புதன், 31 ஆகஸ்ட், 2011

பிழைப்பு என்பது `பிழையாக` வாழ்வது

நீண்ட நாட்களாக மனதில் ஓடியவற்றை எழுதமுடியாமலேயெ போய்விட்டது. ‘அடர்கருப்பு ’ வலைப்பூவில் வந்த வரிகள் ‘லஞ்சம் கொடுத்தவரும் லஞ்சம் வாங்குவபருமாகக் கலந்து கிடக்கிறது தேசம்’ எவ்வளவு யதார்த்தமான உண்மை. மத்தியதர மக்கள் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தியடைந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் 24 மணிநேர செய்தி ஊடகங்கள் காட்டும் பரபரப்பிற்கு பின்னால் ஒடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் சமூகமாற்றத்தைப் பற்றியோ விளிம்புநிலை மனிதர்கள் படும் பொருளாதாரப் பிரச்ச்னைகள் பற்றியோ அவர்களிடம் தீர்வும் அக்கறையும் இல்லை. ஆனால் லட்சங்கள் கொட்டி ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வியை விலைக்கு வாங்கிவிட்டு அடுத்தவர்களின் ஊழலை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறார்கள். இந்த தேசத்தில் ஊழலைத் தவிற வேறு பிரச்ச்னைகளே இல்லையா என்ன?

இந்த நாட்டில் நான்கில் மூன்று பங்கு பேர்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாயில் பிழைப்பு நடத்துகிறார்கள் என்ற அரசாங்கமே அமைத்த சென்குப்தா அறிக்கை சுட்டிகாட்டியது, அந்த அறிக்கை வெளிவந்த 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் நிலைமை மாறிவிட்டதா என்றால் மேலும் அவர்கள் மீது சுமையை ஏற்றிகொண்டெயிருக்கிறது. அவர்கள் எப்படி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியும்.மூன்றாம் உலக நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ள தேசம் இந்தியா தான். சென்ற நூற்றாண்டு வரை தென் அமெரிக்கா கண்டத்தில் பெரும்பாலான நாடுகளை காலனியாக வைத்திருந்த ஸ்பெயின் நாட்டில் இந்தியாவின் பில்லிணியர்கள் இல்லை, டச்சுக்காரர்களிடம் இத்தனை பில்லிணியர்கள் இல்லை, பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பான் என முன்னேறிய நாடுகளில் கூட இந்தியா உருவாக்கிய பில்லிணியர்கள் அங்கு இல்லை. உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி ஒரு ஏற்றத்தாழ்வு. அரசாங்கம் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொள்கையை கடைப்பிடிப்பதால் தானே. அம்பானிகளும் வேதாந்தாக்களும் இலாபம் வளர்ச்சி என்று சொல்லுகிறார்களே அது என்ன சுத்தத் திறமையால் நிகழ்ந்த அற்புதமா என்ன? சென்ற நூற்றாண்டில் அபினி என்ற கஞ்சாவை ஏற்றுமதி செய்தவர்கள் இப்பொது புனிதப்பசுக்களாகிவிட்டார்கள். இந்த மக்களின் வளத்தை தனதாக்கிக்கொண்டு வளர்ந்தார்கள். அரசாங்கத்தை அதை நடத்துகிற அரசியல்வாதிகளையும் அதிகாரவர்க்கத்தையும் கையில் போட்டுகொண்டு அவர்களுக்கு சாதகமானவற்றை எல்லாம் சட்டங்கள் செய்தார்கள். சாதகம் என்பதே என்ன? அது பாதகத்தை மற்றவருக்கு ஏற்படுத்துவதுதானே? எண்ணிக்கையில் சிறிய அளவிலுள்ள இந்த மாபாதகர்கள் பெருவாரியான மக்களின் சட்டைப்பையிலிருந்து பணத்தை கண்ணுக்குத் தெரியாமலேயெ எடுக்கிறார்கள் அதற்குத் தானே இந்த பாராளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை அரசு.

வலுத்தது வாழும் என்பது டார்வினின் பரிணாமக்கொள்கை, நாகரீக சமூகத்தில் எளியவர்களையும் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதற்குத்தானே இந்த `அரசு’ இருக்கிறது. ஆனால் சமூகத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் பையிலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் திருடிக்கொண்டேயிருக்கிறார்கள். எல்லோரும் அதற்குச் சொல்லும் விளக்கம் `இலாபம்`. எத்தனை சதவீதம்? அது வாங்குபவன், விற்பவன், சந்தை தீர்மானிக்கும்? பிறகு என்னத்துக்கு இந்த அரசாங்கம். உழைப்பை சரக்காக விற்பவனும் உணவு உறப்த்தி செய்யும் விவசாயியும் தான் இந்த சமூகத்தில் ஏமாந்தவர்கள். ஏனென்றால் அவர்களின் `சரக்கை` எப்போதும் வாங்குபவனே விலை சொல்கிறான். தேசத்தில் விலைவாசி விண்ணைத்தொட்டாலும் கவலைக்குள்ளாகமல் நிறையப்பேர் இருக்கிறார்கள், அவர்கள் உழைப்பை விற்பவர்கள் அல்லர். சரக்குகளை விற்பவர்கள் தாங்கள் வாங்கும் பொருளின் விலைக்கு கொடுக்கும் கூடுதல் தொகைக்கு விற்கும் பொருளிடம் வைத்துக்கொள்கிறார். இதை எப்படி கொள்ளை, மோசடி அநியாய விலை என்று சொல்லமுடியும். அவரவர்க்கு நியாயம் இருக்காதானே செய்கிறது.இதற்கு முடிவுதான் என்ன? இது பொருளாதாரச் சிக்கல். இந்த சிக்கலை அவிழ்ப்பதற்கு எந்த முயற்சியுமே இல்லை, ஏழை சொல் அம்பலம் ஏறுமா? என்பது போல இது எளியமனிதர்களின் பிரச்சனை மட்டுமே? தீர்வு தான் என்ன? தொடரும்...

புதன், 24 ஆகஸ்ட், 2011

ஊருக்கு இளைத்தவன் அரசியல்வாதி...


இன்று ஜன்லோக்பால் அமைக்கவேண்டும் என்று உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரேவிற்கு பெரும்பான்மையான நகர்ப்புற மத்தியதர மக்கள் ஆதரவளிப்பது அவர்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு மீதுள்ள வெறுப்பினால் தான். யாருக்கெல்லாம் அரசியல்கட்சிகள் பிடிக்கவில்லையோ அவர்களையெல்லாம் இந்த ஜன்லோக்பால் ஒன்றினைத்து விட்டது. மக்களை அரசியல்கட்சிகளிடமிருந்து விலக்கிவைக்கும் ‘அரசியல்’ அன்றி இது வேறில்லை. ஏற்கனவே அரசியலென்றால் சாக்கடை என்று ஒதுங்கியிருக்கும் எலைட் மற்றும் மத்தியதர வர்க்கத்தை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மீடியா வசதியாக பயன்படுத்திக்கொண்டது. ஊழல் என்றால் அரசியல்வாதி அல்லது அதிகாரவர்க்கம் என்று தான் பொதுப்புத்தியில் ஊறிக்கிடக்கிறது. உலகமயமாக்கல் சூழலில் அரசாங்கம் எல்லாவற்றையும் தனியாருக்கு தாரைவார்க்கும் சூழலை இந்திய கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனக்களும் பயன்படுத்திக் கொண்டன. இன்று லட்சம் கோடிகளில் புரளும் ஊழலுக்கு எது காரணம்? உலகமயமாக்கல் தான். 2ஜி அலைக்கற்றை ஊழலில் அரசியல்வாதிகளும் அதிகாரிகள் சிலரும் தண்டிக்கப்பட்டுள்ளனர், ஆனால் பயனடைந்த கார்ப்பரேட்டுகள் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனென்றால் இந்த அரசை நடத்துபவர்கள் அவர்களே! அப்படி அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை வந்துவிடக்கூடாதே என்பதற்காக அன்னா ஹசாரேவை இந்த அரசுக்கு எதிராகவே ஒரு கருவியாக முதலாளித்துவம் பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கும் இந்த 24 மணிநேர செய்தி மீடியாக்களுக்கும் உள்ள ‘கள்ள’உறவு 2ஜி அலைக்கற்றை ஊழலில் வெளிப்பட்டது. ‘பர்கா தத்’ என்ற பத்திரிக்கையாளர் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புரோக்காராக இருந்ததை இந்த நாடறிந்தது. இப்போது அந்த சேனல்கள் திருடனே, திருடன்... திருடன் ஒடுறான் பிடி என்கிற மாதிரி ஊழல் ஊழல் என்று கத்திக்கொண்டேயிருக்கிறது.

அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளொ எல்லோரும் ஊழல்வாதிகளோ அல்ல, இந்திய அரசியலில் இடதுசாரிகள் கறைபடியாதவர்கள் என்பதை இந்த ஊடகங்கள் ஏன் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை அல்லது இடதுசாரிகள் தான் ‘மாற்று’ என்று ஏன் சொல்லவில்லை. அது அவர்களின் வர்க்கநலன் அடங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்புவரை பிரதமர் மன்மோகன்சிங்கை நடுத்தரவர்க்கத்தினர் அவர் சிறந்த பொருளாதாரமேதை என்று கொண்டாடினார்கள், திருவாளர் மன்மோகன்சிங்கின் செழுமையான பயோடேட்டாவை மின்னஞ்சல்களில் பரப்பிவிட்டு தங்களின் தேசபக்த உணர்வை வெளிக்காட்டினார்கள்.மன்மோகன்சிங்கின் தாரளவாதக் கொள்கையால் இந்த மேட்டுக்குடியினர் முன்னேறியிருக்கின்றனர். ஆனால் அந்த பிம்பத்தை இப்போது அவர்களே போட்டு உடைத்துவிட்டார்கள். எந்த அளவிற்கு ‘தனிமனிதனை’ புகழ்கிறார்களோ அதே அளவில் இகழ்ந்தும் விட்டார்கள். யாரெல்லாம் அன்னா ஹசாரேவை ஆதரிக்கவில்லையோ அவர்கள் ஊழலுக்கு துணைபோகிறார்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். தாங்கள் விரும்புவதை இந்த தேசமே விரும்பவேண்டும் என்ற சிந்தனையை ‘கார்ப்பரேட்’ மீடியாக்கள் ஊதுகின்றன.

அரசியல்வாதிகள் தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம்கொடுத்தபோது இவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்குறவரை லாபம் என்று தேடிச்சென்று பணம்வாங்கினார்கள். அவர்கள் எப்படி அரசியல் நடத்துகிறார்கள் என்பதை அறியாமலேயே அவர்களை திட்டுகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளைத் தவிர எல்லா அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் நிதி /கட்சி நிதி வாங்குகின்றார்கள். இந்த அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் கூட கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஃபோர்ட் பவுண்டேசனிடமிருந்து $400,000 நிதி பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. தொண்டு நிறுவனக்கள் என்ற போர்வையில் இவர்கள் செய்வது ‘ஃபண்டு’ பண்ணுவது தான். ஊழலின் வேர் தெரியாமல் கூட்டத்தோடு கோவிந்தா போடுகிறார்கள்.வழக்கமாக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டால் மக்கள்பணம் வீணாகிறது என கூச்சல் போடுகிற, இவர்களால் பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் போய்விடுகிறது. லோக்பால் ஒன்றும் சர்வநோக நிவாரணி அல்ல என்பது தெரிய இன்னும் நாளாகும் அதற்குள் எத்தனையொ செய்திகள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஜன் லோக்பால் வந்தால்

ஜன் லோக்பால் வந்தால் இந்தியாவில் பாலும் தேனும் ஓடுகிறமாதிரி கொஞ்சபேர் பேசிகிட்டு இருக்காங்க, இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது // அன்னா ஹசாரே நினைக்கிற மாதிரி இந்த சட்டம் வந்திச்சின்னா
# 11,456 இலட்சம் கோடி கறுப்புப் பணம் இந்தியாவுக்கு வெள்ளையா வருமாம்,
# உலகத்திலேயெ பொருளாதாரத்தில 12ம் இடத்துக்கு வந்துருவம்,
# ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 60000 கோடி ரூபாய் நிதி கிடைக்குமாம்,
# அப்படின்னா ஒவ்வொரு கிராமத்துக்கும் 100 கொடி கிடைக்குமாம்,
# 20 வருஷத்துக்கு யாருமே வரி கட்டத்தேவையில்லையாம்,
# பெட்ரோல் 25ரூக்கும் டீசல் 19ரூக்கும் பால் லிட்டருக்கு 15ரூக்கும் கிடைக்குமாம்.
# அப்புறம் யாருமே மின்கட்டணம் செலுத்தத்தேவையில்லையாம் (எத்தனை வருசத்துக்குன்னு தெரியலை,
# இந்தியாவைன் எல்லைகள் எல்லாம் சீனப்பெருஞ்சுவர் மாதிரி உறுதியா ஆகிவ்டுமாம், (சுத்தி 3 பக்கத்துல கடல் இருக்கிறது கூட தெரியலா?),
# இந்திய சாலைகள் 28,000கிமீ ரப்பர் சாலையா மாறிவிடுமாம் (பாரீஸ் பட்டணம் மாதிரி),
# 2000 புதிய மருத்துவமனைகள் சகல்வசதியுடன், மருந்துகள் எல்லாம் இலவசம்.
# 95கோடி பேருக்கு இலவசமா வீடு கிடைச்சிரும் ....
.
அதனால நம்ம அன்னா ஹசரேவுக்கு ஆதரவு கொடுங்க. அப்புறம் இந்த மின்னஞ்சல 10 பேருக்காவது அனுப்புங்க. ஆமா என்னுடைய வேலைய செஞ்சிட்டேன்.//

(Anna Hazare says bring back the Black Money.Do u know what will happen if11,456 Lac Crores comes back.1. India Financialy No.12. Each district will get 60000 crores.1 & 1 village will get 100 Crores3. No need to pay taxes for next 20 yrs.4. Petrol 25 Rs,19,Diesel 15 Rs,Milk Rs.5. No need to pay electricity bill.6. Indian borders will become more stronger than the China Wall.7. 1500 Oxford like Universitis can be opened. 8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.10. 95 crore people will have their own house.Support Anna Hazare by forwarding this message to atleast 10 Indians. I did my job.)

இப்படி ஒரு மெயில் சுத்திகிட்டு இருக்கு., படிச்சவங்க கொஞ்சம் கூட யோசிக்காம இதையும் பார்வர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்க போய் முட்டுறதுன்னு தெரியலயே!!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நிதி நிறுவனங்கள்


நான் விடுமுறையில் சென்றபோது குழந்தைக்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என்ற திட்டமிருந்தது. எனது தந்தை நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிஸி ஏஜெண்டாக இருக்கிறார் அவரிடம் நாம் பாலிசி போட்டால் நல்லதென்றார். பாலிஸி போடுவதற்காக அந்த நண்பரை அழைத்திருந்தேன். அவரிடம் நேராக குழந்தைகளுக்கு LIC யில் எந்த பாலிசி நல்லது என்று கேட்டேன், அவர் LIC க்கு பதிலாக ‘PACL’ என்ற பெயருடைய பாலிசி திட்டத்தை என்னிடம் கொடுத்தார். எனக்கு தனியார் நிதி நிறுவனங்களில் பாலிசி எடுப்பதில் விருப்பமில்லை, நீங்கள் LIC யின் முகவர் என நினைத்தேன் அதனால் தான் உங்களிடம் பாலிசி எடுக்க அழைத்தேன் என்றேன். வந்த முகவர் LIC ஐ விட PACL யில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது என்றெல்லாம் வெகுநேரம் சொன்னார். 5 அல்லது 6 1/2 வருடம் கட்டினால் போதும் இன்சூரன்ஸ் பாலிசியும் அதோடு உள்ளது இறுதியில் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்றார். வேறு வழியின்றி அவரை அழைத்துவிட்டோமே என்று மிகவும் குறைந்தபட்ச அளவில் ஒரு பிளானில் சேர்ந்தேன். பின்னர் நம் உறவினர் ஒருவர் மற்றொரு இந்த ‘சங்கிலி’ தொடர் ஆள் சேர்ப்பு நிறுவனத்தில் முகவராக இருக்கிறார். தட்டமுடியாமல் அவரிடமும் சிறிய பிளான் எடுக்கவேண்டியதாயிற்று. முகவர்கள் தங்களுடைய கமிசன் தொகைக்காகவும்,அதிகமான ஆள்சேர்த்தால் பதவிஉயர்விற்காகவும் கவர்ச்சியாக பேசுகிறார்கள். நம்முடைய முதலீட்டை அந்த நிதி நிறுவனங்கள் எங்கோ நிலம் வாங்கி அதில் இத்தனை சதுரஅடி உங்களுக்கானது என்கிறார்கள். அவர்கள் ஒருநாள் ஓட்டமெடுப்பார்கள் அப்போது பாலிசிதாரர்களிடம் மாட்டுபவர்கள் இந்த ‘முகவர்கள்’ தான். தனியார் நிதி நிறுவனங்கள் புதிய புதிய பெயர்களில் வடிவங்களில் மாறிக்கொண்டே யிருக்கிறார்கள்.

இந்தியாவில் LIC அல்லது பொதுத்துறை வங்கிகளுக்கு நிகராக தனியார் நிதி நிறுவனங்கள் வளரமுடியவில்லை. மக்களுக்கு அவர்கள் மீது நம்பகத்தன்மையில்லை. ஒரு நண்பர் சொன்னார். பொதுத்துறை வங்கி என்பது ‘மனைவி’ மாதிரி,கவர்ச்சியிருக்காது ஆனால் அன்பு நீடித்திருக்கும். தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் எனபது ‘விலைமாதர்’ மாதிரி திட்டத்தில் விழுகிற வரைக்கும் தான் கவர்ச்சியிருக்கும் பின்னர் வேதனை தான் மிஞ்சும் என்றார். வளைகுடா நண்பர்கள் சிலர் பொதுத்துறை வங்கிகளை குறை கூறுவார்கள், நான் கேட்பேன் நீங்கள் எங்கே சேமிக்கிறீர்கள் என்று. பெரிய முதலீடு என்பது தேசிய வங்கிகளில், இதர ஆன்லைன் சர்வீஸ்களுக்காக ICICI /AXIS bank என்று செல்கிறார்கள். 2008ம் ஆண்டு உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது அதன் பாதிப்பு இந்தியாவிற்கு இல்லை, அமெரிக்காவில் இன்றும் மாதத்திற்கொன்றாவது வங்கி திவாலாகிவருவது வாடிக்கை. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. இதற்கு தேசிய வங்கி ஊழியர்களின் போராட்டமும் அவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் குரலும் தான் காரணம். வங்கி ஊழியர்கள் தங்களுடைய சம்பள உயர்வுகளுக்காக மட்டும் போராடவில்லை, வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது , காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், வங்கித்துறையில் அந்நிய மூலதனத்தைனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் போராடுகிறார்கள். பின்னது பொதுமக்களின் நலனும் சமூகத்தின் நலனும் அடங்கியிருக்கிறது. இன்சூரன்ஸ் துறையிலும் இதே நிலை தான். பன்னாட்டு இன்சூரன்ஸ் களுடன் கூட்டணி போட்ட இந்திய கம்பெனிகள் தலையெடுக்கவே முடியவில்லை. பொதுத்துறையை சீரழிக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து அதை காப்பார்கள் அந்த ஊழியர்கள் அது சமுதாயத்தின் தேவையும் கூட.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஈரோடு புத்தகத்திருவிழா 2011

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் வருடந்தோறும் ஜூலை/ஆகஸ்டு மாதத்தில் புத்தகத்திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த வருடம் விழாவின் மூன்றாம் நாளான ஞாயிறன்று சென்றிருந்தேன். காலை 11 மணிக்கு தொடங்குவதாக அறிவிப்பு இருந்தபோதும் மக்கள் 30 நிமிடம் முன்பாகவே அங்கே குழுமிவிட்டனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, முன்பெல்லாம் சினிமாவிற்குத்தான் இப்படி முன்னதாகவே வருவார்கள், ஆனால் புத்தகம் வாங்குவதற்காக மக்களும், மாணவர்களும் சில பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்ததை பார்க்கும் போது மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கவில்லை என்பது தெரிகிறது. இந்த விழாவை வருடந்தோறும் சிறப்பாக மக்கள் சிந்தனைப் பேர்வை நடத்திவருவது பாராட்டுக்குரியது. பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் காயிதேமில்லத் கலைக்கல்லூரியில் ‘பபாசி’ நடத்திய புத்தகத்திருவிழாவிற்கு சென்றிருந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தகத்திருவிழா நடத்துவதில் அதிக சிரமமில்லை, அங்கே வாசகர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் ஈரோடு போன்ற விவசாயம், சிறுதொழில் நடக்கின்ற ஒரு நகரமக்களிடம் புத்தகத்தை கொண்டு சேர்ப்பது மிகவும் சிறப்பான பணியாகும்.

கடந்த ஆண்டில் வலைப்பதிவர் ஈரோடுகதிர் மூலமாகத்தான் புத்தகத்திருவிழா குறித்த செய்தி அறிந்தேன். இந்த ஆண்டும் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் மாலை நடக்கின்ற சொற்பொழிவுகளை கேட்கமுடியாமல் போய்விட்டது. சென்றமுறை எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழ்செல்வன் மற்றும் மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரின் சொற்பொழிவை குறுந்தகட்டின் வாயிலாக கேட்டேன். இலக்கியம் பற்றியும் புத்தகம் படிக்கவேண்டியதன் அவசியத்தையும் எழுத்தாளர் பிரபஞ்சனின் பேச்சு அமைந்தது. இந்த முறை எழுத்தாளர்கள். ஜெயகாந்தன்,எஸ்.ராமகிருஷ்ணன், பாரதிகிருஷ்ணகுமார், பொன்னீலன், மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன், பாடலாசிரியர்.அறிவுமதி் ஆகியோர் ஆற்றிய உரைகளின் குறுந்தகட்டை வாங்கினேன். எழுத்தாளர்கள் சிறந்த சொற்பொழிவாளர்கள் என்பதை அவர்கள் ஆற்றிய உரையின் அறியமுடிந்தது.

இன்று இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் புத்தகம் வாங்கமுடிந்தாலும் நாம் அறியாத பல புத்தகங்களை, பதிப்பாளர்களை புத்தகத்திருவிழா நமக்கு அறிமுகம் செய்கிறது. கல்கியின் நூலகள் நாட்டுடமையாக்கியதால் எல்லா பதிப்பகத்திலும் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கிடைக்கிறது. இதே போல் தந்தை பெரியாரின் எழுத்துக்கள் எல்லோரிடத்தும் சென்றடைய வேண்டுமானால் பெரியாரின் எழுத்துகளும் சிந்தனைகளும் நாட்டுடமையாக்கப்பட வேண்டும், அதற்கு அவர் நடத்திய இயக்கமே தடையாக இருப்பது வேதனையாக உள்ளது. இடதுசாரி சிந்தனை நூல்களுக்கென்றே பல பதிப்பகங்கள் இருந்தன குறிப்பாக அலைகள் வெளியீட்டகம், பாரதி புத்தகாலயம், என்சிபிஎச்,பாவை பப்ளிகேசன். அளவிற்கு குறையாமல் பக்தி இலக்கியங்கள், ஜோதிட நூல்கள் விற்பனையாகின்றன. பாரதிகிருஷ்ணகுமார் இயக்கிய குறும்படமான ‘எனக்கு இல்லையா கல்வி’ பாரதி புத்தகாலயத்தில் கிடைத்தது. நிறைய சிறுவர் இலக்கியப் புத்தகங்களும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கம்பளம் தொகுப்பும் பாரதி புத்தகாலயம் வெளியிடிருந்தது. அளவில் சிறியனவும் விலையும் குறைவான புத்தகங்களையும் அந்தப் பதிப்பகத்தில் வாங்க முடிந்தது.

ஒவ்வொரு மாவட்டத்தலைநகரிலும் இந்த மாதிரி புத்தகத்திருவிழா நடக்கவேண்டும், குறைந்த பட்சம் அரசு அதற்கான இடத்தையாவது ஒதுக்கி இலவசமாக வழங்கவேண்டும். மக்களிடம் நல்ல இலக்கியங்கள் கொண்டு செல்லப்படவேண்டும்.

நான் வாங்கிய சில புத்தகங்கள்.

கரிசல் கதைகள்- கி.ரா.
மகாநதி - பிரபஞ்சன்
கண்ணீரால் காப்போம் - பிரபஞ்சன்
பிரபஞ்சன் கட்டுரைகள்
சர்க்கரை நாவல் -கு.சி.பா
ஏறுவெயில் -பெருமாள்முருகன்
கந்தர்வன் கதைகள்- கந்தர்வன்
பண்டைய இந்தியா -டி.டி.கோசாம்பி
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஊருக்கு நூறுபேர் -ஜெயகாந்தன்
பிரளயம் -ஜெயகாந்தன்
பயணம் -தேனி சீருடையான்
ஈ.எம்.எஸ் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
மாபசான் சிறுகதைகள்
மீன்காரத்தெரு- கீரனூர் ஜாகிர்ராஜா
கதைக்கம்பளம்- எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்பு
முதல் ஆசிரிய- சிங்கிஸ் மத்தாவ்
வெண்ணிற இரவுகள் -தஸ்தாயேஸ்கி
விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்- இரா.நடராசன்
நேற்றுமனிதர்கள்- பிரபஞ்சன்
டால்ஸ்டாய் நீதிக்கதைகள்

------------------------------------------------------

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

எனக்கு இல்லையா கல்வி?

ஒரு பொதுப்பாடத்திட்டத்தை சமச்சீர்கல்வி என்ற பெயரில் அமல்படுத்துவதற்கு தமிழகத்தில் ஆட்சி செய்கிற அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் நடத்திய கூத்தை பெருவாரியான மக்களின் விருப்பத்தை நல்லவேளையாக உச்சநீதிமன்றம் செயல்படுத்த ஆணையிட்டிருக்கிறது. இன்றைய சமூகத்தில் கல்வி என்பது கடைச்சரக்காகிவிட்ட வேளையில் சாதாரண மக்களின் குழந்தைகளின் ஏக்கமாக “எனக்கு இல்லையா கல்வி?” என்ற ஆவணப்படம் தமிழக்த்தில் ஆரம்பக்கல்வி குறித்து நமக்குத் தெரியாத பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

புதிதாக பொறுப்பேற்ற அரசு சமச்சீர் கல்வியின் ஒரு பகுதியான பொதுப்பாடத்திட்டத்தைக் கூட அமலப்டுத்த மனமில்லாமல், ஆலோசனை கூறுவதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் கல்விக் கடைகளை நடத்துவோரை நியமித்தது. அந்த வகையில் இந்த அரசுக்கு யாரெல்லாம் கல்வியாளர்கள், எதிர்காலதலைமுறையினர் மீது அக்கறை கொண்டவர் யார் என்பது கூட தெரியவில்லை அல்லது வேண்டுமென்றே சிறந்த கல்வியாளர்களின் குரலை கேட்பதற்கு தயாராக இல்லை. திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் அடிப்படையில் ஒரு இலக்கியவாதியாக இருந்தாலும் அவருடைய இந்த ஆவணப்படத்தை பார்த்த பின்பு சிறந்த கல்வியாளராக அறியப்படுகிறார். கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பள்ளியில் 94 குழந்தைகள் பலியாயினர், அந்த கோர சம்பவத்தை ஒரு ஆவணப்படமா எடுத்திருந்தார். கல்வியை வணிகமாக மாற்றியதன் விளைவாக நடந்த கோர நிகழ்ச்சி அது. அந்த ஆவணப்படத்தை பார்த்த பாதிப்பு என்பது ஒவ்வொரு ஜூலை 16ம் தேதியும் இருக்கிறது. இந்த சமூகத்தில் “தனக்கு நேர்ந்தால் பாதிப்பு, அடுத்தவருக்கு நிகழ்ந்தால் செய்தி” என்ற வரிகள் எவ்வளவு உண்மையானவை.

ஏன் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க சாதாரண மக்கள் கூட தயங்குகிறார்கள் என்றால் அது தான் அரசின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி எனலாம். எப்படி ஒரு பொதுத்துறையை திட்டமிட்டு சீர்குலைக்கிறார்களோ அதே மாதிரி தான் அடிப்படை கல்வியையும் அடிப்படை மருத்துவத்தையும் சீரழிக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டால் பெற்றோர்கள் எப்படி அந்தப் பள்ளிக்கு தன் குழந்தையை அனுப்புவார்கள். இன்னொன்று இந்த சமூகத்தில் அதிக கட்டணம் செலுத்தினால் அது தரமானது என்ற சிந்தனைவேறு நிலவுகிறது. இப்படி ஆசிரியர்களை குறைத்ததினால் மாணவர்கள் அங்கு சேர்க்கப் படவில்லை, எத்தனை விலை கொடுத்தாவது சிறந்த கல்வி வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். மாணவர்கள் குறைந்ததால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. சாதரணமக்கள் படிக்கிற அடிப்படை ஆரம்ப கல்விக்கு செலவு செய்வதை விட இந்த அரசு வசதிபடைத்தவர்கள் அல்லது ஏற்றுமதியாகப் போகிற ஆற்றலை உருவாக்குகிற உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்குகிறது.

14 வயதுவரை எல்லோருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி என்பதை சட்டமாக்கினால் போதும் என்று அரசு நினைக்கிறது. அப்படி ஒரு சட்டமே சர்வதேச சந்தையில் குழந்தைத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிற உற்பத்திப் பண்டங்களை வாங்க மறுக்கும் சர்வ தேச சமூகத்திற்காக சட்டம் போடப்பட்டது என்று கல்வியாளர்கள் கூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. அரசு ஏன இன்னும் ஆதிதிராவிடர்கள் மட்டும் படிப்பதற்கு பள்ளிகளை நடத்தவேண்டும். அவர்கள் மற்ற மாணவர்களுடன் படித்தால் என்ன? ஆதிதிராவிட நல்த்துறையின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் மிகவும் மோசமானவை. அங்கே தான் அதிகமான ஊழல் நடைபெறுகிறது. சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கு சேரவேண்டியதை சேரவிடாமல் வைப்பதற்கு ஒரு அமைச்சகமே செயல்படுகிறது. பள்ளிகளில் தீண்டாமையை ஆசிரியர்கள் கடைபிடிப்பதால் அந்த மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். அருந்ததிய குழந்தைகளை வைத்து பள்ளிகளின் கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பதை ஒரு ஆசிரியரே செய்தால் என்ன சமூகம் இது.அந்தக் குழந்தைகள் என்ன பிறக்கும்போதே கக்கூஸ் கழுவும் கருவியோடா பிறக்கிறார்கள்?

நாடு 8 சதவீதம் வளர்ச்சியடைகிறது என்று சொன்னால் மட்டும் போதுமா? அந்த வளர்ச்சி சாமான்யனுக்கு அரசு தரமான கல்வி அளிப்பதன் மூலமும் சிறந்த மருத்துவசதியை அளிப்பதன் மூலமும் காட்டவேண்டாமா? பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை,குழந்தைகள் எங்கே செல்வார்கள். கட்டிடங்கள் இல்லாத பள்ளிகள்,கூரை இல்லாத பள்ளிகள், மரத்தடி பள்ளிகள், ஆசிரியர் இல்லாத பள்ளிகள், அடிப்படை வசதிகளற்ற பள்ளிகள் இன்னும் எத்தனையோ இல்லாமை அரசுப்பள்ளிகளில் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உறப்த்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கமுடியவில்லை. ராணுவத்திற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிவிட்டு இந்தியாவின் எதிர்காலமாம் குழந்தைகள், அவர்களின் ஆரம்பக்கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை. இப்படி வசதி படைத்தவர்களின் குழந்தைகள் நல்ல பள்ளிகளில் பெறுகிற கல்வியும் ஏழைஎளியமக்களின் குழந்தைகள் பெறுகிற கல்வியும் எப்படி சமச்சீர் கல்வியாக மாறும். அதைத்தான் ஒரு கல்வியாளர் சொல்கிறார் இரண்டு தரப்பட்ட குழந்தைகளுக்கும் போட்டி நடக்கிறது, யானை பொம்மை செய்யவேண்டும் ஒருகுழந்தையிடம் மணலையும் மற்றொரு குழந்தையிடம் களிமண்ணையும் கொடுக்கிறோம். எப்படி சமவாய்ப்புகள் இல்லாமல் இங்கே அசமத்துவத்தை குறைக்கமுடியும்.

இந்த ஆவணப்படம் சிறந்த கல்வியாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதோடு அவர்களில் சிலர் தான் இந்த சமச்சீர் கல்விக்காகப் போராடியவர்கள். ஆவணப்படத்தை இயக்கிய திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் ஒரு சமூகக்கடமையாற்றி இருக்கிறார் என்று தான் நன்றி சொல்லமுடியும்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கொலை மிரட்டல் தமுஎகச கடும் கண்டனம்


எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Monday, August 08, 2011
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,சென்னை-600018

பத்திரிகைச்செய்தி:8-8-2011


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நடத்தும் புதுவிசை காலாண்டிதழில் இலங்கை எழுத்தாளர் யோ.கர்ணன் எழுதிய சிறுகதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அக்கதையை வெளியிட்தற்காக பெயர்தெரியா நபர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.அவர் இல்லாதபோது பகல் என்றும் இரவென்றும் பாராமல் அவருடைய துணைவியாரிடமும் இதே தரக்குறைவான வார்த்தைகளில் உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று பேசி வருகின்றனர்.அக்கதை மீதும் கதையை வெளியிட்டதன் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அது இயல்பு.அதைப் புரிந்துகொள்ள முடியும்.அதைக் கருத்துரீதியாகச் சந்திக்கத் திராணியில்லாமல் , மறுப்புகளை வெளியிடத்தயாராக இருப்பதாக அவர் கூறியும் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக தமுஎகச மற்றும் இடதுசாரிகள் மீது அவதூறுகளை வெளியிடுவதல் உற்சாகம் காட்டும் ஒரு வலைத்தளத்தில் அவர்மீதும் இயக்கத்தின் மீதும் அவதூறு பொழிவதைத் தொடங்கியுள்ளனர்.இன்னும் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளரை மிரட்டியுள்ளனர்.அவர் ஆதவனின் புத்தகத்தை வெளியிடப் பயந்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த வன்முறை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 6,7 தேதிகளில் கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு விவாதித்தது.இது தமிழ்க் கருத்துலகில் மாற்றுக்கருத்தை எழுதுபவர்களை எழுதவிடாமல் வாயடைக்கச் செய்யும் அராஜக முயற்சியாகும்.சமீபகாலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது.இந்தக் கோழைத்தனமான செயலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.மிரட்டும் தொலைபேசி எண்களைக்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தாக்குதலை ஜனநாயக ரீதியாக சந்திக்கவும் செயற்குழு தீர்மானித்தது. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை கண்டனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைப்பூவில்/வலைத்தளத்தில்/முகநூலில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

தலைவர் பொதுச்செயலாளர்