வெள்ளி, 20 மே, 2016

மகாகவி பாரதியார்- வ.ரா

இன்றைக்கு பாரதியை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை. அவரோடு சமகாலத்தில் வாழ்ந்த தேசிய இயக்கத்தின் தலைவர்கள் கூட அவர் இறந்து போனதற்கு பின்புதான் அவருடைய மேதமையை உலகிற்கு சொன்னார்கள். வ.ரா என்கிற வ.ராமஸ்வாமி பாரதியோடு சிலகாலம்  வாழ்ந்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களை இந்த நூலில் சொல்லும்போது வாசிப்போர்களை நாம் ஏன் அந்தக் காலத்தில் பிறக்காமல் போய்விட்டோம் என்று தோன்றுகிறது. ஒருவேளை பிறந்திருந்தாலும் மேதமையை அறிந்திருப்போமா என்பது ஐயமே!


தோழர். எஸ்.ஏ.பி அவர்கள் ஒரு கலையிலக்கிய முகாமில் பேசும்போது பாரதியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்று சொன்னார். விடுதலை இயக்கத்திற்கு  தமிழர்களை தட்டியெழுப்ப கவி புனைந்தான், பெண்விடுதலையைப் பற்றி பாடினான், சாதீய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து பாடினான். அவருடைய பேச்சும் செயலும் வேறு வேறல்ல. தமிழில் ‘புரட்சி’ விடுதலை என்ற சொற்களை முதலில் அறிமுகப்படுத்தியவன் பாரதி. உலக அரசியலை கூர்ந்து கவனித்து ஜார் மன்னனின் கொடுங்கோல் அரசை விமர்சித்தான். ரஷ்யப்புரட்சியை தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் முதன்முதலாக அறிவித்ததும் அதைப் பற்றி ‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ மாகாளி கடைக்கண் வைத்தாள் அங்கே’ என்று பாடினான்.

இன்றைக்கும் தமிழகத்தில் சாதீய ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமை என்கிற மடமையும் இருக்கும்போது நூறாண்டுகளுக்கு முன்பு சொல்லவேண்டுமோ?அவர் வாழ்ந்த காலத்தில் சுயசாதி அடையாளத்தை எதிர்த்து குடுமியை துறந்தான், பூணூலை அறுத்தெரிந்தான். வைதீகர்கள் மீசை வைக்கக்கூடாது என்பதற்காக முறுக்கிய மீசை வைத்துக்கொண்டான். சகமனிதர்கள் மீது அன்பு காட்டுவதே மனிதநேயம், அவன் ஒரு படிமேலே ‘காக்கை குருவி எங்கள் சாதி’ ஜடப்பொருட்களான ‘காடும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றான். ஒரு சம்பவத்தை வ.ரா குறிப்பிடுகிறார். ஒருநாள் காலையில் பாரதி வீட்டில் ஹோமம் வளர்த்து காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் ஓசை கேட்டது, போய்ப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த கனகலிங்கத்திற்கு பூணூல் போட்டு காயத்ரி மந்திரத்தை அவனுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவனிடம் சொன்னார், இந்த பூணூலை எப்போதும் கழட்டாதே, யார் வந்து மிரட்டினாலும் அடிபணியாதே பாரதி அணிவித்தான் என்று சொல் என்றார்.

வ.ரா பாரதியிடம் கேட்டார், நான் அணிந்த பூணூலை அறுத்தெரிய சொன்னீர், அதற்கும் சில காலம் முன்பே நீங்களும் கழட்டியெறிந்தீர். ஏன் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தீர்?அதற்கு பாரதி நீயும் நானும் ஊரறிந்த பார்ப்பான். ஆனால் கனகலிங்கம் நம்மைப்போல் ஆகவேண்டாமா? என்றார். இந்த சம்பவத்திற்கு வெகுகாலத்திற்கு பின்பு பாரதியை யானை துன்புறுத்தி படுக்கையில் படுத்தபோது கனகலிங்கம் வந்து பாரதியை பார்த்தார். அப்போது அவருடைய உடம்பை தடவி பார்த்தார், பூணூல் அணிந்திருப்பதை கண்டதும் மகிழ்ந்தார்.
பாரதியை போற்றியவர்களை நூலில் குறிப்பிட்டுள்ளார், அவர்கள் இல்லாவிட்டால் பாரதி வறுமையில் முன்னரே மடிந்திருப்பார். ஒருமுறை சீடன் கனகசுப்புரத்தினத்தோடு காபிகுடிக்கச்சென்றார். ஒரு முஸ்லீம் கடைக்குப்போனார்கள், கனகசுப்புரத்தினம் காபி ஆர்டர் செய்தார் உடனே பாரதி இங்கே டீ சாப்பிடவேண்டும் ஐயர் கடையில் காபி சாப்பிடவேண்டும் என்று டீயை வாங்கிக்கொண்டு தெருவில் மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக செய்தார். அப்போது வைதிகர்கள் உயர்சாதி தமிழர்கள் முஸ்லீம்களின் கடையில் சாப்பிடமாட்டார்கள் என்பது நடைமுறையில் இருந்தது.
அவர் புதுச்சேரியில் வாசம் செய்தபோது ஒரு சிறுவன் மனநலம் பாதித்து தெருவில் அலைந்துகொண்டிருப்பதைப் பாரதி பார்த்தார். அவனை வீட்டுக்கு அழைத்துவந்து அவனை குணப்படுத்தவேண்டும் என்று விருப்பம் கொண்டார். இதெல்லாம் சாத்தியமா? என்பது போல வ.ராவும் மற்ற சீடர்களும் பேசிக்கொண்டார்கள். ஆனால் பாரதியிடம் சொல்லமுடியவில்லை. அவனுடன் பேசி, சாப்பாடு ஊட்டிவிட்டு கொஞ்சி அவனை மனநோயிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.
இப்படி ஒரு கவி வாழ்ந்தார் என்பதை நம்பமுடியாமல் போகும் காலமிது, அதனால்  தான் அவன் உலகமகாகவி.