வியாழன், 9 ஜூன், 2016

நிழல்தரா மரம் - அருணன்

அஞ்ஞாடி நாவலில் வருகின்ற சமணர்கள், ஞானசம்பந்தர், கழுகுமலை, கழுவேற்றம் பற்றி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன் உடனே அவரிடமிருந்து இரண்டு நூல்களைத் தந்தார். ஒன்று ‘மிளிர் கல்’ கண்ணகி கோவலன் கதையோடு சமணத்தையும் அறியமுடிந்தது. மற்றொன்று ‘நிழல்தரா மரம்’ அட்டைப்படத்தில் இருந்த கழுவேற்றம் குறித்த ஓவியங்கள் கோவில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.கழுவேற்றம் குறித்து எண்ணிக்கையில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் கழுவேற்றியது என்பது வரலாறு அதுவும் பார்வதியிடம் பால்குடித்த ஞானசம்பந்தரின் எதிரே நடந்திருக்கிறது. அடடா..மதங்கள் அன்பை போதிக்கிறது என்றால் கேப்பையில் நெய் வடிகிறது என்று நம்புவார்களா?

‘மிளிர் கல்’ நாவலில் ஒரு தகவல், இங்கே சமணர்களைப் போல் மேற்கு ஐரோப்பாவில் பதினொன்றாம் நூற்றாண்டில் கதாரிஸம் என்ற கிறிஸ்தவ பிரிவு தோன்றியிருக்கிறது அதற்கும் கத்தோலிக்கத்திற்கும் ஏற்பட்ட அனல் வாதத்தில் கதாரிஸவாதிகள் தோற்றுப்போனார்கள் பின்பு கொல்லப்பட்டார்கள். எனவே நாவலாசிரியர் என்னுரையில் கூறியபடி ‘மதச்சண்டைகள்’ இந்த மண்ணுக்கு புதிதல்ல. மதமாற்றம் அப்போதும் நடந்திருக்கிறது, மதம் வெறும் மக்களை கவர்வதில் மட்டுமல்ல ஆட்சியாளர்களின் மதமாக ஆகவேண்டும் அப்போது தானாக குடிபடைகள் அந்த மதத்தை ஒழுகுவார்கள். தன் மதம் உயர்ந்தது என்பது மட்டுமல்ல பிற மதம் தாழ்ந்தது என்கிற சிந்தனையை சமயவாதிகள் கொள்கைகளாக வைத்திருந்தார்கள் பொதுமக்கள் அப்படியல்ல!



பேரா. அருணனின் ‘ கடம்பவனம்’ நாவ்லை நீண்ட வருடங்களுக்கு முன்பே வாசித்திருக்கின்றேன். வரலாற்றை கதையாக சொல்வார். இந்த நாவலில் வர்ணனையை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டு தமிழகம், சமணம், அப்போதைய உணவு, மொழி, வீடுகள் தெருக்கள் பண்டங்கள் பற்றி நிறைய தேடி படித்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார். இப்போதே அந்த ‘யானை மலைக்கு’ போகவேண்டும் சமண பள்ளிகளையும் சிற்பங்களையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. எண்பெரும் குன்றங்களுக்கு யானை மலையே தலைமை. அந்த குன்றங்களை கிரானைட் வியாபாரிகள் அழிக்கும்போது வரலாற்றியலாளர்களின் கண்களில் ‘தருமநாதன்’க்கு ஏற்பட்ட உணர்வே பொங்குகிறது நிலைமை கைமீறி போய்விட்டது.

ஒர் காலத்தில் செழுத்தோங்கிய சமணம் இன்றைய தமிழ்நாட்டில் தேடினாலும் கிடைக்காது, மன்னர்களை ஒற்றி மக்கள் மாறிவிட்டார்கள் ஆனால் அந்த குன்றங்கள் எல்லாம் என்னவாயிற்று! தொ.ப.வின் கட்டுரைகளை வாசித்தால் கோவில்களுக்கு கீழே சமணர்கள் அருகர்கோவில் இருக்கும். அவருடைய ‘அழகர் கோவில்’ நூலை வாசிக்கவேண்டும். வாசிக்கும்போது வைதிக மதங்களான வைணவம், சைவம் தங்களுடைய முரண்பாடுகளை ஒத்திவைத்து பொது எதிரிகளான அவைதிக மதங்களை ஒழிக்க நினைக்கும்போது சமணம் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள பெளத்ததோடு  கூட்டணி வைக்கவில்லை. இந்த கூட்டணி தற்போதைய தேர்தல் கூட்டணியை நினைவுபடுத்துகிறது. 

அரிகேசரி மாறவர்மன் சோழநாட்டின் மீது போர்தொடுத்து வென்று சோழ இளவரசியான மங்கையர்கரசியை மணந்துகொண்டான். சமணத்தை ஒழுகி வந்தான். அவன் மனைவி சிவனை வழிபட்டார் அதை அனுமதித்தார். சமணர்கள் கண்டு முட்டு, கேட்டு முட்டு என்று வைதிகவாதிகளை காண்பதும் அவர் சொற்களை கேட்பதும் ஆகாது என்றிருந்தார்கள். குலச்சிறையார் என்ற மந்திரியும் மங்கையர்கர்சியும் ஞானசம்பந்தனை அழைத்துவர்கிறார்கள். பின்னர் மன்னருக்கு வெப்புநோய் வருகிறது, சமண வைத்தியர்களின் மருந்தால் பிணி தீர்க்கமுடியவில்லை. சம்பந்தர் வலியை குணமாக்கினார். மன்னர் கரைந்தார். சமணர்களுக்கு ஐயம், இந்த நோய் சோழதேசத்திலிருந்து வந்திருக்கிறது, எச்சிலால் பரவும். நோய் தீர்த்தவனே நோயை கொடுத்திருக்கிறான். கம்ப்யுட்டர்களில் Antivirus software விற்பவனே  virus ஐ பரப்புவதுபோல!

இப்போது அரசர் வைதிகத்திற்கு போய்விடுவாரோ என்கிற கவலை சமணமுனிகளுக்கு, அதனால தங்கள் மதம் உயர்ந்தது என்பதை வாதில் நிருபிக்கிறோம் என்று வாதிற்கு அழைக்கிறார்கள். வாதில் நிச்சயம் தோற்றுவிடுவோம் என்று வைதிகர்கள் , அனல்வாதத்திற்கு அழைக்கிறார்கள். தீயில் அவரவர் ஓலைகளை போடுகிறார்கள். சம்பந்தர் போட்ட ஓலை எரியவேயில்லை. சமணர்கள் தோற்றார்கள், இப்போதும் வாதிற்கு அழைக்கிறார்கள் புனல்வாதத்திற்கு வாருங்கள் வென்றால் வாதிற்கு வருகிறோம் என்கிறார்கள் சைவர்கள். புனல்வாதத்தில் தோற்றால் சமணத்தை விட்டு சைவத்தை ஏற்கவேண்டும் என்ற நிபந்தனையை மறுத்து கழுமரம் ஏறுவோமெ தவிற சைவத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள். புனல்வாதத்திலும் வைதிகர்கள் வென்றார்கள், சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் சமணர்கள் அறியவில்லை. எண்பெருங்குன்றங்களிலிருந்த சமணத்துறவிகள் கழுமரம் ஏறுகிறார்கள். அந்த இடமே ‘சாமநத்தம்’ அன்றழைக்கப்படுகிறது. சமணர் ரத்தம் என்பதே மருவி வழங்குகிறது.

மன்னர் சைவத்திற்கு மாறினார், குடிபடைகள் எல்லாம் சைவத்திற்கு ஒழுகின, சமணத்தை வளர்த்த வணிகர்களும் மாறிவிட்டார்கள். சமணம் கருவருக்கப்பட்டது. அழியாமல் இன்றைக்கு மிச்சமிருப்பது அதன் சிற்பங்களும் இலக்கியங்களும். திருக்குறள், தொல்காப்பியம் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி என தமிழுக்கு சமணம் அளித்துள்ள கொடையை தமிழர்கள் மறந்தார்கள். பிற உயிர்களுக்கு எந்த தீங்கும் இழைக்கக்கூடாத என்கிற சமண நெறி. கடுமையான துறவு, துறவிகள் ஆடைகள் அணியக்கூடாது, எதையும் சொந்தமாக வைத்துக்கொள்ளக்கூடாது, சூரியன் மறைவதற்கு முன்பே உணவறுந்தவேண்டும், விளக்குகள் கூட ஏற்றக்கூடாது பூச்சிகள் இறந்துவிடுமே, பல்தேய்த்தால் கிருமிகள் அழிந்துவிடுமே! குளித்தாலும் அப்படியே! வெளிச்சம் இல்லாவிட்டால் நடக்கமாட்டார்கள், பகலில் மயில்தோகைகளைக் கொண்டு தரைய பெருக்கிக்கொண்டே நடக்கவேண்டும், பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை இதனாலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டது சமணம்.

இந்த நூலை வாசித்துமுடித்தபோது, மதுரையை பார்க்கவேண்டும், நீலகேசியை வாசிக்கவேண்டும் யானைமலையை பார்க்கவேண்டும். வேதங்கள் யாராலும் இயற்றப்படவில்லை அது சுயம்புவானது என்று வைதீகர்கள் கூறும்போது நீலகேசி சொல்கிறார்.

யாரது செய்தவர் அறியில்
இங்கு  உரை எனின் ஒருவன்
ஊரது நடுவண் அங்கு ஓர் உறையுளில் 
மலம்பெய்திட்டு ஒளித்து ஒழியின்
பேரினும் உருவினும் பெறல்
இலனாதல் இன்றா குறித்து
தேரினும் இனி அது செய்தவர்
இல்லெனச் செப்புவே’’

சமணத்தையும் தமிழக வரலாற்றின் ஒரு காலகட்டத்தையும் மதங்களையும் அறிந்துகொள்ள இந்த நாவல் வாசிக்கப்படவேண்டும்.
பேரா.அருணன் தமிழுக்கு அளித்துள்ள கொடைஎனலாம்.


மிளிர் கல்- இரா.முருகவேள்

மிளிர் கல்
---------------
புத்தாயிரத்திற்குப்பின்னர் வந்த நாவல்கள் என்ற தலைப்பில் எஸ்.ரா அவர்கள் பரிந்துரைத்த நாவல், அதோடு நீண்ட நாட்களுக்கு முன்பே நண்பர் வாசித்த அனுபவத்தை சொல்லியிருந்தார் அதனால் அவரிடமே வாங்கி வாசித்து முடித்தேன், முல்லையும் நவீனும் கண்ணகி புகாரிலிருந்து கொடுங்களூர் வரை பயணித்த தடத்தை ஆவணப்படமாக்கும் போது எதிர்பாராத விதமாக ஸ்ரீகுமாரை சந்திக்கிறார்கள். அவரை சந்திக்காவிட்டால் இவர்களது பயணம் எப்படியிருக்கும்?
ஒரு தமிழ்ப்பேராசிரியருக்கும் தொல்பொருள் ஆய்வாளனுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
காங்கேயம் காளைகளுக்குத் தான் பெயர் போனது என்று நினைத்திருத்தேன், இவ்வளவு வளமிருக்குதா?
அசோகர் கலிங்கத்தை வெல்வதற்காக புத்த சமயத்தை தழுவினாரா? டிடிகோசாம்பியின் நூல்களை படிக்கத் தூண்டுகிறது. கலிங்கப்போரில் எண்ணற்ற உயிர்கள் கொல்லப்பட்டது உண்மையில்லையா? இந்த ஐயம் தீர்க்கப்படவேண்டும்.
ஏன் சமண, பெளத்ததிற்கு மாற்றாக சைவம் தோன்றியது அதற்கான விடைகள்.
குஜராத்தில் வைரம், கற்கள் பட்டை தீட்டும் தொழில் நடக்கிறது என்பதை அறிந்தோம், அந்த பட்டை தீட்டும் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழல் இத்தனை மரணங்களும் சுவாச நோய்களும் ஏற்படுகின்றன என்பதை ஊடகம் சொல்லவில்லை! குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை முறை மூலம் லாபம் கொழிக்கிறது!
நாவலில் முல்லையும், நவீனும் ஆவணப்படத்திற்கு பயணிக்கும்போது சீரிகுமாருடன் உரையாடும்போது தொ பரமசிவன் கட்டுரைகளை வாசித்தது போல இருந்தது. நாவலில் பாத்திரங்களுக்கு தேடல் இருந்தது. வாசித்து முடித்தபின் அந்தத்தேடல் வாசகனைத்தொற்றிக்கொண்டது.
பூம்புகார் திரைப்படத்தை பார்த்தாகிவிட்டது, இனி சிலப்பதிகாரம், கோசாம்பியின் நூல்களையும் சமணம் பெளத்தம் சார்ந்த நூல்களையும் வாசிக்கவேண்டும். இந்த நாவல் வாசகனை மேலும் பரந்த வாசிப்பிற்கு இட்டுச்செல்கிறது.
இரா. முருகவேல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

வெள்ளி, 20 மே, 2016

மகாகவி பாரதியார்- வ.ரா

இன்றைக்கு பாரதியை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை. அவரோடு சமகாலத்தில் வாழ்ந்த தேசிய இயக்கத்தின் தலைவர்கள் கூட அவர் இறந்து போனதற்கு பின்புதான் அவருடைய மேதமையை உலகிற்கு சொன்னார்கள். வ.ரா என்கிற வ.ராமஸ்வாமி பாரதியோடு சிலகாலம்  வாழ்ந்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களை இந்த நூலில் சொல்லும்போது வாசிப்போர்களை நாம் ஏன் அந்தக் காலத்தில் பிறக்காமல் போய்விட்டோம் என்று தோன்றுகிறது. ஒருவேளை பிறந்திருந்தாலும் மேதமையை அறிந்திருப்போமா என்பது ஐயமே!


தோழர். எஸ்.ஏ.பி அவர்கள் ஒரு கலையிலக்கிய முகாமில் பேசும்போது பாரதியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்று சொன்னார். விடுதலை இயக்கத்திற்கு  தமிழர்களை தட்டியெழுப்ப கவி புனைந்தான், பெண்விடுதலையைப் பற்றி பாடினான், சாதீய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து பாடினான். அவருடைய பேச்சும் செயலும் வேறு வேறல்ல. தமிழில் ‘புரட்சி’ விடுதலை என்ற சொற்களை முதலில் அறிமுகப்படுத்தியவன் பாரதி. உலக அரசியலை கூர்ந்து கவனித்து ஜார் மன்னனின் கொடுங்கோல் அரசை விமர்சித்தான். ரஷ்யப்புரட்சியை தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் முதன்முதலாக அறிவித்ததும் அதைப் பற்றி ‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ மாகாளி கடைக்கண் வைத்தாள் அங்கே’ என்று பாடினான்.

இன்றைக்கும் தமிழகத்தில் சாதீய ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமை என்கிற மடமையும் இருக்கும்போது நூறாண்டுகளுக்கு முன்பு சொல்லவேண்டுமோ?அவர் வாழ்ந்த காலத்தில் சுயசாதி அடையாளத்தை எதிர்த்து குடுமியை துறந்தான், பூணூலை அறுத்தெரிந்தான். வைதீகர்கள் மீசை வைக்கக்கூடாது என்பதற்காக முறுக்கிய மீசை வைத்துக்கொண்டான். சகமனிதர்கள் மீது அன்பு காட்டுவதே மனிதநேயம், அவன் ஒரு படிமேலே ‘காக்கை குருவி எங்கள் சாதி’ ஜடப்பொருட்களான ‘காடும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றான். ஒரு சம்பவத்தை வ.ரா குறிப்பிடுகிறார். ஒருநாள் காலையில் பாரதி வீட்டில் ஹோமம் வளர்த்து காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் ஓசை கேட்டது, போய்ப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த கனகலிங்கத்திற்கு பூணூல் போட்டு காயத்ரி மந்திரத்தை அவனுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவனிடம் சொன்னார், இந்த பூணூலை எப்போதும் கழட்டாதே, யார் வந்து மிரட்டினாலும் அடிபணியாதே பாரதி அணிவித்தான் என்று சொல் என்றார்.

வ.ரா பாரதியிடம் கேட்டார், நான் அணிந்த பூணூலை அறுத்தெரிய சொன்னீர், அதற்கும் சில காலம் முன்பே நீங்களும் கழட்டியெறிந்தீர். ஏன் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தீர்?அதற்கு பாரதி நீயும் நானும் ஊரறிந்த பார்ப்பான். ஆனால் கனகலிங்கம் நம்மைப்போல் ஆகவேண்டாமா? என்றார். இந்த சம்பவத்திற்கு வெகுகாலத்திற்கு பின்பு பாரதியை யானை துன்புறுத்தி படுக்கையில் படுத்தபோது கனகலிங்கம் வந்து பாரதியை பார்த்தார். அப்போது அவருடைய உடம்பை தடவி பார்த்தார், பூணூல் அணிந்திருப்பதை கண்டதும் மகிழ்ந்தார்.
பாரதியை போற்றியவர்களை நூலில் குறிப்பிட்டுள்ளார், அவர்கள் இல்லாவிட்டால் பாரதி வறுமையில் முன்னரே மடிந்திருப்பார். ஒருமுறை சீடன் கனகசுப்புரத்தினத்தோடு காபிகுடிக்கச்சென்றார். ஒரு முஸ்லீம் கடைக்குப்போனார்கள், கனகசுப்புரத்தினம் காபி ஆர்டர் செய்தார் உடனே பாரதி இங்கே டீ சாப்பிடவேண்டும் ஐயர் கடையில் காபி சாப்பிடவேண்டும் என்று டீயை வாங்கிக்கொண்டு தெருவில் மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக செய்தார். அப்போது வைதிகர்கள் உயர்சாதி தமிழர்கள் முஸ்லீம்களின் கடையில் சாப்பிடமாட்டார்கள் என்பது நடைமுறையில் இருந்தது.
அவர் புதுச்சேரியில் வாசம் செய்தபோது ஒரு சிறுவன் மனநலம் பாதித்து தெருவில் அலைந்துகொண்டிருப்பதைப் பாரதி பார்த்தார். அவனை வீட்டுக்கு அழைத்துவந்து அவனை குணப்படுத்தவேண்டும் என்று விருப்பம் கொண்டார். இதெல்லாம் சாத்தியமா? என்பது போல வ.ராவும் மற்ற சீடர்களும் பேசிக்கொண்டார்கள். ஆனால் பாரதியிடம் சொல்லமுடியவில்லை. அவனுடன் பேசி, சாப்பாடு ஊட்டிவிட்டு கொஞ்சி அவனை மனநோயிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.
இப்படி ஒரு கவி வாழ்ந்தார் என்பதை நம்பமுடியாமல் போகும் காலமிது, அதனால்  தான் அவன் உலகமகாகவி.

சனி, 6 பிப்ரவரி, 2016

தமிழகத்தில் அடிமைமுறை-1

பேரா.ஆ.சிவப்பிரமணியன் எழுதிய ஆய்வு நூலிலிருந்து...


நூல் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை :ரூ120


முந்தைய பதிவில் மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அடிமைமுறை நிடித்திருந்தது என்பதை பார்த்தொம். சோழர்கள் காலத்தில் நிலவுடமைமுறை சங்ககாலத்தைவிட வளர்ச்சியடைந்திருந்தது. சோழர்கள் காலத்தில் கோவில்கள் என்பது வெறும் வழிபடும் இடம் மட்டுமல்ல, அதிகாரம் சார்ந்த இடமாகவும் பொருள் உற்பத்தியில் முக்கிய பங்கும் வகித்தது. பொ.வேல்சாமி அவர்கள் எழுதிய நூலில் மன்னர்கள் என்பவர்கள் இன்றைய ராணுவ ஜெனரல்கள் போல் விளங்கினார்கள், சிவில், குற்றம், பொருளாதாரம் போன்றவை கோவிலின் நிர்வாகத்துடன் சேர்ந்திருந்து என்று விளக்கியிருந்தார். கொவில் நிலத்தின்மீது பிராமணர்களும் படிப்படியாக வேளாளர்களும் அதிக்கம் செலுத்தி வந்தனர். எண்ணற்ற நிலமற்ற மக்கள் கோவிலடிமைகளாகி விவசாயஉற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். விவசாய நிலத்தை வைத்திருந்த பிராமணர்கள், வேளாளர்கள் அடிமைகளை வைத்திருக்கலாம். ஆனால் உவச்சர், நெசவாளர், நாவிதர் ஆகியோர் அடிமைகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டை இரண்டாம் ராஜராஜனின் கல்வெட்டு தெரிவிக்கிறது. குயவர், நெசவாளர் என்பவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுப்வர்கள் இவர்கள் கிராமத்தின் தேவைக்கதிகமாக உபரி உற்பத்தி செய்யவிடாமல் ஊர்சபை பார்த்துக்கொண்டது.
கிரேக்க, ரோம் நாடுகளில் உற்பத்தியில் அடிமைகளின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது, இந்தியாவில் பொருள் உற்பத்தியில் அடிமைகளின் பொருள் உற்பத்தி என்பது பிரதானமாக இல்லை, வெறும்  உடலுழைப்புக்கூலி வேலை, வீட்டுவேலை என்றளவில்தான் இருந்துள்ளது.


தேவரடியார் அடிமைமுறை.
-----------------------------------
பிற்காலச் சோழர்கள் காலத்தில் கோவில் வேலைகளுக்கென்று ‘தேவரடியார் முறை’ ஏற்படுத்தப்பட்டது நிலச்சுவானதார்கள் பெண்களை விலைக்கு வாங்கி கோவிலுக்கு வழங்கினார்கள். தேவரடியார்கள் கோவிலில் அதிகாரிகளால் தண்டிக்கப்பட்ட செய்தியும் உ.வே.சா நூலில் எழுதியுள்ளார். ஆலய வாசலின் ஒரு பக்கத்தில் பெண்ணை குனியவைத்து கழுத்தில் கயிறுமாட்டி அதை கால்விரல்களுடன் சேர்த்துக்கட்டி முதுகில் கல்லை ஏற்றி தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.கடன்காரர்களின் தொல்லைக்காட்பட்ட தாயும் மகளும் கோவிலில் தஞ்சம் புகுந்து அடிமையானார்கள், அடிமையாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அவர்கள் பாதத்தில் கோவில் சின்னம் பொறிக்கப்பட்டது.


பொட்டுக்கட்டுதல் என்பது சமயம் சார்ந்த கோவில் சடங்கு, இச்சடங்கின் வாயிலாக ஒரு சிறுமி அல்லது இளம்பெண் அக்கோயிலின் தேவரடியாராக மாறுகிறார். ‘பதியிலார்’, ‘நித்தியசுமங்கலி’ என திருநாமங்கள் சூட்டப்பட்டன. மேட்டிமையோர் தம் மேலாணமையை நிலைநாட்டவும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பின்றித் தம் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளவும் செய்யும் வழிமுறைகளில் ஒன்றுதான் சமயசடங்கு. பாலியல், சாதி, பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொதுமகளிராக மாற்றும் புனிதச்சடங்கே பொட்டுக்கட்டுதல். சமயமுத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது. தேவடிமையின் வாழ்வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோவிலால் உறுதிசெய்யப்பட்டுவிட, மேட்டிமையோரின் குறிப்பாக புரோகித, நிலவுடமையாளர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவளது பணியாகிவிடுகிறது.
கோவில் வழிபாடு, திருவிழா போன்றவற்றில் நடன்மாடுவது, பூக்கட்டுவது, கோலமிடுவது அவர்களது  அவல்வாழ்வை மறைக்கும் புனிதத்திரைகளாக மட்டுமே அமைந்தன.


தஞ்சை மராத்திய மன்னர்கள் ஏராளமான மனைவிகளுடன், வைப்பாட்டிகளுடன் வாழ்ந்த்தனர். வைப்பாட்டிகளுக்கென்று ‘கல்யாண மஹால்’ என்ற பெயரில் அரண்மனை இருந்துள்ளது.பருவம் அடைவதற்கு முன்பே சிறுமிகளை இங்கு வளர்த்துத் தம் பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்தி கொள்ளும் நோக்கில் சிறுமிகளை விலைக்கு வாங்கியுள்ளார்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே பெண்கள் மற்றும் சிறுமிகளின் விற்பனையில் ஈடுபட்டிருந்தது.


நாஞ்சில்நாட்டு நிலைமை குறித்து 1881ம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கையில் தோவாளை அருகே தாழக்குடி கிராமத்தில் மாடத்தி என்ற நிறைமாத கர்ப்பிணி, பட்டினியாலும், உடல்நலமில்லாமலும் வேலைக்குச் செல்லவில்லை. அவளின் உரிமையாளரான நிலவுடமையாளன் அவளை இழுத்துவரச்செய்து எருமை  மாட்டுக்கிணையாகக் கலப்பையில் பூட்டி, சேற்று வயலில் உழும்படி செய்திருக்கிறான், மாட்டின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் போனபோது தார்க்குச்சியால் குத்தப்பட்டு கலப்பையில் பூட்டியநிலையில் இறந்துபோனாள். எவ்வளவு கொடுமை!
இன்னொரு அறிக்கையில் , ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்குத் தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம், அதற்கு ஓர் அடிமையை உடைப்பில் உயிரோடு உள்ளே தள்ளி  மண்ணைப்போட்டு மூடியிருக்கிறார்கள்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழகத்தில் அடிமை முறை

அடிமைமுறை என்பது இன்றைக்கு இருக்கிறதா? எங்கே? எந்த இடத்தில் இருக்கிறது? இப்படி ஆராய்ந்தால் செய்திகளின் ஊடாக ‘கொத்தடிமை’கள் இத்தனைபேர் ஆந்திராவிலிருந்து கர்நாடகாவிலிருந்து மீட்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம். அவர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் செங்கல்சூலை, அரிசியாலைகள், கல்குவாரி போன்ற இடங்களிலிருந்து மீட்கப்பட்டார்கள் என்று செய்திகளின் ஊடே பார்க்கிறோம்.


கிராமங்களில் பெரிய பண்ணைவீடுகளில் மாடுமேய்க்கும் சிறுவர்களை பார்த்திருக்கிறேன், அவர்கள் அனாதையாக இருப்பார்கள் அல்லது இவ்வளவு பணத்திற்கென்று சிறுவனை அவனது பெற்றோர்கள் / உறவினர்கள் விற்றிருப்பார்கள். அந்த சிறுவர்கள் அதிகாலையிலிருந்து வேலைசெய்வார்கள், மாடுகளின் சாணியை அள்ளியெடுத்து குப்பையில் சேர்ப்பார்கள், தொழுவத்தை சுத்தம் செய்வார்கள் கூளம் போடுவார்கள், பிறகு மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டுபோவார்கள் மேய்ச்சலிலிருந்து வந்தவுடன் வேறு வேலைகள் இருந்துகொண்டேயிருக்கும். இப்படி சிறுவனாக இருந்தபோது ஆரம்பித்த வேலை இளவட்டம் ஆகும்வரை அவனுடை சொந்த ஊருக்கு ஒருமுறை கூட போகாமல் இருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன், கல்வி, பள்ளிக்கூடம் வாசனையே கிடையாது, வருடத்திற்கொருமுறை இரண் டு செட் புதுத்துணி கிடைக்கும், மீதி நேரங்களில் பண்ணையில் உடுத்திய பழய துணிகள் அவனுக்கு பாத்தியதை உண்டு. கூலி என்பதே கிடையாது மூனு நேரம் சோறு, தங்குவதற்கு தொழுவத்தில் இடம். இது அடிமை முறையில் ஒன்று தானே.


இன்றைக்கும் தமிழகத்தின் சில கிராமங்களில் சலவை செய்தல், முடிவெட்டுதல், தொழிலுக்கு வருடத்திற்கொருமுறை தானியமாக கூலி தரப்படுகிறது. என்னுடைய கிராமத்தில் 10 ஆண்டுகள் முன்புவரை இந்த நிலை இருந்தது. இந்தத் தொழில்கள் நகரமயத்தில் அதிக வருமானத்தை ஈட்டுவதால் புலம்பெயர்ந்தார்கள். ஊர் என்கிற சபை அவர்களுக்கு தங்குவதற்கான குடிசையை ஏற்பாடு செய்வார்கள், அழைத்து வரும்போது கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அவன் ஊரை விட்டு செல்லவேண்டுமென்றால் பணத்தை திருப்பித் தந்திருக்கவேண்டும். நிறைய சாதிக்கட்டுப்பாடுகளும் உண்டு, கூலி கொடுக்கப்படாத சில வேலைகளும் செய்யவேண்டும். விவசாயத்திற்கு துணையாக இருந்த கொல்லர்கள், தச்சர்கள், தோல் தொழில் செய்யும் அருந்ததியர்கள் கிராமத்திற்கென இருந்தார்கள் அவர்களை குடியானவர்கள் என்பார்கள். மாடு செத்துப்போனால் அருந்ததியர்கள் செத்த மாட்டை தூக்கிப்போவார்கள், கிராமத்தில் யாராவது இறந்துபோனால் அவர்களுடைய வெளியூர் சொந்தங்களுக்கு தகவல் சொல்வது பகடையின் வேலை. கால்நடையாக நடந்துசென்று அவர்களின் உறவினர்களிடம் தகவல் சொல்லவேண்டும், அங்கே அவர்களுக்கு ‘சன்மான’மாக தானியக் கூலி தருவார்கள். மயானத்திற்கு செய்யும் வேலைகள் எல்லாம் ‘வெட்டி வேலை’தான். கருமாதி எனப்படும் சடங்கில் நீர் சடங்கு செய்ய குளத்திற்கு போவார்கள் அதற்கு தரையில் சேலைகள் விரிப்பார்கள், அது வண்ணார்களின் ‘உரிமை’ வேலை. இப்படியெல்லாம் ஓர் அடிமை முறையின் வடிவம் நீடித்திருந்தது.
சே, இதெல்லாம் அடிமைத்தனம் இல்லை, செழுமையான கிராமிய வாழ்க்கைமுறை என்று சொல்வோர்களும் இருப்பார்கள் அந்த முறை தன்னைப் பாதித்திருக்காதவரை.
                                          ------------------------------
நூலிலிருந்து......


இன்னமும் நூலுக்குள் போகவில்லை, வரலாற்றில் அடிமைச்சமுதாயம் இருந்திருக்கிறது. அடிமை முறை இல்லையென்றால் பிரமிடுகள், சீனப்பெருஞ்சுவர், தஞ்சைப் பெரியகோவில் என்கிற அதிசியங்களை செய்திருக்கமுடியாது. எப்போது உபரி ஏற்பட்டதோ அப்போதே அடிமைமுறை வந்துவிட்டது.காட்டுமிராண்டிகள் காலத்தில் போரில் தோற்றவர்களைக் கொன்றார்கள், ‘உபரி’ மதிப்பு தோன்றிய காலத்தில் போரில் தோற்றவர்களை கொல்லாமல் அவர்களை அடிமைகளாக்கினார்கள். ஆடு, மாடு, உழைப்புக்கருவிகள் போன்றது அவர்களின் மதிப்பு. அவர்கள் கைதிகள் அவர்களுக்கு உழைப்பின் பயன்மதிப்பின்மீது எந்தப் பங்கும் கிடையாது, அவர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான அளவிற்கு மட்டும் உணவு வழங்கப்பட்டது. அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைக்கவில்லை,எஜமானனுக்கு உபரி உற்பத்தியினை அளிப்பதற்காகவே உழைத்தார்கள். கிரேக்கம், ரோம், எகிப்து பாபிலோன் போன்ற தொன்மைவாய்ந்த நாகரீக நாடுகளில் அடிமைமுறை இருந்தது.


ரோம் நாட்டில் வலிமையுடைய அடிமைகளை வைத்து போர்கருவி பயிற்சிகள் தரப்பட்டு gladiators என்றழைக்கப்பட்டனர். மன்னர்கள், நிலப்பிரபுகளின் பொழுதுபோக்கிற்காக மாபெரும் அரங்கங்கள் கட்டப்பட்டு அங்கே அடிமைகள் சண்டையிட்டார்கள். தோற்பவன் கொல்லப்படும்வரை மூர்க்கச்சண்டை நடைபெறும், சிங்கம் புலி போன்ற விலங்குகளுடன் போரிடச்செய்து அந்த அடிமை வீரர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள். ரோம் நகரத்தில் கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த வார்ரொ என்ற எழுத்தாளர் அடிமைகளை உற்பத்தி கருவிகளாகவே வகைப்படுத்தினார்.
1. பேசுகின்றவகை - அடிமைகள்
2.தெளிவற்ற ஒலிகளை எழுப்பும் வகை -மாடுகள் மற்றும் விலங்குகள்
3.பேசாவகை - வண்டிகள், ஏர், கருவிகள்
கி.மு. 1792-1750 வரை ஆண்ட ஹெமுராபி என்ற மன்னனின் சட்டத்தில் அடிமைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
                                          -----------------
தமிழகத்தில் சங்ககாலத்தில் அடிமைமுறை இருந்துள்ளது என்பதை ‘பட்டினப்பாலை’யில் ‘கொண்டிமகளிர்’ என்ற குறிப்பு உள்ளது. மதுரையில் யவனர்கள் காவலர்களாகப் பணிபுரிந்ததைக் ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள்யவனர்’ என்று சிலப்பதிகாரம், குறிப்பிடுகிறது. பண்டைய தமிழகத்தில் ஒரே காலகட்டத்தில் இனக்குழு வாழ்க்கைமுறை- குறிஞ்சி, மேய்ச்சல் நில வாழ்க்கைமுறை- முல்லை, உணவு உற்பத்தி செய்யும் நிலைத்த வாழ்க்கை-மருதம்,இதனை எதனையும் செய்ய இயலாத பாலைநிலப்பகுதியில் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்தும் சூழல் இருந்துள்ளது.
இதை அசமத்துவ வளர்ச்சி என்று கா.சிவத்தம்பி குறிப்பிடுகிறார். தமிழகத்தின் குறுகிய நிலப்பகுதியே பொருள் உற்பத்தி செய்யும் நிலையிலிருந்தது அதாவது மருதநிலத்தில் உணவு உற்பத்தி.இதன் காரணமாக அதிக எண்ணிக்கையில் அடிமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு சங்ககாலத்தில் ஏற்பட வழியில்லாமல் போனது.
                          
பல்லவர்கள் ஆட்சிகாலம் , சோழர்களின் ஆட்சிகாலம், விஜயநகரப்பேரரசு காலம், தஞ்சை மராத்தியர் ஆண்டகாலம், என வரிசையாக எல்லா ஆட்சிகளிலும்  அடிமைமுறை நிலவில் இருந்தது.
  • ‘ஆள்’ என்ற சொல் அடிமையைக்குறிப்பதாக 9ம் நூற்றாண்டு திவாகர நிகண்டு கூறுகிறது.
  • பிற்கால்ச்சோழர் ஆட்சியில் கொலிலடிமை மீது திரிசூலச்சின்னம் பதிப்பது வழக்கத்திலிருந்தது.
  • சோழமன்னர்கள் நிகழ்த்திய போரில் தோற்ற மன்னர்களின் மனைவியர்கள் அடிமைகளாக பிடித்துவரப்பட்டனர்.
  • திருமண மான பெண்ணுடன் ‘வெள்ளாட்டியை’ சீதனமாக அனுப்பும் பழக்கம் சோழர் காலத்தில் இருந்துள்ளது.
  • கோவில்களில் மட அடிமைகள் என்ப்பொர்கள் இருந்தார்கள், இவர்களை தானமாக கொடுத்துள்ளார்கள்.
  • பஞ்சத்தின் காரணமாக தன்னையும் தன் பெண்மக்களையும் கோவில் மடத்திற்கு விற்றுக்கொண்டடார்கள்.
  • ஆண் அடிமைகள் வேளாண்மையிலும் ஆநிரை மேய்ச்சலிலும் ஈடுபட்டார்கள், உவச்சர்கள் பறை கொட்டும் பணியினைச் செய்தார்கள்.
  • 13ம் நூற்றாண்டில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த இபின் பதுதா அடிமை வாணிபம் இருந்துஅள்ளதாக குறிப்புகளில் எழுதியுள்ளார்.
  • 1659-1682 சொக்கநாதர் ஆட்சிகாலத்தில் பஞ்சமும் யுத்தமும் மக்க்ளை கடுமையாக பாதித்தன, உயிருள்ள எலும்பும் தோலுமாக மக்கள் நடமாடினார்கள். அப்போது டச்சுக்காரர்கள் அவர்களுக்கு உணவளித்தார்கள், போதிய அளவு பலம் பெற்றவுடன் அவர்களை கப்பல்களில் ஏஏரிச்சென்று அயல்நாடுகளில் அடிமைகளாக விற்றார்கள்.
  • கோவிலுக்கு நிலம் வழங்கு போது நிலத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக சேர்த்து தான்மாக வழங்கப்பட்டதை 17,18ம் நூற்ற்ஆண்டு செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இன்னும் அடிமைமுறை ஆங்கிலேய ஆட்சியிலும் நாடு விடுதலை பெற்ற நீடித்த வரலாற்றை அடுத்த தனிதனிப்பதிவுகளாக எழுதுகிறேன்.


       



கிட்டிபோடுதல்


தமிழகத்தில் அடிமை முறை என்ற நூலில் ‘அட்டைப்பட’ ஓவியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சைமாவட்ட பொன்விழா மாநாட்டில் வைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகும் கூட ‘பண்ணையாள்’ என்கிற அடிமைமுறை நீடித்தது. அப்போது அவர்களின் வேலைநேரம் என்ற அதிகாலை கோழி கூவியவுடன் தொடங்கும், வேலைமுடியும் நேரம் இரவு கொசு கடிக்கத்துவங்கும் நேரம். உடம்பு சரியில்லையென்று ஒரு நாள் வேலைக்கு வரவில்லையென்றால் பண்னையாளை கூப்பிட்டு சாட்டையால் அடிப்பார்கள் ரத்தம் தெரிக்கும்வரை, மாட்டுச்சாணத்தை கரைத்துவைத்து வடிகட்டி சாணிப்பாலை வாயில் ஊற்றி தண்டித்தார்கள், அதற்கெதிராக செங்கொடி இயக்கம் போராடியது வரலாறு. 
பெண்களுக்கும் தண்டனை கொடுத்தார்கள், அந்த தாயின் மார்பகத்தை கிட்டியால் முறுக்கி கசக்கிப்பிழிந்து ரத்தம் சொட்ட அலறித்துடிக்கச்செய்யும் அலங்கோலத்தை கண்டு மிராசுதார்கள் ரசித்தார்கள். கூலி வேலை செய்யும் பெண்கள் சேலையை முழங்காலுக்கீழே வரக்கூடாது , அப்படி வேலைசெய்யும் நேரத்தில் இழுத்து செருகப்பட்ட சேலை முழங்காலுக்குக் கீழே வந்துவிட்டால் ‘காருவாரியை ‘ விட்டு அடிக்கச்சொல்வார்கள். முழங்காலுக்கு கீழே கணுக்கால் வரை சேலை கட்டுவதற்கும் போராடியிருக்கிறார்கள் மணலி. கந்தசாமி என்ற தோழரின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த தண்டனைக்களுக்கு ஆளானவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

வியாழன், 28 ஜனவரி, 2016

ஆண்டர்சன் கதைகள்

ஆண்டர்சன் கதைகள்




நேற்று இந்த நூலிலிருந்து ஒரே ஒரு கதை வாசித்தேன், மகாராஜாவின் புத்தாடை. வெகுநாட்களுக்கு முன்னால் ஒரு ஊரில் ராஜா இருந்தார், அவருக்கு புதுபுது ஆடைகள் அணிவதில் மிகவும் பிரியம். தினமும் மூன்று நான்கு ஆடைகளை மாற்றிக்கொள்வார். அமைச்சரவை நடந்துகொண்டிருக்கும் போதும் கண்ணாடி முன்பு நின்று தன்னை அழகு பார்த்துக்கொண்டிருப்பார். (கதை வாசிப்பவர்களுக்கு மோடியின் நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல.. அதை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே மறைந்த ஆண்டர்சன் தான் பொறுப்பு ) அதற்காக எண்ணற்ற ஆடை வடிவமைப்பாளர்களை கைவசம் வைத்திருந்தார். அந்த காலத்தில் செல்பி வேறு இல்லை, அதனால் வலைத்தளத்தில் பகிரமுடியாமல் போனது சோகம்தான்.




அமைச்சர்களும் மகாராஜாவின் ஆடைகளைப் பார்த்து மனதுக்குள் வைதாலும் நேரில் புகழ்ந்தார்கள், அந்த ஊருக்கு புதிதாக இரண்டு ஏமாற்று பேர்வழிகள் ஆடை வடிவமைப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். தாங்கள் மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள் என்று ராஜாவின் அவையிலே தெரிவித்தார்கள் இதற்கு முன்பே பல தேசங்களில் வடிவமைத்த  பயோடேட்டாவை காட்டினார்கள். ராஜாவும் உங்களிடம் அப்படியென்ன விசேசம் என்று கேட்டார்? அதற்கு அவர்கள் நாங்கள் தயாரிக்கும் ஆடைகள் தாங்கள் வகிக்கும் பதவிகளுக்கு தகுதியான மனிதர்களாக இருப்பார்களானால் மட்டுமே அவர்கள் கண்ணுக்கு தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது என்றார். அதாவது புத்திசாலிகளுக்கு அந்த ஆடை தெரியும், கடைந்தெடுத்த முட்டாள்களுக்கு ஆடை தெரியாது. அந்த ராஜாவும் ஒரு வேண்டுகோள் விடுத்தார், சரி செய்யும் ஆடையில் என்பெயரை குறுக்கும் நெடுக்குமாக அச்சிடமுடியுமா, ஏனென்றால் இன்னொரு தேசத்தின் சக்கரவர்த்தி என்னைப் பார்க்க வருகிறார் அவர் வரும்போது என்னுடைய ஆடை அவர் ஆடையைவிட சிறப்பாக இருக்கவேண்டும் என்றார்.


ஆடை இந்த தேதிக்குள் தயாராகவேண்டும் என்றார், அதற்குத் தேவையான பொருட்களை அவர்கள் எந்தக் கேள்வியுமின்றி அரசனின் கஜானாவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என ஆணை பிறப்பித்தார். அந்த இரு ஆடை வடிவமைப்பாளர்களும் தங்கமும், வெள்ளியும், பவளமும், முத்துக்களும் ஆடைகளில் இழைக்கவேண்டும் என்று வாங்கிக்குவித்தார்கள். அவர்களுக்கென அரண்மனையில் ஒதுக்கப்பட்ட அறைகளில் தூங்கிக் கொண்டடிருந்தார்கள். ராஜாவுக்கு அந்த ஆடை எப்படி இருக்குமென்று பார்க்க ஆவல் துளிர்த்தது. ஆனால் நான் வகிக்கும் பதவிக்கு தகுதியில்லாதவனாக அந்த ஆடையை காணமுடியாவிட்டால் என்ன ஆவது என்று ஒரு மூத்த மந்திரியை அனுப்பி ஆடை தயாரிக்கும் நிலவரத்தை பார்த்து வர அனுப்பினான். போன மந்திரிக்கு ஒன்றும் தெரியவில்லை, அந்த நெசவாளர்களின் ஒருவன் நெசவு இயந்திரத்தை காட்டி ஆடைகள் பாருங்கள் எவ்வள்வு மெல்லியதுணியில் நெய்யப்பட்டிருக்கின்றன என்று வர்ண்னை செய்து கொண்டிருந்தான்.


தனக்குத்தெரியவில்லையே நான் ஒரு முட்டாளா! அய்யோ.. வேறு யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதே என்று ஆகா பிரமாதம்.. நம் மகாராஜாவுக்கு இந்த ஆடைகள் கச்சிதமாக இருக்கும் என்றான்.


மூத்த அமைச்சர் ஆடை தயாரிக்கும் விதத்தை மகாராஜாவிடம் புகழ்ந்து தள்ளினான், மன்னருக்கும் பார்க்க ஆவல்தான். ஆகையால் கூட முதல் மந்திரி இன்னும் சில அதிகாரிகளை அழைத்துக்கொண்டு நெசவுசெய்யுமிடத்தை பார்வையிட்டான். யாருக்கும் நெசவு இயந்திரத்தைத் தவிர எந்தத்துணியும் தெரியவில்லை, அந்த ஏமாற்று பேர்வழிகள் நுட்பமாக நெய்வதுபோல பாவனை செய்துகொண்டார்கள். மன்னர் வந்ததும் அரசரே, இன்னும் சில தினங்களில் தங்களுடைய சிறப்பான ஆடை தயாராகிவிடும் பாருங்கள் என்றான். எல்லாரும் திருதிருவென முழித்தாலும் தங்களை முட்டாள்கள் என காட்டிக்கொள்ள விரும்பாமல் ஆகா பிரமாதம் என்றார்கள்.


ஆடை தயாராகிவிட்டது, வடிவமைப்பாளார்களே மன்னருக்கு அணிவிப்பது போல பாவனை காட்டினார்கள். அந்தப்புர சேவகர்கள் அங்கியை தாங்கிப்பிடிக்கும் வேலையை எடுத்துக்கொண்டார்கள், ஊர்வலம் தொடங்கியது, பொதுமக்கள் எல்லோருக்கும் அந்த ஆடை தயாரிப்பு பற்றியும் அதன் சிறப்பும் தெரிந்திருந்தது, முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது என்பதால் அவர்களும் மன்னரை புகழ்ந்தார்கள்.


அங்கே ஓரத்தில் நின்றிருந்த சிறுவன் கைகொட்டி மகாராஜா அம்மணமாக இருக்கிறார்.. என்று சிரித்தான். சிறுவனின் தந்தையும் அருகிலிருந்தவரிடம் சொன்னார் ஆமா.. மன்னர் ஆடையெதுவும் அணியவில்லை,, எல்லோருக்கும் தெரிந்தது ஆனாலும் ஊர்வல்ம் நிறைவடையவேண்டுமே.. அந்தப்புர பணியாளர்கள் அங்கியை ஏந்தியபடி அரண்மனை நோக்கி விரைந்தார்கள்.


இந்தக்கதையை வாசித்துவிட்டு பாலாவிடம் சொல்ல ஆரம்பிக்கும்போதே, அப்பா இந்தக்கதை Emperor's New Cloth எனக்குத் தெரியும் பள்ளி நூலகத்தில் வாசிததிருக்கிறேன் என்றான். மால்குடி டேய்ஸில் ஸ்வாமி என்ற சிறுவன் அவனது நண்பனான ராஜம்க்கு  “Anderson stories" பரிசாக அளிப்பான். சிறுவர்களுக்கு இந்த கதைகள் நிச்சயம் பிடிக்கும்.


தமிழில் : யூமா வாசுகி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 195ரூ.

திங்கள், 25 ஜனவரி, 2016

உப்பிட்டவரை - தமிழ்பண்பாட்டில் உப்பு




உப்பிட்டவரை - தமிழ்பண்பாட்டில் உப்பு


பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய நூல் என்றாலே கள ஆய்வு செய்து வரலாற்றுத் தரவுகளோடு இருக்கும், இதற்கு முன்பு அவர் எழுதிய ‘கிறித்தவமும் சாதியும்’ என்ற நூலை வாசித்திருக்கிறேன். சமீபத்தில் அவர் எழுதிய இரு நூல்களை வாங்கினேன், உப்பிட்டவரை மற்றும் தமிழகத்தில் அடிமைமுறை.


இந்த நூலை வாசிக்கும்வரையிலும் காந்தியின் உப்புக்காய்ச்சும் போராட்டம் ஏன், என்றே விளங்கவில்லை. உப்பை வைத்து ஆட்சியாளர்கள் வரிவிதிப்பில் கொடுரமாக நடந்துகொண்டார்கள் ஏனென்றால் உப்பு இல்லாமல் சாப்பிடமுடியுமா? உப்பு மனித உடலிலுள்ள சீரம் என்ற திரவத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது, இல்லையென்றால் நீரிழப்பு ஏற்படும். மனிதன் கண்டுபிடித்த முதல் வேதியல் பொருள் ‘உப்பு’ தான். உணவுப் பொருட்களை சிதைவிலிருந்து பாதுகாக்கிறது.
உப்பு எப்படி கிடைக்கிறது? ஒன்று கடல்நீரை அல்லது உப்புத்தன்மை அதிகமுள்ள நிலத்தடிநீரை நிலத்தில் பாய்ச்சி நீர் சூரியவெப்பத்தில் ஆவியானவுடன் படிந்திருக்கும் உப்பை சேகரிக்கும் முறை ஒன்று. மற்றஒன்று உப்பை சுரங்கத்திலிருந்து வெடியெடுத்து அப்படியே பயன்படுத்துவது.பஞ்சாப் சுரங்கத்திலிருந்து வெள்ளை, வெளிர்சிவப்பு, கருப்பு நிறங்களில் கூட உப்பு கிடைக்கிறதாம்.
உப்பு ஒரு வேதியல் பொருள், உணவிற்கு, கைமருத்துவத்திற்கு , பண்டமாற்றமுறைக்கு, மதங்களில் பிரசாதப் பொருளாகவும், தூய்மைப்படுத்தும் பொருளாகவும், நட்புறவின் சின்னமாகவும் மங்கலப்பொருளாகவும் விளங்குகிறது.


புதுவீட்டுக்கு செல்லும்போது உறவினர்கள் உப்பை கொண்டுசெல்லும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமில்லை, ஆங்கிலேயர்களிடமும் இந்த வழக்கம் உள்ளதாம். எகிப்தியர்கள் மம்மிக்களை உருவாக்க உப்பை பயன்படுத்தியுள்ளார்கள்.


பண்டைய தமிழ்நிலத்தில் நெய்தல் நிலத்தில் மீன்பிடிதொழில் செய்த பரதவர்களே உப்பை உற்பத்தி செய்துள்ளார்கள். அந்த உப்பை மற்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்பவர்கள் உமணர்கள் என்றழைக்கப்பட்டார்கள். உப்புக்கு பண்டமாற்றாக நெல்லை செய்துள்ளார்கள்.


வரலாற்றில் உப்பு மெளிரியர் ஆட்சிகாலத்திலேயே அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது, பண்டைய தமிழ் நிலத்தில் பல்லவப் பேரரசு (கி.பி. 4 - கி.பி.9ம் நூற்றாண்டு) உருவான காலத்தில் திணைச்சமூகம் சிதைவுற்றது, பேரரசுக்கு வருவாய் தரும் இனங்களில் ஒன்றாக உப்பு உற்பத்தி பார்க்கப்பட்டது. அச்சமயத்தில்தான் பரதவர்களிடமிருந்து உப்புத்தொழில் உமணர்களுக்கு கை மாறுகிறது இது ஒரு அரசியல் மாறுதலினால் ஏற்பட்ட விளைவே.


உப்பெடுக்கும் தொழில் மன்னருடைய கட்டுப்பாட்டிலும் உரிமையாக இருந்திருக்கிறது, உப்பு விளையும் அள்ங்கள் கோ-அளம் எனப்பட்டன.திணைசமூகமாக இருந்த காலத்தில் பண்டமாற்றுப் பொருளாக இருந்த உப்பு மன்னராட்சி காலத்தில் வருவாய்தரும் பொருளாக மாறிப்போனது. ‘வெட்டி’ வேலை என்பட்ட ஊதியமில்லா வேலையையும் மக்கள் செய்திருக்கிறார்கள் அதில் உப்பை சேகரிப்பதும் அதை கோவிலின் மடப்பள்ளிக்கு சுமப்பதுமான வேலை. வெட்டிவேலை என்பதன் பொருளே இப்போது சும்மா இருப்பது என்ற பொருளைத் தருகிறது.


ஆங்கில ஆட்சியிலும் உப்பு என்பது கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகபோக உரிமையாக இருந்தது. 1806ம் ஆண்டிலிருந்து உப்பின் விலை 70 ரூபாயிலிருந்து 1844ம் ஆண்டு ரூ 180வரை உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் தேவைகளுக்கு தாங்களே தயாரிக்கும்போது அரசாங்கத்தால் பிரம்படியும் தண்டமும் வழங்கப்பட்டது. 1930 களில் ஒரு மூட்டை உப்பின் விலை மூன்று ரூபாய் நான்கு அணா, இதில் 3ரூக்கும் மேல் கலால்வரி. உற்பத்தியாளருக்கு கிட்டியது 1 அணா 90 பைசா. (இப்போது  விற்கும் பெட்ரோல், டீசல் மேல் விதிக்கப்படும் வரி நினைவுக்கு வருகிறதா?)  ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்கள் அங்கிருந்து வரும்போது சும்மா வந்தால் கப்பலுக்கு பேலன்ஸ் கிடைக்காது என்பதற்க்காக லிவர்பூல், ஏடன் துறைமுகத்திலிருட்ந்து உப்பை கொண்டுவந்து விற்றிருக்கிறார்கள் அதனால இங்கு வரிவிதிப்பும் அதிகம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நசிந்திருக்கிறார்கள்.


ஆங்கிலேயர்கள் விதித்த வரியின் விளைவாக உப்பின் விலை உயர்ந்ததால் பயன்பாடு குறைந்தது. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் சில பத்திரிக்கைகள் ‘வருமான வரியை ரத்து செய்துவிட்டு, உப்பின் வரியை தொடரலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். இதைப்பற்றி வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா எழுதிய நூலில் “ இந்தியாவின் சிறு பிரிவினர் ஜமீந்தார்கள் வரிவிதிப்பிலிருந்து தம்மை காத்துக்க்கொள்ள கீழ்த்தட்டு மக்களின் நலன்களை பலிகொடுத்தனர்  என்கிறார்.


இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலர் 1923ல் தமது “லேபர் கிஸான் கெஜட்” இதழில் தங்களுடைய வேலைத்திட்டத்தில் உப்புவரி ஒழிப்புக்கான இயக்கத்திற்க்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
1920ல் ஒத்துழையாமை இயக்கம் நடத்திய காந்தி, இரண்டாவது சட்டமறுப்பு இயக்கமாக உப்பு வரிக்கு எதிராக “உப்பு சத்தியாகிரகம்” போராட்டத்தை நடத்தினார். அதே சம்யத்தில் தமிழகத்தின் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு அறப்போர் நடைபெற்றது. திருமறைக்காடு என்ற ஊரின் பெயர் வடமொழிப்பெயர் மாற்றியமைத்த போக்கு காரணமாக வேதாரண்யம் என அழைக்கப்பட்ட தகவலும் உண்டு.


உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை மையமாக வைத்து மூன்று நாவல்கள் வெளிவந்திருக்கின்றன,
கரிப்புமணிகள் - ராஜம்கிருஷ்ணன்
உப்புவயல்- ஸ்ரீதரகணேசன்
அளம்- ச.தமிழ்ச்செல்வி
முதல் இரண்டு நாவல்களும் தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களின் அவலங்கள் நிறைந்த வாழ்க்கை குறித்தது, தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய நூல் வேதாரண்யம் பகுதியை மையமாக வைத்து எழுதியிருக்கிறார்.
வாசிக்கப்படவேண்டிய ஆய்வுநூல், ஆங்கிலத்த்தில் salary என்ற சொல்  salarium என்ற லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. தமிழில் சம்பளம் என்ற சொல் சம்பா + அளம் என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கிறது. சம்பா என்பது ஒருவகை நெல், அளம் என்ற சொல்லுக்கு உப்பு என்றே பொருள்.
இன்னும் சமூகத்தில் உப்புக்கு ஒரு பண்பாட்டு குணாம்சம் உண்டு, இரவில் வீடுகளில் உப்பை தரமாட்டார்கள், கடைகளில் விற்காமலும் இருந்திருக்கிறார்கள். உப்பிட்டோரை உள்ளளவும் நினை என்பதன் விளக்கம் உணவில் உப்பிட்டவர் அல்ல, வேலை கொடுத்து ஊதியம் வாங்குவொரைக் குறிக்கிறது.


ஆசிரியர் : ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ140

புதன், 20 ஜனவரி, 2016

கோவில் நிலம் சாதி - பொ.வேல்சாமி.

கோவில்  நிலம் சாதி - பொ.வேல்சாமி.





இந்த நூலை எழுதியவர் பொ.வேல்சாமி அவர்கள், பல்வேறு சிற்றிதழ்களில் அவரால் எழுதப்பட்ட கட்டு்ரைகளை காலச்சுவடு நூலாக கொண்டுவந்துள்ளது. கோவிலுக்கும் நிலத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? நிலத்திற்கும் சாதிக்கும் உள்ள தொடர்பை பற்றி கட்டுரைகள் வரலாற்று தரவுகளோடு சொல்கிறது. தொழில்ரீதியாக சாதிகள் தோன்றியாதாக சொல்லப்படுகிறது, 21ம் நூற்றாண்டிலும் இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க, என்று வாய் சொன்னாலும் சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் நிகழவில்லை. முற்பட்ட சாதிகள் என்போர் இடஒதுக்கீட்டை கேவலமாக பேசிவருகிறார்கள், அதிலும் பிற்படுத்தபட்ட பிரிவினர் அதே ஒதுக்கீட்டை அனுபவித்துகொண்டே தாழ்த்தப்பட்டவர்களை இழிவு செய்தும் வருவது கண்கூடு. இடஒதுக்கீடு இன்னும் தேவையா? என்பவர்கள் கொஞ்சம்.. சாக்கடை, குப்பை , கழிவுநீர்தொட்டி வேலையில் எந்த ஒதுக்கீட்டுத் தடையும் இல்லாமல் தலித் மக்களும் அருந்ததியினர் மட்டும் செய்கிற தொழிலை வேறு யாரும் செய்யவில்லை.


ஏன் அந்த சாதியினர் மட்டும் இழிவான தொழிலுக்கு தள்ளப்பட்டார்கள், அவர்களிடம் ஏன் நிலமில்லை. என்பதற்கெல்லாம் வரலாற்றை நோக்கவேண்டும். இந்த நூல் என்பது ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு எனலாம். அதற்காக நூலின் ஆசிரியர் எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார். அந்த நூலில் சொல்லப்பட்ட சில தகவல்களை மட்டும் கீழே தருகிறேன்...


வெற்றி பெற்றவர்கள் வரலாறு எழுதிகிறார்கள், முரண்பாடான ஒரு வரலாற்றை பாருங்கள்...


குலோத்துங்கச்சோழன் தன்னுடைய வீரமிக்க தளபதியான கருணாகர தொண்டைமானைக் கலிங்க நாடிற்கு அனுப்பி வீரப்போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்றியதாக கல்வெட்டுகளிலும் செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியிலும் உள்ளது, ஆனால் முத்தப்பசெட்டியார் நூலில் சோழர்களின் கலிங்கத்துப் படையெடுப்பு முதல் முயற்சியில் வெற்றியடையாமல் போகவே இரண்டாவதுமுறை கருணாகரத்தொண்டைமான் தஞ்சாவூர் பகுதியிலிருந்து 1000 தாசிப்பெண்களை கலிங்கத்துக்கு கூட்டிச்சென்று வீரர்களை மயக்கி, காமமயக்கத்தில் இருக்கும்போது அவர்களை வென்று கலிங்கநாட்டை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள்.’புத்திசாலியான மனிதன்’ எந்த வகையிலும் வெற்றிபெறுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று புகழப்பட்டுள்ளது.


1500 ஆண்டுகால தமிழக வரலாற்றில் நூற்றுக்கணக்கான பஞ்சங்கள் வந்து இலட்சக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள், ஒருவேளை உணவுக்காக தங்களையே அடிமைகளாக விற்றுகொண்டார்கள் என்ற செய்திகளோடு அதே காலத்தில் உண்ட உணவு செரிமானம் அடைவதற்கு உயர்சாதித் தமிழர்கள் சில வகை மருந்துவகைகளைத் திண்பண்டம் போலத் தயாரித்து உண்டார்கள். இன்றைய காலத்திலும் சுவையான சைவ உணவுகளைத் தயாரிப்பவர்கள் ‘தஞ்சாவூர் பார்ப்பனர்கள், அசைவ உணவு தயாரிப்பவர்கள் செட்டிநாட்டுக் காரர்கள், சுவையான இனிப்புவகைகளை தயாரிப்பதில் திருநெல்வேலிப் பிள்ளைமார்கள்.


தமிழகத்தின் நீர்வளம் மிக்க நிலங்களில் 75 சதமானம் கோவில்களின் உடமையாக இருந்தது, அதை நிர்வகிப்பவர்கள் பார்ப்பனர்களில் பெரும்பான்மையினர். பல்லவர் காலத்திலிருந்து கி.பி 5ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டுவரை அரசின் அதிகாரமான சட்டம்-ஒழுங்கு என்பது கோவில் நிர்வாகிகளிடம்தான் இருந்துள்ளது. அரசர்கள் என்பவர்கள் தற்போதைய ராணுவத் தலைவர்கள் போல செயல்பட்டுள்ளனர். சோழர் வரலாற்றில் இராஜராஜசோழனின் தமையனான ஆதித்த கரிகாலன் கொலையில் முக்கிய பங்காற்றிய ரவிதாசனையும் அவன் குடும்பத்தாரையும் எவ்வித தண்டனைக்கும் உட்படுத்த முடியவில்லை?


நிலம் யாருக்கு கொடுத்தார்கள்;
பல்லவர்கள் அளித்த பூதானங்களை தெரிவ்க்கும் கல்வெட்டுகள் ஹொஸக்கோட்டை பள்ளங்கொவில் ஆகிய இரண்டும் சமணப்பள்ளிகளுக்கு தானம் வழங்கப்பட்டிருக்கிறது, இது தவிற மற்ற அனைத்தும் வடநாட்டு பிரமாணர்களுக்கு அளிக்கப்பட்டவை. ஒருபங்கு நிலமென்றால் 2400குழி ஒவ்வொரு பங்கிற்கும் கொடுத்திருக்கிறார்கள், சிலருக்கு அரைப்பங்கு இவ்விதம் பிரிக்காமல் முழுக்கிராமத்தையே ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். கிராமம் என்ற சொல்லே வடமொழியில் கிரமங்கள் பயின்றவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்திலிருந்து வந்தது. தானம் பெறப்பட்ட நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது, வரிசெலுத்தத் தேவையில்லை. அந்த நிலங்கள் பிரம்தேயங்கள் என்ற பெயரில் வழங்கப்பட்டன.


வேதக்கல்வி கற்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்த்லிருந்து ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. வடமொழிக் கல்வி நிலையங்கள் பல்லவர், சோழர், பாண்டியர் காலங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவை தமிழ்நாடு முழுமைக்கும் இருந்துள்ளன. இராஜசதுர்வேதிமங்கலத்தில் ஒரு கல்லூரியில் எத்தனை மாணவர்கள் எந்த வேதத்தை கற்றார்கள், அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கபட்டது என்ற குறிப்புகளும் கல்வெட்டுகள் இருக்கின்றன. தானியம்தவிர தங்கமும் கொடுத்திருக்கிறார்கள்.


இந்த மன்னர்களுக்கு குரு என்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்துள்ளார்கள், இராசேந்திரசோழனின் குரு பீகார் பார்ப்பனர் சர்வசிவபண்டிதர், முதலாம் இராசராசனின் குரு ஈசான் சிவபண்டிதர் இவரும் வடநாட்டு பார்ப்பனர்தான். அரசனுக்கு படைத்தலைவர்களும் பார்ப்பனர்கள் தான் வகித்துள்ளனர்.



கொலைக்குற்றம் செய்தாலும் மரணதண்டனை பிரமாணர்களுக்கு கிடையாது, அதே சலுகையை பிற்காலத்தில் நில்வுடமையாளர்களான வேளாளர்களுக்கும் வழங்கபட்டுள்ளது.  ஒரு கொலைக் குற்றவாளியான வேளாள சாதிக்காரருக்கு அந்த் ஊர் கோவிலுக்கு விளக்கு எரிக்கும் நிபந்தம் வைத்தால் போதும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


சோழர்காலத்தில் பார்ப்பனர்கள் பலர், தங்கள் நிலத்தைக் கோவிலுக்கு விற்பனை செய்த்தை கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன. களப்பிரர்கள் காலத்தில் தங்கள் நிலங்களை இழந்த பார்ப்பனர்கள், இனி ஒரு முறை அவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காக நிலத்தை கோவிலுக்குவிற்று பொற்கசுகளை பெற்றுக்கொண்டனர். அதேவேளையில் கோவில் நிலங்களின் நிர்வாகிகள் என்ற பெயரில் அந்த நிலத்தின் மீதும் அதிகாரம் தங்களை விட்டு நீங்காமல் பார்த்துக்கொண்டனர்.


இந்த வரலாறுகள் மூலம் நிகழ்காலத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம். இன்னும் பெள்த்த, ஜைன மதங்கள் பழங்குடிகளிடம் பெற்ற செல்வாக்கு,வேதமதம் எப்படி மக்கள் செல்வாக்கு பெற்றது என்பதையெல்லாம் கட்டுரைகள் விவரிக்கின்றன. ஆழமாக படிக்கவேண்டிய நூல்.
 

திங்கள், 4 ஜனவரி, 2016

கொல்கத்தா - B.B.D Bagh



கொல்கத்தாவின் பல சாலைகளின், தெருக்களின் பெயர்கள் புரட்சியாளர்களின் பெயர்களை நினைவுகூறுகிறது. அப்படியொரு கொல்கத்தா மையத்திலுள்ள முக்கிய இடத்தின் பெயர் B.B.D. Bagh. Benoy-Badal-Dinesh ஆகிய மூவரில் பெயரால் நினைவு கூறப்படும் இடம் பிரிட்டிஷ் இந்தியாவில் டல்ஹெளசி ஸ்கொயர் எனப்பட்டது. பகத்சிங்-சுக்தேவ்-ராஜ்குரு மூன்று புரட்சியாளர்களும் பிரிட்டிஷ் இந்தியாவின் பாராளுமன்றத்தில் குண்டுவீசினார்கள்.வங்கச்சிறைகளில் வாடும் விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் பிரிட்டிஷ் அரசு மோசமாக நடத்திய செயலைக்கு பழிதீர்க்கும் வகையில் Benoy Basu, Badal Gupta மற்றும் Dinesh Gupta  மூவரும் பிரிட்டிஷ் இந்தியாவின் ரைட்டர்ஸ் பில்டிங்கில் சிறை அதிகாரி சிம்சனைக் கொன்றார்கள். அப்போது பிரிட்டிஷ் போலிசாருக்கும் இம்மூவருக்கும் ஏற்பட்ட சண்டையில் தோற்று பிரிட்டிஷ்காரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக மூவரும் தற்கொலை செய்துகொண்டார்கள். அதில் பாதல் குப்தா சயனைடு அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார், மற்ற இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர், அதில் தினேஷ் குப்தா காயத்துடன் உயிர்தப்பியதால் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். இது நடந்தது 1930ம் ஆண்டு. அந்த மூவருக்கும் வயது 20 முதல் 22 தான்.


இந்திய விடுதலைக்குப் பின்னர் டல்ஹெளசி ஸ்கொயர் Benoy-Badal-Dinesh தியாகிகளின் நினைவாக BBD Bagh என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

ஜே.சி.குமரப்பா



காந்தியப்பொருளாதார அறிஞர் குமரப்பாவின் பிறந்தநாள் இன்று. அவருடைய பொருளாதார சிந்தனைகள் சிலவற்றை பார்க்கலாம்...குமரப்பா அவர்களின் ஆங்கிலக்கட்டுரைகள் சிலவற்றை வெ.ஜீவானந்தம் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து தாய்மைப்பொருளாதாரம் என்ற நூ்லை இயல்வாகைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.




உற்பத்தி.
மூன்றாம் உலக நாடுகளில் அதிகமான உற்பத்தி சக்திகள் குவிந்து கிடக்கின்றன, எனவே இங்கு மனித உழைப்பைக் குறைக்கும் பெரிய இயந்திரங்களுக்கு இடம்ளிக்ககுடாது. அதிகமான மனித ஆற்றலைப் பயன்படுத்த்துவதன் மூலம் மக்களுக்கு வளமான வாழ்வை அளிக்க முடியும்.


கூலி
உழைப்புக்கும், தேவைக்கும் ஏற்ற கூலி தரப்ப்டவேண்டும். ஒருவர் ஆரோக்கியமான உண்வைப் பெறும் வகையில் சம்பளம் தருவது அரசின் கடமை. முதலாளித்துவ நாடுகளில் கூலி அளவே பொருட்களின் விலையை நிர்ணயிப்பதாக உள்ளது. கூலி லாபத்திற்கும், சந்தை விலைக்கும் ஏற்ப ஏற்ற இறக்கம் காணுகிறது. லாபம் கொண்டு கூலியை நிர்ணயிக்கக்கூடாது. கூலி என்பது தொழிலாளியின் ஆரோகியமான வாழ்வைப் பாதுகாக்க உதவும் வகையில் அமைய வேண்டும்.


நுகர்வோர்
நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருளில் என்ன உள்ளது, என்ன மதிப்பு என்பது தெரியாமலேயே வாங்கிக்கொண்டுள்ளனர். பொருளுக்கு வைக்கப்பட்ட விலைக்கு அது மதிப்புள்ளது என நம்புகின்றனர். பொருளின் மதிப்பை பற்றி அறிவது அவசியம்.


போர்.
ஆக்கிரமிபும், சுரண்டலும் அடிப்படையான் காலனியமே போருக்குக் காரணமாகிறது. தொழில்நுட்பம் கொண்டு அதிகப்பொருள் செய்து குவிக்கப்படுகிறது. இவை மக்களின் வறுமை பொக்க, பசி திர்க்க உதவிவில்லை. மனித வாழ்வௌ மேலும் பாதுகாப்பற்றதாக, கவலைமிக்கதாகவே மாறியுள்ளது.
செல்வக்குவிப்புப் பேராசையை விட்டு, சாதாரண மக்களின் நலவாழ்வுத்தேவைகளைத் தர ஒவ்வொரு நாடும் முயற்சி செயவேண்டும். உலகச்சந்தை, அதிக உற்பத்தி, அதிக விற்பனை, அதிக லாபம் என்பதை விட்டு அனைத்துமக்களின் மகிழ்ச்சியான நிறைவான வாழ்வுக்கு உதவும் பொருளாதார மாற்றம் இல்லையென்றால் உலகசமாதானம் என்பது வெறும் கற்பனையே.


காந்தி படுகொலை செய்யப்பட்ட அதெ ஜனவரி 30ம்தெதி ஜே.சி.குமரப்பா மறைந்தார்.