சனி, 9 ஜூலை, 2011

ஜவுளிக்கடை சிப்பந்திகள்

இந்தவாரம் கோவையில் ஒரு பெரிய ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தேன், அது எல்லா ஜவுளிக்கடைகள் இருக்கிற பிரதான சாலையில் இருக்கிறது. தரைத்தளம், பேஸ்மெண்ட், அப்புறம் மூன்றுமாடிகள்.உள்ளே நுழையும்போது எனக்கு ஏதாவ்து திருமண சத்திரத்திற்குள் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது, அப்படியொரு வரவேற்பு. கடைக்கு வரும் கஷ்டமர்களை கும்பிடு போடுவதற்காக மூன்று , நான்கு பெண்களை வாசலில் நிறுத்தியிருக்கிறார்கள். அப்புறம் அதை கண்காணிப்பதற்கு சிலர் வேறு. எனக்கு கூச்சமாகிப்போனது. ஒரு கடைநிலை சிப்பந்தியைப் பார்த்து யாராவது சார் என்று விளித்தது போல் ஆகிவிட்டது.

கடையின் உள்ளே நுழைந்தால் எங்கும் யூனிபார்ம் அணிந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் கடையில் வேலைபார்ப்பவர்கள். வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும் அவரை பிடித்து இழுக்காத குறைதான். இப்போது புதிதாக முழைத்துள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் பில் போடுவதற்குத்தான் ஆளிருப்பார்கள். ஆனால் இங்கெ தலைகீழ். சரி எப்படி இத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்கிறார்கள், ஒரு தளத்திற்கு குறைந்தபட்சம் 50 பேர் என்றால் மொத்தம் 5தளங்கள் 250 பேர். வாதத்திற்காக 250 குடும்பங்களை வாழ்வைக்கிறார்கள் என்று சொன்னால் அந்த பாரம் எல்லாம் வாடிக்கையாளர்கள் தலை மீது தானே வைக்கிறார்கள். பெரிய ஜவுளிக்கடைகள் எல்லாயிடத்திலும் இதே நிலைமைதான். ஆனாலும் அங்கெ செல்வதை தவிற்க்கமுடியவில்லை.

வாசலில் வரவேற்பு செய்பவர்களைப் பார்த்தவுடன், பழைய ஞாபகம் வந்தது.சென்னையில் நான் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் ஒரு பொதுமேலாளரின் மகள்/மகன் திருமணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. அந்த அதிகாரி அவர் சார்ந்த துறையில் வேலைசெய்யும் ஊழியர்களை மண்டபத்திற்கு அழைத்திருந்தார். மறுக்கமுடியாமல் சென்று தொண்டூழியம் செய்தோம். நானும் எனது நண்பனும் வரவேற்பு இடத்தில் வந்தவர்களுக்கு பன்னிர் தெளிப்பது, மற்றும் செயற்கையாக சிரிக்கும் வேலைகளை செய்தோம். எனது நண்பன் வருபவர்களை வைதுகொண்டே வரவேற்பான், எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு புன்னகை செய்தேன். அரசியல்கட்சி மாநாட்டிற்கு மட்டும் காசு கொடுத்து ஆள்களை திரட்டிவரவில்லை. இப்படி சில தனியார் நிறுவனங்களும் ஊழியர்களை அடிமை வேலைகளை ஏவுகிறார்கள் ஆனால் வெளியில் தெரிவதில்லை.

சனி, 2 ஜூலை, 2011

புதுசா வந்த பணக்கார சாமி

இது நாள் வரைக்கும் பணக்கார சாமி திருப்பதி ஏழுமலையான் இருந்தாரு அவருகிட்ட இருக்கிற நகைகளோட மதிப்பு 52,000 கோடி ரூபா, ஆனா இப்ப கேரளாவில இருக்கிற பத்மநாத சுவாமி கோயில்ல இருக்கிற பூட்டிய அறைகளைத் திறந்து அங்கிருக்கிற செல்வங்களை மதிப்பிடும் வேலை நடக்குது. இன்னைக்கு கேட்ட செய்தியின் படி சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு நகைகள் தேரும் போல.இத என்ன பண்ணுவாங்க ???

திருப்பதிக்கு முக்கிய வருமானமே உண்டியல் தான். உண்டியல் 5 ரூ, 10ரூ காணிக்கையை போட்டு அவ்வள்வு சொத்து சேரல. சில வியாபாரிங்க, அரசியல்வாதிங்க, தொழிலதிபர்கள் எல்லாம் சாமிகிட்ட சில அக்ரிமெண்ட் போட்டு முறைகேடா கிடைக்கிற பணத்துல சில பங்கை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துறாங்க. எல்லாம் பரிகாரம்,ஒரு பயம் தான் காரணம். சாமிகிட்ட அதக்கொடு இதக்கொடுன்னு கேக்குறதுக்காகவே ரெம்ப பேரு கோயிலுக்கு போறாங்க. திருப்பதி உண்டியல் சில சமயம் ஒரே கட்டுல கோடிக்கணக்கான ரூபா நோட்டுகள் கிலோ கணக்கில் நகைகள் உண்டியல்ல வந்திருக்கு. இப்படி அந்த சாமி பிறப்பால பணக்காரரு கிடையாது, பக்தர்களோட காணிக்கை தான். அவருக்கு பக்தர்கள் அம்பானியிலிருந்து ஈழத்தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்‌ஷே வரைக்கு இருக்காங்க.

திருவனந்தபுரம் பத்மநாத சுவாமிக்கு எப்படி இவ்வளவு செல்வம் வந்திச்சு? அந்தக் காலத்துல திருவாங்கூர் மஹாராஜாவோட கட்டுப்பாட்டுல திருவனந்தபுரம் இருந்துச்சு.இப்ப பூட்டிக்கிடந்த அறைகளிலிருந்து எடுத்த நகைகளெல்லாம் அந்த ராஜா காலத்து செல்வங்கள் தான். அந்தக் கால்த்து ராஜாக்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் மக்களை குறிப்பாக விவசாயிகளை கசக்கிப் பிழிந்து வரிமேல் வரி போட்டுத்தான் இப்படி செல்வங்களை சேர்த்தார்கள்.சேர்த்த செல்வங்களயெல்லாம் கோவில்களிலே பதுக்கினார்கள்,ஏனென்றால் மக்கள் ஒருவேளை பொங்கியெழுந்தாலும் கோயில்ல இருக்கிற கொள்ளை செல்வத்திற்கு ஆபத்தில்லை. அடுத்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்த ராஜாக்களுக்கு இந்த ரகசியம் தெரியும் அதனால தான் முதல்ல கோயில இடிப்பான், கொள்ளையடிப்பான் அப்புறம் பரிகாரமும் செய்வான். ஆட்சி செய்த பகுதியெல்லாம் ராஜாவோட நிலம் தான், அவரு குறுநில மன்னருக்கு அதிகாரம் கொடுப்பார் ஏக்கருக்கு இத்தனை ரூபா கொடுக்கணும் என்று, குறுநில மன்னர்,நிலப்பிரபுக்கள், ஜமீன்கள், அப்புறம் பண்ணையார்கள் கடைசியா அந்த நிலத்துல உழுகிற விவசாயி குத்தகை தரணும். இப்படி வரிசைக்கிரமமா அக்கிரமம் பண்ணினாங்க உழைக்காம ஒரு கூட்டம் படைகளை வச்சிகிட்டு உழைக்கிறவங்கள உறிஞ்சிவாழ்ந்த காலம் அது.வெள்ளைக்காரன் வந்த பிறகும் அவங்க கவலைப்படல. வெள்ளைக்காரனுக்கு ஒழுங்கா கப்பம் கட்டிவந்ததால அவங்க சம்ஸ்தானம் தப்பிச்சது. இப்படிப்பட்ட `மஹாராஜா’க்களை தான் அந்தக் கால்த்து மக்கள் தெய்வாம்சமா வணங்கினாங்க, இப்பவும் தான். அடிமைப்புத்தி என்னைக்கு போச்சு.

இந்த பணத்த என்ன பண்ணலாம்,. நாட்டுல வறுமையை ஒழிக்கிறதுக்கு பணம் இல்லைன்னு சொல்றாங்களே அதுக்கு பயன்படுத்தலாம், இந்த பணத்தை வச்சு நாடு பூராவும் ஆஸ்பத்திரி கட்டலாம், நிறைய பள்ளிகள் கல்லூரிகள் அரசாங்கமே கட்டலாம். எதுவுமே நடக்காது. `அனந்தசயன’ நாராயணன் மாதிரி இந்த நகைகள் திரும்பவும் தூங்கும்.