வெள்ளி, 29 அக்டோபர், 2010

Manual Scavenging Must Stop Now


இருதினங்களுக்கு முன்பு செய்தித்தாளில் வந்த கட்டுரை “manual scavenging” ஒழிக்கப்படவேண்டும் என்று, மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலம் நாகரீக சமூகத்தில் நிலவக்கூடாது, இச்செயல் இப்போதும் நடைபெற்றால் நாம் நாகரீகமானவர்கள் இல்லை, ஏனென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை சுட்ட செங்கற்களாலும், வீட்டினுள் குளியறை மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நாம் பாடபுத்தகத்தில் படித்தோம். அறிவியலைப் பற்றி அறியாத ஒரு சமூகம் வாழ்ந்த காலத்தில் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் திராவிடர்களா? ஆரியர்களா? என்று செல்லத்தேவையில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் இன்றளவும் மனிதக்கழிவுகளை அறவே ஒழிப்பது பற்றி விவாதங்கள் நடைபெறுவது கேலிக்கூத்து. இதை ஒழிப்பதற்கு 1993ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது, ஆனால் 1997ம் ஆண்டுவரை இந்திய அரசிதழில் வெளிடப்படவில்லை, பொதுமக்களுக்கும் 2000ம் ஆண்டு தான் தெரியவந்தது. சமூகத்தின் பெரும்பான்மையான் மக்களும் இந்த அவலத்தை கண்டுகொள்ளவில்லை ஏனென்றால் இத்தொழிலை செய்வது தலித் களிலும் தலிகளான அருந்ததியினர் என்பதாலோ? எப்படி இந்த தொழில் ஒரு சாதி மக்களின் வாழ்க்கையானது? இந்த சாதிக்கு இந்த தொழில் என்று உலகின் வேறு எந்த பகுதியிலாவது இருக்கிறதா? நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அருந்ததியர் என்பவர்கள் யார் என்று வினா எழுப்பும் போது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை, அவர்கள் தமிழகத்தில் சக்கிலியர் என்றும் மாதீகா என்றும் விளிக்கப்படுகின்றனர். ஜாதியின் பெயரால் இந்தியாவில் தலித்துகள் மீது இன்று நடக்கும் கொடூரங்கள் குறித்து நாம் பெருமை கொள்ள இயலுமா?

சுத்தம், சுகாதாரம், தூய்மை, மாசுபாடு, தலைவிதி குறித்த பார்ப்பனிய விழுமியங்களின் அடிப்படையில்தான் இன்று நடைமுறையில் உள்ள இழிவான ஜாதியப் படிநிலை உருவானது. அந்தப் படிநிலையின் கீழ்த் தளத்தில் தலித்துகள் மொத்த ஜாதிய கட்டுமானத்தின் சுமையைத் தாங்குபவர்களாக வடிவமைக்கப் பெற்றது. தெருக்களைச் சுத்தம் செய்வது, குப்பைகளைப் பெறுக்குவது, தோல் பயன்பாட்டுடைய தொழில், மனித-மிருக சடலங்களை அப்புறப்படுத்துவது/ எரியூட்டுவது, பன்றிகள் வளர்ப்பது/ மேய்ப்பது, மனித மலத்தை அள்ளுவது /அப்புறப்படுத்துவது என இந்தப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாகப் பட்டியலிடப்பட்டது. 2000 ஆண்டுகளாக அது தொடர்ந்து நடைமுறையிலும் கச்சிதமாக இருந்தும் வருகிறது. பார்ப்னியர்கள் மட்டுமின்றி இந்தக் கட்டுமானத் திட்டத்தை அப்படியே இடைநிலை ஜாதிகளும் அப்படியே சுவிகரித்துக் கொண்டனர்.

நம் தேசத்தின் தலை நகரத்தில் பீ அள்ளுபவர்கள் பெரும்பகுதி தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களே. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

மனிதக்கழிவுகளை மனிதன் சுமக்கும் சட்டம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை, அதற்கு சபாயி கர்மசாரி ஆந்தொலன் நடத்திய போராட்டம் தான் இந்த சட்டம் இயற்றுவதற்கு முக்கிய காரணி, அதை அமல்படுத்டுவதற்கும் அந்த அமைப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. 1996ம் ஆண்டு விஜயவாடாவில் இந்த அமைப்பு தொடக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர்களில் பெசவாடா வில்சன் என்பவர். இவர் கர்நாடக மாநிலத்தில் மாதீகா குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோலார் தங்கவயலில் வசிக்கும் தொழிலாளர் குடியிருப்பில் உள்ள திறந்தவெளி உலர் கழிப்பிடங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள். ஆந்திராவின் குப்பத்தில் தொடக்கக் கல்வி, பெங்களூரில் முதுகலைப் பட்டம் மற்றும் இறையியல் இளநிலை பட்டப்படிப்பும் அதன் பின்னர் சமூகப்பணியென அவரது பயணம் தொடங்கியது. பின்னர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயத் துவங்கினார், அவர்களில் பெரும் பகுதி குடிகாரர்களாக இருந்தனர். அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று சூழ்நிலையை விழுங்க முற்பட்டார் வில்சன். அந்த வீச்சம், நாற்றம்தான் அவர்களைக் குடியின் பால் இட்டுச் சென்றது. நாள்தோறும் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பெரிய தொட்டிகளில் கொட்டி, பின்னர் அதை வேறு ஒரு இடத்திற்குச் சென்று அப்புறப்படுத்த வேண்டும். மல வாளியைத் தூக்கி ட்ராக்டரில் ஏற்ற வேண்டும். இந்த வேலையைச் செய்யும் பொழுது அவர்களின் உடலில் மலம் வடிந்துவிடுவதைப் பார்த்த வில்சன் கதறக்கதற வெடித்து அழுதார்.

“எனக்கு இரண்டு வழிகள் இருந்தன: ஒன்று, நான் சாக வேண்டும் அல்லது இந்தக் கொடிய வழக்கத்தை நிறுத்த நான் ஏதாவது செய்தாக வேண்டும். முதலில் சொன்னது எளிதானது. இரண்டாவது கடினமானது. நான் செத்துப் போவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.” 1982 முதல் இயங்கத்துவங்கிய வில்சன் 1996ல் தீவிரமான மனித உரிமை ஆர்வலர்களான தனது நண்பர்களுடன் இணைந்து அமைப்பைத் தொடங்கினார். சமீபத்தில் அவுட்லுக் இதழ் 25 நபர்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியாவில் எக்காலத்திலும் அதிகாரத்திற்குச் செல்ல முடியாத வர்களின் பட்டியல். மகத்தான போராளிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அதிகாரத்திற்கு எதிரான அறிவுஜீவிகள், சமூகங்சார் களப்பனியாளர்கள் என நிண்டு சென்றது. அதில் பெசவாடா வில்சன் இடம் பெற்றிருந்தார். இது அவரது பணிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

சபாயி கர்மச்சாரிகளின் தேசிய ஆணையம் தனது விரிவான ஆய்வை மேற்கொண்டது. ராணுவம், பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள் எனப் பல துறைகளில் இன்றும் இழிவான நடைமுறைகள் உள்ளதை அது சுட்டிக்காட்டியது. ராணுவத்தின் பல முகாம்களில் இன்றளவும் கையால் மலம் அள்ளும் வழக்கம் உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறைதான் அதிகப்படியான ஆட்களை இத்தகைய பணியில் ஈடுபடுத்தி வருகிறது. 2010 க்குள் உலர் கழிப்பிடங்களை இல்லாமல் ஆக்க வேண்டும், கையால் மலம் அள்ளும் நடைமுறை ஒழிய வேண்டும் என்கிற வில்சனின் கனவை நடை முறைப்படுத்தும் பணிகள் தொடர்கிறது.

நன்றி- கீற்று..
அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் கீற்றுவில் எழுதிய “மலத்தில் தோய்ந்த மானுடம்” கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.
பிரண்ட்லைன் இதழின் கவர்ஸ்டோரி. http://www.frontlineonnet.com/fl2318/stories/20060922005900400.htm

திங்கள், 25 அக்டோபர், 2010

உலக அரங்கில் இந்தியா

ஐ நா சபையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, 2015ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கவேண்டும், சிசுமரணம், கல்லாமை, எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோயை ஒழிப்பது, அனைவருக்கும் உணவுபாதுகாப்பு அளிப்பது, அடிப்படை கல்வியை உரிமையாக்குவது என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் சுதந்திரதின உரையில் வாசிப்பது போன்று தான் இருக்கிறது, ஏனென்றால் இந்த வாசிக்கவேண்டிய உரையை 1947 லிருந்து இன்னமும் மாற்றவில்லை, பிரதமர்கள், கட்சிகள் மாறியிருக்கலாம், ஆனால் வறுமையை ஒழிப்பது நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறவில்லை மாறாக பட்டினி பட்டாளங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. உண்மையிலேயே இந்தியாவிடம் வளமையில்லையா? இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாகாந்தி “Inclusive Growth” பற்றி பேசுகிறார், அவரின் வாரிசான ராகுல்காந்தி இந்தியாவிற்குள்ளே இரண்டு இந்தியாக்கள் அதாவது ஒளிரும் இந்தியா, வறுமை இந்தியா இருக்கிறது என ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதை மாற்றுவதற்கான எண்ணமோ, திண்ணமோ நிச்சயமாக இவர்களிடம் இல்லை.

மக்களின் சார்பாக பேசுகிற காங்கிரஸ் கட்சியில் உள்ள மணிசங்கர் ஐயர் தான் அரசின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்கிறார், பணக்காரகளுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவத்திற்குப் பதிலாக ‘பங்குச்சந்தையை’ அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவம் இங்கே ஆட்சி செய்கிறது என்றார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் 70,000 கோடி ரூபாய் செலவு செய்து காமன்வெல்த் விளையாட்டை நடத்துவது தேவையற்றது என்றார். இந்தியா –ஈரான் எரிவாயு குழாய் மூலம் நீண்டகால எரிசக்திக்கு தேவையான பாதையை வகுத்த மணிசங்கர் ஐயரின் பெட்ரோலிய அமைச்சர் பதவி யாரால் பறிக்கப்பட்டது என தெரியவில்லை.

உலக அரங்கில் 50 பில்லிணியர்களில் இந்தியர்கள் 6 பேர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஆசியாவிலேயே முதல் பணக்காரர் என்ற பெருமையை இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை தேடித்தந்திருக்கிறது. நாட்டின் இயற்கை எரிவாயு வளங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தருவதன் மூலம் நாட்டின் எரிசக்தி செலவை குறைப்பதற்கு மாறாக கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் படுகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்துள்ளது, மற்றொரு புறம் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் மூடப்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களை மீண்டும் சந்தைக்கு வர பெட்ரோலிய பொருட்களின் விலைகளை ‘derugulate’ செய்து அம்பானிகளின் சொத்து மதிப்பை கூட்டுவதோடு மக்களின் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையை மறைமுகமாக ஏறுவதற்கு உதவிசெய்கிறது.

இந்திய பில்லிணியர்கள் உலக அரங்கில்………….. முதல் 50 இடத்தில்

முகேஷ் அம்பானி - $ 29 பில்லியண் – 4 வது இடம்
லஷ்மி மிட்டல் - $ 28.7 பில்லியண் – 5 வது இடம்
அஸிம் பிரேம்ஜி - $ 17 பில்லியண் 28 வது இடம்
அனில் அம்பானி - $ 13.7 பில்லியண் 36 வது இடம்
எஸ்ஸார் குழுமம் - $ 13 பில்லியண் 40 வது இடம்
ஜிண்டால் குழுமம் - $ 12.2 பில்லியண் 44 வது இடம்

பில்லிணியர்கள் எத்தனை பேர் …….அமெரிக்கா - 329 ,
சீனா - 79
இந்தியா - 58 மூன்றாவது இடம்
ஜெர்மனி - 54
ரஷ்யா - 32
இங்கிலாந்து - 25
ஜப்பான் - 17 (நமக்குப் பின்னாடி தான்)

ஆசியப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில்…

ASIA’S RICHEST GNP

சீனா - $ 7.7 பில்லியண்
ஜப்பான் - $ 3.8 பில்லியண்
இந்தியா - $ 3.4 பில்லியண்
ரஷ்யா - $ 1.4 பில்லியண்
கொரியா - $1.0 பில்லியண்

உலகப்பொருளாதாரத்தில் இந்தியா 4வது இடத்தில்……….
Richest GDP 2006

அமெரிக்கா - $ 13 டிரில்லியண்
சீனா - $ 10 டிரில்லியண்
ஜப்பான் - $ 4.17 டிரில்லியண்
இந்தியா - $ 4.16 டிரில்லியண்
ஜெர்மனி - $ 2.6 டிரில்லியண்

2050ம் ஆண்டில் இந்தியா உலக அரங்கில் சீனா, அமெரிக்கா வை அடுத்து மூன்றாவது இடத்திற்கு வரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இந்தியாவின் வளர்ச்சி என்பதே பெருமுதலாளிகளின் வளர்ச்சி என்று வாசிக்கவேண்டும், இந்தியா மக்களின் நலன்களில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

Hunger Index ல் நாம் 23.9 புள்ளிகளில் அதாவது மோசமான பசியால் அதிகம் வாடும் மக்கள் கொண்ட 30 நாடுகளில் இந்தியாவும் ஒன்று Hunger Index ‘0’ என்பது No Hunger, 20 புள்ளிகள் முதல் 29.9 வரை ‘alaraming’ என்ற நிலையில் உள்ளோம்,

நம்மோடு இதில் போட்டி போடும் நாடுகள் …..

எத்தியோப்பியா 30.8, நேபாளம் 20, சூடான் 20.9, தான்சானியா 20.9, ருவாண்டா 23, கம்போடியா 20.9, உகாண்டா 14.8, இலங்கை 13.7, சீனா 5.7, கியூபா <5 (நாம் யாருடன் போட்டி போடுகிறோம்).

Poverty- இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மக்கள் 37 சதவீதம், கிராமப்புறங்களில் 22% பேரும் நகர்ப்புறங்களில் 15% பேரும் இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு $1.25 சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் 41.6%, ஐநா வின் வறுமை பட்டியலில் நாம் 88வது இடத்தில் இருக்கிறோம்(out of 134).

மக்களின் மருத்துவ வசதிகளைப் பார்ப்போம்…………

இந்தியாவில் மலேரியா காய்ச்சலால் வருடத்திற்கு 1,25,000 பேர் இறப்பதாக The Lancet என்ற மருத்துவ இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது, ஐநா வின் திட்டப்படி உலகம் முழுவதிலும் 1,00,000 பேர் இறக்கின்றனர் என்ற கூற்றை விட இந்தியாவில் அதிகமாக இறக்கிறார்கள். இந்த நோயால் மரணிப்பதை தடுக்கமுடியதா?

காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வளரும் நாடுகளில் உள்ள விகிதத்தை விட இந்தியாவில் அதிகம் இந்தியாவில் ஒரு இலட்சம் பேருக்கு 23 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் / மரணிக்கின்றனர். அதே நிலைமை மற்ற ஏழை நாடுகளில் ..
இலங்கை யில் 10 பேரும், நேபாளத்தில 22 பேரும், சீனாவில் 12 பேரும், கென்யாவில் 19 பேரும், கினியா-பிசோவில் 25 பேரும், உகாண்டாவில் 27 பேரும், பாகிஸ்தானில் 39 பேரும் இறக்கின்றனர்.

குழந்தைகள் பிறந்தவுடன் சரியான மருத்துவ வசதி, சத்தான உணவு கிடைக்காமல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தியாவில் மரணமடைவது அதிகமாக உள்ளது. (மரணவிகிதம் /1000 குழந்தைகள் பிறக்கும்போது)

இந்தியாவில் 69, பங்களாதேஷில் 54, நேபாளத்தில் 51, எரித்ரியாவில் 51, கானா வில் 76, பாகிஸ்தானில் 89, சூடானில் 200, இலங்கை 17, சீனாவில் 21 குழந்தைகளும் இறக்கின்றனர்.

அதே போல் ஐந்து வயதிட்குட்ட குழந்தைகள் எடை குறைவாக இந்தியாவில் 43.5%..

பங்களாதேஷில் 41.3%, நேபாளத்தில் 38%, எத்தியோப்பியாவில் 34.6%, சூடானில் 31.7%, சோமாலியாவில் 32.8, நைஜீரியாவில் 37.9% இலங்கையில் 21.1%, வடகொரியாவில் -20.6%, சீனாவில் 6.8%, ருவாண்டா 18% , கியூபாவில் 3.9% குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் வளர்ந்த நாடுகளோடு போட்டியிடும் நாம் மக்கள் நலனில் உள்நாட்டுக் கலவரங்களாலும், பஞ்சத்தாலும் அவதிப்படும் நாடுகளைவிட கீழேயுள்ளோம்.

இந்தியாவில் கழிவறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட செல்போனை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஐ நா கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் 100 சதவீத மக்கள் சுகாதரமான கழிவறையை உபயோகப்படுத்தும் போது இந்தியாவில் 31சதவீத மக்களே சுகாதரமானக் கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளில்…………….

அமெரிக்காவில் 100%, இலங்கையில் 91%, சீனாவில் 55%, பங்களாதேஷில் 53%, பிரேசிலில் 80%, உகாண்டாவில் 48%, ருவாண்டாவில் 54%, நேபாளத்தில் 31% பேரும் சுகாதாரமான கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை 10,000 மக்களுக்கு 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். பிற நாடுகளில்…………………….

அமெரிக்காவில் 27 மருத்துவர்களும், கியூபாவில் 64 மருத்துவர்களும், எகிப்தில் 25 மருத்துவர்களும், சீனாவில் 14 மருத்துவர்களும், பாகிஸ்தானில் 8 மருத்துவர்களும், ஜமைக்காவில் 9 மருத்துவர்களும், ரஷ்யாவில் 43 மருத்துவர்களும் உள்ளனர்.

இந்தியா மருத்துவம் மற்றும் சுகாதார நலன்களுக்கு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) 4.1% மட்டுமே ஒதுக்குகிறது. மற்ற நாடுகள் சுகாதரத்துறைக்கு ஒதுக்கும் GDP யின் அளவைக் காண்போம்.
அமெரிக்கா 15.7% கியூபா 10.4%, சீனா 4.3%, கனடா 10.1%, பிரேசில் 8.4%, கானா 8.3%, நேபாளம் 5.1%, உகாண்டா 6.3%,பாகிஸ்தான் 2.7%,ரஷ்யா 5.4% அளவிற்கு ஒதுக்குகிறது.

இந்தியா விண்வெளியிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறியுள்ளது, ஆனால் ‘ஆம் ஆத்மி’ யைப் பற்றிய அக்கறை ஆள்வோருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த தகவல்கள் யாவும் ஐ நாவின் ஆய்வறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.

புதன், 20 அக்டோபர், 2010

ஸ்டெர்லைட் ஆலை ஏன் மூடப்படவில்லை?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென்று 1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 14 ஆண்டுகள் கழித்து தாமிர உருக்காலையை மூடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழ்ங்கியது. ஸ்டெர்லைட் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அந்த தீர்ப்பை வரவேற்றார்கள், ஆனால் இரு வாரத்திற்குள் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வழங்கிவிட்டது (எல்லாம் எதிர்பார்த்தது தான்). சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மஹாராஷ்ட்ரா அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு வாரியணைத்து தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் ஆலையமைக்க நிலம் கொடுத்தது. எந்த ஆட்சியானலும் தமிழகம் தொழிற்துறையினருக்கு மிகவும் சாதகமாகவே, அந்த தொழிற்சாலையால் மக்களுக்கு எவ்வளவு பாதகம் இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு கவலை இருந்ததில்லை.







இந்த ஆலை அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் “தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய” த்தின் அறிக்கை தான் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பதினான்கு ஆண்டுகால தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அருகிலுள்ள மீளவிட்டான்,தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அடிகுழாய்களில் குடிநீர் பிடித்தால் மஞ்சள் நிறமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் ஜிப்சம் கழிவு அருகிலுள்ள ஓடையில் கலந்துள்ளதால் செப்டம்பர் 30 தேதியன்று 7 ஆடுகள் நீரைக்குடித்ததால் இறந்துள்ளன. அருகிலுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறால் பாதிக்கப்படுகின்றனர், குழந்தைகள் மூட்டுவழியாலும் பல் வலியாலும் அவதிப்படுகின்றனர். பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் copper,chrome, lead, cadmium மற்றும் arsenic போன்ற நச்சுகள் உள்ளதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும் chloride மற்றும் fluride ன் அளவு சராசரியாக குடிநீரில் உள்ளதைவிட அதிகமாக இருந்துள்ளது.

சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலைசெய்கின்றனர். ஸ்டெர்லைட் தொடங்கப்பட்ட 1996ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை 13 பேர் விபத்தில் இறந்துள்ளனர்,139 பேர் காயமடைந்துள்ளனர். 1997ம் ஆண்டு நடந்த கொதிகலன் வெடிப்பால் இரு ஊழியர்கள் கோரமாக உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 26ம் நாள் ஆஸிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் போது ஒருவர் மரணமடைந்தார். தொழிற்சாலைகளில் செயல்படுத்தும் பாதுகாப்புவிதிகளை மீறுவதினாலேயே இந்த விபத்துகள் ஏற்படுகின்றன.

தூத்துக்குடியின் கடலில் பவளபாறைகள் உலகில் ஐந்து பவளப்பாறை படிவங்களில் ஒன்றாகும், கந்தக அமிலம் கலந்த வாயுக்கள் 25 கிலோமீட்டர் வரை பவளப்பாறைகளைப் பாதிக்கிறது, ஆனால் பவளப்பாறை தீவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை 15 கிமீ தூரமே உள்ளது. எல்லா விதிகளையும் மீறி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதி குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்.

1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் NEERI என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஸ்டெர்லைட் குறித்த அறிக்கை கேட்டுள்ளது, NEERI அளித்த அறிக்கையில் நிறுவனம் தொடங்க தவறான வகையில் அனுமதி,அளவுக்கதிகமான உற்பத்தி, ஆபத்தான கழிவுகள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது, நிலத்தடிநீர் மாசுபாடு, தேவையான கிரீன்பெல்ட் ற்கு மரங்களை வளர்க்கவில்லை என அறிக்கையளித்ததால் 1998 நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, அதன் பின்னர் இரண்டு மாதங்கள் ஆலையை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தபோது மீண்டும் NEERI யிடம் மற்றொரு அறிக்கை கேட்டது. ஆனால் அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சாதகமாக அவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காதவண்ணம் ஆலையை மறுசீரமதைத்தாக அறிக்கையளித்தது.

அரசின் நிரவாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம் என அனைத்தும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்படுகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக பன்னாட்டு நிறுவங்கள் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் இந்தியாவை மட்டுமல்ல இந்தப் புவியையே நாசம் செய்து வருகிறார்கள். வேதாந்த நிறுவனம் ஒரிஸ்ஸாவில் ஃபாக்சைட் சுரங்கம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளதோடு அந்த நிறுவனம் அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகழிவுகளை வெளியேறியதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசின் சட்டமன்றம்,நிர்வாகம் எங்கும் லஞ்சப்பணத்தின் சீர்கேட்டால் மக்கள் நீதிமன்றங்களிடம் செல்கின்றனர். நீதிமன்றத்தீர்ப்புகளும் முன்னே குறிப்பிட்ட அமைப்புகளிடமிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல என்பதை சமீபத்திய தீர்ப்புகள் விளக்குகின்றன. மனிதசமுதாயம் நாகரீகமடைந்து “வலுத்தவன் வாழ்வான்” என்ற கோட்பாடிலிருந்து மாறி எளியோரை வலியோரின் அடக்குமுறைகளிடமிருந்து காக்கவே அரசு செயல்படுவதாக தோற்றமளிக்கிறது. எளியோர் பாதிக்கப்படும்போது அதற்காக நீதிமன்றத்தை சாதாரணமக்களும் நாடலாம் என உரிமையளிக்கிறது, ஆனால் நீதிமன்றங்கள் கோபம் கொண்ட மக்கள் வன்முறையை நாடாமல் செய்வதற்குள்ள “relief device" ஆகத்தான் உள்ளது.மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் கருத்தில் கொண்டு வெகுவிரைவிலேயெ உச்சநீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கட்டும், தாமதமான நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதையும் கவனத்தில் கொள்ளட்டும்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நள்ளிரவில் சுதந்திரம்

"நள்ளிரவில் பெற்றோம்
இன்னும் விடியவேயில்லை”


என்ற மொழிபெயர்ப்பாளர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்நாவல் டொமினி லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ் ஆகிய எழுத்தாள இரட்டையர்களால் எழுதப்பட்ட “Freedom at Midnight" என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாகும். 600 பக்கங்களைக் கொண்ட மூலநூலை தமிழ் வாசகர்களுக்காக சிரத்தையுடன் “நடை” மாறாமல் வி.என்.ராகவன் மற்றும் மயிலை பாலு என்ற இரு பத்திரிக்கையாளர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சார்ந்த இனக்குழு / சாதி மற்றும் ஒவ்வொரு தேசத்திற்கும் வரலாறு இருக்கிறது, “ஒரு வரலாற்று ஆசிரியரின் பணி கடந்த காலத்தை நேசிப்பதோ வெறுப்பதோ அல்ல; கடந்த காலத்தை புரிந்து கொள்வதே”. இந்த வகையில் வரலாற்றை எழுதுவது என்பது மிகவும் சிரமமானதாகும். இந்தியாவில் கடந்தகால வரலாற்றையும் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக திருத்தியிருக்கிறார்கள். சிந்துவெளி நாகரீகத்தை ஆரிய நாகரீகமாக மாற்ற காளையை குதிரையாக மாற்றிய பெருமை மத்தியில் ஆட்சி நடத்திய பாஜக வுக்கு உண்டு. இந்த நூல் வரலாற்று வரிசையில் உள்ள நூலேயாகும், தொடங்கும் காலம் 1947 புத்தாண்டு தினம், காந்தியின் கொலை “இரண்டாவது சிலுவையேற்றம்” நடந்த ஜனவரி30 1948 ல் நிறைவடைகிறது.


மெளண்ட்பேட்டன் பிரபுவை மையமாக வைத்து எழுத்தப்பட்டது போல் தோன்றினாலும் காந்தி,நேரு,ஜின்னா மற்றும் படேல் என ஒவ்வொருவரைப் பற்றியும் நிறைய தகவல்கள் உள்ளன. காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகவும் அவரது போராட்ட வடிவமான ‘அகிம்சை’ தத்துவத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.இந்த நூலின் முதல்பதிப்பு 1975ல் வெளிவந்தவுடனேயே உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்திருக்கிறது, ஆனால் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது அதற்குக் காரணம் ஜின்னாவின் வாழ்க்கைமுறையை பற்றி எழுதியது தான், அவர் முஸ்லீமாக இருந்தாலும் மேற்கத்திய கலாச்சார வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார், காலை உணவில் மதுவோடு இஸ்லாமியர்கள் வெறுக்கும் பன்றி இறைச்சியை சாப்பிட்டார் என்பதற்காகத்தான்.

நள்ளிரவில் சுதந்திரம்’ பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இறுதிக் கட்டங்களில் வளர்ந்த ப்ரிவினை வாதமும், அதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் இலட்சணக்கான மக்கள் மனிதநேயத்தை மாய்த்து ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டார்கள், போன்ற சம்பவங்களை காட்சிப்படுத்துகிறது, இந்தக்கொடூரமான வரலாறு மீண்டும் வேண்டாம், மத நல்லிணக்கமே தேவை என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்தியப்பிரிவினையால் புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை, இரண்டாம் உலகப்போரில் தோற்ற நாடுகளில் அகதிகளின் இடப்பெயர்வோடு ஒப்பிடலாம். இந்தியப்பிரிவினை ரணத்தை உணர்ந்து கொள்ள உதவுகிறது. மதக்கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட லாகூர், அமிர்தசர்ஸ், பஞ்சாப் முழுவதிலும் ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாத மதமோதல்களை காந்திஜி கல்கத்தாவில் தனிநபராக அமைதியை விதைத்தார். இது போன்ற காந்திஜியின் மதநல்லிணக்க கொளகை மட்டுமில்லாது பிரிவினையின் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய 55கோடி ரூபாயை உடனடியாக இந்தியா வழங்கவேண்டுமென்று உண்ணாநோன்பிருந்தார். காந்திஜி கொண்ட இந்தக்கொள்கைகளை வெறுத்த மதவெறிபிடித்த கோட்சே தேசப்பிதாவை கொன்றான்.

இன்றளவும் நேருவுக்கும் எட்வினாவிற்கும் இருந்த அந்தரங்கத்தை அலசுவோருக்கு நேருவின் சகோதரி பதிலளிக்கிறார். இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டதன் காரணமாக அதனுடைய பொருளதாரம் அதலபாதளத்திற்கு சென்றுவிட்டது, அப்போது நடைபெற்ற இங்கிலாந்துத் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியா போன்ற காலனி நாடுகளை விடுதலை செய்வோம் என்ற பிரச்சாரத்தினால் அட்லி பிரதமாகத் தேர்ந்தெடுக்கபட்டார். அவர் பதவியேற்ற சமயத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியப்பிரிவினை வாதமும் மதக்கலவரங்களும் கட்டுப்படுத்தமுடியாத அளவில் இருந்திருக்கிறது, இந்த காரணத்தினால் மெளண்ட்பேட்டன் பிரபு அதிகாரமாற்றத்தை(அதாவது கைகழுவ)சீக்கிரம் முயன்றிருக்கிறார்.

இந்தியாவிற்கு நள்ளிரவில் ஏஅன் சுதந்திரம் வழங்கப்பட்டது என்று யோசிக்கும் போதும் பலரிடம் விடை கேட்டபோதும் விடை கிடைக்கவில்லை, இந்த நூலில் உள்ளது. அந்த பாழாய்ப்போன நாளும் கிழமையும் தான், இந்தியமன்னர்களை பற்றி இதுவரை கொண்ட கருத்துக்கள் எல்லாம் தலைகீழாக மாற்றியது இந்நூல் என்றால் மிகையாகாது. இந்திய மக்கள் வறுமையில் வாடியிருக்க சமஸ்தான மன்னர்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். பாட்டியாலா மன்னரின் ஆடம்பரம் நம்மை கோபம் கொள்ளச்செய்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்திருக்கின்றன, ஒவ்வொரு மன்னரையும் இந்திய யூனியனில் சேர்க்க கெஞ்சல், மிரட்டல், விண்ணப்பம் என பல வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். இன்றும் எரிந்து கொண்டிருக்கின்ற காஷ்மீர் பிரச்சனையை இந்நூல் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
600 பக்கங்கள் கொண்ட இந்நூலை வாசிக்க ஆரம்பிக்கும் போது மலைப்பாக இருந்தாலும் அதன் நடையின் சிறப்பால் நம்மை தொடர்ந்து வாசிக்க உத்வேகமளிக்கிறது. நீங்களும் வாசியுங்கள், இந்த நூலை தமிழில் படைத்த திரு.வி.என்.ராகவன் மற்றும் திரு.மயிலை பாலு அவர்களுக்கும் நூலை வெளியிட்ட ‘அலைகள் வெளீயீட்டக’ திற்கும் வாழ்த்துக்கள்.