திங்கள், 27 பிப்ரவரி, 2012

கனவிற்கு ஏது எல்லை......

வாசிப்பு தளத்தில் ஒரு நண்பர் அறிமுகமானார், புத்தகங்களை பகிர்ந்துகொண்டோம். நான் சில என்னுடைய வாசிப்பு அனுபவங்களை வலைப்பூவில் எழுதுவதை அவரும் வாசித்துவிட்டு என்னிடம் எப்படி வாசிப்பிற்க்கும், அதைப்பற்றி எழுதுவதற்கும் நேரம் கிடைக்கிறது என்று கேட்டார், கஷ்டமான கேள்வி தான். இப்படி செய்வதானேலேயே குடும்பத்தில் அமைதி கெடுகிறது. தனிக்குடும்பத்தில் குழந்தைகள் தாய்தந்தைகளுடன் மட்டுமே விளையாடும் சூழல், எல்லா சூழ்நிலையிலும் புறத்தே குழந்தைகளால் விளையாட காலநிலை உகந்ததாகயில்லை. அவர்களுடன் நாம் விளையாடவேண்டும், பாடம் சொல்லித்தர வேண்டும். கணவன் இந்த வேலையை செய்யாதபோது மனைவி செய்யவேண்டியுள்ளது, வழக்கமான வேலைகளுடன் கூடுதல் சுமையும் சேர்கிறது. அப்போது அந்த நண்பர் நாம் குழந்தைகளுடன் விளையாடக்கூடிய பருவத்தில் அவர்களுடன் நேரம் செலவழிக்காமல் விட்டால் பின்னர் வருந்துவோம் என்றார். என்னுடைய மகனும் என்னிடம் தன்னோடு விளையாடு என்று கேட்டுகொண்டேயிருந்ததை நான் பெரும்பாலான நேரங்களில் தவிற்த்ததை நினைத்துப்பார்த்தேன்.

இச்சமயத்தில் தான் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பில் ‘பிழைதிருத்துபவனின் மனைவி’ என்ற சிறுகதையை வாசித்தேன். தன்னுடைய கணவன் ஒரு பதிப்பகத்தில் எழுத்துப்பிழை திருத்தும் வேலையை விரும்பி எப்போதும் செய்துகொண்டேயிருக்கிறார். வீட்டில் மனைவி என்பவர் இருக்கிறார், அவருக்கும் சில ஆசைகள் இருக்கும் என்பதை நினைக்கவே இல்லை. காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் அவரின் வேலை இரவு சிலநாட்களில் பின்னரவு வரை நீள்கிறது. மனைவுயுடன் உரையாடுவ்தேயில்லை, அந்த மனைவி தான் படித்த காலத்தில் பாடபுத்தகத்தைத் தவிற வேறெந்தெ அச்சடித்த காகித்தை பார்த்ததேயில்லை. கடைசியில் அந்த பெண்ணிற்கு கணவன் மீது கொண்ட கோபம் அச்சடித்த காகிதத்தின் மேல் ஏற்படுகிறது, கடவுளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேண்டுகிறாள் இந்த அச்சடித்தகாகிதங்கள் ஒழியவேண்டும் என்பதுதான் அவள் பிரார்த்தனை. கடைசியில் அவளுக்கு பிறழ்வு ஏற்படுவதாக கதை முடிகிறது. ஏன் இலக்கியம் வாசிக்கவேண்டும் என்று கேட்பவர்களுக்கு இதை நான் மற்றொருவருடைய அனுபவமாக பார்ப்பதற்கும் இது யாருடைய வாழ்விலும் இது நேராமல் இருக்கவேண்டும் என்பதை சொல்வதாக பார்க்கிறேன்.

குடும்பம் பற்றி பிரபஞ்சன் கட்டுரை ஒன்றை வாசித்தேன் ‘பறவைகள் பாடாத பகல்பொழுது’
குடும்ப அமைப்பைப் பற்றி கேள்வியெழுப்புகிறது. மனிதன் தோன்றியவுடன் குடும்பமும் தோன்றவில்லை, கணவன் மனைவி குழந்தை என்று வாழாமல் மக்கள் கூட்டம் சமூகமாக வாழ்ந்திருக்கிறது. தனிச்சொத்து தோன்றியவுடன் அதை தன்னுடைய வாரிசுக்கு மட்டுமெ சேர்க்கவேண்டும் என்ற நோக்கில்தான் குடும்ப அமைப்பு தொன்றியிருக்கிறது. அதுவரை சுதந்திரமாக இருந்த பெண் அடிமையாகிறாள். கணவனோ மனைவியோ அவர்களுக்கான வாழ்க்கையை வாழுவதில்லை. இந்த அமைப்புதான் நீடித்த அமைப்பு என்று மதநிறுவனங்கள் கற்பித்தாலும் இது நீடித்திருக்கப் போவதில்லை. எப்படி கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாக மாறியதோ அதேபோல் குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் மானுடம் வாழ்வது சாத்தியம்தான். இந்தியக் குடுமப அமைப்பை மேற்கத்தியநாடுகள் பெருமையோடு பார்ப்பதாக இங்கே புழங்காகிதம் அடைகிறார்கள். தாய் தந்தையரை பேணாத குடும்பங்களும் இங்கே இருக்கின்றன. திருமணம் செய்யாத ஆணை ஏற்றுக்கொள்கிற இச்சமூகம் திருமணம் ஆகாத பெண்களை தப்பானவர்களாவே அணுகுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதற்கும் அவர்களோடு பழகுவதற்கும் குடும்பமானவர்கள் தயங்குகிறார்கள்.இரு பாலருக்கும் பொதுவான கற்பு , ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே என்று இலக்கியத்தில் ஏற்றிவிட்டார்கள். விபச்சாரம் பெண்களால் மட்டுமே நடத்தப்படுவாதாக சமூகம் கருதுகிறது. விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக்குருவிபோல் என்றான் பாரதி, சகமனிதனின் துன்பத்தை தனது துன்பமாக உணரவைக்கும் நிலை உய்யாதா? என்பது ஏக்கமாகவே யிருக்கிறது.நான் சில கற்பனைகளில் மூழ்குவேன், எல்லோரும் வாழ்வதற்காக செய்கின்ற வேலையை விருப்ப வேலையாக சமூகத்திற்கு செய்யும் நிலை வராதா? உடல் உழைப்பை கேவலமாக கருதும் சிந்தனை மாறவேண்டும். சேகுவேரா ஒரு நாட்டின் அமைச்சராக இருந்துகொண்டு கரும்புத்தொட்டத்திலும் ஆலைகளிலும் உடழுழைப்பு செய்ததை ஓர் முன்னோடியாக பார்க்கிறேன். அனைவரும் எட்டு மணிநேரம் உழைக்கவேண்டும், நாம் செய்கிற சமையல் கூட சமூக அடுப்பாக மாறவேண்டும். கல்வியையும் மருத்துவசேவையும் அரசாங்கத்தின் கடமையெனக் கருதவேண்டும் என்ற நிலை வரவேண்டும், எல்லாம் கனவு தான், கனவிற்கு ஏது எல்லை.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கிறுகிறுவானம்



இன்னைக்கு சிறுவர்கள் விளையாடுற விளையாட்டு முன்னாடி நாமெல்லாம் விளையாடல, கிரிக்கெட் விளையாடாத கிராமமோ வற்றிப்போன குளமோ எந்த ஊர்லயும் இல்ல. 80களில் சிறுவனாக இருந்த எனக்கு இன்னும் கிரிக்கெட் விளையாட்டே தெரியாது, என்னைமாதிரி அறியாமையில் இருபவர்கள் ஆயிரத்தில் ஒருவனாகத்தான் இருப்பார்கள். கிராமங்களில் சிறுவர்கள் விளையாடுவதற்கு எந்த உபகரணமும் தேவையில்லை, ஒவ்வொரு விளையாட்டும் ஒரு சீசனுக்குத்தான். பள்ளிக்கூடம் ஆண்டு விடுமுறையில் அது வெயில்காலம், அப்ப நொங்கு சீசன் இருக்கும் நொங்கோட இரண்டு கூந்தலை ஒரு குச்சியால சேர்த்து அதை ஓட்டிக்கிட்டு போவோம். வைகாசி மாசம் முடிஞ்சவுடனே ஆனி, ஆடியில மேகாத்து அடிக்க ஆரம்பிச்சிரும் அப்ப பன ஓலையில காத்தாடி செஞ்சி மேக்காம ஓடுறது விளையாட்டு. ஆடுமேய்க்கும்போது ஒரு விளையாட்டு, தெருவில சுத்தும்போது கோலிக்காய், புளியமுத்தை சப்பைக் கல்லை வச்சி செதுக்கி விளையாடுறது, அப்புறம் சில்லாங்குச்சி அது சில ஊர்ல கிட்டிப்புல். இந்த விளையாட்டுல ஒரு ஆபத்து இருக்கு யாரு மேலயாவது விழுந்துரும் ஒருவாட்டி ஒரு மாட்டுக் கண்ணுல குத்தி மாட்டோட பார்வையே போச்சு. இன்னொரு விளையாட்டு வானத்தை நம்ம கூட சுத்தவைக்கிற ‘கிறுகிறுவானம்’ இதுக்கு கூட விளையாட யாருமே தேவையில்லை. களத்துமேட்டுல நின்னுகிட்டு கிறுகிறுவானா.. கிண்ணாரவானா.. வானத்தைப் பார்த்து தலைகிறுகிறுக்கிற வரைக்கும் சுத்தனும் அப்புறம் தொப்புனு கீழவிழுவோம். நம்மல வானம், மரம் பக்கத்துல நிக்கிற காளைமாடு எல்லாம் சுத்துறமாதிரி இருக்கும். இந்த விளையாட்டு எல்லாம் இப்ப யார் விளையாடுறாங்க? எல்லாம் மாறிப்போச்சு! உலகமயத்துல உள்ளூர் பிராண்டு மட்டும் காலியாகுறதுல்ல, லோக்கல் விளையாட்டும் காணாமப்போச்சு. வெள்ளக்காரன் நம்ம நாட்டை விட்டு போனாலும் அவனோட ஆங்கிலம், கல்வி, விளையாட்டு உடைகள் எல்லாம் நம்மை விட்டுப் போகல. மாறாதது என்ன இருக்கு!!

புஸ்தகத்துக்கு வருவோம்... சிறுவர் இலக்கியவரிசையில் நான் படிச்சதுல எஸ்.ரா எழுதுன ‘கிறுகிறுவானம்’ நம்பர் ஒன். ஏன்னா.. அது என்னோட பால்யத்தை எனக்கு ஞாபகப்படுத்துது. அதுல வர்ற ஓட்டப்பல்லு ங்கிற செண்பகராமன் மாதிரி நாமலும் இருந்திருக்கோம். எல்லாருக்கும் ‘பட்டப்பேரு’ வைக்கிறது, இன்னைக்கும் கிராமத்துல சர்டிபிகேட் பேரைச்சொன்னா யாருக்கும் தெரியாது. ஒவ்வொருதருத்தரும் ஏதாவது ஒரு சிறப்ப செஞ்சி ‘பட்டம்’ வாங்கியிருப்பாங்க. யாரையும் விட்டுவைக்கிறதில்ல. எங்க ஊர்ல ஒருத்தர் பேரு ‘சித்திப்பால்’ ..பாக்கெட்பாலை கடையில போயி அந்தப்பேரச்சொல்லி கேட்டுருக்காரு அதனால அந்தப்பேரூ. இப்படி இந்த ஓட்டபல்லு எல்லார்க்கும் பட்டப்பேரு வச்சிருவான். எப்பவும் பசியிலதான் அலைவான், அதுவும் இட்டிலி, தோசை எல்லாம் பண்டிகைப் பலகாரம். பணக்கார வீடுகளில் கூட மாசக்கடசி வெள்ளி, கடச்சனி அன்னக்கித்தான் இட்டிலி தோசை போடுற வழக்கம். நிறைய வீடுகளில் அது தீபாவளி, தைப்பொங்கல் அன்னிக்கு மட்டும்தான். அது ஆசைப்பண்டம்.சத்துணவுக்காக பள்ளிக்கூடம் போற நிறைய பிள்ளைகளப் பார்த்திருக்கேன். நானும் 6வது இருந்து 10வது படிக்கிற வர சத்துணவுதான். வீட்டுல இட்டிலி, தோச போடுற அன்னைக்குக்கூட கொண்டுபோகமுடியாது. ஸ்கால்ர்ஷிப் போயிடுமாம், நாங்க விடுவமா? தோசையை தூக்குச்சட்டியில கொண்டுபோயி ரயில் கடியில் வச்சி சாப்பிட்டுவிட்டுத்தன் பள்ளிக்கூடம் போவோம். அங்க போயி மதியம் தூக்குவாளியில சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம்.

இன்னக்கி பாக்கெட் மணி அன்னைக்கு ‘வாங்கித்திங்க’ ங்கிற பேருல 25பைசா கிடைக்கும் அது பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடி ஐஸ்க்காரர் கிட்ட பூவா தலையா போட்டு ஐஸ் வாங்கிடுவோம். அப்புறம் இண்டர்வெல்ல வேற யாரவது சாப்பிடும்போது வேடிக்கைபாக்குறது இன்னொருத்தான் சாப்பிடும்போது நாங்க உச் கொட்டுறது. அப்புறம் ஊர்லயிருந்து மாவுதிரிக்க யாராவது கொடுப்பாங்க அதுல 25 / 50 பைசா கமிஷன் கிடைக்கும். சில சம்யம் மாவுஅரைக்கிற கடையில கிலோப்புளுகு விடுவோம் அதுல 50 பைசா கிடைக்கும். இன்னைக்கி பசங்கல அத சாப்பிடதா, அன்ஹைஜீன்க் சொல்றோம். அன்னிக்கு அந்த ஜவ்வுமிட்டாய் தாத்தா பாடுற பாட்டுக்காகவே அவருகிட்ட ரயிலு்மிட்டாய் பாம்பு மிட்டாய் செஞ்சதை வாங்கி சாப்பிடுவோம். அப்பெல்லாம் யாராவ்து unhygenic ந்னு சொன்னா போங்க போயி பள்ளிக்கூடத்துல இருக்கிற தண்ணித்தொட்டிய பாருங்க கேட்டிருப்போம். அந்தத்தண்ணிய குடிக்கமுடியாது. ரீசஸ் விட்டவுடனே டீக்கடையப்பாத்து ஓடுவோம், பிளாஸ்டிக் ட்ரம் மேல பிளாஸ்டிக் தம்ளர் பள்ளிக்கூட பிள்ளைகளுக்காகவே வச்சிருப்பார். இன்னைக்கு எந்தக்கடயில ஒரு தம்ளர் தண்ணீ கேட்கமுடியும்..எல்லாம் பாட்டில்ல அடச்சி விக்கிறான். பொதுவா இருக்கிறதெல்லாம் இப்படி பாக்கெட் போடுறான் நாளக்கி காத்து கூட சிலிண்டர் விப்பான். கலிகாலம் தான் எந்த அவதாரபுருஷன் வருவானோ?

முன்னாடி கிராமத்து ஸ்கூல்ல அஞ்சுவரைக்கு அஞ்சு வாத்திமாரு இருந்தாங்க இப்ப? எஅங்க ஊருல 5வது வரைக்கு ஒரு வாத்தியாரு? நாடு முன்னேறிடிச்சின்னு சொல்றாங்க ஏன் கிராமத்துப் பள்ளிக்கூடம் இடிஞ்சுகிடக்குன்னு தெரியல. இன்ஸ்பெக்டர் வருவாரு போலீஸ் இன்ஸ்பெட்டர் இல்ல எஜுகேசன் இன்ச்பெட்டர் வந்து பசங்களப் பாத்து கேள்வி கேப்பாரு. வாய்ப்பாடு, திருக்குறள் ஏதாவ்து சொன்னா வெரிகுட். இந்தக்கதயில அப்படி ஒரு இன்ஸ்புட்டர் பள்ளிக்கூடம் வர்றாரு.. அவரு மதியம் பள்ளிக்கூடத்துல ஹெட்மாஸ்டர் ரூம்ல வச்சி சாப்பிடுறத நம்ம ஓட்டப்பல்லு பய பாக்குறான். ஆளுயுரக்கேரியர்ல் டவுண்ல யிருந்த சாப்பாடு வந்திருக்கு கோழி, மட்டன், மீன் எல்லாம் சாப்பிடுறாரு, இவனும் கூட்டாளியும் ஜன்னல் வழியாப் பாக்குறாங்க.. டேய் யாருடான்னு இன்ஸ்பெட்டர் ஜன்னலைப் பாத்தவுடனே ஒரே ஓட்டம். அப்புறம் பேசிக்கிறாங்க. டேய் பெரியாள ஆனவுடனே இந்த வேலைக்குத்தாண்டா போகனும்! தினம் இறைச்சி, முட்டை ,மீனு சாப்பிடலாம். பாருங்க எவ்வளவு பசியில இருக்காங்க!பசங்க.

இந்தப் புஸ்தகத்த நான் பத்துக்கும் அதிகமான தடவ வாசிச்சியிருக்கென், எனக்காக ஒருவாட்டி தான். என் பையன் எப்பப்பார்த்தாலும் அப்பா ஓட்டப்பல்லு கதயச்சொல்லு சொல்லுனு நச்சரிப்பான், அவனுக்காக இத வாசிப்பேன். எஸ்.ராவை நான் இந்த ஒரு புத்தகத்திற்காக கொண்டாடுவேன். நீங்களும் இதப்படிங்க..உங்க குழந்தைகளுக்காக வாசிங்க .இந்த மொழியிருக்கே அது பசங்களோட பேச்சுமொழி.

இந்தப் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது, புக்ஸ் பார் சில்ட்ரன் என்ற கேட்டகிரியில் இத மாதிரி நிறைய புத்தகங்கள் பாரதி புத்தகாலயம் வெளியிடிருக்கிறது.
இத சின்னவயசு அனுபவம், டைரின்னு கூட சொல்லலாம்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்



நம் நாட்டில் தான் சிலர் இந்த சாதியில் பிறந்தோம் என்று பெருமைப்படுகிறவர்களும் ஏன் இழிந்தசாதியில் பிறந்தோம் என்று தங்களையே சபித்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். பிறப்போடு வந்த சாதி இழிவு சுடுகாடுவரை தொடர்கிறது. இங்கே தான் பிறப்பின் அடிப்படையில் தேனீர் விடுதியில் ‘கிளாஸ்’ தீர்மானிக்கப்படுகிறது. சிலர் பசியால் உயிர்பிரியும் தருவாயில் இருந்தாலும் புலால் உணவைத் தொடவே மாட்டார்கள். சில வாரங்களுக்கு முன் உயர்ந்த சாதியில் பிறந்த முதல்வர் ‘மாட்டுக்கறி’ சாப்பிட்டார் என்று ஒரு பத்திரிக்கையில் வந்தது கூட கலவரமாக வெடித்தது. அப்படி சாப்பிடக்கூடாத ஒன்றை சாப்பிட்டுவிட்டதாக பத்திரிக்கையில் பரபரப்பு விற்பனைஉத்தி ஒருபக்கம். இழிந்த சாதியில் பிறந்ததற்காக அவர்கள் ஊருக்கெ வெளியே, கோவிலுக்கு வெளியே, குடிநீர் கிணற்றுக்கு வெளியே நிறுத்தப் பட்டார்கள். அவர்களின் பெயர்கள் கூட ‘உயர்வான’ பொருள் பொதிந்ததாக இருக்கக்கூடாது என்பதை விதித்தார்கள். இந்த சமூக இழிவை நீக்க மாற்று மதம் நோக்கி நடந்தார்கள்.,அங்கேயும் தொடர்ந்தது இதே இழிவு. அப்படி ஒரு கருப்பசாமி காதர்பாய் ஆன கதை தான் இந்த நாவலின் கரு.

1981ம் ஆண்டு செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமம் முக்கிய செய்திகளில் இடம்பெற்றது, லண்டன் பிபிசியில் கூட இந்த ஊரைப்பற்றிய செய்தி வந்தது. தேவேந்திரகுல வேளாளர் சாதியைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் இஸ்லாம் மதத்தை தழுவியதுதான் அந்த செய்தி. இங்கே ஒருவன் மதம் மாறிக்கொள்ளலாம்.,ஆனால் சாதி மாறமுடியாது. மேல்சாதியில் பிறந்தோம் என்று சொல்லிக்கொண்டோர் அந்த உழைப்பாளி மக்களை ‘கீச்சாதி பயலுவ’ என்றழைத்தபோதும், அவர்களை ஆலயத்திற்கு வெளியே நிற்கவைத்தபோதும், தேனீர் விடுதியில் தனிகிளாஸில் டீ கொடுத்தபோதும், திண்ணியத்தில் சகமனிதனென்றும் பாராமல் மனிதமலத்தை வாயில் திணித்தபோதும் வராத அகில இந்திய மதபீடங்களும் ஆன்மீக குருக்களும் அந்த ‘கீழ்சாதியில்’ பிறந்த கொடுமையை போக்க மதம் மாறமுற்பட்டபோது அந்த கிராமத்திற்கு விரைந்தார்கள். இன்னும் சிலர் மதம் மாறிய அந்த மக்களை பிரியாணிக்கு மாறினார்கள் என்று இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி மதம் மாறியவர்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் சமூகநிலை மாறிவிட்டதா என்பதை அப்படி மதம் மாறியவர்களில் ஒருவர் எழுதும் நாவல் இது.

அகமணமுறை வழக்கம் சாதி நீடித்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்,இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களும் அகமணமுறையில் தான் திருமணம் செய்கிறார்கள். அதே நடைமுறையில் தான் மதம்மாறிய ‘தலித்’ முஸ்லீம்களோடு மண உறவை பரம்பரை முஸ்லீம்கள் வைத்துக்கொள்ளவில்லை. இப்படி அந்த கிராமத்தில் 40 வயதிற்கு மேல் திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் அதிகமாக இருக்கிறார்கள்.புதிதாக மதம் மாறியவர்களை ‘நவ்முஸ்லீம்’ என்று சக முஸ்லீம்கள் அழைப்பது இந்த நாவலை படிக்கும்போதுதான் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் தான் விரும்புகிற மதத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வழக்கம் நம்மிடமில்லை. நம்முடைய சிறு வயதிலேயெ பெற்றோர்கள் விரும்புகிற உணவுப்பழக்கத்தையும் கடவுள்களையும் தொடர வேண்டியிருக்கிறது. இந்த நாவலில் தற்கொலை செய்துகொண்ட நூர்ஜஹான் தன் தந்தைக்கு எழுதிய கடிதம் நம்மை உலுக்குகிறது.

“ நீங்களும் மதம் மாறாது அங்கிட்டே இருந்திருந்தா இந்நேரத்துக்கு நானும் ஒங்களுக்கு கொஞ்சி விளையாட ரெண்டு பேரம் பேத்தியப் பெத்துக் கொடுத்து கெழவியாயிருப்பேன். ம்...என்ன செய்ய...”

“மதம் மாறுனதால அன்னைக்கு உங்களுக்கு கெடச்ச விடுதலை என்னைய அடிமையாகும்முனு நீங்க நெனச்சுக்கூட பாத்திருக்கமாட்டிய. ஆனா அன்னைக்கு உங்களுக்கென்ன் கொடுமையோ... இல்லணா .......... அம்புட்டு தூரம் போயிருப்பிளா என்ன..”

என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இறந்த நூர்ஜஹானின் உடல் அடக்கம் செய்யும் சமயத்தில் நடக்கும் உரையாடல்களே இந்த நாவல்.

பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.

இந்த ஊர்மக்கள் மதம் மாறியவுடன் பக்கத்து ஜமாத் மக்கள் ஆதரவு அளித்தார்கள், ஆனால் இந்த சமூகப்பிரச்சனையை தீர்ப்பதற்கு யாருமே வரவில்லை என்று ஏங்குகிறார்கள்.

முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டது போல நிச்சயம் விவாதத்திற்குரிய நாவல் தான்.

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்
ஆசிரியர்: அன்வர் பாலசிங்கம்
பக்: 102 ; விலை ரூ.100 |
கலங்கைப் பதிப்பகம்.
திருநெல்வேலி
தொடர்புக்கு: 9445801247

வியாழன், 2 பிப்ரவரி, 2012

புராதனப்பொருட்கள்

சில தினங்களுக்கு முன்னர் பாக்தாத் மியூசியத்திலிருந்து காணாமல் போன 6500 ஆண்டு தொன்மைவாய்ந்த ‘தங்க ஜாடி’ கிடைத்துள்ளதாக செய்திவந்தது. ஈராக்கின் தேசிய அருங்காட்சியத்திலிருந்த பொருட்கள் எப்படி காணாமல் போனது? அது சதாம் ஆட்சியை ஒழிக்க 2003 ஆண்டு ஈராக் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் படையெடுத்தபோதுதான். எல்லா போர்களிலும் வெற்றிபெற்ற நாடுகள் தோற்றவர்களின் புராதனச் சின்னங்களை உடைப்பார்கள், சிதைப்பார்கள் தங்கமாகவோ, ஆபரணங்களாவோ இருந்தால் கொள்ளையடிப்பார்கள். இதே போன்றுசென்ற ஆண்டு எகிப்தில் ஆட்சிமாற்றத்திற்கான கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் எகிப்தின் அருங்காட்சியகத்திலுள்ள பொருடகளை சேதப்படுத்தியுள்ளனர். உலகத்தின் தொன்மையான நாகரீகங்களின் நிலைமை இது தான். இப்போது பாக்தாத் மியூசியத்திலிருந்து காணாமல் போன தொல்பொருட்களை மீட்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக செய்திவருகிறது. எங்கே போயிருக்கும் நேட்டோ படையினர் கொண்டு போயிருப்பார்கள். அது ஜெனரல்களின் மேசையை அழகுபடுத்தும் பொருளாக மாறியிருக்கும்.

மேற்கூறிய இரு நாகரீகங்களில் ஆட்சிசெய்தவர்கள் பற்றிய விபரம் கிடைக்கிறது, ஆனால் சிந்துவெளியில் இருந்த ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த தொல்பொருட்கள் மிகவும் குறைவு என்கிறார்கள் வரலாற்றியலாளர்கள். ஹரப்பாவை பற்றி உலகம் அறிந்தது பிரிட்டிஷ் காலனி அரசு இருப்புப்பாதை அமைத்தபோது பூமியைத்தோண்டும் போது கிடைத்த இடிபாடுகள், செங்கற்கள் ஆகியவை. ஹரப்பா நகரகத்தின் ஊடாகவே ரயில்பாதை செல்கிறது. அங்கிருந்த செங்கற்களை புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக மக்கள் எடுத்துச்சென்று விட்டார்கள், அதில் பெரும்பகுதி மலிவுஜல்லிகளாக இருப்பாத்தை அமைப்பதற்கு போடப்பட்டுவிட்டது.

சில நாட்களுக்கு முன்பு நண்பர் சீரிகாந்த் தென் அமெரிகாவில் ஒரு நாட்டில் சூரியனின் வட ஓட்டம், தென் ஓட்டத்தை பூமியில் கற்கள் நட்டு பதிவு செய்திருப்பதாக தகவல் சொன்னார். அதைப்போல இந்தியாவிலும் அந்த சான்று கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் அநேகமாக பெல்காம் மாவட்டத்தில் அப்படி வறண்ட பிரதேசத்தில் சுமார் 2500 கற்கள் நடப்பட்டு இருந்திருக்கிறது, தொல்லியல் ஆய்வில் அது ஒரு வானவியல் ஆய்வுக்கூடம், சூரியனின் வட ஓட்டம், தென் ஒட்டத்தை அளப்பதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலன கற்கள் மாயமாகிவிட்டன. அது எத்தனை வீடுகளில் துணை துவைக்கும் கல்லாகவோ மாறிவிட்டது. இந்தத் தகவல் தில்லியின் விஞ்ஞான் பிரச்சாரில் பணியாற்றும் தமிழர் த.வே.வெங்கடேஷ்வரன் சொன்ன தகவல். கடிகாரத்தின் முள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது என்பதை தொல்லியல் ஆய்விலிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். வட்ட வடிவ ஒரு கல்லின் நடுவில் ஒரு குழி இருக்கிறது, அதில் ஒரு கம்பை நட்டு பகல்பொழுதின் நேரத்தை கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தச் சான்று சிந்துவெளியில் கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் புராதானப்பொருடகள் இருந்திருக்கின்றன, அவற்றின் மதிப்பைவிட பசி அதிமாக இருந்ததால் அது அப்போதே பழய்ய இரும்புக்கடைக்கு சென்றுவிட்டது.நிறைய வீட்டுகளிலிருந்த காளைகளின் கழுத்துமணிகள், வெண்கலகும்பாக்கள், வெண்கலப் பாத்திரங்கள், சில விவசாயக்கருவிகள் எல்லாம் விற்றுத்தின்றாகி விட்டது. வடிவேலு ஒரு சினிமாவில் வீடுகளை வெள்ளையடிக்கும் காண்டிராக்ட் எடுத்திருப்பார், ஒரு பெரிய அரண்மணை போலிருக்கிற வீட்டில் பொருட்களை ஒதுங்கவைப்பார்கள். அப்போது அந்தவீட்டிலிருந்து பழங்காலத்து கடிகாரத்தை உடைத்துவிடுவார்கள். எங்க தாத்தா காலத்துல இருந்து வச்சிருந்த கடிகாரத்தை உடைச்சீட்டிங்க பாவிகளா என்பார் ராதாரவி. வடிவேலு அதுக்கு, நான் என்னமோ புதுதுன்னு நினைச்சி பயந்துட்டேன்னு சொல்வார்.
அந்தமாதிரி தான் நாமளும்.

சுமேரிய, பாபிலோனிய நாகரீகங்கள் போல இந்தியத்துணைக் கண்டத்தி்ல் இருந்த சிந்துவெளிவெளி நாகரீகமும் பாலை நிலத்தில் ஏன் தோன்றின? கங்கைச்சமவெளியிலோ அல்லது உலகின் மிகப்பெரிய ஆறுகளான அமேசன், மிஸிஸிபி போன்றவற்றின் கரையோரங்களில் ஏன் தோன்றவில்லை என்ற கேள்வியை உங்கள் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகிறேன்.

புதன், 1 பிப்ரவரி, 2012

பொன்னுத்தம்பி லப்போர்த்தெரு..

புதுச்சேரி பிரெஞ்ச் காலனியாதிக்கத்தில் இருந்த காலம் அது, 1873ம் ஆண்டு ஜனவரி16ம் தேதி தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நாளில் பொன்னுத்தம்பிபிள்ளை என்பவர் புதுச்சேரியில் சட்டம் படித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வழக்கறிராக செல்கிறார். உத்தியோகத்தின் முதல் நாள், நீதிமன்றத்தின் படிகளில் ஏறி வாசலில் நின்று கனம் நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உள்ளே நுழைகிறார். உடனே நீதிபதி ‘முசே பொன்னுத்தம்பிபிள்ளை’ இது என்ன காலில் என்கிறார். வழக்கறிஞர்களும் தாங்களும் அணிகிற சப்பாத்து (ஷூ) க்களைத்தான் தாம் அணிந்துள்ளோம் என்கிறார் பொன்னுத்தம்பி.

அது தெரிகிறது, இந்தியர்கள் சப்பாத்து அணிய அனுமதியில்லையே, பிரெஞ்சுக்காரர்கள் மட்டும் அணிய உரிமை பெற்ற சப்பாத்துக்களை இந்தியர் அணிவது அழகல்லவே“ என்கிறார் நீதிபதி.

மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே நான் நீதிமன்றத்திற்குள் ஒரு வழக்கறிஞராகவே வந்துள்ளோம் இந்தியனா ,பிரெஞ்சியனா என்கிற பகுப்பு எழவில்லையே என்றார் பொன்னுத்தம்பி.

ஏனைய இந்தியர்களைப் போல் வெறும் காலுடன் நீதிமன்றத்திற்குள் வாரும் இல்லையென்றால் வெளியேரும் என்கிறார் நீதிபதி.

வழக்கறிஞர்களின் உடைகளுடன் சப்பாத்துகளை அணிந்து நீதிமன்றத்திற்குள் பிரவேசிப்பேன் இல்லையென்றால் இந்த வழக்கறிஞர் பணியை துறப்பென் என்று பிரான்ஸ் தேசத்திலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதுகிறார். பாரீசில் பொன்னுத்தம்பிபிள்ளையின் நண்பரும் பிரெஞ்சு தேசத்து வழக்கறிஞரான முய்ல் கோதேன் இந்த வழக்கை நடத்தி வெற்றி பெறுகிறார்.

சில மாதங்களுக்குப்பின்னர் சப்பாத்து அணிந்து நீதிமன்றத்திற்கு செல்கிறார், அதற்குள் பல நீதிபதிகள் மாறிவிட்டார்கள். புதிய நீதிபதி தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்து ‘முசே பொன்னுத்தம்பிபிள்ளை’ வாரும் என்று வரவேற்று, வழக்குறைஞர் இருக்கையில் அமரவைக்கிறார். இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்கெதிரான விடுதலை வேட்கையில் ஒரு மைல்கல்லாக இருந்திருக்கிறது. ‘ல போர்த்’ என்னும் பிரெஞ்சு சொல்லுக்கு கதவு என்று பொருள். பிரெஞ்சுக்காரர்களை எப்படி காலனிஅரசு நடத்துகிறதோ அதே வழியில் இந்தியர்களை நடத்த வழிகோலியதால் பொன்னுத்தம்பிபிள்ளையை ‘ல போர்த்’ என்றழைத்தார்கள். தெருக்களின் பெயர்களை முக்கியப் பிரமுகர்களின் பெயர்சூட்டும் வழக்கத்தில் ஒரு தெருவிற்கு ‘பொன்னுத்தம்பி லப்போர்த் தெரு’ என்று பெயரிடப்பட்டது.

தகவல் - பிரபஞ்சன் அவர்கள் எழுதிய சிறுகதைகளிலும் கட்டுரைகளிளிருந்து.