்றியே 5000 வருடங்கள் தான் இருக்கும்.வேட்டை சமூகத்தில் உணவு தேடுவது மட்டும் தான் முக்கியவேலை, மக்கள் கூட்டங்கள் இனக்குழு என பிரிந்திருந்தது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் வேட்டைக்கான வனத்தில் மோதல் ஏற்பட்டால் வெற்றி பெற்ற இனக்குழு தோற்ற இனக்குழுவின் பச்சைக்குழந்தைகளைக்கூட கொண்று போட்டது. அவர்கள் பயன்படுதிய ஆயுதங்கள் கல்லால் ஆனது. பின்னாளில் போரில் தோற்ற இனக்குழுவினரைக் கொல்லாமல் அவர்களை அடிமைகளாக வைத்திருந்தன்ர் இதுவே அடிமைச்சமூகமாயிற்று. இப்படி அடிமைச்சமுதாயம், நிலப்பிரபுத்தவம், மன்னாராட்சி, முதலாளித்துவசமூகம் வரை சமூகமாற்றத்தின் தேவையை எளிதாக விளக்குகிறார். மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்துதான் அது கற்காலம், உலோக காலம் என அழைக்கப்படுகிறது.

இன்றும் வரலாற்றில் ஆரியர்கள் என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது்.ராகுல்ஜி, ஆரியர்கள் இந்தோ-அரோப்பா இனத்தை சார்ந்தவர்கள், மத்தியதரைக்கடல் நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்கிறார். ஆரியர்கள் சப்தசிந்துவில் குடியேறியது கி.மு.1500 களில். இந்தியா என்ற பெயர் சிந்துவிலிருந்து வந்ததுதான். ஆரியர்களின் அக்கால சகோதர இனமான ஈரானியர்கள் `ச`வை ஹ` என உச்சரித்தார்கள் ஏழுநதிகள் பாய்ந்த பிரதேசத்தில் அவர்கள் குடியேறிதால் சப்தஹிந்து என்றழைத்தார்கள். அக்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் நாகரீகமாக விளங்கிய கிரீசில் `ஹ` வை `அ` என உச்சரித்தனர்.அதனால் ஹிந்த் என்பது `இந்த்` ஆகிவிட்டது. சப்தசிந்துவைப் பற்றி ரிக்வேதத்திலும் குறிப்புகள் இருக்கின்றன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது சிந்துவெளி நாகரீகத்தை `ஆரிய` நாகரீகமாக மாற்ற முயற்சிகள் நடந்தன. அதாவது சிந்துவில் வாழ்ந்த நாகரீக மக்கள் எருது சின்னத்தை `குதிரையாக மாற்றமுயன்றார்கள். இப்போது ஏதோ வேதகாலம் என்றால் சுத்த சைவமும், கொல்லாமையும் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆரியர்கள் நாடோடிகள் வேட்டைச்சமூகத்தை சார்ந்தவர்கள் அதனால் போர்க்குணம் மிக்கவர்களால் ஹரப்பா-மொகஞ்சதாரோ பகுதியில் வழ்ந்த நாகரீக மக்களை எளிதில் வீழ்த்தமுடிந்திருக்கிறது. ஹரப்பா-மொகஞ்சதாரோவை சிந்துவெளி நாகரீகம் எனலாம். சிந்துச்சமவெளி நாகரீகத்தின் சிறப்புக்காலம் கி.மு.2500. அப்போது அவர்கள் நகரவாழ்க்கையை வாழ்ந்தார்கள். நேரான வீதிகள், கழிவுநீர் செல்வதற்கு கால்வாய்கள், சுட்ட செங்கலால் கட்டப்பட்ட வீடுகள், குளியறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்ட தடங்கள் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளன.அவர்களை வென்ற ஆரியர்களுக்கு அந்த வீடுகள் ப்யனற்றையாகவே இருந்ததில் வியப்பில்லை. நாடோடிவாழ்க்கையாக ஆழ்ந்த ஆரிய இனக்குழுவினர் அவர்களிடமிருந்த கால்நடைகளை பறித்துக்கொண்டு அவர்கள் தஸ்யுக்கள் அல்லது தாசர்களாக மாற்றினார்கள்,தொடர்ந்து அவர்கள் கங்கைச்சமெவெளியில் குடியேறினார்கள். இமயமலைப் பகுதியில் வாழ்ந்த கிர் பழங்குடிகளை போரில் வென்றார்கள். சிந்துவெளி நாகரீக மக்கள் உயர்ந்த நாகரீகத்தில் வாழ்ந்தார்கள் என்பதை தொல்லியல் ஆயுவுகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலிருந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். சூரியக்கடிகாரம் பயன்படுத்தியிருக்கிறார்கள். வானியலைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். விவசாயம் செய்து வாழ்ந்ததால் அவர்களுக்கு காலத்தை கணிக்க காலண்டர் அவசியமாக இருந்திருக்கிறது.` தேவை` தான் கண்டுபிடிப்புகளின் தாய் என்கிறார்கள். ஒருவேளை ஆரியர்கள் அந்த நாகரீகத்தை அழிக்காமல் இருந்திருந்தால் இந்தியா உலகின் முன்னொடியாக இருந்திருக்கலாம்.

அமெரிக்கா எப்படி குடியேறிவர்களின் நாடோ அதேபோன்று தான் இந்தியாவும். அமெரிக்காவில் குடியேறிய மக்கள் சில நூற்றாண்டுகளில், ஆனால் தற்போது இந்தியா என அழைக்கப்படுகிற பகுதிக்கு குடியேறிய மக்கள் பல நூற்றாண்டுகள் அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்பு எனலாம். இன்று ஆரியர்கள் எனவர்கள் யாருமே கிடையாது, அந்த அள்விற்கு இங்கே ரத்தக்கலப்பு நடைபெற்றுவிட்டது. இந்தியாவிற்கு மற்ற பிரதேசங்களிருந்து ஏன் வந்தார்கள் என்றால் இங்கே வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கிறது. இந்த மண்ணில் `சைவ உணவு` சாப்பிடுபவர்கள் அதிகம் ஏன் என்றால்? அமெரிக்கா மொத்தமும் விளையக்கூடிய தானியங்கள் இங்கு ஒருசில மாவட்டங்களில் அத்தனைவகை தானியங்கள் விளைகின்றன. ரிக்வேதம் வரலாற்றாசிரியர்களுக்கு சிறந்த வரலாற்று நூலாக உள்ளது, அது இயற்றப்பட்ட காலம் ஆரியர்கள் சப்தசிந்துவில் குடியேறுவதற்கு முன்பே அதாவது இன்றுள்ள ஆப்கானிஸ்தான் பகுதியில் அவர்கள் இருக்கும்போதே பாடியிருக்கிறார்கள். ரிக்வேதம் என்பது அந்த வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட கஷ்டங்களை கடவுளிட்ம் முறையிடும் செய்யுள்கள். ரிக்வேதம் அது இயற்றிய காலத்திலிருந்து வாய்மொழியாகவே கடத்தப்பட்டு வந்திருக்கிறது.அவர்களின் கடவுள் எல்லாம் ஆண்கடவுள்கள் இந்திரன்,வருணன்,அக்னி ஆகியோர்.அக்கால ஆரியர்கள் மாமிச உணவை விரும்பி சாப்பிட்டு இருக்கிறார்கள். ரிக்வேதத்திலேயே `பொலி எருது மாமிசத்தை நெய்யோடு கலந்து சாப்பிட்ட பெண்ணுக்கு ஆரோக்யமான புத்திரன் கிடைப்பான என்ற வரிகள் உள்ளன. ஆதிசங்கரரும் தன் விரிவுரையில் `மாமிசமும் வயதுவந்த எருது அல்லது அதைவிட அதிக வயதுள்ள எருதுவின் மாமிசமாக இருக்கவேண்டுமென்கிறார். பசுவின் புலால் விசயத்தில் இன்று எத்தனை அருவருப்பு இருப்பினும் பழங்காலத்தில் இப்படிப்பட்ட அருவருப்பு இருந்ததில்லை. புத்தர் கால்த்திலும் பசு மாமிசம் அதிகமாகவே சாப்பிட்டு வந்தார்கள் என்று பவுத்த நூலான ` மஜ்ஜம் நிகாய்` கூறுகிறது.

சோமபானம் என்ற போதைவஸ்துவை பருகி ஆடல் பாடலுடன் வாழ்ந்தார்கள். ராகுல்ஜி எழுதிய `ரிக்வேத கால ஆரியர்கள்` என்ற நூலில் ஆரிய இனக்குழுவ்வைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன. புரு, யது,துர்வஸூ, த்ருஹ்யு மற்றும் அனு ஆகியவை ஆதி ஆர்ய இனக்குழுக்கள். இதர இனக்குழுக்கள் `பக்தூண்`கள் இவர்கள் ஆப்கனிலும் பாகிஸ்தனிலும் வசிக்கின்றனர். பலான், விஷானி, அலின் மற்றும் சிவ இனக்குழுக்களும் ஆரிய இனக்குழுக்கள் தான்.மத்ர இனக்குழுவைப் பற்றி வால்கா முதல் கங்கை வரை கதைகளில் வருகிறது, அவர்கள் தான் மிடியா என்ற இனக்குழுவினர். `மத்ர` குலப்பெண்கள் கவர்ச்சிமிக்கவர்கள், ஆண்களை வசீகரிப்பவர்கள். அதனால் தான் மஹாபாரத்தில் பாண்டு இன்னொரு மனைவியாக மாத்ரி என்ற மத்ர குலப்பெண்ணை மணக்கிறார். புராதன பண்டைய நகரங்கள், காந்தாரம், மகதம், கோசலம், தட்சசீலம், போன்ற வற்றைப் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. இந்த நூல மனிதகுலவரலாற்றைப் பற்றிய அறிவுப்பொக்கிஷம் என்றால் மிகையாகாது.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

சொர்க்கம், நரகம் மற்றும் மறுபிறவி....

எல்லா மதத்திலும் கடவுள் தான் உலகையும் மனிதனை, ஜீவராசிகளையும் படைக்கிறார். அப்புறம் ஏற்றத்தாழ்வுகளையும் அவரே சேர்த்து படைத்துவிட்டார் என்பது முடிவாகிவிடுகிறது. மனிதன் முதலில் வாழ்ந்த காலத்தில் உணவு தேடுவதிலும், துஷ்ட மிருகங்களைக் கண்டு ஓடி உயிரை காப்பாற்றி கொள்வதிலேயும் காலம் போய்விட்டது. அக்காலத்தில் ஒருநாள் உழைத்து நான்கு நாட்கள் அல்லது ஒருவர் உழைத்து இருவர் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவிற்கு உற்பத்திமுறை பெருகியிருக்கவில்லை. அதனால் `சிந்தனையாளர்களும்` தோன்றவில்லை. பிற்காலத்தில் உற்பத்தி பெருகி வளர்ச்சியடைந்த சமயத்தில் பெரும்பான்மை மக்களின் `உபரி உழைப்பில்` ருந்து உடல் வளர்க்கக்கூடிய ஒரு வர்க்கம் உருவாகியது. அந்த வர்க்கம் தான் உயிர்வாழ உடலுழைப்பு செய்ய வெண்டிய அவசியமே இல்லாமலிருந்தது. இவ்வர்க்கம் மற்றவர் உழைப்பை மேற்பார்வையிடுதல், அரசாங்க நிர்வாகம், நீதி, தத்துவம்,விஞ்ஞானம், கலைகள், மதம் போன்ற பொறுப்புக்களை கவனித்துக்கொண்டார்கள்.

உழைப்பவர்களை ஆயுதபலத்தை மட்டும் கொண்டு அடக்குவது சிரமமாக இருந்ததால் `தத்துவம்` வளர்ந்தது. அந்த தத்துவங்கள் நிலப்பிரபுக்கள் அல்லது ஆட்சியாளர்களுக்கே சாதகமாக இருந்தது என்பதில் வியப்பில்லை. இவ்வுலத்தில் நாம் ஒரு சில நாட்கள் தானே வாழப்போகிறோம்! அதற்காக நாம் ஏன் போராடவேண்டும்? அதற்குப் பதிலாக அழிவில்லாத மறு உலகத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும். இப்படி அப்போதிருந்த தத்துவமேதைகள் பாட்டாளிகளின் உழைப்பைத்தின்று கொழுத்து, அவர்களுக்கு எதிரான கருத்துக்களையே `தத்துவம்` `சாஸ்திரம்` என்ற பெயரிலும் உலகத்திற்கு அளித்துள்ளார்கள்.

மனிதன் உலகத்திற்கு வருகிறான்,, நல்லதும் கெட்டதும் செய்கிறான். இறந்தபிறகு தான் செய்த செயல்களின்படி சொர்க்கத்துக்கோ நரகத்துக்கொ போகிறான். யூதம்,கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களிலும் விஷயம் இப்படித்தான் முடித்துவிடுகிறார்கள். ஆனால் இவ்வுலகத்தில் மனிதன் உயர்ந்தவன் - தாழ்ந்தவனாக, ஏழை - பணக்காரனாக ஏன் இருக்கிறான் என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அப்படியென்றால் கடவுள் பாரபட்சமானவரா என்கிற கேள்வி வருகிறது. இந்த குற்றசாட்டுகளை மறுப்பதற்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சரியானவையே என்று சாதிக்கவும் உபநிஷத்துகளை இயற்றிய `ரிஷிகள்`. மறுபிறப்பு என்கிற தத்துவத்தை எடுத்துக்கூறினர். ஒருவன் பணக்காரனாக ஏன் இருக்கிறான்? அவன் முற்பிறவியில் செய்த நல்லகாரியங்களால், ஒருவன் ஏன் ஏழையாக இருக்கிறான் என்றால் அவன் முற்பிறப்பில் கெட்டகாரியங்கள் செய்தான். எவ்வளவு எளிதான பதில். சமுதாயத்தின் தற்போதைய நிலைமையை அப்படியே நீடிக்கச்செய்ய இந்துக்கள் கண்டுபிடித்த `மறுபிறவி` என்கிற வலிமையான ஆயுதத்தை வேறுயாரும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இன்றைக்கும் துன்பப்படுகிறவர்கள் எல்லாம தலைவிதி என்று சொல்வதை பார்க்கிறோம்.

இன்றைக்கு உலகத்திலிருக்கிற இந்துமதம், கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம்,சமணம், பெளத்தம் நிலப்பிரபுத்துவ அமைப்பில் தோன்றியதாகும். எல்லா மதங்களிலும் சொல்லப்பட்ட `சொர்க்கம்` என்பது செல்வச்செழிப்புள்ள ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தின் கற்பனையேயாகும். இந்துக்களின் வைகுண்டம் என்பது அந்தப்புரம் போன்று அங்கே தெய்வீக எழிலரசிகளின் கூட்டம் இருக்கிறது. எப்பொழுதுமே அழுக்காகாத அவர்களுடைய அழகான ஆடைகள், பொன்னும், மணியும்,வைரமும் ஜொலிக்கும் ஆப்ரணங்கள், மலர்களாலும், நறுமணத்தாலும் கமகமக்கும் அவர்களது பூவுடல்கள், ஆடல், பாடலும், மதுக்கோப்பைகளும் எல்லாம் ஒரு சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அந்தப்புரத்தின் இனிய வர்ணனை.

இஸ்லாமிய ஜன்னத்தின் (சொர்க்கத்தின்) திராட்சைத்தோட்டங்கள், குளிர்நிழல், பாயும் ஓடைகள், முத்துவிழிகள் கொண்ட எழில் கன்னிகள்- இவையெல்லாம் அக்காலத்திய பாரசீக மாமன்னர் குஸ்ரோபர்வேஜ் அல்லது ரோமானிய சக்ரவர்த்தி மோரிஷ் ஆகியோரின் அரண்மனைகளிலிருந்து வந்தன.கிருஸ்துவர்களின் சொர்க்கமும், யூதர்களின் சொர்க்கமும் இவர்களைப் போன்றே நிலப்பிரபுக்களின் ஆடம்பர வாழ்வைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

இன்னமும் வைகுண்டம், சிவலோகம், சொர்க்கம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அடுத்த பிறவியில் கிடைக்கும் நல்ல வாழ்க்கைக்காக இந்தப் பிறவியில் போராடாமல் வறுமையிலும் மூடநம்பிக்கையிலும் சமூகம் உலன்று கொண்டிருக்கிறது என்பது அந்த தத்துவத்தின் தாக்கம் அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்துள்ள காலத்திலும் நீடித்து நிலவுகிறது.

---ராகுல்ஜி எழுதிய மனிதசமுதாயம் புத்தகத்திலிருந்து..

ஞாயிறு, 6 நவம்பர், 2011

துருவ நட்சித்திரம் ஒன்று தெரிகிறது...

சமீபத்தில் இரண்டு முக்கியமானவர்கள் ஊடகங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள் என்பதை விட சாடியிருக்கிறார்கள். ஒருவர் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான நீதியரசர். மார்க்கண்டேய கட்ஜூ, மற்றொருவர் ஆசியன் ஸ்கூல் ஆப் ஜ்ர்னலிசம் நடத்திவரும் திரு. சசிகுமார்.



Ibn live தொலைக்காட்சியில் கரன்தாப்பர் நடத்திவரும் ‘devil court' ல் மார்க்கண்டேய கட்ஜ...ூ அவர்கள் பங்குகொண்டு பேசியிருக்கிறார். நான் அறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கிருஷ்ணய்யர் க்கு அடுத்தபடியாக மதிப்பது மார்க்கண்டேய கட்ஜூ அவர்களைத்தான், அவர்கள் அளித்த தீர்ப்பு தான் அவர்கள் மீது மதிப்பு வைப்பதன் காரணம். தான் பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்துகொண்டு அங்கு மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்று கலகக்குரல் உயர்த்தியிருக்கிறார். இந்திய ஊடகங்கள் பொறுப்பற்று நடந்துகொள்கின்றன, இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சாமான்ய மக்களுக்காக செயல்படவில்லை, அறிவியல் பூர்வமாக மக்களை சிந்திக்கவிடாமல் ஜோதிடத்தையும் சினிமாவையும் பரப்புவது தான் முதல்வேலையாக இருக்கிறது என்றார். பெரும்பாலன பத்திரிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன. கம்யூனிஸ்ட்கள் மீடியாவை வர்க்கநலனில் செயல்படுகின்றன என்று சொல்வார்கள். நீதிபதி அப்படியொரு வார்த்தையை பிரயோகிக்கமுடியாமல் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என்கிறார். ஊடகங்கள் மக்களாட்சியில் நான்காவது தூணாக இருக்கிறது, ஆனால் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியத்தில் இல்லை. தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 5 வருடங்களுக்கொரு முறை மக்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆனால் பத்திரிக்கைகள் வாசகர்களைவிட அவர்களுக்கு விளம்பரம்தரும் வியாபார பெருநிறுவனக்களுக்கு சேவை செய்வதில்தான் குறியாக இருக்கிறது. மேலும் பத்திரிக்கைகளே கார்ப்பரேட்களாகத்தான் இருக்கிறார்கள். Paid News என்கிற ஊழலை பத்திரிக்கைகள் செய்ததை நாம் மறந்துவிடமுடியாது. கரகாட்டக்காரனில் வரும் ‘ஒருவிளம்பரம்தான்’ என்கிற மாதிரி தேர்தலில் ஜெயிக்கவைக்க பணம்கொடுத்த வேட்பாளர்களின் செய்திகளை முதல்பக்கத்தில் போட்டார்கள் அதில் Time of India,Hindustan Times பத்திரிக்கைகளுக்கு பங்கு உண்டு. அதை வெளிச்சம் போட்டு காட்டிய சாய்நாத் அவர்களை மார்க்கண்டேய கட்ஜூ புகழாரம் சூட்டினார். நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விலைவாசி உயர்வினாலும் வறுமையில் வாடுவதை கவனிக்காமல் நடிகைகளின் பேஷன் ஷோ க்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதை சாடினார். காலை எழுந்தவுடன் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் சேனல்களும் கூட ராசிபலன் எனும் மூடநம்பிக்கையை பரப்புகின்றன. இந்த நாடு அறிவியலிலும் பொருளாதரத்திலும் முன்னேறியிருந்தாலும் மக்களின் சிந்தனை இன்னும் அடிமைச்சமூகத்தில் தான் இருக்கிறது.

அச்சு ஊடகங்களை கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில் இருக்கிற்து, ஆனால் காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்த ஒரு அமைப்பு தேவை அந்த அமைப்புக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். நிச்சயம் இந்திய பத்திரிக்கைகளிலும் காட்சி ஊடகத்திலும் மாற்றம் ஏறபடும், அந்த மாற்றம் பெரும்பான்மையான மக்களுக்காக இருக்கும் என்று நம்புவோம்.

மற்றொருவர் சசிகுமார் அவர்கள், இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் ‘ஊடகச்சுதந்திரமும், ஊடக்த்திலுருந்து சுதந்திரமும்’ என்ற உரையாற்ரியிருக்கிறார். அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை ஏற்கனவே குமரேசன் என்பவர் அவரின் வலைப்பூவில் எழுதியுள்ளார். அதன் இணைப்பு கீழே http://asakmanju.blogspot.com/2011/11/blog-post_05.html . நீதிபதி பங்குகொண்ட நிகழ்ச்சியின் காணொளி இங்கே .http://ibnlive.in.com/news/media-deliberately-dividing-people-pci-chief/197593-3.html .

சனி, 5 நவம்பர், 2011

கு.சி.பா.வின் சங்கம்.......

ஒரு புத்தகத்தை வாசித்தால் அதுபற்றி நிறைகுறைகள் தெரியப்படுத்த வேண்டியது வாசகர்களின் கடமை, அது மற்ற வாசகர்களின் கவனத்திற்கும் ஆசிரியர், பதிப்பகத்தார் கவனத்திற்கு செல்கிறது. நான் நீண்டநாட்களுக்கு முன்பு வாசித்த தோழர்.கு.சின்னப்பபாரதி எழுதிய‘சங்கம்’ நாவல் வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் மறுவாசிப்பு செய்தேன். அரசின் காவல்துறையும் வனத்துறையும் வாச்சாத்தியில் மலைவாழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் பெரியார் வழியில் வந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவேளையில், அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களை நிமிர்ந்து நிற்கச்செய்த ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. அந்த வகையில் ‘சங்கம்’ நாவல் கொல்லிமலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சமவெளி மனிதர்களாலும் அரசு நிர்வாகத்தின் வனத்துறை, காவல்துறை போன்றோர்களாலும் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து அந்த அம்மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்ட களத்தில் நிற்பது தான் இந்த நாவலின் கரு. இங்கேயும் அந்த மக்களுக்கு பிரதிபலன் எதிர்பராது நிற்பது கம்யூனிஸ்ட்கள் தான். அதர்மம் தலை தூக்குகிற போது தர்மத்தை காக்க கடவுள் அவதாரம் எடுப்பார் என்கிறார்கள். இதுவரை எந்த கடவுளும் அதர்மத்தை எதிர்த்து தோன்றவில்லை, அல்லது இதெல்லாம் அதர்மம் இல்லையோ?

இந்தியாவின் எந்தப்பகுதியிலும் காடுகள்,வனங்கள் அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களாலும் பழங்குடிகளாலும் அழிக்கப்படவேயில்லை. இந்த நாட்டின் உண்மையான பூர்வகுடிகள் என்றால் அவர்கள் பழங்குடியினர்தான். நாடு சுதந்திரம் அடைந்தது என்பதன் வாசனையை அவர்கள் இன்னும் அறியவேயில்லை. சுதந்திரம் என்பதே வெள்ளைக்காரர்களிடமிருந்து இந்திய பெருமுதலாளிகள் கைகளில் மாறியிருக்கிறது. அப்படி ஏற்பட்ட அந்த மாற்றத்தை சமவெளி மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். பணம் வசதி படைத்தவனுக்கு அதிக சுதந்திரம் இருக்கிறது. அரசு நிர்வாகமும் வசதி படைத்தவர்களுக்குத்தான் சேவை செய்கிறது, பெரும்பாலான அரசியல் இயக்கங்களும் அதே வழியில்தான் செல்கின்றனர்.

மலைவாழ் மக்கள் இயற்கையோடு வாழ்கிறார்கள், அந்த கானகத்தில் சிறிய பரப்பளவில் சாகுபடி செய்கிறார்கள், விளைந்த பொருட்களை சமவெளியில் சென்று சந்தையில் விற்கிறார்கள். ஒரு பக்கம் அரசு நிர்வாகத்தின் வனத்துறை அதிகாரத்தின் மூலம் அம்மக்களை சாகுபடி செய்கிற நிலத்தை விட்டு விரட்டுகிறது, அதை கெஞ்சல் மூலமாகவும் அதிகாரிகளுக்கு தெண்டணிட்டும் வாழ்க்கை நடத்துகிறார்கள். மறுபுறம் சாகுபடியால் விழைந்த பொருட்களை சந்தையில் வியாபாரிகள் அவர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். கடைசியில் கந்துவட்டியில் சிக்குகிறார்கள். வட்டியோ அநியாய வட்டி, அரசு மலைவாழ் மக்களுக்கு கொடுக்கிற சிறிய மானியங்களையும் அதிகாரிகள் ஏப்பம் விடுகிறார்கள். அந்த மக்கள் இதுதான் வாழ்க்கை, மாற்றமேயில்லை நம் முன்னொர் காலத்திலும் இப்படித்தான் வாழ்ந்தார்கள் விதி அவ்வளவுதான் என்று சகித்துக்கொள்கிறார்கள். ஆதிமனிதன் தன்னுடைய நேரத்தை உணவு சேகரிப்பதிலேயெ செலவிட்டான், இவர்களுக்கும் அப்படித்தான். நாவல் முழுக்க சொலவடைகள் அந்த கஷ்டங்களிலிருந்து வருகிறது. நாவலின் ஆசிரியர் அந்த மக்கள் மொழியையும் அவர்கள் வாழ்க்கைமுறைகளை கற்பதற்காக அங்கு அதிககாலம் தங்கியிருந்து இந்த நாவலை எழுதிமுடிக்க ஐந்துஆண்டுகாலம் எடுத்துள்ளார்.

கானகத்தில் அந்த மக்கள் அவர்களுக்குள்ளேயெ கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு வாழ்கிறார்கள், ஆனால் ஒரு கந்துக்காரன் கொடுத்தபணம் திருப்பிச்செலுத்தாதால் பணம் வாங்கிய வெள்ளையன் மனைவியை கந்துக்காரனின் கையால் கொண்டுசெல்கிறான். அதை எதிர்ப்பதற்கு அவர்களிடம் தைரியம் இல்லை. இலங்கை தேயிலை தோட்டத்திலிருந்து வந்த சீரங்கன் தொழிற்சங்கப் போராட்டத்தை அறிந்தவனாக இருக்கிறான். இந்தக் கொடுமையை ஏன் தட்டிக்கேட்கக்கூடாது என்று காவல் நிலையம் செல்கிறான்.அவனுக்கு சாமானியனுக்கு நமது காவல்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையாக அடிஉதை கிடைக்கிறது. செங்கொடி ‘சங்கத்தை’ நாடுகிறான். தோழர்கள் கந்துக்காரனிடமிருந்து வெள்ளையன் மனைவியை மீட்கிறார்கள். செங்கொடி மீது மலைமக்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இளம்தலைமுறையினர் செங்கொடி உதவியுடன் மலைமக்களுக்கான சங்கத்தை கட்டுகிறார்கள்.போராடுகிறார்கள், போராட்டத்திலிருந்து அனுபவம் பெறுகிறார்கள். அதுவரை காவல்துறையைக் கண்டும் வனத்துறையைக் கண்டும் பயந்தவர்கள் இப்போது எதிர்த்து கேள்விகேட்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவையான சந்தையை மலையிலேயெ கூட்டுகிறார்கள். வாழ்விடத்திற்காகவும், சாகுபடி நிலத்திற்காகவும் போராடுகிறார்கள். அவர்களை வழிநடத்துகிற ஒரு இயக்கம் இருப்பதால் தான் வாச்சாத்தி வழக்கு வெற்றியடைந்தது. மீண்டும் மனிதர்களாக அதிகாரத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து சமர் புரிகிறார்கள்.

நா கேக்குறதுக்காவ கோவுச்சுக்காதீங்க தோழருனாரே அது என்ன உத்தியோகமுங்க! என்று ஒரு மலைவாசி கேட்கிறார். “நீங்க தோழர்னு சொல்லப்படற வார்த்தையை மொதல்ல புரிஞ்சுக்க வேண்டியதுதா. அதப்பத்தி நீங்க கேட்டது நல்லதாப்போச்சு, நாம சொந்தக்காரர்ன்னு சொல்றோம். ஒருத்தர்க்கு சொந்தக்காரர்னா ஊர் ஒலகத்துல பத்தோ இருபதோ பேர்தா இருப்பாங்க. ஒருத்தர்க்கு சினேகிதகாரரோ நண்பரோன்னு சொன்னா மனசுக்கு மனசு அந்தரங்கமா பேசக்கூடியவங்க ஒண்ணு ரெண்டு பேருதா இருப்பாங்க. ஆனா தோழர்னு சொன்னா ஜாதி, மதம் நாடு கடந்து பாடுபட்டு உழச்சுச் சாப்பிடறவங்க எல்லரையும் ஒரு குடும்பமா ஒரே நலன் அடிப்படையிலெ பிணைச்சுப் பார்க்கிறதாகும். அது சொந்தத்துக்கும் நட்புக்கும் மேலான ஒரு உறவு குறிக்கும் உயர்ந்த சொல்லாகும்’

பிரதிபலன் எதிர்பாரமல் செங்கொடி இயக்கம் ஏன் அடித்தட்டு மக்களுக்காகவும் தொழிலாளர்களின் நலனுக்காவும் விவசாயிகளுக்காகவும் போராடுகிறது என்கிற கேள்வி செங்கொடி இயக்கத்தில் சேரும்போது ஒவ்வொருவருக்கும் எழுகிறது. இன்னமும் நடுத்தர மக்களிடம் அந்த ஐயம் இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் பதவிகிடைத்தால் காசு பார்க்கிறார்கள், ஆனால் கம்யூனிஸ்ட்கள் பிழைக்கத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள். கிறிஸ்தவமதம் எளியமக்களுக்கு உணவு, உடை கல்வி என சேவை செய்கிறது, ஆனால் கம்யூனிசம் ஏன் ஏழையாய் இருக்கிறாய்? என்று அவனுக்கு போராடக்கற்றுக் கொடுக்கிறது. அம்மா, அப்பா, நீர் என்ற சொற்கள் மாதிரி உலகெங்கும் வெவ்வேறு மொழியில் உயிர்ப்புடன் பேசப்படுகிற வார்த்தை ‘தோழர்’ என்பது தான்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மேதகு.அப்துல்கலாம் அவர்களுக்கு வேண்டுகோள்...

தற்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்கெதிராக பொதுமக்கள் நடத்திவருகிற போராட்டத்தை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.அணு உலை சம்பந்தமாக படித்தவர்கள், படிக்காதவர்கள் என வித்தியாசமில்லாமல் அணு உலை ஆபத்தனதா? இல்லையா? என்ற விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்திய அரசு `தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில்` அணு உலை சம்பந்தமாக விவரனைகள் மக்களுக்கு தெரிவிக்கமறுக்கிறது. பொதுமக்கள் அரசின்பிரதிநிதிகளான அமைச்சர்களின் வாக்குறுதிகளையோ, அதிகாரிகளின் விளக்கங்களையோ,ஏன் பிரதமரின் வாக்குறுதியைக்கூட நம்பத்தயாராகயில்லை. ஏனென்றால் அவர் பெரும்பாலான மக்களுக்கான பிரதிநிதியாக செயல்படவில்லை என்பதை அனுபவம் கற்றுத்தந்திருக்கிறது. அது நாட்டையே உலுக்கி எடுத்த 2ஜி அலைக்கற்றை ஊழலாக இருந்தாலும் சரி, வறுமைக்கோட்டு எல்லையை வரையறை செய்வதாக இருந்தாலும் சரி அவரை நம்பிய சாமான்ய மக்களுக்கு துரோகம் இழைத்தார். பின்னர் எந்த நம்பிக்கையில் கூடங்குளம் மக்களானுலும் சரி ஜெய்தாப்பூர் மக்களானாலும் சரி எப்படி நம்புவார்கள்.

இந்தியாவின் அணுசக்தியை உலகுக்கு உணர்த்திய விஞ்ஞானிகளில் தலைமையானவர் என்ற முறையில் இந்த நாட்டு மக்கள் உங்கள் மிது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் நீங்கள் குடியரசுத்தலைவர் பதவி வகித்த காலத்தில் நாடெங்கும் சென்று மாணவர்களை சந்தித்து உரையாற்றினீர்கள். இந்த நாட்டில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது தெரியாமல் மக்கள் குழம்பியிருக்கிறார்கள். இந்த நாடு அணுவெடிப்பு சோதனை நடத்தியபோது அதைக்கொண்டாடியவர்கள் கூட இன்று அணுவை ஆக்கபூர்வ சக்திக்கு பயனபடுத்தும்போது எதிர்க்கிறார்கள். இந்தியா சர்வதேச அளவில் இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறது`அணுவை` ஆக்கப்பூர்வ சக்திக்கு மட்டும் பயன்படுத்துவோம் என்று.

தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அணுசக்தி குறித்த தனியான நிலைபாடுகளோ, கொள்கைகளோ கிடையாது. பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு காட்டினால அவர்களும் லாலி பாடுவார்கள். அதிகாரத்திற்கு சென்றுவிட்டால் `வர்க்க` நலனில் மட்டும் அக்கறை காட்டுவார்கள். அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு `ஒளி` தரும் என்று உரத்துக்கூறிய மத்தியதரவர்க்க மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் கூடங்குளம் மின்திட்டத்தை எதிர்க்கிறார்கள். இப்போது நிலவுகிற அச்சம் ஜப்பானில் புக்குசிமாவில் நடந்த விபத்துக்குப் பிறகு தான். சுனாமியின் சாத்தியக்கூறுகள் கூடங்குளம் மட்டுமல்ல, இந்தியாவின் அணு உலைகளை பாதிக்குமா? அப்படி பாதித்தால் என்ன பாதுகாப்பு வழிமுறைகள் அங்கு ஏறபாடு செய்யப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

பல நிகழ்ச்சிகளில் இந்தியாவிற்கு அணுமின்சாரம் தேவை என்று பேசியிருக்கிறீர்கள், ஒருமுறை இடிந்தகரை மக்களிடம் பேசினால் அவர்களின் நியாயமான அச்சம் நீங்கும்.

புதன், 21 செப்டம்பர், 2011

பேசாப்பொருள் குறித்து..........

இந்தக் கட்டுரை ஒரு இணையக்குழுமத்திற்காக எழுதப்பட்டது, அங்கே சாதி, மதம், மொழி இனம் சம்பந்தமாக எழுதினால் பிரச்சனை ஏர்படுகிறது. அதனால் இது சம்பந்தமாக எழுதவேண்டாம் என ஒரு அன்பர் எழுதினார், அதற்கு எதிர்வினையாக எழுதியது.

சாதி, மதம், மொழி, இனம் சம்பந்தமாக எழுதினால் அடுத்தவர் மனம் புண்படுமோ என்று எழுதாமல் இருக்கமுடியவில்ல. மொழியும் பேச்சும் இல்லாத காலங்களில் வாழ்ந்த மாந்தர்கள் ஒருவொருக்கொருவர் உறவாடத்தடையாக தடையாக இருந்தது. கற்றறிந்த சமூகத்திற்கு அதே “மொழியே” தடையாக இருப்பது முரணன்றி வேறென்ன? நாளிதழ்களில் அன்புள்ள ஆசிரியருக்கு என்று போஸ்ட் கார்டில் முன்பு எழுதியதெல்லாம் அவர்களால் இடம் கருதி பிரசுரிக்காமல் போன காலமும் உண்டு, ஆனால் இப்போது இணையத்தில் வருகின்ற நாளிதழ் செய்திகளுக்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆரோக்கியமான கருத்துக்களை வழங்குகிறார்கள் இதன் மூலம் வாசகர்களின் நாடித்துடிப்பறிகிறார்கள் என்பதை அந்த பத்திரிக்கைகளின் `தலையங்கச்செய்திகள் சொல்கின்றன. ஆனாலும் சிலர் கழிவறையில் எழுதும் வக்கிரங்களையும், வாசகர் கடிதங்களாக அனாமதேய முகவர்களிலும் மாற்றுப்பெயர்களிலும் எழுதி வருகிறார்கள். பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் திறந்தவெளியென்று நினைத்து அப்படிஎழுதுகிறார்கள், இந்த குழுமத்தில் எழுதுபவர்கள் அப்படியில்லை, கருத்துக்களை எழுதுபவர்களை அதன் 10 சதவீத உறுப்பினர்களாவது அவர்களை அறிவார்கள். நமக்கு விரும்புகிற செய்திகளை மட்டுமே படிக்கிற சுதந்திரம் நமக்குண்டு. நாம் எழுதுகிற எழுத்தால் எவருடைய சித்தாந்தத்தையும் குறை கூடாது, என்று எழுத ஆரம்பித்தால் எழுதவே முடியாது. தொழிலே எழுத்தாகக்கொண்டவர்கள் சிலர் சிறுகுழந்தை மஹாராஜா அம்மணமாக இருந்தாலும் கைகொட்டி சிரிப்பதைப்போல அதிகாரத்திற்குமுன் அச்சம் தவிற்த்து எழுதுகிறார்கள்.

மற்றவர்கள் மனம் புண்படுமோ அதனால் என்னவோ இரு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7பேர் பலியான செய்தியும் கருத்தும் யாரும் பகிரவேயில்லை. நாம் எழுதுகிற கருத்தால் சாதிப்பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வு காரணமா? அல்லது நமக்கு நேர்ந்தால் அது துன்பம்,அதுவே பிறருக்கு நேர்ந்தால் வெறும் செய்தியாக பார்க்கிற மனோபாவமா எனதெரியவில்லை. உலகின் மற்ற பகுதிகளில் சிவிலியன்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்படும்போது நாம் எதிர்ப்புணர்வும் வருத்தத்தையும் பகிர்கிறோம், இதோ நம் மாநிலத்தின் சகோதரரமக்கள் குண்டடியால் செத்து மடிந்ததை கண்டுகொள்ளாமல் செல்கிறோம். அந்த மரணத்தை கொண்டாடியவர்களையும் நான் வலைப்பூவில் பார்த்தேன். எப்பேர்ப்பட்ட மனிதர்கள்.

தென்மாவட்டங்களில் மட்டும் ஏன் இப்படி பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஒரு பகை நிலவுகிறது, எப்போதாவது அது வன்முறையாகவும் மாறுகிறது, கடைசியில் யார் மீது குற்றமிருந்தால் காவல்துறையின் குண்டுக்கு சாவது சாதியிலும், பொருளாதாரத்திலும் கடைசியிலுள்ள சேரிமக்கள். இந்த சாதிப்பூசல்கள் தொழில்ரீதியாகவும் நிலவுடமை காரணமாகவும் நீடித்துவருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் முதலாளித்துவத்தால் தொழிற்சாலைகள் பெருகின, அங்கே தொழிலுக்கு அமைதியும் இலாபமும் மட்டுமே தேவை.தென்மாவட்டங்களில் விவசாயம் மட்டுமெ அந்த மக்களின் வாழ்வாதாரம். அந்த நிலம் எல்லோருக்கும் இல்லை, நிலமில்லா கூலிகள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகமாக தலித்துகள் இருக்கிறார்கள். மற்றவர் நிலத்தில் சென்று உழைப்பை செலுத்தி அதில் வாழ்ந்தும், அவர்களை நம்பியும் வாழ்கிறார்கள். தொழிற்சாலை உடமையாளர்கள் `மனு`வின் எழுத்தை பரணில் போட்டுவிட்டமாதிரி நிலவுடமையாளர் களால் செய்யமுடியவில்லை. இன்னமும் மனுவை உயிர்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

தென்மாவட்டங்களை விட நிலவுடமை இன்னும் அதிகமாக இருக்கும் கீழ்த்தஞ்சையிலும் நாகைமாவட்டங்களிலும் தீண்டாமையோ அல்லது சாதிமோதலை இல்லையென்றால், அங்கே சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சிகள் அந்த மக்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம்தான். இன்னமும் நமது நகராட்சிகளிலும் அரசின் துப்பரவு பணிகளிலும் `மாதிகா’க்களும் அருந்ததியினரும் தான் குப்பையள்ளும் வேலையை செய்கிறார்கள், அதை தனியார்மயமாக்கியபோது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் மற்றசாதியினரும் அந்த வேலையை செய்ய முன்வந்ததுதான். மற்றவேலைக்குத் தரும் ஊதியத்தைவிட அங்கே அதிகமாக ஊதியம் கொடுத்தால் அந்த “ சாதிக்கான வேலை ” என்பது எப்போதே ஒழிந்திருக்கும். நிலவுடமைச்சமூகத்தை விட முதலாளியம் முற்போக்கானது தான், மேல்சாதித் தெருக்களில் செருப்பணிந்து நடக்கமுடியாத மக்கள் பிரிட்டிஷ் விட்ட ரயிலில் டிக்கெட் எடுத்தால் சமதையாக அமரும் சுதந்திரம் கிடைத்தது. வள்ளுவன் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று எழுதியதை நாம் செம்மொழியின் அடையாளமாகக் கொண்டாடினாலும் இழிசினர் என்ற பதம் சங்ககாலம் தொட்டு தொடர்ந்து ஒட்டிக்கொண்டு வருகிறது.

இன்னமும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த தெருவில் நாம் செருப்பணிந்து செல்லலாமா, சைக்கிள் ஓட்டத் தகுதியான தெருவா, இந்தக்குளத்தில் குளிப்பற்கு அனுமதியிருக்கிறதா, இந்த ஆலயத்தில் வழிபாட்டு செய்வதற்கு தாங்களுக்கு உரிமை இருக்கிறதா இந்தப் பொதுக்கிணறு தாங்கள் பயன்படுத்த முடியுமா ஏன் செத்த பிறகு புதைக்கும் சுடுகாடும் நாம் பயன்படுத்துவதற்கு ஏற்றதா? என்று வாழ்ந்து வருகிறார்கள். இப்பயெல்லாம் யாருங்க சாதிவித்தியாசம் பார்க்கிறாங்க? என்ற கேள்வி அப்பாவித்தனமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பேரளிகிராமத்தில் தலித்துகள் மேல்சாதித்தெருக்களில் சைக்கிள் ஓட்டமுடியவில்லை என்ற செய்தி செப்.3ம்தேதி ஹிந்து நாளிதழில் வந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல்கள் அறிவித்துள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் எந்தக்கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிற வேளயில் பாப்பாபட்டி,கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் என்ற பெயர் சொன்னாலே பொருள் விளங்கக்கூடிய கிராமங்களில் எதுக்கு இந்த தேர்தல் வந்து தொலைக்குது என்ற எண்ணம் பயத்தின் காரணமாக அந்த மக்களிடம் வருகிறது. 2006க்கு முன்பு பத்தாண்டுகளாக அந்த ஊராட்சிகளில் முறையாக தேர்தலே நடத்தமுடியாத சூழ்நிலை நிலவியது. அப்போதைய ஆட்சித்தலைவர் உதயச்சந்திரன் வெற்றிகரமாக நடத்திமுடித்தார். எந்த பிரிவினர் இந்த தேர்தலை நடத்த தடையாக இருக்கிறார்களோ அவர்களின் மனசாட்சியை தட்டியெழுப்பி தேர்தலை நடத்தினார். பாரதி தன்னுடைய சாதியின் மாண்பை தூக்கியெறிந்து மனுவின் நீதியை விமர்சித்து “சூத்திரனுக்கு ஒரு நீதி, தெண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு ஒருநீதி” என்று சுயசாதி என்ற அபிமானத்தில் சிக்காமால் கலகம் செய்தான். அவன் வைத்த அக்னி நல்லது என்பதால் தானே, இந்த சமூகம் அவனை கொண்டாடுகிறது. தலித் களின் காவல்ர்கள் என்று சொல்லித்திரிவோர்களால் இந்த அவலம் நீங்கா, அந்தத் தலைவர்கள் அடுத்த தேசத்திலுள்ள தமிழர்களுக்கு குரல் கொடுத்தால் அவரை கொண்டாடும் சமூகம், உள்ளூர் தலித் களுக்காக போராடினால் தீய சக்தி என்று சொல்கிறது. சென்னையில் ‘நாம் தமிழர்’ என்று பேசிய தமிழன் சொந்த கிராமத்திற்குச் சென்று சாதிப்பெருமை பேசினான் .

தமிழனுக்கு கடாரம் கொண்டான் என்ற வீண்பெருமை வேண்டாம், ஏகாதிபத்தியத்தை அமெரிக்க்கா செய்தாலும் சோழனாகிய தமிழன் செய்தாலும் அது தவறு தான். நமக்கு அருகாமையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து ஒரு சிங்களன் எழுதினான் நான் சிங்களனாக இருப்பதில் வெட்கமடைகிறேன் என்று. ஆதிக்கம் சாதிசெய்தால் என்ன மதம் செய்தால் என்ன மொழிசெய்தால் என்ன? சுயத்தை எதிர்த்து கலகம் செய்தால் எல்லாம் உடையும்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கடவுளுக்கு காணிக்கையா? லஞ்சமா?

திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு காணிக்கையாக ‘சுரங்கப் புகழ்’ ரெட்டி சகோதரர்கள் அளித்த கீரிடத்தை திருப்பிக்கொடுக்க ஒரு வாரத்தில் தேவஸ்தானம் முடிவு செய்யும் என்ற செய்தி வந்துள்ளது. அந்த கீரிடத்தின் மதிப்பு ரூ45 கோடி, 2.5 அடி உயரமுள்ள அந்த கீரிடம் 30 கிலோ தங்கத்தாலும் 70,000 வைரக்கற்களாலும் செய்யப்பட்டு இரண்டு வருடத்திற்கு முன்பு பணக்காரக் கடவுளுக்கு காணிக்கை செய்துள்ளனர். இந்த ரெட்டி சகோதரர்கள் இந்த வருடத்தில் காளஹஸ்தி கோவிலுக்கும் ரூ 15கோடி மதிப்பிலான ஆபரணங்களை காணிக்கை செய்துள்ளனர். கோடிகோடியாக யாரால் காணிக்கை அளிக்க இயலும் என்பதை முன்பே தேவஸ்தானம் யோசிக்கவேண்டாமா? இப்படி முறைகேடாக சம்பாதித்தவர்கள் அளித்த காணிக்கையை திருப்பியளித்தால் கோவிலில் அசையாத சொத்துக்கள் தான் மீதமிருக்கும்.



இந்தியாவின் இயற்கை வளத்தை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தனிச்சொத்தாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி கொள்ளையடித்து சேர்த்த பணம் தான். இந்தப் பணம் தான் கர்நாடக்த்தில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவந்தது. இவர்கள் எத்தனை ஆண்டுகளாக சட்டத்திற்க்கு விரோதமாகவும் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். அரசியல் சதுரங்க விளையாட்டில் இன்று மாட்டிக்கொண்டவர்கள், இன்னும் எத்தனையோ எத்தன்கள் இயற்கை வளத்தை சூறையாடியவர்கள் கம்பிகளுக்குள் செல்லவேண்டியவர்கள் புனிதர்களாக இருக்கிறார்கள், சென்செக்ஸில் அவர்கள் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தில் இருக்கும்வரை நம்முன் புனிதர்கள்தான். 2G விவகாரத்தில் தயாநிதியை குற்றமற்றவர் என்று வாசித்துவிடுவார்கள். அவர் சங்கத்தில் இருக்கிறாரோ என்னவோ? கடவுள் முன்பு இவர்களும் பக்தர்கள், இவர்கள் செய்யும் சட்டவிரோத தொழிலால் வாழ்க்கை இழந்த சாமான்யர்களும் பக்தர்கள், கடவுள் யார் பக்கம்? பாவம் கடவுள்.

புதன், 7 செப்டம்பர், 2011

நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே....

பல நேரங்களில் மனிதர்கள் மனிதன் என்ற நாகரீக அடையாளத்தை விட்டுவிட்டு சாதி, இனம் ,மொழி, மதத்திற்குள் அடைக்கலம் தேடுகிறார்கள். ஒரு விலங்கிடமிருந்து அதே விலங்கு பிறக்கிற மாதிரி தான் மனிதனிடமிருந்து ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்தவுடன் தகப்பனின் சாதி, மதக் குறீயிடுகள் வந்துசேர்ந்துவிடுகின்றன. மற்ற உயிரினங்களிடமிருந்து மனித இனம் மேம்பாடு அடைந்தது என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எந்த விலங்கு தன் இனத்தை சாதியின் பெயரால் அடிமைப்படுத்துகிறது, தன்னுடைய மலத்தை அதே விலங்கின் வாயில் திணிக்கிறது. விலங்குகள் பேசாத மொழி நமக்கு பேசத்தெரிந்திருந்தாலும் பேசுகிற மொழியால் பேதமும் சேர்ந்து வளர்ந்திருக்கிறது. 21ம் நூற்றாண்டில் மனிதர்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று வாழ்ந்து வந்தாலும், பசிஎன்பது வரும்போது நாயைவிட கேவலமாக மொழியின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சகமனிதரை வெறுக்கிறோம்.

சென்ற நூற்றாண்டில் கொடுங்கோலன் ஹிட்லர் தனது நாட்டில் யூதஇனமக்கள் ஜெர்மானியர்களை விடமுன்னேறியது பொறுக்காமல் ‘நானூறு ஆண்டுகால பொய் புரட்டு மோசடிகளை எதிர்த்த என்னுடைய போராட்டம்’ என்ற புத்தகம் எழுதி யூதர்களுக்கு எதிராக ஜெர்மானியர்களிடம் துவேஷத்தை விதைத்து மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தினான். ஹிட்லர் மடிந்தாலும் அவனுடைய வாரிசுகள் உலகமெங்கும் பரவி இருக்கிறார்கள். அவர்களின் கையிலுள்ள ஆயுதம் மொழிவெறியாகவும், மதவெறியாகவும், இனவெறியாகவும் இருக்கலாம். ஆனால் கொண்ட கொள்கை ஒன்றுதான். ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது வெறுப்புணர்வு தூண்டுகிறது, நாட்டிற்குள்ளேயே மாநிலங்களில் அடுத்த மாநில மக்கள் மீதான வெறுப்பு விதைக்கப்படுகிறது, ஒரே மாநிலத்திலேயே அடுத்த மாவட்ட மக்கள்மீதும், அடுத்தசாதியின் மீதும் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. மும்பையில் பால்தாக்கரே மொழிவெறி, மதவெறி பிரதேசவெறியையும் சேர்த்து விதைக்கிறான். விளைவு அன்று வரை ஒற்றுமையாய் இருந்த மக்கள் சண்டையிட்டு மாய்த்துக்கொள்கின்றனர். தமிழர்களால் மாராட்டியர்கள் பாதிக்கப்படுகிறோம், பிகாரிகளால் நமக்கு வேலைவாய்ப்பு குறைகிறது என்று தூவுகிறான்.அதைப் பார்த்துவிட்டு நாம் எல்லா மாரத்தியனும் பிறமொழி மக்களை வெறுப்பவனாகக் கொள்வது மடமை. தமிழர்கள் இந்தியாவில் எல்லாப் பிராந்தியத்திலும் வசிக்கிறார்கள், ஆனாலும் இங்கே மார்வாடிகளாலும், மலையாளிகளாலும், ஆரியர்களாலும் தமிழன் ஏமாற்றப்படுகிறான் என்ற விஷத்தை பரப்புகிற நாகரீக? மாக்களை நாம் பார்க்கிறோம்.

காவிரி நதிநீர்ப்பிரச்சனையா? சமூக அக்கறையுணர்வோடு மக்களுக்காக திரைப்படங்களை தயாரிக்காத இயக்குனர்கள், நடிகர்கள் போராடுகிறேன் என்று கன்னட மக்களுக்கெதிராக பேசுகிறார்கள். பெங்களூரிலுள்ள தமிழர்கள் வன்முறைக்குப் பயந்து எப்போதும் காவிரிப்படுகையில் நல்ல மழை பெய்யட்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பேசுகிற மொழிவெறிக்கு கிடைக்கிற முதல் அடி பெங்களூர் தமிழனுக்கு. எல்லா இடத்திலும் சிறுபான்மையினர் மொழிரீதியாகவும், இனரீதியாகவும், மதரீதியாகவும் சாதிரீதியாகவும் ஒரு அச்ச உணர்வுடனேயே வாழ்ந்துவருகிறார்கள். இலங்கையில் சிறுபான்மையினரான தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்படுகிற இனப்படுகொலையும் இனவெறுப்பையும் பார்க்கிற நாம், இங்கேயும் அதே துவேஷத்தை வெறுப்பை மற்ற மொழியினர்மீதும், இனம் ஒன்றாலும் சாதி வேறுபாட்டால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்குகிறோம்.

மலையாளிகள் மீதும் பரப்பப்பட்ட துவேஷம் என்பது அங்கே வாழ்கிற தமிழர்களை இவர்கள் பார்ப்பதில்லை. இவர்களையெல்லாம் துரத்திவிட்டால் ‘தமிழன்’ ஒற்றுமையாக வாழ்ந்துவிடுவானா? ஒரு மலையாளி இந்த குழும உறுப்பினராக இருந்தால் அவருடைய மனநிலை என்ன என்பதை வசை பாடுகிறவர்கள் யோசிக்கவேண்டும். எல்லா இனமும் எல்லா இடத்தில் பெரும்பான்மை இன சமூகத்தில் வாழ்ந்துவிடமுடியாது. பாலாற்றில் மணலை கனரக இயந்திரம் மூலமாக வாரியெடுத்து ஒரு நதியை ‘பாழாக்கியவன்’ தமிழன் தானே? காசுக்காக இங்கிருந்த மணல் கடல் தாண்டி விறப்னையாவது தெரியவில்லையா? இங்கே அந்த சமூகவிரோத செயலில் ஈடுபடுபவனின் பூர்வத்தை பார்க்கவில்லை,ஸ்டெர்லைட் என்ற நிறுவனம் காற்றிலும் கடலிலும் இலாப வேட்கையில் அமிலக்களை பரப்பும் போது அதை ‘மார்வாடி’ களின் சதி என்று பார்ப்பதில்லை. அது தனியார் நிறுவனக்களின் இலாப வேட்கையால் தோன்றும் விளைவுகள். மலையாளியை விமர்சிதாலே அது கம்யூனிஸ்ட்களை விமர்சிக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இன்னமும் ஒருவர் ‘தமிழ் வெறி’யை எதிர்த்தால் அங்கே பூர்வம் தோண்டப்படுகிறது, நீ தெலுங்கன், அல்லது ஆரியன் நீ அப்படித்தான் பேசுவாய் என்கிறது. எல்லோருடைய பூர்வத்தையும் தோண்டிகொண்டே சென்றால் யாருமெ பூர்வகுடிகள் இல்லை. எல்லாமும் பிழைக்க வந்த கூட்டம்தான். வந்தவர்களிடம் கால அளவுகள் வேறுபடலாம். உலகத்தில் இல்லாத பேதங்கள் மொழியால், மதத்தால், சாதியால், நிறத்தால், உணவால் பேதங்கள் இருக்கின்றன, இந்த பேதங்கள் எப்போதும் நம்மை பிரித்தல் ஆகாது. பஞ்சபூதங்கள் எப்படி ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் இந்த பிரபஞ்சம் அந்த முரண்பாட்டில்தான் இயங்குகிறது. சிறு கேடு ஏற்பட்டால் அது தான் சுனாமியாகவும், புயலாகவும், பூகம்பமாகவும் காட்டுகிறது. மனித சமூகத்திலும் இணக்கம் கெடும்போதெல்லாம் வன்முறை சிறிய அளவிலும் பெரிய அளவிலும் நடைபெறுவதை காண்கிறோம். நாம் இணக்கம் காணும் வேலையைச் செய்வோம். பேதங்களை ஒரு போதும் ஒழிக்கமுடியாது, இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது பலம் என்பதை தெரிவோம்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கூட்டுப்பொருளாதாரம்...

தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் ஒரு விழாவில் பேசியதைக்கேட்டேன், இந்தியாவிற்கு ஏற்றது “கூட்டுப்பொருளாதாரம்” தான் என்று பேசினார். எல்லாமே தனியார்மயமாக இருந்தால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி நடக்கும் அப்புறம் மக்களின் பணத்தை ‘பெயில் அவுட்’ என்ற பெயரில் அரசு அவர்களுக்கு அளிக்கவேண்டிய நிலைமை வரும். மறுபுறத்தில் எல்லாமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் சோவியத்துக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டுவிடும் என்று பேசினார். இந்தக் “கூட்டுப்பொருளாதாரம்” இந்தியாவிற்கு நல்லது தான் ஆனால் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிற பெருமுதலாளிகள் அதற்கு அனுமதிப்பார்களா? என்பதற்கு இந்தியப்பொருளாதாரம் ஒரு சாட்சியாகவே இருக்கிறது. எல்லா அதிகாரத்தையும் தன்னிடம் குவித்துவைத்துள்ள ஒரு மத்திய அரசு ‘கார்ப்பரேட்டுகளின்’ நலனிற்காக பொதுத்துறை நிறுவனக்களை காவுகொடுப்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். தினமணி ஆசிரியர் எழுதுகிற தலையங்கம் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கிறது. பொதுதுறையை தனியார் மயமாக்கினால் அரசை விமர்சிக்கிறது. உலகமயமாக்கல் கொள்கையை இப்போது விமர்சிக்கிற அளவிற்கு அது அமல்படுத்தப்பட்ட போது விமர்சித்தார்களா? எந்த அரசியல் இயக்கங்களை அவர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள்? மக்களை யாருக்காக அணிதிரட்டினார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.

பணம் வைத்திருப்பவன் எப்போதுமே அதிகாரம் செலுத்துவதற்கு முயற்சிப்பான், என்பதற்கு கு.அழகிரிசாமி எழுதிய ‘இரு சகோதரர்கள்’ சிறுகதையை எஸ்.ரா சொல்லக்கேட்டேன். அக்கதையில் தம்பி சம்பாதித்து தனது அண்ணனின் குடும்பத்தையும் வாழவைக்கிறான். தன் அண்ணனே ஆனாலும் தன்னுடைய வருமானத்தை நம்பி வாழ்கிறவர்களை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறான். சொத்துடைமை எப்போதுமே ஆதிக்கம் செலுத்துகிறது, மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறது அது எளிய மனிதர்கள்மீதும், அரசு இயந்திரத்தின் மீதும் பெரும்பாலான அரசியல்வாதிகள் மீதும் அதிகாரம் செலுத்துகிறது. வளைகுடா நாடுகளில் எந்த குடும்பம் அதிகமாக சொத்துடையதாக இருக்கிறதோ அதுதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. நமது கிராமங்களில் ஆலயங்களில் சொத்துடையவர்களுக்குத்தான் பூரணகும்ப மரியாதை கிடைக்கிறது. அவர்கள் ஆதிக்கம் செய்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருக்கிற இந்தியாவின் பெரும் முதலாளிகள் இந்திய அரசின் நிர்வாகத்தின் மீதும், அரசியல்கட்சிகள் மீதும் அதிகாரம் செலுத்துவதை நாம் பார்த்துவருகிறோம்.

இந்தியாவிற்குத்தேவை பொதுத்துறையா, தனியார்துறையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். விலைவாசியை அரசு எப்படி கட்டுப்படுத்துகிறது, தனியார் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்ற பொருளுக்கு வைக்கிற விலை அரசின் அதிகாரத்திற்கு உடபடுத்தப்பட்டிருக்கிறதா? அதிகமாக ஈட்டப்பட்ட ‘உபரி’ மதிப்பு தானே லாபம், அப்படி ஈட்டுகிற உபரிகளுக்கு அரசின் கொள்கை எவ்வளவு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்பதை ஆராயவேண்டும். கடந்த மாதம் அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மிகவும் பிரபலமடைந்தது, அது அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்கிற ஊழலை மட்டும் விமர்சித்தது ஊழலின் முக்கியமான பிறப்பிடம் பற்றியோ கார்ப்பரேட்டுகள் அதில் பலனடைந்தது பற்றியோ குறிப்பிடவில்லை. அப்படி அவர் போராடினால் இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் அவரின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். பத்திர்க்கையாளர் சாய்நாத் அன்னா ஹசாரே போராட்டத்தைப் பற்றி சொல்லும்போது, ராம்லீலா மைதானத்தில் கூடுபவர்கள் டாடா, அம்பானி, மிட்டல் போன்றோர்களின் பங்குகளை புறக்கணித்தால், கார்ப்பரேட்டுகள் ஈட்டிய கொள்ளையை திரும்பவும் அரசின் கஜானாவிற்கு கொண்டுவர கோரிக்கை வைத்தால் தானும் போராட்டத்தில் கல்ந்துகொள்வேன் என்றார். இங்கு Structural adjustments என்று சொல்லக்கூடிய திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு ஒரு சிலர்கையில் செல்வம் குவிக்கச்செய்வதை அரசு ஊக்குவிக்கிறது. சமூகத்தில் யார் எவ்வளவு வரி கட்டவேண்டும் என்பதை பட்ஜெட் கலந்தாய்வில் பெரு முதலாளிகளின் ஆலோசனையைத்தான் அரசு கேட்கிறது. அவர்களுக்கு சிறப்பு ஊக்கமும் வரியில் தள்ளுபடியும் செய்கிறது. இப்படித்தானே சிறுவியாபாரிகளாக இருந்த அம்பானிகள் இன்று நாட்டில் முதல் பணக்காரன் அந்தஸ்து பெற்றது.

ஒருவருக்கு தெரியாமல் அவர் பொருளை பணத்தை பறிப்பது ‘திருட்டு’ என்கிறது சட்டம். ஆனால் பிறர் உழைப்பை திருடுகிறவர்கள் பற்றி சட்டம் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வியாபாரி 100 ரூபாய்க்கு பொருளைவாங்கி 200 ரூபாய்க்கு விற்பனை செய்வதை இந்த சமூகம் ‘திறமை’ என்று அங்கீகரிக்கிறது. இது திருட்டு தானே. இப்படியே பிறர் உழைப்பில் வாழ்வதை சமுதாயம் அதை நியாயப்படுத்துகிறது.யார் அதிகமாக ‘உபரி’ யை ஈட்டுகிறார்களோ அவர்கள் அடுத்தவர்களின் உழைப்பை திருடுகிறார்கள். நடைபாதிக்கடையில் வாங்குகிற பொருளுக்கு பேரம் பேசும்கிற நாம் அலங்காரமாக கடைவைத்து நடத்துபவர்களிடம் வாங்குகிற பொருளுக்கு அவர் சொன்னவிலையை கொடுத்துவிட்டு வருகிறோம். சமூகம் எளியமனிதர்கள் மீது அதிகாரம் செய்வதற்கு கற்றுக்கொடுக்கிறது. நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அத்னுடைய உறபத்திவிலை தெரியவில்லை. ஒரு அரசுக்கு பொருள் உற்பத்தியாளர் அதன் மீது வைக்கிற லாபம், அதற்கு செய்கிற விளம்பரம் எல்லாம் தெரியவேண்டும். அதோடு கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கவேண்டும். அரசிடம் இன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அரசின் நிர்வாகத்தை தெரிந்து கொள்ளலாம், இது தனியார் நிறுவனக்களுக்கும் பொருந்தவேண்டும். இப்படி மக்கள் வாங்குகிற விற்கிற பொருட்களின் உற்பத்திவிலை விற்பனைவிலைக்கும் உள்ள இடைவெளி அல்லது சதவீதத்தை ஒரு அரசு கட்டுப்படுத்தினால் அப்போது ‘கூட்டுப்பொருளாதாரம்’ இந்தியாவில் சாத்தியமாகும்.

இந்த விவாதத்தை நம்முடையா மீடியாக்கள் மக்களிடம் கொண்டுசெல்வார்களா என்ன?

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தாய்மொழியில் எழுதுங்கள்..


எந்த பாஷையானாலும் சொந்த பாஷையில் படி என்கிறார்கள் மொழி அறிஞர்கள். ஆனால் இப்போது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலவழிக் கல்வியே பிரதானமாக இருக்கிறது. தாய் மொழியை இரண்டாம் மொழி, மூன்றாம் மொழிப் பாடமாகககூட பயில்வதற்கு தயங்குகிறார்கள். இன்று தமிழர்கள் பிறமொழிக் கல்ப்பில்லாமல் பேசமுடிவதில்லை. அந்த அளவிற்கு நம்மிடம் சொற்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மொழியை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே அதில் புதிய சொற்களை பயன்படுத்தமுடியும். நாம் பேசும் போது ஆங்கிலச்சொற்களை அதிகம் பயன்படுத்தினால் `மேலானவர்கள்` என்ற எண்ணம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆங்கிலமொழி நம்மை ஆண்டதால் இன்னும் அதை ஆதிக்க மொழியாக அங்கீகரித்துள்ளோம். அதற்காக தமிழ் தான் மூச்சு என்று பிற மொழிகளை வெறுத்து ஒதுக்கவேண்டாம்.

அவரவர் மொழியில் முதலில் புலமை பெறவேண்டும், ஆங்கிலத்தில் தான் நாம் மருத்துவம், தொழில்நுட்பம், கணனி எல்லாமெ கற்கிறோம். சொந்த மொழியில் படித்தவர்கள் மிகச்சிறப்பாக விளங்குகிறார்கள் அதற்கு ஜப்பான்,சீனா பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவரவர் தாய்மொழியில் தான் எல்லாவற்றையும் படிக்கிறார்கள்,ஆனால் அவர்களின் இணைப்பு மொழி என்பது ஆங்கிலமாக உள்ளது. அதை ஒரு மொழிப்பாடமாகப் படிக்கிறார்கள். நாம் நம்து தேர்வில் தாய்மொழிக்கும் 35 மதிப்பெண் ஆங்கிலத்திற்கும் 35 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண் என வைத்திருப்பது நமது மொழிக்கொள்கையில் உள்ள குறைபாடு என ஒரு கல்வியாளர் சொல்கிறார். இன்று மொழிதான் `இனம்` என்பதை அங்கீகரிக்கிறது. நாம் தாய் மொழியை புறக்கணிக்கும்போது இனத்திலிருந்தே வெளியே சென்றுவிடுகிறோம் என்பது மட்டுமல்ல நாம் அடையாளமற்று போய்விடுகிறோம். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொருந்தும். இதற்கு எளிய உதாரணம் தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், செளராஷ்டிரம் பேசும் மக்கள் முன்பு மன்னர்கள் ஆட்சி காலத்தில் பிற பகுதிகளிலிருந்து தமிழக்த்தில் குடிவந்திருக்கிறார்கள். தாய்மொழியை அவர்கள் இன்றும் பேசிவந்தாலும் அவர்கள் மொழியில் அவர்களுக்கு எழுதும் பயிற்சியும் திறமையும் இல்லை. அவர்கள் அப்போதே அவர்களின் இனத்திலிருந்து அன்னியப்ப்ட்டுவிட்டார்கள்.

நம்மில் பெரும்பாலன நண்பர்கள் ஆங்கிலத்தில் தான் இந்த `பேஸ் புக்` கில் எழுதுகிறார்கள். நமக்கு பிறமொழி நண்பர்களும் குழுமத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்காக பொதுமொழியிலும் மற்றவை தமிழில் எழுதலாம். பலர் தமிழை ஆங்கில எழுத்தில் எழுதிவருகிறார்கள். தட்டச்சு செய்வதற்கு நமக்கு ஆங்கிலம் எளிதாக இருக்கலாம். ஆனால் தமிழ்மொழியை செம்மைப்படுத்துவதற்கு `ஆட்சியாள்ர்கள்` அல்லது அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் நம்க்கு வேண்டாம். இந்தோனேசிய மக்கள் தங்கள் மொழியின் எழுத்துக்களைப் பயன்படுத்தி நான் பார்த்ததில்லை அவர்கள் ஆங்கில எழுத்துக்களை வழியாக தங்கள் மொழியை எழுதுகிறார்கள், பெரும்பாலோனோர் அவர்களின் எழுத்துருக்களை மறத்திருப்பார்கள். இந்த நிலை தமிழுக்கோ தமிழர்களுக்கொ வரவேண்டாம் என்பது அன்பனின் வேண்டுகோள்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

பிழைப்பு என்பது `பிழையாக` வாழ்வது

நீண்ட நாட்களாக மனதில் ஓடியவற்றை எழுதமுடியாமலேயெ போய்விட்டது. ‘அடர்கருப்பு ’ வலைப்பூவில் வந்த வரிகள் ‘லஞ்சம் கொடுத்தவரும் லஞ்சம் வாங்குவபருமாகக் கலந்து கிடக்கிறது தேசம்’ எவ்வளவு யதார்த்தமான உண்மை. மத்தியதர மக்கள் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தியடைந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் 24 மணிநேர செய்தி ஊடகங்கள் காட்டும் பரபரப்பிற்கு பின்னால் ஒடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் சமூகமாற்றத்தைப் பற்றியோ விளிம்புநிலை மனிதர்கள் படும் பொருளாதாரப் பிரச்ச்னைகள் பற்றியோ அவர்களிடம் தீர்வும் அக்கறையும் இல்லை. ஆனால் லட்சங்கள் கொட்டி ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வியை விலைக்கு வாங்கிவிட்டு அடுத்தவர்களின் ஊழலை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறார்கள். இந்த தேசத்தில் ஊழலைத் தவிற வேறு பிரச்ச்னைகளே இல்லையா என்ன?

இந்த நாட்டில் நான்கில் மூன்று பங்கு பேர்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாயில் பிழைப்பு நடத்துகிறார்கள் என்ற அரசாங்கமே அமைத்த சென்குப்தா அறிக்கை சுட்டிகாட்டியது, அந்த அறிக்கை வெளிவந்த 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் நிலைமை மாறிவிட்டதா என்றால் மேலும் அவர்கள் மீது சுமையை ஏற்றிகொண்டெயிருக்கிறது. அவர்கள் எப்படி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியும்.மூன்றாம் உலக நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ள தேசம் இந்தியா தான். சென்ற நூற்றாண்டு வரை தென் அமெரிக்கா கண்டத்தில் பெரும்பாலான நாடுகளை காலனியாக வைத்திருந்த ஸ்பெயின் நாட்டில் இந்தியாவின் பில்லிணியர்கள் இல்லை, டச்சுக்காரர்களிடம் இத்தனை பில்லிணியர்கள் இல்லை, பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பான் என முன்னேறிய நாடுகளில் கூட இந்தியா உருவாக்கிய பில்லிணியர்கள் அங்கு இல்லை. உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி ஒரு ஏற்றத்தாழ்வு. அரசாங்கம் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொள்கையை கடைப்பிடிப்பதால் தானே. அம்பானிகளும் வேதாந்தாக்களும் இலாபம் வளர்ச்சி என்று சொல்லுகிறார்களே அது என்ன சுத்தத் திறமையால் நிகழ்ந்த அற்புதமா என்ன? சென்ற நூற்றாண்டில் அபினி என்ற கஞ்சாவை ஏற்றுமதி செய்தவர்கள் இப்பொது புனிதப்பசுக்களாகிவிட்டார்கள். இந்த மக்களின் வளத்தை தனதாக்கிக்கொண்டு வளர்ந்தார்கள். அரசாங்கத்தை அதை நடத்துகிற அரசியல்வாதிகளையும் அதிகாரவர்க்கத்தையும் கையில் போட்டுகொண்டு அவர்களுக்கு சாதகமானவற்றை எல்லாம் சட்டங்கள் செய்தார்கள். சாதகம் என்பதே என்ன? அது பாதகத்தை மற்றவருக்கு ஏற்படுத்துவதுதானே? எண்ணிக்கையில் சிறிய அளவிலுள்ள இந்த மாபாதகர்கள் பெருவாரியான மக்களின் சட்டைப்பையிலிருந்து பணத்தை கண்ணுக்குத் தெரியாமலேயெ எடுக்கிறார்கள் அதற்குத் தானே இந்த பாராளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை அரசு.

வலுத்தது வாழும் என்பது டார்வினின் பரிணாமக்கொள்கை, நாகரீக சமூகத்தில் எளியவர்களையும் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதற்குத்தானே இந்த `அரசு’ இருக்கிறது. ஆனால் சமூகத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் பையிலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் திருடிக்கொண்டேயிருக்கிறார்கள். எல்லோரும் அதற்குச் சொல்லும் விளக்கம் `இலாபம்`. எத்தனை சதவீதம்? அது வாங்குபவன், விற்பவன், சந்தை தீர்மானிக்கும்? பிறகு என்னத்துக்கு இந்த அரசாங்கம். உழைப்பை சரக்காக விற்பவனும் உணவு உறப்த்தி செய்யும் விவசாயியும் தான் இந்த சமூகத்தில் ஏமாந்தவர்கள். ஏனென்றால் அவர்களின் `சரக்கை` எப்போதும் வாங்குபவனே விலை சொல்கிறான். தேசத்தில் விலைவாசி விண்ணைத்தொட்டாலும் கவலைக்குள்ளாகமல் நிறையப்பேர் இருக்கிறார்கள், அவர்கள் உழைப்பை விற்பவர்கள் அல்லர். சரக்குகளை விற்பவர்கள் தாங்கள் வாங்கும் பொருளின் விலைக்கு கொடுக்கும் கூடுதல் தொகைக்கு விற்கும் பொருளிடம் வைத்துக்கொள்கிறார். இதை எப்படி கொள்ளை, மோசடி அநியாய விலை என்று சொல்லமுடியும். அவரவர்க்கு நியாயம் இருக்காதானே செய்கிறது.இதற்கு முடிவுதான் என்ன? இது பொருளாதாரச் சிக்கல். இந்த சிக்கலை அவிழ்ப்பதற்கு எந்த முயற்சியுமே இல்லை, ஏழை சொல் அம்பலம் ஏறுமா? என்பது போல இது எளியமனிதர்களின் பிரச்சனை மட்டுமே? தீர்வு தான் என்ன? தொடரும்...

புதன், 24 ஆகஸ்ட், 2011

ஊருக்கு இளைத்தவன் அரசியல்வாதி...


இன்று ஜன்லோக்பால் அமைக்கவேண்டும் என்று உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரேவிற்கு பெரும்பான்மையான நகர்ப்புற மத்தியதர மக்கள் ஆதரவளிப்பது அவர்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு மீதுள்ள வெறுப்பினால் தான். யாருக்கெல்லாம் அரசியல்கட்சிகள் பிடிக்கவில்லையோ அவர்களையெல்லாம் இந்த ஜன்லோக்பால் ஒன்றினைத்து விட்டது. மக்களை அரசியல்கட்சிகளிடமிருந்து விலக்கிவைக்கும் ‘அரசியல்’ அன்றி இது வேறில்லை. ஏற்கனவே அரசியலென்றால் சாக்கடை என்று ஒதுங்கியிருக்கும் எலைட் மற்றும் மத்தியதர வர்க்கத்தை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மீடியா வசதியாக பயன்படுத்திக்கொண்டது. ஊழல் என்றால் அரசியல்வாதி அல்லது அதிகாரவர்க்கம் என்று தான் பொதுப்புத்தியில் ஊறிக்கிடக்கிறது. உலகமயமாக்கல் சூழலில் அரசாங்கம் எல்லாவற்றையும் தனியாருக்கு தாரைவார்க்கும் சூழலை இந்திய கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனக்களும் பயன்படுத்திக் கொண்டன. இன்று லட்சம் கோடிகளில் புரளும் ஊழலுக்கு எது காரணம்? உலகமயமாக்கல் தான். 2ஜி அலைக்கற்றை ஊழலில் அரசியல்வாதிகளும் அதிகாரிகள் சிலரும் தண்டிக்கப்பட்டுள்ளனர், ஆனால் பயனடைந்த கார்ப்பரேட்டுகள் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனென்றால் இந்த அரசை நடத்துபவர்கள் அவர்களே! அப்படி அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை வந்துவிடக்கூடாதே என்பதற்காக அன்னா ஹசாரேவை இந்த அரசுக்கு எதிராகவே ஒரு கருவியாக முதலாளித்துவம் பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கும் இந்த 24 மணிநேர செய்தி மீடியாக்களுக்கும் உள்ள ‘கள்ள’உறவு 2ஜி அலைக்கற்றை ஊழலில் வெளிப்பட்டது. ‘பர்கா தத்’ என்ற பத்திரிக்கையாளர் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புரோக்காராக இருந்ததை இந்த நாடறிந்தது. இப்போது அந்த சேனல்கள் திருடனே, திருடன்... திருடன் ஒடுறான் பிடி என்கிற மாதிரி ஊழல் ஊழல் என்று கத்திக்கொண்டேயிருக்கிறது.

அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளொ எல்லோரும் ஊழல்வாதிகளோ அல்ல, இந்திய அரசியலில் இடதுசாரிகள் கறைபடியாதவர்கள் என்பதை இந்த ஊடகங்கள் ஏன் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை அல்லது இடதுசாரிகள் தான் ‘மாற்று’ என்று ஏன் சொல்லவில்லை. அது அவர்களின் வர்க்கநலன் அடங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்புவரை பிரதமர் மன்மோகன்சிங்கை நடுத்தரவர்க்கத்தினர் அவர் சிறந்த பொருளாதாரமேதை என்று கொண்டாடினார்கள், திருவாளர் மன்மோகன்சிங்கின் செழுமையான பயோடேட்டாவை மின்னஞ்சல்களில் பரப்பிவிட்டு தங்களின் தேசபக்த உணர்வை வெளிக்காட்டினார்கள்.மன்மோகன்சிங்கின் தாரளவாதக் கொள்கையால் இந்த மேட்டுக்குடியினர் முன்னேறியிருக்கின்றனர். ஆனால் அந்த பிம்பத்தை இப்போது அவர்களே போட்டு உடைத்துவிட்டார்கள். எந்த அளவிற்கு ‘தனிமனிதனை’ புகழ்கிறார்களோ அதே அளவில் இகழ்ந்தும் விட்டார்கள். யாரெல்லாம் அன்னா ஹசாரேவை ஆதரிக்கவில்லையோ அவர்கள் ஊழலுக்கு துணைபோகிறார்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். தாங்கள் விரும்புவதை இந்த தேசமே விரும்பவேண்டும் என்ற சிந்தனையை ‘கார்ப்பரேட்’ மீடியாக்கள் ஊதுகின்றன.

அரசியல்வாதிகள் தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம்கொடுத்தபோது இவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்குறவரை லாபம் என்று தேடிச்சென்று பணம்வாங்கினார்கள். அவர்கள் எப்படி அரசியல் நடத்துகிறார்கள் என்பதை அறியாமலேயே அவர்களை திட்டுகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளைத் தவிர எல்லா அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் நிதி /கட்சி நிதி வாங்குகின்றார்கள். இந்த அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் கூட கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஃபோர்ட் பவுண்டேசனிடமிருந்து $400,000 நிதி பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. தொண்டு நிறுவனக்கள் என்ற போர்வையில் இவர்கள் செய்வது ‘ஃபண்டு’ பண்ணுவது தான். ஊழலின் வேர் தெரியாமல் கூட்டத்தோடு கோவிந்தா போடுகிறார்கள்.வழக்கமாக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டால் மக்கள்பணம் வீணாகிறது என கூச்சல் போடுகிற, இவர்களால் பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் போய்விடுகிறது. லோக்பால் ஒன்றும் சர்வநோக நிவாரணி அல்ல என்பது தெரிய இன்னும் நாளாகும் அதற்குள் எத்தனையொ செய்திகள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஜன் லோக்பால் வந்தால்

ஜன் லோக்பால் வந்தால் இந்தியாவில் பாலும் தேனும் ஓடுகிறமாதிரி கொஞ்சபேர் பேசிகிட்டு இருக்காங்க, இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது // அன்னா ஹசாரே நினைக்கிற மாதிரி இந்த சட்டம் வந்திச்சின்னா
# 11,456 இலட்சம் கோடி கறுப்புப் பணம் இந்தியாவுக்கு வெள்ளையா வருமாம்,
# உலகத்திலேயெ பொருளாதாரத்தில 12ம் இடத்துக்கு வந்துருவம்,
# ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 60000 கோடி ரூபாய் நிதி கிடைக்குமாம்,
# அப்படின்னா ஒவ்வொரு கிராமத்துக்கும் 100 கொடி கிடைக்குமாம்,
# 20 வருஷத்துக்கு யாருமே வரி கட்டத்தேவையில்லையாம்,
# பெட்ரோல் 25ரூக்கும் டீசல் 19ரூக்கும் பால் லிட்டருக்கு 15ரூக்கும் கிடைக்குமாம்.
# அப்புறம் யாருமே மின்கட்டணம் செலுத்தத்தேவையில்லையாம் (எத்தனை வருசத்துக்குன்னு தெரியலை,
# இந்தியாவைன் எல்லைகள் எல்லாம் சீனப்பெருஞ்சுவர் மாதிரி உறுதியா ஆகிவ்டுமாம், (சுத்தி 3 பக்கத்துல கடல் இருக்கிறது கூட தெரியலா?),
# இந்திய சாலைகள் 28,000கிமீ ரப்பர் சாலையா மாறிவிடுமாம் (பாரீஸ் பட்டணம் மாதிரி),
# 2000 புதிய மருத்துவமனைகள் சகல்வசதியுடன், மருந்துகள் எல்லாம் இலவசம்.
# 95கோடி பேருக்கு இலவசமா வீடு கிடைச்சிரும் ....
.
அதனால நம்ம அன்னா ஹசரேவுக்கு ஆதரவு கொடுங்க. அப்புறம் இந்த மின்னஞ்சல 10 பேருக்காவது அனுப்புங்க. ஆமா என்னுடைய வேலைய செஞ்சிட்டேன்.//

(Anna Hazare says bring back the Black Money.Do u know what will happen if11,456 Lac Crores comes back.1. India Financialy No.12. Each district will get 60000 crores.1 & 1 village will get 100 Crores3. No need to pay taxes for next 20 yrs.4. Petrol 25 Rs,19,Diesel 15 Rs,Milk Rs.5. No need to pay electricity bill.6. Indian borders will become more stronger than the China Wall.7. 1500 Oxford like Universitis can be opened. 8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.10. 95 crore people will have their own house.Support Anna Hazare by forwarding this message to atleast 10 Indians. I did my job.)

இப்படி ஒரு மெயில் சுத்திகிட்டு இருக்கு., படிச்சவங்க கொஞ்சம் கூட யோசிக்காம இதையும் பார்வர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்க போய் முட்டுறதுன்னு தெரியலயே!!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நிதி நிறுவனங்கள்


நான் விடுமுறையில் சென்றபோது குழந்தைக்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என்ற திட்டமிருந்தது. எனது தந்தை நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிஸி ஏஜெண்டாக இருக்கிறார் அவரிடம் நாம் பாலிசி போட்டால் நல்லதென்றார். பாலிஸி போடுவதற்காக அந்த நண்பரை அழைத்திருந்தேன். அவரிடம் நேராக குழந்தைகளுக்கு LIC யில் எந்த பாலிசி நல்லது என்று கேட்டேன், அவர் LIC க்கு பதிலாக ‘PACL’ என்ற பெயருடைய பாலிசி திட்டத்தை என்னிடம் கொடுத்தார். எனக்கு தனியார் நிதி நிறுவனங்களில் பாலிசி எடுப்பதில் விருப்பமில்லை, நீங்கள் LIC யின் முகவர் என நினைத்தேன் அதனால் தான் உங்களிடம் பாலிசி எடுக்க அழைத்தேன் என்றேன். வந்த முகவர் LIC ஐ விட PACL யில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது என்றெல்லாம் வெகுநேரம் சொன்னார். 5 அல்லது 6 1/2 வருடம் கட்டினால் போதும் இன்சூரன்ஸ் பாலிசியும் அதோடு உள்ளது இறுதியில் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்றார். வேறு வழியின்றி அவரை அழைத்துவிட்டோமே என்று மிகவும் குறைந்தபட்ச அளவில் ஒரு பிளானில் சேர்ந்தேன். பின்னர் நம் உறவினர் ஒருவர் மற்றொரு இந்த ‘சங்கிலி’ தொடர் ஆள் சேர்ப்பு நிறுவனத்தில் முகவராக இருக்கிறார். தட்டமுடியாமல் அவரிடமும் சிறிய பிளான் எடுக்கவேண்டியதாயிற்று. முகவர்கள் தங்களுடைய கமிசன் தொகைக்காகவும்,அதிகமான ஆள்சேர்த்தால் பதவிஉயர்விற்காகவும் கவர்ச்சியாக பேசுகிறார்கள். நம்முடைய முதலீட்டை அந்த நிதி நிறுவனங்கள் எங்கோ நிலம் வாங்கி அதில் இத்தனை சதுரஅடி உங்களுக்கானது என்கிறார்கள். அவர்கள் ஒருநாள் ஓட்டமெடுப்பார்கள் அப்போது பாலிசிதாரர்களிடம் மாட்டுபவர்கள் இந்த ‘முகவர்கள்’ தான். தனியார் நிதி நிறுவனங்கள் புதிய புதிய பெயர்களில் வடிவங்களில் மாறிக்கொண்டே யிருக்கிறார்கள்.

இந்தியாவில் LIC அல்லது பொதுத்துறை வங்கிகளுக்கு நிகராக தனியார் நிதி நிறுவனங்கள் வளரமுடியவில்லை. மக்களுக்கு அவர்கள் மீது நம்பகத்தன்மையில்லை. ஒரு நண்பர் சொன்னார். பொதுத்துறை வங்கி என்பது ‘மனைவி’ மாதிரி,கவர்ச்சியிருக்காது ஆனால் அன்பு நீடித்திருக்கும். தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் எனபது ‘விலைமாதர்’ மாதிரி திட்டத்தில் விழுகிற வரைக்கும் தான் கவர்ச்சியிருக்கும் பின்னர் வேதனை தான் மிஞ்சும் என்றார். வளைகுடா நண்பர்கள் சிலர் பொதுத்துறை வங்கிகளை குறை கூறுவார்கள், நான் கேட்பேன் நீங்கள் எங்கே சேமிக்கிறீர்கள் என்று. பெரிய முதலீடு என்பது தேசிய வங்கிகளில், இதர ஆன்லைன் சர்வீஸ்களுக்காக ICICI /AXIS bank என்று செல்கிறார்கள். 2008ம் ஆண்டு உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது அதன் பாதிப்பு இந்தியாவிற்கு இல்லை, அமெரிக்காவில் இன்றும் மாதத்திற்கொன்றாவது வங்கி திவாலாகிவருவது வாடிக்கை. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. இதற்கு தேசிய வங்கி ஊழியர்களின் போராட்டமும் அவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் குரலும் தான் காரணம். வங்கி ஊழியர்கள் தங்களுடைய சம்பள உயர்வுகளுக்காக மட்டும் போராடவில்லை, வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது , காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், வங்கித்துறையில் அந்நிய மூலதனத்தைனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் போராடுகிறார்கள். பின்னது பொதுமக்களின் நலனும் சமூகத்தின் நலனும் அடங்கியிருக்கிறது. இன்சூரன்ஸ் துறையிலும் இதே நிலை தான். பன்னாட்டு இன்சூரன்ஸ் களுடன் கூட்டணி போட்ட இந்திய கம்பெனிகள் தலையெடுக்கவே முடியவில்லை. பொதுத்துறையை சீரழிக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து அதை காப்பார்கள் அந்த ஊழியர்கள் அது சமுதாயத்தின் தேவையும் கூட.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஈரோடு புத்தகத்திருவிழா 2011

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் வருடந்தோறும் ஜூலை/ஆகஸ்டு மாதத்தில் புத்தகத்திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த வருடம் விழாவின் மூன்றாம் நாளான ஞாயிறன்று சென்றிருந்தேன். காலை 11 மணிக்கு தொடங்குவதாக அறிவிப்பு இருந்தபோதும் மக்கள் 30 நிமிடம் முன்பாகவே அங்கே குழுமிவிட்டனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, முன்பெல்லாம் சினிமாவிற்குத்தான் இப்படி முன்னதாகவே வருவார்கள், ஆனால் புத்தகம் வாங்குவதற்காக மக்களும், மாணவர்களும் சில பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்ததை பார்க்கும் போது மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கவில்லை என்பது தெரிகிறது. இந்த விழாவை வருடந்தோறும் சிறப்பாக மக்கள் சிந்தனைப் பேர்வை நடத்திவருவது பாராட்டுக்குரியது. பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் காயிதேமில்லத் கலைக்கல்லூரியில் ‘பபாசி’ நடத்திய புத்தகத்திருவிழாவிற்கு சென்றிருந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தகத்திருவிழா நடத்துவதில் அதிக சிரமமில்லை, அங்கே வாசகர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் ஈரோடு போன்ற விவசாயம், சிறுதொழில் நடக்கின்ற ஒரு நகரமக்களிடம் புத்தகத்தை கொண்டு சேர்ப்பது மிகவும் சிறப்பான பணியாகும்.

கடந்த ஆண்டில் வலைப்பதிவர் ஈரோடுகதிர் மூலமாகத்தான் புத்தகத்திருவிழா குறித்த செய்தி அறிந்தேன். இந்த ஆண்டும் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் மாலை நடக்கின்ற சொற்பொழிவுகளை கேட்கமுடியாமல் போய்விட்டது. சென்றமுறை எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழ்செல்வன் மற்றும் மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரின் சொற்பொழிவை குறுந்தகட்டின் வாயிலாக கேட்டேன். இலக்கியம் பற்றியும் புத்தகம் படிக்கவேண்டியதன் அவசியத்தையும் எழுத்தாளர் பிரபஞ்சனின் பேச்சு அமைந்தது. இந்த முறை எழுத்தாளர்கள். ஜெயகாந்தன்,எஸ்.ராமகிருஷ்ணன், பாரதிகிருஷ்ணகுமார், பொன்னீலன், மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன், பாடலாசிரியர்.அறிவுமதி் ஆகியோர் ஆற்றிய உரைகளின் குறுந்தகட்டை வாங்கினேன். எழுத்தாளர்கள் சிறந்த சொற்பொழிவாளர்கள் என்பதை அவர்கள் ஆற்றிய உரையின் அறியமுடிந்தது.

இன்று இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் புத்தகம் வாங்கமுடிந்தாலும் நாம் அறியாத பல புத்தகங்களை, பதிப்பாளர்களை புத்தகத்திருவிழா நமக்கு அறிமுகம் செய்கிறது. கல்கியின் நூலகள் நாட்டுடமையாக்கியதால் எல்லா பதிப்பகத்திலும் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கிடைக்கிறது. இதே போல் தந்தை பெரியாரின் எழுத்துக்கள் எல்லோரிடத்தும் சென்றடைய வேண்டுமானால் பெரியாரின் எழுத்துகளும் சிந்தனைகளும் நாட்டுடமையாக்கப்பட வேண்டும், அதற்கு அவர் நடத்திய இயக்கமே தடையாக இருப்பது வேதனையாக உள்ளது. இடதுசாரி சிந்தனை நூல்களுக்கென்றே பல பதிப்பகங்கள் இருந்தன குறிப்பாக அலைகள் வெளியீட்டகம், பாரதி புத்தகாலயம், என்சிபிஎச்,பாவை பப்ளிகேசன். அளவிற்கு குறையாமல் பக்தி இலக்கியங்கள், ஜோதிட நூல்கள் விற்பனையாகின்றன. பாரதிகிருஷ்ணகுமார் இயக்கிய குறும்படமான ‘எனக்கு இல்லையா கல்வி’ பாரதி புத்தகாலயத்தில் கிடைத்தது. நிறைய சிறுவர் இலக்கியப் புத்தகங்களும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கம்பளம் தொகுப்பும் பாரதி புத்தகாலயம் வெளியிடிருந்தது. அளவில் சிறியனவும் விலையும் குறைவான புத்தகங்களையும் அந்தப் பதிப்பகத்தில் வாங்க முடிந்தது.

ஒவ்வொரு மாவட்டத்தலைநகரிலும் இந்த மாதிரி புத்தகத்திருவிழா நடக்கவேண்டும், குறைந்த பட்சம் அரசு அதற்கான இடத்தையாவது ஒதுக்கி இலவசமாக வழங்கவேண்டும். மக்களிடம் நல்ல இலக்கியங்கள் கொண்டு செல்லப்படவேண்டும்.

நான் வாங்கிய சில புத்தகங்கள்.

கரிசல் கதைகள்- கி.ரா.
மகாநதி - பிரபஞ்சன்
கண்ணீரால் காப்போம் - பிரபஞ்சன்
பிரபஞ்சன் கட்டுரைகள்
சர்க்கரை நாவல் -கு.சி.பா
ஏறுவெயில் -பெருமாள்முருகன்
கந்தர்வன் கதைகள்- கந்தர்வன்
பண்டைய இந்தியா -டி.டி.கோசாம்பி
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஊருக்கு நூறுபேர் -ஜெயகாந்தன்
பிரளயம் -ஜெயகாந்தன்
பயணம் -தேனி சீருடையான்
ஈ.எம்.எஸ் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
மாபசான் சிறுகதைகள்
மீன்காரத்தெரு- கீரனூர் ஜாகிர்ராஜா
கதைக்கம்பளம்- எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்பு
முதல் ஆசிரிய- சிங்கிஸ் மத்தாவ்
வெண்ணிற இரவுகள் -தஸ்தாயேஸ்கி
விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்- இரா.நடராசன்
நேற்றுமனிதர்கள்- பிரபஞ்சன்
டால்ஸ்டாய் நீதிக்கதைகள்

------------------------------------------------------

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

எனக்கு இல்லையா கல்வி?

ஒரு பொதுப்பாடத்திட்டத்தை சமச்சீர்கல்வி என்ற பெயரில் அமல்படுத்துவதற்கு தமிழகத்தில் ஆட்சி செய்கிற அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் நடத்திய கூத்தை பெருவாரியான மக்களின் விருப்பத்தை நல்லவேளையாக உச்சநீதிமன்றம் செயல்படுத்த ஆணையிட்டிருக்கிறது. இன்றைய சமூகத்தில் கல்வி என்பது கடைச்சரக்காகிவிட்ட வேளையில் சாதாரண மக்களின் குழந்தைகளின் ஏக்கமாக “எனக்கு இல்லையா கல்வி?” என்ற ஆவணப்படம் தமிழக்த்தில் ஆரம்பக்கல்வி குறித்து நமக்குத் தெரியாத பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

புதிதாக பொறுப்பேற்ற அரசு சமச்சீர் கல்வியின் ஒரு பகுதியான பொதுப்பாடத்திட்டத்தைக் கூட அமலப்டுத்த மனமில்லாமல், ஆலோசனை கூறுவதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் கல்விக் கடைகளை நடத்துவோரை நியமித்தது. அந்த வகையில் இந்த அரசுக்கு யாரெல்லாம் கல்வியாளர்கள், எதிர்காலதலைமுறையினர் மீது அக்கறை கொண்டவர் யார் என்பது கூட தெரியவில்லை அல்லது வேண்டுமென்றே சிறந்த கல்வியாளர்களின் குரலை கேட்பதற்கு தயாராக இல்லை. திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் அடிப்படையில் ஒரு இலக்கியவாதியாக இருந்தாலும் அவருடைய இந்த ஆவணப்படத்தை பார்த்த பின்பு சிறந்த கல்வியாளராக அறியப்படுகிறார். கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பள்ளியில் 94 குழந்தைகள் பலியாயினர், அந்த கோர சம்பவத்தை ஒரு ஆவணப்படமா எடுத்திருந்தார். கல்வியை வணிகமாக மாற்றியதன் விளைவாக நடந்த கோர நிகழ்ச்சி அது. அந்த ஆவணப்படத்தை பார்த்த பாதிப்பு என்பது ஒவ்வொரு ஜூலை 16ம் தேதியும் இருக்கிறது. இந்த சமூகத்தில் “தனக்கு நேர்ந்தால் பாதிப்பு, அடுத்தவருக்கு நிகழ்ந்தால் செய்தி” என்ற வரிகள் எவ்வளவு உண்மையானவை.

ஏன் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க சாதாரண மக்கள் கூட தயங்குகிறார்கள் என்றால் அது தான் அரசின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி எனலாம். எப்படி ஒரு பொதுத்துறையை திட்டமிட்டு சீர்குலைக்கிறார்களோ அதே மாதிரி தான் அடிப்படை கல்வியையும் அடிப்படை மருத்துவத்தையும் சீரழிக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டால் பெற்றோர்கள் எப்படி அந்தப் பள்ளிக்கு தன் குழந்தையை அனுப்புவார்கள். இன்னொன்று இந்த சமூகத்தில் அதிக கட்டணம் செலுத்தினால் அது தரமானது என்ற சிந்தனைவேறு நிலவுகிறது. இப்படி ஆசிரியர்களை குறைத்ததினால் மாணவர்கள் அங்கு சேர்க்கப் படவில்லை, எத்தனை விலை கொடுத்தாவது சிறந்த கல்வி வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். மாணவர்கள் குறைந்ததால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. சாதரணமக்கள் படிக்கிற அடிப்படை ஆரம்ப கல்விக்கு செலவு செய்வதை விட இந்த அரசு வசதிபடைத்தவர்கள் அல்லது ஏற்றுமதியாகப் போகிற ஆற்றலை உருவாக்குகிற உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்குகிறது.

14 வயதுவரை எல்லோருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி என்பதை சட்டமாக்கினால் போதும் என்று அரசு நினைக்கிறது. அப்படி ஒரு சட்டமே சர்வதேச சந்தையில் குழந்தைத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிற உற்பத்திப் பண்டங்களை வாங்க மறுக்கும் சர்வ தேச சமூகத்திற்காக சட்டம் போடப்பட்டது என்று கல்வியாளர்கள் கூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. அரசு ஏன இன்னும் ஆதிதிராவிடர்கள் மட்டும் படிப்பதற்கு பள்ளிகளை நடத்தவேண்டும். அவர்கள் மற்ற மாணவர்களுடன் படித்தால் என்ன? ஆதிதிராவிட நல்த்துறையின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் மிகவும் மோசமானவை. அங்கே தான் அதிகமான ஊழல் நடைபெறுகிறது. சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கு சேரவேண்டியதை சேரவிடாமல் வைப்பதற்கு ஒரு அமைச்சகமே செயல்படுகிறது. பள்ளிகளில் தீண்டாமையை ஆசிரியர்கள் கடைபிடிப்பதால் அந்த மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். அருந்ததிய குழந்தைகளை வைத்து பள்ளிகளின் கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பதை ஒரு ஆசிரியரே செய்தால் என்ன சமூகம் இது.அந்தக் குழந்தைகள் என்ன பிறக்கும்போதே கக்கூஸ் கழுவும் கருவியோடா பிறக்கிறார்கள்?

நாடு 8 சதவீதம் வளர்ச்சியடைகிறது என்று சொன்னால் மட்டும் போதுமா? அந்த வளர்ச்சி சாமான்யனுக்கு அரசு தரமான கல்வி அளிப்பதன் மூலமும் சிறந்த மருத்துவசதியை அளிப்பதன் மூலமும் காட்டவேண்டாமா? பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை,குழந்தைகள் எங்கே செல்வார்கள். கட்டிடங்கள் இல்லாத பள்ளிகள்,கூரை இல்லாத பள்ளிகள், மரத்தடி பள்ளிகள், ஆசிரியர் இல்லாத பள்ளிகள், அடிப்படை வசதிகளற்ற பள்ளிகள் இன்னும் எத்தனையோ இல்லாமை அரசுப்பள்ளிகளில் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உறப்த்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கமுடியவில்லை. ராணுவத்திற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிவிட்டு இந்தியாவின் எதிர்காலமாம் குழந்தைகள், அவர்களின் ஆரம்பக்கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை. இப்படி வசதி படைத்தவர்களின் குழந்தைகள் நல்ல பள்ளிகளில் பெறுகிற கல்வியும் ஏழைஎளியமக்களின் குழந்தைகள் பெறுகிற கல்வியும் எப்படி சமச்சீர் கல்வியாக மாறும். அதைத்தான் ஒரு கல்வியாளர் சொல்கிறார் இரண்டு தரப்பட்ட குழந்தைகளுக்கும் போட்டி நடக்கிறது, யானை பொம்மை செய்யவேண்டும் ஒருகுழந்தையிடம் மணலையும் மற்றொரு குழந்தையிடம் களிமண்ணையும் கொடுக்கிறோம். எப்படி சமவாய்ப்புகள் இல்லாமல் இங்கே அசமத்துவத்தை குறைக்கமுடியும்.

இந்த ஆவணப்படம் சிறந்த கல்வியாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதோடு அவர்களில் சிலர் தான் இந்த சமச்சீர் கல்விக்காகப் போராடியவர்கள். ஆவணப்படத்தை இயக்கிய திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் ஒரு சமூகக்கடமையாற்றி இருக்கிறார் என்று தான் நன்றி சொல்லமுடியும்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கொலை மிரட்டல் தமுஎகச கடும் கண்டனம்


எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Monday, August 08, 2011
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,சென்னை-600018

பத்திரிகைச்செய்தி:8-8-2011


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நடத்தும் புதுவிசை காலாண்டிதழில் இலங்கை எழுத்தாளர் யோ.கர்ணன் எழுதிய சிறுகதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அக்கதையை வெளியிட்தற்காக பெயர்தெரியா நபர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.அவர் இல்லாதபோது பகல் என்றும் இரவென்றும் பாராமல் அவருடைய துணைவியாரிடமும் இதே தரக்குறைவான வார்த்தைகளில் உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று பேசி வருகின்றனர்.அக்கதை மீதும் கதையை வெளியிட்டதன் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அது இயல்பு.அதைப் புரிந்துகொள்ள முடியும்.அதைக் கருத்துரீதியாகச் சந்திக்கத் திராணியில்லாமல் , மறுப்புகளை வெளியிடத்தயாராக இருப்பதாக அவர் கூறியும் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக தமுஎகச மற்றும் இடதுசாரிகள் மீது அவதூறுகளை வெளியிடுவதல் உற்சாகம் காட்டும் ஒரு வலைத்தளத்தில் அவர்மீதும் இயக்கத்தின் மீதும் அவதூறு பொழிவதைத் தொடங்கியுள்ளனர்.இன்னும் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளரை மிரட்டியுள்ளனர்.அவர் ஆதவனின் புத்தகத்தை வெளியிடப் பயந்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த வன்முறை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 6,7 தேதிகளில் கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு விவாதித்தது.இது தமிழ்க் கருத்துலகில் மாற்றுக்கருத்தை எழுதுபவர்களை எழுதவிடாமல் வாயடைக்கச் செய்யும் அராஜக முயற்சியாகும்.சமீபகாலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது.இந்தக் கோழைத்தனமான செயலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.மிரட்டும் தொலைபேசி எண்களைக்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தாக்குதலை ஜனநாயக ரீதியாக சந்திக்கவும் செயற்குழு தீர்மானித்தது. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை கண்டனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைப்பூவில்/வலைத்தளத்தில்/முகநூலில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

தலைவர் பொதுச்செயலாளர்

சனி, 9 ஜூலை, 2011

ஜவுளிக்கடை சிப்பந்திகள்

இந்தவாரம் கோவையில் ஒரு பெரிய ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தேன், அது எல்லா ஜவுளிக்கடைகள் இருக்கிற பிரதான சாலையில் இருக்கிறது. தரைத்தளம், பேஸ்மெண்ட், அப்புறம் மூன்றுமாடிகள்.உள்ளே நுழையும்போது எனக்கு ஏதாவ்து திருமண சத்திரத்திற்குள் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது, அப்படியொரு வரவேற்பு. கடைக்கு வரும் கஷ்டமர்களை கும்பிடு போடுவதற்காக மூன்று , நான்கு பெண்களை வாசலில் நிறுத்தியிருக்கிறார்கள். அப்புறம் அதை கண்காணிப்பதற்கு சிலர் வேறு. எனக்கு கூச்சமாகிப்போனது. ஒரு கடைநிலை சிப்பந்தியைப் பார்த்து யாராவது சார் என்று விளித்தது போல் ஆகிவிட்டது.

கடையின் உள்ளே நுழைந்தால் எங்கும் யூனிபார்ம் அணிந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் கடையில் வேலைபார்ப்பவர்கள். வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும் அவரை பிடித்து இழுக்காத குறைதான். இப்போது புதிதாக முழைத்துள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் பில் போடுவதற்குத்தான் ஆளிருப்பார்கள். ஆனால் இங்கெ தலைகீழ். சரி எப்படி இத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்கிறார்கள், ஒரு தளத்திற்கு குறைந்தபட்சம் 50 பேர் என்றால் மொத்தம் 5தளங்கள் 250 பேர். வாதத்திற்காக 250 குடும்பங்களை வாழ்வைக்கிறார்கள் என்று சொன்னால் அந்த பாரம் எல்லாம் வாடிக்கையாளர்கள் தலை மீது தானே வைக்கிறார்கள். பெரிய ஜவுளிக்கடைகள் எல்லாயிடத்திலும் இதே நிலைமைதான். ஆனாலும் அங்கெ செல்வதை தவிற்க்கமுடியவில்லை.

வாசலில் வரவேற்பு செய்பவர்களைப் பார்த்தவுடன், பழைய ஞாபகம் வந்தது.சென்னையில் நான் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் ஒரு பொதுமேலாளரின் மகள்/மகன் திருமணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. அந்த அதிகாரி அவர் சார்ந்த துறையில் வேலைசெய்யும் ஊழியர்களை மண்டபத்திற்கு அழைத்திருந்தார். மறுக்கமுடியாமல் சென்று தொண்டூழியம் செய்தோம். நானும் எனது நண்பனும் வரவேற்பு இடத்தில் வந்தவர்களுக்கு பன்னிர் தெளிப்பது, மற்றும் செயற்கையாக சிரிக்கும் வேலைகளை செய்தோம். எனது நண்பன் வருபவர்களை வைதுகொண்டே வரவேற்பான், எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு புன்னகை செய்தேன். அரசியல்கட்சி மாநாட்டிற்கு மட்டும் காசு கொடுத்து ஆள்களை திரட்டிவரவில்லை. இப்படி சில தனியார் நிறுவனங்களும் ஊழியர்களை அடிமை வேலைகளை ஏவுகிறார்கள் ஆனால் வெளியில் தெரிவதில்லை.

சனி, 2 ஜூலை, 2011

புதுசா வந்த பணக்கார சாமி

இது நாள் வரைக்கும் பணக்கார சாமி திருப்பதி ஏழுமலையான் இருந்தாரு அவருகிட்ட இருக்கிற நகைகளோட மதிப்பு 52,000 கோடி ரூபா, ஆனா இப்ப கேரளாவில இருக்கிற பத்மநாத சுவாமி கோயில்ல இருக்கிற பூட்டிய அறைகளைத் திறந்து அங்கிருக்கிற செல்வங்களை மதிப்பிடும் வேலை நடக்குது. இன்னைக்கு கேட்ட செய்தியின் படி சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு நகைகள் தேரும் போல.இத என்ன பண்ணுவாங்க ???

திருப்பதிக்கு முக்கிய வருமானமே உண்டியல் தான். உண்டியல் 5 ரூ, 10ரூ காணிக்கையை போட்டு அவ்வள்வு சொத்து சேரல. சில வியாபாரிங்க, அரசியல்வாதிங்க, தொழிலதிபர்கள் எல்லாம் சாமிகிட்ட சில அக்ரிமெண்ட் போட்டு முறைகேடா கிடைக்கிற பணத்துல சில பங்கை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துறாங்க. எல்லாம் பரிகாரம்,ஒரு பயம் தான் காரணம். சாமிகிட்ட அதக்கொடு இதக்கொடுன்னு கேக்குறதுக்காகவே ரெம்ப பேரு கோயிலுக்கு போறாங்க. திருப்பதி உண்டியல் சில சமயம் ஒரே கட்டுல கோடிக்கணக்கான ரூபா நோட்டுகள் கிலோ கணக்கில் நகைகள் உண்டியல்ல வந்திருக்கு. இப்படி அந்த சாமி பிறப்பால பணக்காரரு கிடையாது, பக்தர்களோட காணிக்கை தான். அவருக்கு பக்தர்கள் அம்பானியிலிருந்து ஈழத்தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்‌ஷே வரைக்கு இருக்காங்க.

திருவனந்தபுரம் பத்மநாத சுவாமிக்கு எப்படி இவ்வளவு செல்வம் வந்திச்சு? அந்தக் காலத்துல திருவாங்கூர் மஹாராஜாவோட கட்டுப்பாட்டுல திருவனந்தபுரம் இருந்துச்சு.இப்ப பூட்டிக்கிடந்த அறைகளிலிருந்து எடுத்த நகைகளெல்லாம் அந்த ராஜா காலத்து செல்வங்கள் தான். அந்தக் கால்த்து ராஜாக்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் மக்களை குறிப்பாக விவசாயிகளை கசக்கிப் பிழிந்து வரிமேல் வரி போட்டுத்தான் இப்படி செல்வங்களை சேர்த்தார்கள்.சேர்த்த செல்வங்களயெல்லாம் கோவில்களிலே பதுக்கினார்கள்,ஏனென்றால் மக்கள் ஒருவேளை பொங்கியெழுந்தாலும் கோயில்ல இருக்கிற கொள்ளை செல்வத்திற்கு ஆபத்தில்லை. அடுத்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்த ராஜாக்களுக்கு இந்த ரகசியம் தெரியும் அதனால தான் முதல்ல கோயில இடிப்பான், கொள்ளையடிப்பான் அப்புறம் பரிகாரமும் செய்வான். ஆட்சி செய்த பகுதியெல்லாம் ராஜாவோட நிலம் தான், அவரு குறுநில மன்னருக்கு அதிகாரம் கொடுப்பார் ஏக்கருக்கு இத்தனை ரூபா கொடுக்கணும் என்று, குறுநில மன்னர்,நிலப்பிரபுக்கள், ஜமீன்கள், அப்புறம் பண்ணையார்கள் கடைசியா அந்த நிலத்துல உழுகிற விவசாயி குத்தகை தரணும். இப்படி வரிசைக்கிரமமா அக்கிரமம் பண்ணினாங்க உழைக்காம ஒரு கூட்டம் படைகளை வச்சிகிட்டு உழைக்கிறவங்கள உறிஞ்சிவாழ்ந்த காலம் அது.வெள்ளைக்காரன் வந்த பிறகும் அவங்க கவலைப்படல. வெள்ளைக்காரனுக்கு ஒழுங்கா கப்பம் கட்டிவந்ததால அவங்க சம்ஸ்தானம் தப்பிச்சது. இப்படிப்பட்ட `மஹாராஜா’க்களை தான் அந்தக் கால்த்து மக்கள் தெய்வாம்சமா வணங்கினாங்க, இப்பவும் தான். அடிமைப்புத்தி என்னைக்கு போச்சு.

இந்த பணத்த என்ன பண்ணலாம்,. நாட்டுல வறுமையை ஒழிக்கிறதுக்கு பணம் இல்லைன்னு சொல்றாங்களே அதுக்கு பயன்படுத்தலாம், இந்த பணத்தை வச்சு நாடு பூராவும் ஆஸ்பத்திரி கட்டலாம், நிறைய பள்ளிகள் கல்லூரிகள் அரசாங்கமே கட்டலாம். எதுவுமே நடக்காது. `அனந்தசயன’ நாராயணன் மாதிரி இந்த நகைகள் திரும்பவும் தூங்கும்.

சனி, 18 ஜூன், 2011

ஊழலுக்கு மரியாதை..



Courtesy:'The Hindu'

மரியாதையாக அழைப்பதற்கு ஹிந்தியில் “ஜி” என்பார்கள், ஆனால் இப்போதோ ஊழல்கள் எல்லாம் 2G, CWG, KG என வந்துகொண்டேயிருக்கிறது. தோண்டத்தோண்ட புதிய பூதங்கள் கிளம்பிகிட்டேயிருக்கு. இதுக்கு எல்லையேயில்லை. தனியார்மயம் என்றாலே அது அரசுக்கு வருவாய் இழப்பில்தான் முடியும். அதையெல்லாம் தாண்டி ஊழல் தாராளமயம், உலகமயம் ரேஞ்சுக்கு போயிருச்சு. ஊழலுக்கு வேர் எதுன்னு தெரியாம சும்மா ‘லோக்பால்’ அமைக்கனும் ‘சிவில் சொசைட்டி’ ஆளுங்க கிளம்பிட்டாங்க. இப்ப யாரு ‘சொசைட்டி’ பெரிசுங்கிற போட்டி வேற நடக்குது. சில வெளிநாட்டு ஆளுக நம்ம ஊருல்ல நடக்குற இந்த ‘சிவில் சொசைட்டி’ கூத்தை பாத்துட்டு இந்தியால இராணுவ ஆட்சியா நடக்குதுன்னு கேட்கிறாங்க. அவங்களுக்கு தெரியாது போல..உலகத்துலேயெ பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான் என்கிற விஷயம். எனக்கும்தான் புரியல ஹசாரே, அப்புறம் இந்த சாமியாரு பாபா ராம்தேவ் இவங்கெல்லாம் சிவில் சொசைட்டின்னு சொன்னா நம்ம தேர்தல்ல நின்னு ஓட்டு வாங்கி ஜெயிச்சவங்க எல்லாம் யாரு? எல்லாம் இந்த பேப்பர் காரனும் டிவிகாரனும் பண்ற வேல. இந்த ‘சிவில் சொசைட்டி’ வார்த்தையை அமெரிக்காவிலிருந்து பிடிச்சாங்களோ? இந்த வருசம் டெல்லியில இலட்சக் கணக்காண தொழிலாளர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியோட INTUC உட்பட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியது, அதை பிபிசி, ரூயிடர்ஸ், செய்தி சேகரிச்சாங்க ஆனா இந்தியன் மீடியா அதை கவரேஜ் பண்ணவேயில்ல, இல்ல அவங்களால ரோடு டிராபிக் ஜாம் ஆயிடுச்சுன்னு ‘தினமலர்’ மாதிரி சொல்வாங்க. இலட்சக்கணக்காண சாதாரண மக்களை , தொழிலாளிகளை பிரதிநுவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள் ‘சிவில் சொசைட்டி’ கிடையாது. கார்ப்பரேட் பக்தர்களுக்கு சிஷ்யர்களாகயிருக்கிற எலைட் மெடில்கிளாஸ் மக்கள்தான் சிவில் சொசைட்டி என்னய்யா நியாயம்.

பாரதீய ஜனதாக் கட்சி ஊழலுக்கு எதிரா தேசிய அளவில பெரிய யாத்திரை நடத்தப்போறாங்கன்னு சொன்னாங்க. முதல்ல கர்நாடகா சுரங்க ஊழல் செஞ்ச மந்திரிய வெளிய தள்ளிட்டு அப்புறம் தொடங்கலாம். நேத்து வரைக்கு ஊழல்ன்னு பேசுனவங்க இப்ப அம்பானி பிரதர்ஸ் பண்ற கோதாவரி பேசின் ஊழலை பத்தி வாயே தொறக்கல. ஏன்னா, அவங்க பைனான்சியர் ஆச்சே? நாட்டுல புதுசா இரும்பு கிடைச்சா, நிலக்கரி கிடைச்சா, காப்பர்கிடைச்சா, எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைச்சா நாடு முன்னேறியிரும் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் தனியார் கல்லாவுக்கு தான் போயிட்டுஇருக்கு. ஒரு டன் இரும்புத்தாது தோண்டுனா அரசாங்கத்துக்கு 27ரூபாய் தான் போகுது, மார்க்கெட் விலை 5000ரூபாய். வருசத்துக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது இந்தியாவிலயிருந்து ஏற்றுமதியாகுது. கையில இருக்குற வெண்ணெய இப்ப கொடுக்குறாங்க.. சில வருஷம் கழிச்சு இரும்புத்தாதுவை அரசே இறக்குமதி பண்ணுவாங்க. சீனா தன்னுடடைய நாடு வளர்ச்சியடைனும் சொல்லி இரும்பு, காப்பர், அலுமினியம் அவங்ககிட்ட சுரங்கமிருந்தாலும் எங்க கிடைக்கிதோன்னு தேடி அலையுது. அமெரிக்கா அங்கயிருக்கிற எரிவாயுகிணறுகளை இன்னும் தோண்டவேயில்லை. ஆனா நம்ம ஊருல ஆத்து மணலைக்கூட வித்து அதுல தனியார் காசு பாக்க வழிசெய்றாங்க.

இந்த ‘சிவில் சொசைட்டி’ ஆளுங்க இதைப்பத்தியெல்லாம் பேசமாட்டாங்க, அப்படி பேசுனா இந்த கார்ப்பரேட் மீடியா அவங்கள காட்டியிருக்கவே மாட்டாங்க. பாபா ராம்தேவ் நடத்துன உண்ணாவிரத டிராமவை ‘லைவ்’காமிச்சவங்க உத்தர்கண்ட்ல ஒரு சாமியார் கங்கையை தூய்மைப்படுத்தனும் சொல்லி உண்ணாவிரதம் இருந்து செத்தே போனாரு. அவரைப் பத்தி அவ்வளவா கவரெஜ் இல்ல. ஏன்ன அது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விவகாரம். சுற்றுச்சூழலை பத்தி பேச ஆரம்பிச்சா வேதாந்தா அலுமினியச்சுரங்கம் பண்ற மாசு பத்தி பேசவேண்டியிருக்கும், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை செய்கிற மாசு பத்தி சொல்லனும். அம்பானியோட ரிலையன்ஸ் 'Dept free' கம்பெனியா மாறிடுச்சுன்னு செய்தி வந்தது, அதான் இந்தியா கடனாளி ஆகிருச்சே? மாறன், அம்பானி, வேதந்தா எல்லாம் திறமையாலயா முன்னுக்கு வந்தாங்க? பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியெல்லாம் அவங்களுக்கு தோதா பட்ஜெட் போட்டு, வரியை தள்ளுபடி பண்ணி அவங்கள பில்லிணியர் ஆக்கினாங்க. காணி நிலம் பாரதி கேட்டான், இந்தியக் குடிமகன் மனைநிலம் கேட்கிறான் அதெல்லாம் கிடைக்கல. ஆனா பன்னாட்டு நிறுவனக்களுக்கு இருக்கிற நிலத்தையும் பிடுங்குது அரசாங்கம். ஆகஸ்டு15ம் தேதிக்குள்ள ‘லோக்பால்’ நிறைவேறவில்லையென்றால் Elite மெடில்கிளாஸ் எல்லாம் மெழுகுவர்த்தி ஏந்துவாங்களா? இல்ல மறியல் பண்றாங்களான்னு பார்ப்போம்.

வெள்ளி, 10 ஜூன், 2011

நெடுஞ்சாலை விபத்துகள்



காஞ்சிபுரம் அருகே நடந்த சாலைவிபத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி தமிழகம் சாலைப்பாதுகாப்பில் மிகவும் பின் தங்கியிருப்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் சாலைவிபத்துகள் ஒரு நிமிடத்து ஒரு விபத்து ஏற்படுகிறது, நான்கு நிமிடத்தில் ஒருவர் அதாவ்து ஒரு மணிநேரத்தில் 14 பேர் கொல்லப்படுகின்றனர். கடந்த ஆண்டில் இந்தியாவில் சாலைவிபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.60 இலட்சம் பேர், அதுவே 2009ம் ஆண்டில் 1.25 பேர் மரணமடைந்துள்ளனர். வருடத்திற்கு வருடம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல விபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2009ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 13,746 பேர் சாலைவிபத்தில் இறந்துள்ளனர். இது மொத்தவிபத்தில் 11 சதவீதம் ஆகும். இந்தியாவில் ஆந்திரம்,மஹாராஷ்டிரா,தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சாலை விபத்தில் கொல்லப்படுகிறவ்ர்களின் எண்ணிக்கை தேசிய அள்வில் 50 சதவீதமாகும்.




சாலைகள் அதிக அள்வில் விரிவுபடுத்தப்பட்டாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளன, தேசிய நெடுஞ்சாலையில் 120 கீமீ வேகத்தில் வாகனக்கள் செல்லக்கூடிய சாலைவச்தியிருந்தாலும் இணைப்பு சாலைகளில் முக்கிய சாலைகளில் கூடுமிடங்களில் தேவைப்படுகிற எச்சரிக்கைகள் இல்லை. கல்வியறிவு நமது மக்களிடம் வளர்திருந்தாலும் சாலைப்பாதுகாப்பு பற்றிய கல்வியோ பயிற்சியோ இல்லை. ஓட்டுனர் உரிமங்களை வீட்டிலிருந்தபடியே கையூட்டு மூலம் பெறமுடியும் என்ற நிலை இருந்தால் என்ன செய்யமுடியும். இருசக்கர வாகன் ஓட்டிகள் பின்னால் வருகிற வாகந்த்தை அறிய உதவுகிற கண்ணாடிகளை பொருத்துவதில்லை, தலைக்கவசம் அணிவதில்லை. புதிதாக வந்த கார்களில் சீட்பெல்ட் இருந்தாலும் அணிவதில்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அண்டை மாநிலமான கேரளத்தில் சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, சாலை விபத்துகளில் மரணவிகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் கேரளும் ஒன்றாகும். உலக அளவில் இந்தியாவில் சாலைவிபத்தில் மரணமடைபவர்கள் குறித்து ஐ நா எச்சரிக்கை செய்துள்ளது. சீனாவில் 2004 முதல் சாலை விபத்துகளை தடுப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. விதிகள் கடுமையாக்கப் படவேண்டும் என்பதைவிட தாங்களாகவே பாதுகாப்பாண பயணத்தை மேற்கொள்வதற்கு சாலைப்பாதுகாபு விழாக்கள் கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

வியாழன், 9 ஜூன், 2011

பங்குச்சந்தை - Stock Index or Misrey Index.



சமீபத்தில் ‘பெரு’ நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் இடதுசாரிக்கட்சியை சேர்ந்த ஒல்லண்டா ஹூமாலா வெற்றியடைந்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவானவுடன் அந்த நாட்டின் பங்குச்சந்தை 12.5% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே அனுபவம் நிறைய நாடுகளுக்கு உண்டு, எப்போதெல்லாம் பெருவாரியான மக்கள் மாற்றத்திற்க்காக புதிய அரசை தேர்ந்தெடுக்கும் போது பங்குச்சந்தை அதற்கு மாறாக இருக்கும். சாதாரண மக்கள் ஒரு அரசை விரும்பினால் அப்போது பங்குச்சந்தை எதிர்மறையாக இருக்கும். இதைத்தான் Stock Index ஐ misrey Index என்று பிரபல் பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுவார்.

இந்தியாவில் 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதற்கு முன்பு ஆட்சியிலிருந்த பாஜக ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரமும் காங்கிரஸ் கட்சியும் அதற்கு மாற்றாக இருக்கமுடியாது என்று மீடியாவின் ‘பண்டிட்கள்’ சொன்னதற்கு மாறாக பிரதேச கட்சிகளும் இடதுசாரிகட்சிகளும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் இடதுசாரிக்கட்சிகள் இல்லாத ஆட்சியை மத்தியில் காங்கிரஸ் அமைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் படுபதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்தியாவில் 1.15 சதவீதம் பேர் விளையாடுகிற அந்த பங்குச்சந்தை வீழ்ந்தவுடன் துடித்துப்போய் சிதம்பரம் மும்பைக்கு ஓடினார், முதலீட்டளர்களை காப்பாறுவதற்கு. ஐ மு -1 வது ஆட்சியில் மத்திய அரசு நினைத்த அள்விற்கு ‘சீர்திருத்தம்’ செய்யமுடியவில்லை. இன்றைக்கு பெட்ரோல் விலை தாறுமறாக உயருவதற்கு காரண்மான ‘கீர்த்தி பரேக்’ கமிட்டியின் அறிக்கை 2004 அமல்படுத்த அரசு முனைந்த போது இடதுசாரிகள் தடுத்தார்கள். இன்சூரண்ஸ் துறையிலும், வங்கித்துறையிலும் அந்நிய மூலதனத்தின் கட்டுப்பாடு வரம்புகளை தள்ர்த்த முனைந்த போதும் ‘கடிவாளம்’ தடுத்தது. உலகெங்கும் 2008ல் பொருளாதார மந்தம் தேக்கம் ஏற்பட்ட போது இந்தியா அப்படிப்பட்ட சிக்கலை சந்திக்காதற்கு காரணம் ‘வங்கிகள், இன்சூரன்ஸ்’ போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த்தால் தான் என்று ’தாராளவாதி’மன்மோகன்சிங் அவர்களே ஒத்துக்கொண்டார். மீடியாக்கள், மத்தியதர வர்க்கத்தின் பொதுப்புத்திகளை தாண்டி முதல் ஐக்கிய முண்ணனி அரசு தக்வல் அறியும் உரிமைச்சட்டம், நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் போன்ற மக்கள் நலத்திடங்களை அறிவித்தது. மீண்டும் பங்குச்சந்தைக்கு வ்ருவோம்..

2004 ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெற்கு ஆசியாவில் சுனாமியின் தாக்குதலில் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக அள்வில் பாதிப்பிற்கு உள்ளாயின, அதிக பட்சமாக இந்தோனேசியாவில் 160,000 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவிலும் குறிப்பாக தமிழக்த்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 30,000 பேர் வீடுகளை இழந்தனர். சுனாமி ஆழிப்பேர்லை பலி கொண்ட சில நாட்களில் இந்தியா, இந்தோனேசியா,இலங்கை போன்ற பங்குச்சந்தைகளின் புள்ளிகள் உச்சத்தில் இருந்தன. அதாவது நிவாரணப்பணிகளுக்கு அந்நிய மூலதனம் வரவேற்பதற்கு. அதனால் தான் Misrey Index என்ற பதம் மிகவும் கச்சிதமாக பொருந்துகிறது. இந்தியாவில் சாதாரணம்க்கள் பாதிப்படைகிற மாதிரி பட்ஜெட் அமைந்தாலோ அல்லது விலைவாசி உயர்ந்தாலோ சென்செக்ஸ் அதிகரிக்கும். 30 சதவீதம் வரிபோட்டு பெட்ரோல் விலையால் வருமானம் சேர்க்கும் அரசு பெட்ரோலுக்கு மானியம் தருவதாக சொல்கிறது.

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்
http://www.cashthechaos.com/blog/?p=668

செவ்வாய், 7 ஜூன், 2011

அழகர்சாமியின் குதிரை.


முன்பெல்லாம் சினிமாவை விமர்சனம் செய்வது என்பது பத்திரிக்கைகள், தொலைக்காட்சி செய்கிற வேலையில் ஒன்றாக இருந்தது, இப்போது இணையத்தில்,வலைப்பூக்களில் யார் வேண்டுமானாலும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். பத்திரிக்கைகள் அல்லது தொலைக்காட்சி ஊடகங்களே சினிமாவை தயாரித்து வெளியிடுகிற சூழ்நிலையில் நம்பகத்தன்மையான விமர்சனங்களை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. வலைப்பதிவர்கள் அப்படியல்ல, வணிகத்திற்காக எழுதுவதில்லை. தான் ரசித்ததை தனக்குப் பிடித்ததை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். அப்படித்தான் ‘தமிழ்வீதி’யில் வந்த அழகிரிசாமியின் குதிரை விமர்சனத்தை படித்தபின்பு அப்படத்தை பார்த்தேன். சமீபத்தில் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஹீரோயிசமில்லாத, அதிக பட்ஜெட் இல்லாத, ஆபாசக்காட்சிகள் இல்லாத படங்கள் முன்பு அரிதாக இருந்தது. இயக்குனர் இமயம் என்று கிராமப்பிண்ணனியிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் கூட இப்படி சாமானியர்களின் கதையை படமாக்கவில்லை. ஆரம்பகாலத்தில் அப்படி சில படம் அவர்கள் எடுத்திருந்தாலும் கடைசியில் சாதிப்பெருமைகளை கொண்டாடும் பழம்பெருமைகள் பேசும் தனிநபர்களை சுற்றியே படமாக்கினர்.

இலக்கியங்களை சினிமாவாக ஆக்கும் பணியில் தமிழ் சினிமா சற்று தாமதமாக இருந்தாலும் அப்படி உருவாக்கப்பட்ட பூ, ஒன்பது ரூபா நோட்டு, சொல்லமறந்தகதை என எல்லாப் படங்களும் தரமானதாக இருந்தது, அதே வரிசையில் அழகிரிசாமியின் குதிரையும் பாஸ்கர் சக்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. கிராமத்து மக்களின் தெய்வ நம்பிக்கையை நல்ல முறையில் பகடி செய்திருக்கிறது. படத்தில் யார் கதாநாயகன் என்பது முக்கியமில்லை, கதாநாயகன் பத்துபேரை புரட்டிஎடுக்கும் வலிமை தேவையில்லை, வசீகரிக்கும் அழகு தேவையில்லை. அழகர் ஆற்றில் இறங்கினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை மதுரை வட்டாரத்தில் இன்னும் சில கிராமங்களில் இருக்கிறது. கிராமத்து மக்களின் அளவு கடந்த நம்பிக்கைகள் அவர்களின் வாழ்வில் ஏற்படுகிற துன்பங்களின் அடிப்படையில் வருகிறது. இதை செய்தாலாவது நல்லது நடக்கதா? என்ற ஏக்கம். என்னுடைய கிராமத்திலும் மழைக்காக மக்கள் செய்த வேடிக்கைகள் நிறைய இருக்கிறது. ஒரு மலைமீதுள்ள கடவுளுக்கு ஆயிரக்கணக்கான குடம் நீரை சுமந்து சென்று சிலைக்கு ஊற்றுவார்கள், அப்படியாவது தெய்வத்தின் உள்ளம் குளிராதா? ஊரின் எல்லைக்குச் சென்று பொங்கல் வைப்பார்கள் அதற்கு எல்லைப்பொங்கல் என்றே பெயர். இன்னும் சில கிராமங்களில் மழைக்காக கழுதைகளுக்கு கல்யாணம் செய்விப்பது இன்றும் நடக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமம் எப்படியிருந்தது என்பதை காஸ்ட்யூம்கள் இல்லாமல் கதை நகர்கிறது. ஒரு குதிரையை வைத்து பிழைப்பை ஓட்டும் அழகர்சாமி தன்னுடைய குதிரையை மீட்க கிராமத்து இளைஞர்கள் ஊர்திருவிழாவிற்கு முன்பே உதவுவதை ஏற்க மறுத்து, திருவிழாவின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற ரேடியோசெட்காரன், மேளக்காரன், பந்தல்காரன் போன்றோரின் வருவாயைப்பற்றியும் கவலைப்படுகிறான். குதிரை இல்லாவிட்டால் திருவிழா நிச்சயம் நடக்காது, சந்தோசமாக திருவிழாவிற்காக காத்திருக்கிற மக்களின் முகங்களை நினைக்கிறான். ஊர்க்காரர்கள் குதிரைக்காரனை அடித்துப்போட்டு சென்றவுடன் ஒரு விதவைத்தாய் அவனுக்கு ஆறுதல் கூறி உணவளிக்கிறாள், அதேபோன்று ஏழ்மையில் திருடுபவனை ஊர்க்காரகள் போட்டு அடித்து கட்டிவைக்கிறார்கள்.திருடனையும் மனிதனாக மதிக்கவேண்டும் நேசிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறது.மலையாள மாந்திரீகன் செய்யும் ஏமாற்று வேலைகளையும் சினிமா பகடி செய்கிறது. வில்லனின் ஆட்கள் குதிரைக்காரனை அடித்தபோது எஜமானனுக்காக குதிரை கயிற்றை முறித்துக்கொண்ட எதிரிகளை துவம்செய்வது கொஞ்சம் நம்பும்படியாக இல்லையென்றாலும், அது மைனரை ‘குறி’வைத்து மிதிப்பது நகைச்சுவைக்காக. இதுவரை போலீஸ்காரர்களை சமூகவிரோதிகளுக்கு துணைபோவர்களாகவே காண்பித்த தமிழ்சினிமாவில் இப்படியும் சில சப் இன்ஸ்பெக்ட்ர்கள் இருக்கிறார்கள் என்பதை பதிவுசெய்திருக்கிறது. கிராமத்தில் பள்ளிக்கு செல்லவேண்டிய பெண்குழந்தைகள் குடும்பச்சூழ்நிலைக்காக திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புவது இன்றும் கிராமப்புறங்களில் ‘சுமங்கலித்திட்டம்` என்ற பெயரால் கொத்தடிமையாக வேலைக்குச் செல்வது நடப்பிலுள்ளது. திருமணத்தில் சாதி என்பது கிராம நகர வேறுபாடு இல்லாமல் எங்கும் நிலவுகிறது. ஊர்த்தலைவரின் மகன் தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்ணை திருமணம் செய்ததால் இனி இந்த ஊரில் மழையே பெய்யாது என்ற ஊர்த்தலைவரின் சாபம் ‘சாமியாலேயெ’ மறுக்கப்பட்டு உடனே கொட்டோகொட்ட்டென்று மழை பெய்கிறது.

இயக்குனர் சுதீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு வை அடுத்து அழகர்சாமியின் குதிரையும் சிறந்த படம்.நல்ல தமிழ்சினிமாக்கள் இன்னும் வளரவேண்டும், அதற்காக இந்தப் படம் வெற்றியடையவேண்டும்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

ஊழலை ஒழிக்க சாமியார்கள்?

ஒரு மாசத்துக்கு முன்னாடி எப்படி அண்ணா ஹசாரே எப்படி இந்தியா முழுசும் பேமஸ் ஆனாரோ அதேமாதிரி இன்னைக்கு பாபா ராம்தேவ் ஊழலை ஒழிக்க வந்துட்டார், ஏற்கனெவே லோக்பால் மசோதாவுக்கு மத்திய அரசு ஒரு குழு அமைச்சு சும்மானாச்சும் வாரவாரம் மீட்டிங் போட்டு பேசிகிட்டு இருக்காங்க. எப்படி தீடிர்னு பாபா ராம்தேவ் உள்ளவந்தார்ன்னு தெரியல , நம்ம மீடியாகாரங்க நினைச்சா இந்த மாதிரியான புரட்சியை உடனே பத்தவைக்க முடியும். லோக்பால் மூலமா பிரதமரையும் உச்சநீதிமன்ற நீதிபதியையும் விசாரிக்க இடம் தரக்கூடாதுன்னு ராம்தேவ் சொன்னாரு, அப்புறம் பல்டி அடிச்சாரு. இப்ப ராம்லீலா மைதானத்துல 18ரூபா செலவு செஞ்சு பிரம்மாண்டமா செட் போட்டு, குழுகுழு ஏசி போட்டு நாடகத்தை ஆரம்பிச்சிடாங்க. எதையோ மறைக்கிறதுக்கு முயற்சி நடக்குற மாதிரி தெரியுது.

மத்திய அரசாங்கமே கறுப்புப்பணத்தை ஒழிக்க ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட் மூலமா நடவடிக்கை எடுக்கப்போறதா செய்தி வந்துச்சு, அம்பானி பிரதர்ஸ் ஒண்ணா இருந்தப்போ வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பா மாத்தி ஒரு கொள்ளையை அடிச்சதை CBI நடவிடிக்கை எடுக்கலன்னு சொல்லி CIC மத்திய தகவல் ஆணையத்தலைவர் CBI க்கு கடிதம் எழுதினாரு. தயாநிதிமாறன் டெலிகாம் மந்திரியா இருந்தப்ப 323 டெலிபோன் லைன்களை சொந்த வியாபாரத்துக்காக அமைச்சாராம், கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் வந்தது மாதிரி சன் டிவிக்கும் 700கோடி ரூபாய் வந்துருக்குது. அதப்பாத்துத்தான் கலைஞருக்க்கு ஐடியா வந்திருக்கொ என்னன்வோ? இப்படி சமீப காலமாத்தான் ஒரு பதினைஞ்சு வருஷ்மா பெரிய அளவுல கோடி,ஆயிரம்கோடி, லட்சம் கோடின்னு ஊழல் நடக்குது, மக்களோட பணம் பெரிய கார்ப்பரேட் ஆளுக பாக்கெட்டுக்கு போயிகிட்டு இருக்கு. இல்லன அம்பானி குழுமமொ சன் டிவி குழுமமோ உலகம் பூராவும் தெரியருது மாதிரி பில்லிணியர் ஆகமுடியுமா? அப்படி என்ன திறமை அவங்க கிட்ட இருக்குது? புதுதா வருகிற தலைமுறை அவங்களப் பாத்து மோசடி பண்ண ஆரம்பிச்சா நாடு தாங்குமா? மத்தியில காங்கிரஸ் ஆட்சியானாலும் பாஜக ஆட்சியானலும் இந்த கார்ப்பரேட் ஆளுகளுக்கு புரோக்கர் வேலையைத்தான செய்றாங்க. உண்மையா ஊழல்ல அதிக பலன் அடைஞ்சது கார்ப்பரேட் ஆளுக தான், அரசியல் வாதிங்களுக்கு கிடைக்கிற பங்கு ஏதோ பத்து முதல் இருபது சதம் இருக்கும்.ஆனா கார்ப்பரேட் ஆளுக சீன்ல்யே வருகிறது இல்ல, எல்லாத்தையும் நாங்க தாங்கிக்கிறோம்னு அவங்களுக்கு ஏஜெண்ட் வேலை பார்க்கிற அரசியல்வாதிங்க இடிதாங்கியா ஏத்துகிறாங்க. மீடியாவும் டாடாவையும், அம்பானியையும் இல்ல புதுசா வந்த வேதாந்தா குழுமத்தையும் பத்தி பேசுறதே இல்ல. ஊழலுக்கு முக்கிய காரணம் உலகமயம்ன்னு தெரிஞ்சுபோச்சு.

ஹசாரேயை வைச்சு எப்படியாவது ஆதாயம் பார்க்கலாம்னு இருந்தது பாஜக, தீடிர்னு ஹசாரே காந்தி பிறந்த குஜராத்துல பாலைவிட சாராயம் நிறைய விக்குது, மோடி அரசாங்கம் மோசம்னு பேச ஆரம்பிச்சவுடனே பாபாவை உள்ள கொண்டுவந்துட்டாங்க.எல்லாம் துறந்த? இந்த சாமியாருக்கு வருசத்துக்கு 1000கோடி வருமானம் வருது.யோகா சொல்லித்தரது அப்புறம் எல்லா சாமியார் செய்யறவேலை, மக்களை அரசியல் பக்கம் போகாமா பாத்துக்கிறது. மத்திய அரசாங்கம் மக்களை கொள்ளையடிக்கிற மாதிரி பெட்ரோல் விலையை ஏத்துறது பத்தி இந்த சாமியாருக்கு கவலை கிடையாது, அதுக்கு எதிரா பேசினா அது கார்ப்பரேட்ட்டு ஆளுகளுக்கு எதிரா பேசினமாதிரி ஆயிடுமே?

நம்ம மெடில்கிளாஸ் ஆளுங்களுக்கு தீனி போடுறது மாதிரி பரபரப்புக்கு பஞ்சமே இல்லாம செய்தி சொல்ற இங்கிலீஷ் நீயூஸ் சேனல்கள் ஊழலுக்கு எதிரா அவங்களும் இருக்கிறது மாதிரி காட்டிறாங்க. NDTV யில நீயூஸ் வாசிக்கிற பர்கா தத் மன்மோகன் சிங் அரசாங்கத்துக்கும் கார்ப்பரேட்டு ஆளுகளுக்கு புரோக்காரா இருந்ததை மக்கள் மறந்துட்டாங்களா? எல்லாரும் அனுபவத்துல இருந்து தெரிஞ்சுக்கணும் யாரு உண்மையிலேயே மக்களுக்காக அரசியல் நடத்துறாங்க, இதுவரைக்கும் ஊழல் குற்றச்சாட்டு இல்லாம ரெம்ப காலம் ஆட்சி செய்தவங்க இருக்காங்க. நம்ம நினைக்கிற மாதிரி எல்லா அரசியல்வாதியும் ஊழல்வாதிகள், சுயநலவாதிகள் இல்ல.மீடியா இதுவரைக்கும் இடதுசாரி கட்சிகளை இருட்டடிப்பு செய்றதை கொஞ்சம் கவனிக்கனும். மீடியாக்கள், சாமியார்கள் மாதிரி தீடீர்னு ஊழலை ஒழிச்சிடமுடியாது! அதுக்கு சட்டம் மட்டும் போட்டா போதுமா? செயல்ல காட்ட வேண்டாமா? ஊழலுக்கு முக்கிய காரணம் பொதுச்சொத்துகளை தனியார்மயமாக்கும் போது நடக்குது, அப்புறம் நாட்டோட இயறகை வளங்களை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏலம் விடும் போது நடக்குது, விலைவாசி ஏறுனா கம்பெனிகளுக்கு லாபம் வர்றதுல ஊழல். அதுக்கு கிளைகள் நிறைய இருக்குது. இந்த கொள்கைகளை அமல்படுத்துற ஆட்சியாளர்கள் அதிகாரிகள் இருக்கிறது வரை ஊழ்லை ஒழிக்கமுடியாது.

வியாழன், 2 ஜூன், 2011

ஏர் இந்தியா இனி மெல்லச் சாகும்....



வாங்கிய பெட்ரோலுக்கு காசு கொடுக்கமுடியாமல் ஏர் இந்தியா 60 விமானங்களை ரத்துசெய்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் விமான சேவை நிறுவனங்கள் சிக்கலில் தவித்தபோது மத்திய அரசு அவர்களுக்கு பல வரிகளை தள்ளுபடி செய்தும் எரிபொருளுக்கு மானியம் அளித்தும் அவர்களை லாபமீட்டச் செய்தது. ஆனால் ஏர் இந்தியா விமானத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளும் அமைச்சரவைகளும் தங்கள் சுயலாபத்திற்காக இஷ்டத்துக்கும் விமானத்தை இயக்கி இன்று திவாலாகும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். பிரதமர் அலுவலகம் உட்பட பல அமைச்சரவைகள் வைத்துள்ள கட்டணபாக்கி, லிபியாவில் இந்தியர்கள் சிக்கலை சந்தித்தபோது அவர்களை தாயகம் அழைத்துவந்தது என பலவற்றிற்கும் அரசு பணம் கொடுக்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு ஊழியர்களின் வேலைநிறுத்தம் அதை காதில் வாங்காத அமைச்சகத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமல்ல, எதிர்கால வியாபாரமும் பாதித்தது. இப்போது எரிபொருளுக்கு பணம் தராததால் அர்சு பொதுத்துறை நிறுவனமே மற்றொரு பொதுத்துறை நிறுவனத்திற்கு உதவ மறுக்கிறது. பெரும்பாலான உள்ளூர் ,சர்வதேச பயணிகள் ஏர் இந்தியா மீது நம்பிகையை இழந்துவிட்டார்கள்.ஏர் இந்தியாவில் டிக்கெட் எடுத்தால் விமானத்தை எப்போது இயக்குவார்கள் எப்போது கேன்சல் செய்வார்கள் எனப்து தெரியவில்லை.

மன்மோகன் சிங் அரசால் ஒரு விமானசேவையைக் கூட சரிவர நடத்தமுடியவில்லை யென்றால் இதில் மத்திய அரசு ஓரேடியாக “மஹாராஜாவை’ கொல்ல சதி செய்கிறதோ என ஐயம் ஏறப்டுகிறது. ஒவ்வொரு நாடும் தேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை திறம்பட இய்க்குகிறது. அது ஒரு நாட்டின் பெருமையும் அடங்கியிருக்கிறது, ஏர் இந்தியாவை மூடிவிட்டால் திருவாளர் மன்மோகன்சிங் வெளிநாட்டிற்கு அரசுமுறை பயணத்தில் எந்த ஏர்லைன்ஸில் பயணம் செய்வார். ஏர் இந்தியா மூடப்பட்டால் மத்திய அரசுக்கு ஒன்றும் நஷ்டமில்லை அவர்கள் அதிகமாக காசு கொடுத்து தனியார் விமானத்தில் பறப்பார்கள்.லிபியாவிலும், ஈராக்கிலும் முன்பு குவைத்திலும் உள்நாடு பிரச்சனை ஏற்பட்டபோது அங்கு பணிபுரியும் இந்தியர்களை யார் காப்பாற்றி அழைத்துவந்தார்கள். தனியார் நிறுவனங்கள இக்கட்டான நேரத்திலும் வியாபாரம் செய்துகொண்டிருக்கும். ஏர் இந்தியாவை காப்பற்றவேண்டியது மக்களின் தேவை. உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் விமான கட்டணங்கள் பங்குச்சந்தை புள்ளிகள போல ஏற்ற் இறக்கம் காணுகின்றன, ஆனால் ஏர் இந்தியாவில் முதலில் புக் செய்தவர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் என நியாயமான கட்டணக்கொள்கை வைத்துள்ளது.

அரசு நிறுவங்களின் தவறான நிர்வாகத்திற்கு ஊழியர்கள் பலியாகிறார்கள், தாய் நாட்டில் இயற்கையில் கிடைக்கின்ற சிறிய அளவு எண்ணெய் வளத்தையும் அம்பானிகளுக்கு எழுதிவைத்துவிட்டார்கள். வருடந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்ற பேலன்ஸ் சீட்டில் நஷ்டக்கணக்கு வந்ததே இல்லை. நாள் தோறும் எண்ணெய் நிறுவனக்கள் சர்வதேச விலை உயர்வால் நஷ்டமடைகின்றன என கூசாமல் பொய்யுரைக்கின்றாரே? பண்டிட் நேருவால் நவ இந்தியாவின் கோவில்கள் என்றழைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மன்மோகன் சிங் அரசால் இனிமெல்லச் சாகும்!