திங்கள், 4 நவம்பர், 2013

மொழிவாரி மாகாணங்கள்...

இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் எல்லாம் அமைந்துவிட்ட நிலையில் வளர்ச்சி என்ற பெயரில் மொழிவாரி பிரிக்கப்பட்ட மாகாணங்களை துண்டாடும் வேலையை மத்தியில் ஆளக்கூடியவர்கள் ஆரம்பித்து அதை நடத்தியும் விட்டார்கள். தனித்தெலுங்கானா கடந்த மூன்று வருடங்களாக அவ்வப்பொது பற்றி எரியவும் தணியவும் மூண்டும் கொந்தளிக்கவும் ஆக இருந்தது. கடைசியில் ஒன்றுபட்ட ஆந்திரம் வெண்டி நீடித்த போராட்டம் மிகபெரியதாக இருந்தது. ஆளும் காங்கிரஸுக்கு பிரித்தாலும், பிரிக்காவிட்டாலும் தலைவலியாக இருக்கிறது. இதெல்லாம் கவனிக்கிற சிறுபிள்ளைக்கூட தெரியும் தேர்தல் ஆதாயத்திற்காக நடக்கிற பிரிக்கிற நாடகங்களென்று. தெலுங்கானா பகுதியில் செல்வாக்கு உள்ள கட்சிகள் தனித்தெலுங்கானா கொடுத்தே தீரவேண்டும் எனவும், மற்றவர்கள் தனித்தெலுங்கானா அறிவித்தபின்னர் ஒன்றுபட்ட ஆந்திரம் என்பதற்காக போராடுகிறார்கள்!

தேசியக்கட்சிகளான காங்கிரஸ்க்கு தேர்தலுக்கு முன்னால் தனித்தெலுங்கான அறிவித்தால் அங்கே வாக்குகள்பெறமுடியும் என நினைக்கிறது. பாஜகவிற்கு மொழிவாரி மாநிலங்கள் அமைந்ததே அதற்கு ஏற்புடையதாக இல்லை, அப்படி அமைந்த மாநிலங்களை துண்டாடினால் மொழிவாரியில் மாநிலங்கள் பிளவுபடுவது ம்த்தியில் தன்னுடைய ஒரு மொழி, ஒரே கலாச்சாரத்திற்கு வசதியாக இருக்கும் என்பது அதன் எண்ணம். இடதுசாரிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட தனித்தெலுங்கானவை ஆதரிக்கிறது. இன்னும் கொள்கை அளவில் ஒன்றுபட்ட ஆந்திரம் நீடிக்கவேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கொண்டுள்ளது. மொழிவாரி மாகாணங்கள் நெடிய போராட்டத்திற்குப் பிறகே அமைக்கப்பட்டன. அதில் அந்தந்த பகுதிகளில் வாழும் எல்லாத்தரப்பு அரசியல்கட்சிகளும் பங்குவகித்தன. இன்று தனித்தெலுங்கானா பிரித்ததைத் தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் புதிய மாநிலங்கள் பிரிக்கவெண்டும் என்ற கோஷங்கள் முழங்கப்படுகின்றன.

வளர்ச்சி என்ற பெயரில் புதிய மாநிலங்கள் அமைக்கப்படலாமா? அப்படி அமைக்கப்பட்ட சமீபத்திய மாநிலங்கள் எந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன? ஏற்கனவே மாநிலங்களுக்கிடையேயான நதிநீர், எல்லைகள், மின்சாரம் பகிர்ந்துகொளவதில் ஏற்கனவெ பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரே மொழி, கலாச்சாரம் கொண்ட ப்குதியை இரண்டாகப் பிரித்தால் புதிய  பிரச்சனைகள்  ஏற்படுத்திக் கொள்ளப்பொகிறோம். குறுகிய நோக்கத்தில் பிரதேச உணரவை பயன்படுத்தி அந்த பகுதியிலாவது ஆட்சி அமைக்கமுடியுமா என்பதற்க்காக தனிமாநிலம் வெண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

 மொழிவாரி மாகாணங்கள்  கோரிக்கைகள்:

1917லிலேயே காங்கிரஸ் இயக்கம் சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாகாணங்களை அமைக்க ஒப்புகொண்டுவிட்டது. மகாத்மா காந்தி மொழிவாரி காங்கிரஸ் சீரமைப்பை ஊக்குவித்தார். சுதந்திரம் வந்தபிறகு தேசத்தின் புதிய மாநிலங்கள் மொழி அடிப்படையில்  உருவாக்கப்பட வேண்டும்  என நினைத்தார். சுதந்திரத்திற்கு முன்புவரை நேருவின் கருத்தும் அதே போலத்தான் இருந்தது.  ``ஒவ்வொரு மொழியும் , படித்த, பாமர மக்களின் வாழ்க்கையோடும், கலாச்சாரத்தோடும் , சிந்தனையோடும் பின்னிப்பிணைந்துள்ளது. பாமர மக்கள் தங்கள் சொந்த மொழியின் மூலமாகவே கல்வியிலும், கலாச்சாரத்திலும் முன்னேறமுடியும் என்பது தெளிவு``  என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் 1947ல்  அப்போதுதான் நாடு மத அடிப்படையில் பிளவுகண்டதைத் தொடர்ந்து மொழிவாரியாகப் பிரிப்பது இந்திய யூனியன் சிதறுவதை ஊக்குவிக்காதா? என்ற வேறு யோசனையிலும் இருந்தார். சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடன், உருது மற்றும் கொங்கனி பேசுபவர்கள் இருந்தார்கள். அதைப்போலவெ பம்பாய் மாகாணமும் பல மொழிகள், பல கலாச்சாரம் கொண்டது, பலதரப்பட்டவர்கள் ஒன்றினைந்துவாழும்  அசாதாரமான பயிற்சியை அளித்திடாதா? புதிய தேசம் சமாதானம், நிலைத்தன்மை, பொருளாதாரவளர்ச்சி என்ற நவீனத்தில் இணையக்கூடாதா? இன்னும் ஏன் மொழி, ஜாதி அடிப்படையில் பிரிக்கப்படவெண்டும் என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்தியா வலுப்பெற்று, நிச்சயமான நிலைக்கு வரும்வரை மொழிவாரி மாநில அமைப்பு ஒத்தி வைக்கவேண்டும் என்ற நேருவின் கோரிக்கையை அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு காந்தியும் `நியாயமானதே` என்று சொன்னார். மொழியால் விளையும் பிரிவுகளை மேலும் சுமத்த நேரு தயங்கியதற்கு படேலும் !  ராஜாஜியும் ! ஆதரவளித்தனர். 1948, 49ம் ஆண்டுகளில் மொழிவாரி சுயாட்சியைக் கோரும் இயக்கங்கள் துவங்கப்பட்டன. மராத்தி பேசும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மராத்திய மாநிலத்தை அமைக்கவும், அதேபோல குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பகுதிகளிடமிருந்து இதே கோரிக்கைகள் வலுத்தன. பஞ்சாபில் சீக்கிய மாகாணம் ஒன்று கோரி ஒரு தனிப்போராட்டம் நடந்தது அதில் மொழி, மதம் என்ற இரண்டு கொரிக்கைகளையும்  ஒன்றாக நெருங்கவைத்தது.


 முதல் மாநிலம் ஆந்திரப்பிரதேசம்.

மொழி சுயாட்சிக்கான தீவிரமான இயக்கத்தின் தொடக்கம் தெலுங்கு பேசும் ஆந்திர மக்களுடையதுதான். ஹிந்திக்கு அடுத்தபடியாக அதிகமக்கள் பேசும் மொழியாக தெலுங்கு அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆந்திர மஹாசபா என்ற அமைப்பு சென்னை மாகாணத்தில், தமிழர்கள் தெலுங்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொள்வதாக அந்த அமைப்பு கிளர்ச்சி செய்தது. சுதந்திரத்திற்குப்பிறகு தெலுங்கு பேசும் மக்கள் காங்கிரஸை மொழிவாரி மாநில அமைப்புக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றக்கொரினர். தனி மாநிலப்பிரச்சனையில் மதராஸ் மாகாண முன்னாள் முதல்வர் பிரகாசம் 1950ல் கட்சியிலிருந்து விலகியதால் காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்தது. 1952 மதராஸ் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு பேசும் பகுதியில் 145 இடங்களில் காங்கிரஸ் வெறும் 43 இடங்கள் மட்டுமே வென்றது, மற்ற இடங்களிலெல்லாம் ஆந்திர இயக்கத்தை ஆதரித்தவர்கள், குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் 41 இடங்களை வென்றனர். தேர்தல் முடிவுகள் மேலும் ஆந்திர மாநில இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது. மதராஸ் சட்டமன்றத்தில் தெலுங்கு பேசும் உறுப்பினர்களை அவர்கள் கொரிக்கை நிறைவேறும்வரை சபையை புறக்கணிக்க  ஆந்திர இயக்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. கிளர்ச்சி செய்பவர்கள் நேருவையும் மதராஸ் முதல்வர் ராஜாஜியையும் வெறுத்தனர்.

1952ம் ஆண்டு அக்டோபர் 19ம்தெதியன்று பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் சென்னையில் ஆந்திர மாநிலம் அமைக்கவேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஸ்ரீராமுலுவுக்கு இது முதல் உண்ணாவிரதமல்ல,   1946ம் ஆண்டு நவமப்ர் 25ம் தேதி மதராஸ் மாகாணத்திலுள்ள் எல்லாக் கோவில்களையும் தீண்டத்தகாதவர்களுக்குத் திறந்துவிடவெண்டும்  என்று சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். கடைசியில் கோரிக்கைகள் நிறைவேறுமுன்னே காந்தியின் வற்புறுத்தலால் உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார். சுதந்திரப் போராட்டகாலத்தில் உப்பு சத்தியாகிரகத்திற்கு பிறகு சிலகாலம் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்தார். சபர்மதியில் அவர் ஆற்றிய பணிகள் ஆசிரமத்தில் இருந்தவர்கள் அன்பையும் காந்திஜியின் பாராட்டுதல்களையும் பெற்றார். 1952ல்  அவருடைய உண்ணா நோன்பை கைவிடச்சொல்வதற்கு காந்திஜி உயிருடன் இல்லை. டிசம்பர் 12ம் தேதி நேரு, ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில் `ஆந்திரக்கோரிக்கையை ஏற்கவேண்டிய தருணம் வந்துவிட்டது, இன்னும் தாமதித்தால் ஆந்திரர்களின் வெறுப்புண்ர்வை  நம்மால் சந்திக்கமுடியாது` என்று எழுதினார். ராஜாஜியின் தாமதமான கடிதத்திற்கு முன்னால் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தின் 58வது நாளில் உயிரிழந்தார். அவருடைய மரணம் ஆந்திரத்தை ஆத்திரம் கொள்ளச்செய்து மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர், அரசு அலுவலகங்கள், பொதுச்சொத்துகள், ரயில்கள் சேதப்படுத்தப்பட்டன. பல எதிர்ப்பாளர்கள் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.

ஸ்ரீராமுலுvin மறைவுக்கு இரண்டுநாட்களுக்குப்பின் `ஆந்திர மாநிலம் அமையும்` என்ற முறையான அறிவிப்பை நேரு வெளியிட்டார். ஆந்திரப்பிரதேசம் என்ற முதல் மொழிவாரி மாநிலம் நேருவின் விருப்பமின்றியே அமைந்தது.  ``நாம் குளவியின் கூட்டைக் கலைத்துவிட்டோம், நம்மில் பலர் கடுமையாக கொட்டப்படுவோம்`` என்று நேரு தன்னுடன் பணியாற்றும் ஒருவருக்கு கடுமையாக எழுதினார், அதைப்போலவே ஆந்திரம் மாநிலம் அமைந்ததைத் தொடர்ந்து பிறமொழிபிரிவினர் கோரிக்கைகளை வலுப்படுத்தினர்.