சனி, 6 பிப்ரவரி, 2016

தமிழகத்தில் அடிமைமுறை-1

பேரா.ஆ.சிவப்பிரமணியன் எழுதிய ஆய்வு நூலிலிருந்து...


நூல் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை :ரூ120


முந்தைய பதிவில் மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அடிமைமுறை நிடித்திருந்தது என்பதை பார்த்தொம். சோழர்கள் காலத்தில் நிலவுடமைமுறை சங்ககாலத்தைவிட வளர்ச்சியடைந்திருந்தது. சோழர்கள் காலத்தில் கோவில்கள் என்பது வெறும் வழிபடும் இடம் மட்டுமல்ல, அதிகாரம் சார்ந்த இடமாகவும் பொருள் உற்பத்தியில் முக்கிய பங்கும் வகித்தது. பொ.வேல்சாமி அவர்கள் எழுதிய நூலில் மன்னர்கள் என்பவர்கள் இன்றைய ராணுவ ஜெனரல்கள் போல் விளங்கினார்கள், சிவில், குற்றம், பொருளாதாரம் போன்றவை கோவிலின் நிர்வாகத்துடன் சேர்ந்திருந்து என்று விளக்கியிருந்தார். கொவில் நிலத்தின்மீது பிராமணர்களும் படிப்படியாக வேளாளர்களும் அதிக்கம் செலுத்தி வந்தனர். எண்ணற்ற நிலமற்ற மக்கள் கோவிலடிமைகளாகி விவசாயஉற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். விவசாய நிலத்தை வைத்திருந்த பிராமணர்கள், வேளாளர்கள் அடிமைகளை வைத்திருக்கலாம். ஆனால் உவச்சர், நெசவாளர், நாவிதர் ஆகியோர் அடிமைகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டை இரண்டாம் ராஜராஜனின் கல்வெட்டு தெரிவிக்கிறது. குயவர், நெசவாளர் என்பவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுப்வர்கள் இவர்கள் கிராமத்தின் தேவைக்கதிகமாக உபரி உற்பத்தி செய்யவிடாமல் ஊர்சபை பார்த்துக்கொண்டது.
கிரேக்க, ரோம் நாடுகளில் உற்பத்தியில் அடிமைகளின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது, இந்தியாவில் பொருள் உற்பத்தியில் அடிமைகளின் பொருள் உற்பத்தி என்பது பிரதானமாக இல்லை, வெறும்  உடலுழைப்புக்கூலி வேலை, வீட்டுவேலை என்றளவில்தான் இருந்துள்ளது.


தேவரடியார் அடிமைமுறை.
-----------------------------------
பிற்காலச் சோழர்கள் காலத்தில் கோவில் வேலைகளுக்கென்று ‘தேவரடியார் முறை’ ஏற்படுத்தப்பட்டது நிலச்சுவானதார்கள் பெண்களை விலைக்கு வாங்கி கோவிலுக்கு வழங்கினார்கள். தேவரடியார்கள் கோவிலில் அதிகாரிகளால் தண்டிக்கப்பட்ட செய்தியும் உ.வே.சா நூலில் எழுதியுள்ளார். ஆலய வாசலின் ஒரு பக்கத்தில் பெண்ணை குனியவைத்து கழுத்தில் கயிறுமாட்டி அதை கால்விரல்களுடன் சேர்த்துக்கட்டி முதுகில் கல்லை ஏற்றி தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.கடன்காரர்களின் தொல்லைக்காட்பட்ட தாயும் மகளும் கோவிலில் தஞ்சம் புகுந்து அடிமையானார்கள், அடிமையாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அவர்கள் பாதத்தில் கோவில் சின்னம் பொறிக்கப்பட்டது.


பொட்டுக்கட்டுதல் என்பது சமயம் சார்ந்த கோவில் சடங்கு, இச்சடங்கின் வாயிலாக ஒரு சிறுமி அல்லது இளம்பெண் அக்கோயிலின் தேவரடியாராக மாறுகிறார். ‘பதியிலார்’, ‘நித்தியசுமங்கலி’ என திருநாமங்கள் சூட்டப்பட்டன. மேட்டிமையோர் தம் மேலாணமையை நிலைநாட்டவும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பின்றித் தம் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளவும் செய்யும் வழிமுறைகளில் ஒன்றுதான் சமயசடங்கு. பாலியல், சாதி, பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொதுமகளிராக மாற்றும் புனிதச்சடங்கே பொட்டுக்கட்டுதல். சமயமுத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது. தேவடிமையின் வாழ்வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோவிலால் உறுதிசெய்யப்பட்டுவிட, மேட்டிமையோரின் குறிப்பாக புரோகித, நிலவுடமையாளர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவளது பணியாகிவிடுகிறது.
கோவில் வழிபாடு, திருவிழா போன்றவற்றில் நடன்மாடுவது, பூக்கட்டுவது, கோலமிடுவது அவர்களது  அவல்வாழ்வை மறைக்கும் புனிதத்திரைகளாக மட்டுமே அமைந்தன.


தஞ்சை மராத்திய மன்னர்கள் ஏராளமான மனைவிகளுடன், வைப்பாட்டிகளுடன் வாழ்ந்த்தனர். வைப்பாட்டிகளுக்கென்று ‘கல்யாண மஹால்’ என்ற பெயரில் அரண்மனை இருந்துள்ளது.பருவம் அடைவதற்கு முன்பே சிறுமிகளை இங்கு வளர்த்துத் தம் பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்தி கொள்ளும் நோக்கில் சிறுமிகளை விலைக்கு வாங்கியுள்ளார்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே பெண்கள் மற்றும் சிறுமிகளின் விற்பனையில் ஈடுபட்டிருந்தது.


நாஞ்சில்நாட்டு நிலைமை குறித்து 1881ம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கையில் தோவாளை அருகே தாழக்குடி கிராமத்தில் மாடத்தி என்ற நிறைமாத கர்ப்பிணி, பட்டினியாலும், உடல்நலமில்லாமலும் வேலைக்குச் செல்லவில்லை. அவளின் உரிமையாளரான நிலவுடமையாளன் அவளை இழுத்துவரச்செய்து எருமை  மாட்டுக்கிணையாகக் கலப்பையில் பூட்டி, சேற்று வயலில் உழும்படி செய்திருக்கிறான், மாட்டின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் போனபோது தார்க்குச்சியால் குத்தப்பட்டு கலப்பையில் பூட்டியநிலையில் இறந்துபோனாள். எவ்வளவு கொடுமை!
இன்னொரு அறிக்கையில் , ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்குத் தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம், அதற்கு ஓர் அடிமையை உடைப்பில் உயிரோடு உள்ளே தள்ளி  மண்ணைப்போட்டு மூடியிருக்கிறார்கள்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழகத்தில் அடிமை முறை

அடிமைமுறை என்பது இன்றைக்கு இருக்கிறதா? எங்கே? எந்த இடத்தில் இருக்கிறது? இப்படி ஆராய்ந்தால் செய்திகளின் ஊடாக ‘கொத்தடிமை’கள் இத்தனைபேர் ஆந்திராவிலிருந்து கர்நாடகாவிலிருந்து மீட்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம். அவர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் செங்கல்சூலை, அரிசியாலைகள், கல்குவாரி போன்ற இடங்களிலிருந்து மீட்கப்பட்டார்கள் என்று செய்திகளின் ஊடே பார்க்கிறோம்.


கிராமங்களில் பெரிய பண்ணைவீடுகளில் மாடுமேய்க்கும் சிறுவர்களை பார்த்திருக்கிறேன், அவர்கள் அனாதையாக இருப்பார்கள் அல்லது இவ்வளவு பணத்திற்கென்று சிறுவனை அவனது பெற்றோர்கள் / உறவினர்கள் விற்றிருப்பார்கள். அந்த சிறுவர்கள் அதிகாலையிலிருந்து வேலைசெய்வார்கள், மாடுகளின் சாணியை அள்ளியெடுத்து குப்பையில் சேர்ப்பார்கள், தொழுவத்தை சுத்தம் செய்வார்கள் கூளம் போடுவார்கள், பிறகு மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டுபோவார்கள் மேய்ச்சலிலிருந்து வந்தவுடன் வேறு வேலைகள் இருந்துகொண்டேயிருக்கும். இப்படி சிறுவனாக இருந்தபோது ஆரம்பித்த வேலை இளவட்டம் ஆகும்வரை அவனுடை சொந்த ஊருக்கு ஒருமுறை கூட போகாமல் இருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன், கல்வி, பள்ளிக்கூடம் வாசனையே கிடையாது, வருடத்திற்கொருமுறை இரண் டு செட் புதுத்துணி கிடைக்கும், மீதி நேரங்களில் பண்ணையில் உடுத்திய பழய துணிகள் அவனுக்கு பாத்தியதை உண்டு. கூலி என்பதே கிடையாது மூனு நேரம் சோறு, தங்குவதற்கு தொழுவத்தில் இடம். இது அடிமை முறையில் ஒன்று தானே.


இன்றைக்கும் தமிழகத்தின் சில கிராமங்களில் சலவை செய்தல், முடிவெட்டுதல், தொழிலுக்கு வருடத்திற்கொருமுறை தானியமாக கூலி தரப்படுகிறது. என்னுடைய கிராமத்தில் 10 ஆண்டுகள் முன்புவரை இந்த நிலை இருந்தது. இந்தத் தொழில்கள் நகரமயத்தில் அதிக வருமானத்தை ஈட்டுவதால் புலம்பெயர்ந்தார்கள். ஊர் என்கிற சபை அவர்களுக்கு தங்குவதற்கான குடிசையை ஏற்பாடு செய்வார்கள், அழைத்து வரும்போது கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அவன் ஊரை விட்டு செல்லவேண்டுமென்றால் பணத்தை திருப்பித் தந்திருக்கவேண்டும். நிறைய சாதிக்கட்டுப்பாடுகளும் உண்டு, கூலி கொடுக்கப்படாத சில வேலைகளும் செய்யவேண்டும். விவசாயத்திற்கு துணையாக இருந்த கொல்லர்கள், தச்சர்கள், தோல் தொழில் செய்யும் அருந்ததியர்கள் கிராமத்திற்கென இருந்தார்கள் அவர்களை குடியானவர்கள் என்பார்கள். மாடு செத்துப்போனால் அருந்ததியர்கள் செத்த மாட்டை தூக்கிப்போவார்கள், கிராமத்தில் யாராவது இறந்துபோனால் அவர்களுடைய வெளியூர் சொந்தங்களுக்கு தகவல் சொல்வது பகடையின் வேலை. கால்நடையாக நடந்துசென்று அவர்களின் உறவினர்களிடம் தகவல் சொல்லவேண்டும், அங்கே அவர்களுக்கு ‘சன்மான’மாக தானியக் கூலி தருவார்கள். மயானத்திற்கு செய்யும் வேலைகள் எல்லாம் ‘வெட்டி வேலை’தான். கருமாதி எனப்படும் சடங்கில் நீர் சடங்கு செய்ய குளத்திற்கு போவார்கள் அதற்கு தரையில் சேலைகள் விரிப்பார்கள், அது வண்ணார்களின் ‘உரிமை’ வேலை. இப்படியெல்லாம் ஓர் அடிமை முறையின் வடிவம் நீடித்திருந்தது.
சே, இதெல்லாம் அடிமைத்தனம் இல்லை, செழுமையான கிராமிய வாழ்க்கைமுறை என்று சொல்வோர்களும் இருப்பார்கள் அந்த முறை தன்னைப் பாதித்திருக்காதவரை.
                                          ------------------------------
நூலிலிருந்து......


இன்னமும் நூலுக்குள் போகவில்லை, வரலாற்றில் அடிமைச்சமுதாயம் இருந்திருக்கிறது. அடிமை முறை இல்லையென்றால் பிரமிடுகள், சீனப்பெருஞ்சுவர், தஞ்சைப் பெரியகோவில் என்கிற அதிசியங்களை செய்திருக்கமுடியாது. எப்போது உபரி ஏற்பட்டதோ அப்போதே அடிமைமுறை வந்துவிட்டது.காட்டுமிராண்டிகள் காலத்தில் போரில் தோற்றவர்களைக் கொன்றார்கள், ‘உபரி’ மதிப்பு தோன்றிய காலத்தில் போரில் தோற்றவர்களை கொல்லாமல் அவர்களை அடிமைகளாக்கினார்கள். ஆடு, மாடு, உழைப்புக்கருவிகள் போன்றது அவர்களின் மதிப்பு. அவர்கள் கைதிகள் அவர்களுக்கு உழைப்பின் பயன்மதிப்பின்மீது எந்தப் பங்கும் கிடையாது, அவர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான அளவிற்கு மட்டும் உணவு வழங்கப்பட்டது. அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைக்கவில்லை,எஜமானனுக்கு உபரி உற்பத்தியினை அளிப்பதற்காகவே உழைத்தார்கள். கிரேக்கம், ரோம், எகிப்து பாபிலோன் போன்ற தொன்மைவாய்ந்த நாகரீக நாடுகளில் அடிமைமுறை இருந்தது.


ரோம் நாட்டில் வலிமையுடைய அடிமைகளை வைத்து போர்கருவி பயிற்சிகள் தரப்பட்டு gladiators என்றழைக்கப்பட்டனர். மன்னர்கள், நிலப்பிரபுகளின் பொழுதுபோக்கிற்காக மாபெரும் அரங்கங்கள் கட்டப்பட்டு அங்கே அடிமைகள் சண்டையிட்டார்கள். தோற்பவன் கொல்லப்படும்வரை மூர்க்கச்சண்டை நடைபெறும், சிங்கம் புலி போன்ற விலங்குகளுடன் போரிடச்செய்து அந்த அடிமை வீரர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள். ரோம் நகரத்தில் கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த வார்ரொ என்ற எழுத்தாளர் அடிமைகளை உற்பத்தி கருவிகளாகவே வகைப்படுத்தினார்.
1. பேசுகின்றவகை - அடிமைகள்
2.தெளிவற்ற ஒலிகளை எழுப்பும் வகை -மாடுகள் மற்றும் விலங்குகள்
3.பேசாவகை - வண்டிகள், ஏர், கருவிகள்
கி.மு. 1792-1750 வரை ஆண்ட ஹெமுராபி என்ற மன்னனின் சட்டத்தில் அடிமைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
                                          -----------------
தமிழகத்தில் சங்ககாலத்தில் அடிமைமுறை இருந்துள்ளது என்பதை ‘பட்டினப்பாலை’யில் ‘கொண்டிமகளிர்’ என்ற குறிப்பு உள்ளது. மதுரையில் யவனர்கள் காவலர்களாகப் பணிபுரிந்ததைக் ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள்யவனர்’ என்று சிலப்பதிகாரம், குறிப்பிடுகிறது. பண்டைய தமிழகத்தில் ஒரே காலகட்டத்தில் இனக்குழு வாழ்க்கைமுறை- குறிஞ்சி, மேய்ச்சல் நில வாழ்க்கைமுறை- முல்லை, உணவு உற்பத்தி செய்யும் நிலைத்த வாழ்க்கை-மருதம்,இதனை எதனையும் செய்ய இயலாத பாலைநிலப்பகுதியில் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்தும் சூழல் இருந்துள்ளது.
இதை அசமத்துவ வளர்ச்சி என்று கா.சிவத்தம்பி குறிப்பிடுகிறார். தமிழகத்தின் குறுகிய நிலப்பகுதியே பொருள் உற்பத்தி செய்யும் நிலையிலிருந்தது அதாவது மருதநிலத்தில் உணவு உற்பத்தி.இதன் காரணமாக அதிக எண்ணிக்கையில் அடிமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு சங்ககாலத்தில் ஏற்பட வழியில்லாமல் போனது.
                          
பல்லவர்கள் ஆட்சிகாலம் , சோழர்களின் ஆட்சிகாலம், விஜயநகரப்பேரரசு காலம், தஞ்சை மராத்தியர் ஆண்டகாலம், என வரிசையாக எல்லா ஆட்சிகளிலும்  அடிமைமுறை நிலவில் இருந்தது.
  • ‘ஆள்’ என்ற சொல் அடிமையைக்குறிப்பதாக 9ம் நூற்றாண்டு திவாகர நிகண்டு கூறுகிறது.
  • பிற்கால்ச்சோழர் ஆட்சியில் கொலிலடிமை மீது திரிசூலச்சின்னம் பதிப்பது வழக்கத்திலிருந்தது.
  • சோழமன்னர்கள் நிகழ்த்திய போரில் தோற்ற மன்னர்களின் மனைவியர்கள் அடிமைகளாக பிடித்துவரப்பட்டனர்.
  • திருமண மான பெண்ணுடன் ‘வெள்ளாட்டியை’ சீதனமாக அனுப்பும் பழக்கம் சோழர் காலத்தில் இருந்துள்ளது.
  • கோவில்களில் மட அடிமைகள் என்ப்பொர்கள் இருந்தார்கள், இவர்களை தானமாக கொடுத்துள்ளார்கள்.
  • பஞ்சத்தின் காரணமாக தன்னையும் தன் பெண்மக்களையும் கோவில் மடத்திற்கு விற்றுக்கொண்டடார்கள்.
  • ஆண் அடிமைகள் வேளாண்மையிலும் ஆநிரை மேய்ச்சலிலும் ஈடுபட்டார்கள், உவச்சர்கள் பறை கொட்டும் பணியினைச் செய்தார்கள்.
  • 13ம் நூற்றாண்டில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த இபின் பதுதா அடிமை வாணிபம் இருந்துஅள்ளதாக குறிப்புகளில் எழுதியுள்ளார்.
  • 1659-1682 சொக்கநாதர் ஆட்சிகாலத்தில் பஞ்சமும் யுத்தமும் மக்க்ளை கடுமையாக பாதித்தன, உயிருள்ள எலும்பும் தோலுமாக மக்கள் நடமாடினார்கள். அப்போது டச்சுக்காரர்கள் அவர்களுக்கு உணவளித்தார்கள், போதிய அளவு பலம் பெற்றவுடன் அவர்களை கப்பல்களில் ஏஏரிச்சென்று அயல்நாடுகளில் அடிமைகளாக விற்றார்கள்.
  • கோவிலுக்கு நிலம் வழங்கு போது நிலத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக சேர்த்து தான்மாக வழங்கப்பட்டதை 17,18ம் நூற்ற்ஆண்டு செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இன்னும் அடிமைமுறை ஆங்கிலேய ஆட்சியிலும் நாடு விடுதலை பெற்ற நீடித்த வரலாற்றை அடுத்த தனிதனிப்பதிவுகளாக எழுதுகிறேன்.


       



கிட்டிபோடுதல்


தமிழகத்தில் அடிமை முறை என்ற நூலில் ‘அட்டைப்பட’ ஓவியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சைமாவட்ட பொன்விழா மாநாட்டில் வைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகும் கூட ‘பண்ணையாள்’ என்கிற அடிமைமுறை நீடித்தது. அப்போது அவர்களின் வேலைநேரம் என்ற அதிகாலை கோழி கூவியவுடன் தொடங்கும், வேலைமுடியும் நேரம் இரவு கொசு கடிக்கத்துவங்கும் நேரம். உடம்பு சரியில்லையென்று ஒரு நாள் வேலைக்கு வரவில்லையென்றால் பண்னையாளை கூப்பிட்டு சாட்டையால் அடிப்பார்கள் ரத்தம் தெரிக்கும்வரை, மாட்டுச்சாணத்தை கரைத்துவைத்து வடிகட்டி சாணிப்பாலை வாயில் ஊற்றி தண்டித்தார்கள், அதற்கெதிராக செங்கொடி இயக்கம் போராடியது வரலாறு. 
பெண்களுக்கும் தண்டனை கொடுத்தார்கள், அந்த தாயின் மார்பகத்தை கிட்டியால் முறுக்கி கசக்கிப்பிழிந்து ரத்தம் சொட்ட அலறித்துடிக்கச்செய்யும் அலங்கோலத்தை கண்டு மிராசுதார்கள் ரசித்தார்கள். கூலி வேலை செய்யும் பெண்கள் சேலையை முழங்காலுக்கீழே வரக்கூடாது , அப்படி வேலைசெய்யும் நேரத்தில் இழுத்து செருகப்பட்ட சேலை முழங்காலுக்குக் கீழே வந்துவிட்டால் ‘காருவாரியை ‘ விட்டு அடிக்கச்சொல்வார்கள். முழங்காலுக்கு கீழே கணுக்கால் வரை சேலை கட்டுவதற்கும் போராடியிருக்கிறார்கள் மணலி. கந்தசாமி என்ற தோழரின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த தண்டனைக்களுக்கு ஆளானவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.