வியாழன், 21 ஏப்ரல், 2011

ஏழைகள் இருக்கும் வரை...

கிராமப்புறங்களில் அரசின் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வரவேற்கிறவர்களும் ஏன் எதிர்க்கிறவர்களும் கூட இருக்கிறார்கள். முரண்பாடு என்பது இப்படித்தான் விலைவாசி உயர்ந்தால் உற்பத்தியாளன் மகிழ்ச்சியடைவதும் பயனீட்டாளன் துன்பமடைவதும் போல். கிராமப்புறங்களில் நிலமில்லா விவசாயத்தொழிலாளிகள் இந்தத் திட்டத்தால் பயன்பெருகிறார்கள் என்பதோடு அவர்களுடைய குறைந்தபட்சக் கூலி என்பது நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் என்று உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இதனால் கூலிகளை நம்பிவாழ்ந்த விவசாயிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை ஏனென்றால் 100ரூபாய் கூலியை இவர்களால் வழங்கமுடியவில்லை. ஆனால் இந்ததிட்டத்தின் மூலமாக மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது. இங்கு கொடுக்கப்படும் கூலியில் பாலினசமத்துவம் நிலவுகிறது. நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு பட்டினிப்பட்டாளத்தை இருக்கவேண்டும் என்பது இப்போதுள்ள உற்பத்திமுறையின் கொள்கை. இதன் மூலம் சுரண்டுவது எளிதாகிறது.

நான் வளைகுடாவில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து, ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசர் அந்தஸ்தில் வேலைசெய்யும் ஒருவர் வேலைக்கு வரும்போது காரில் வருவார், இறங்கி அப்படியே அவரது அலுவலகம் சென்றுவிடுவார். அவர் அலுவலகம் சென்றபின்பு அவருடைய அலுவலகத்தில் வேலைசெய்யும் காண்டிராக்ட் லேபர் அவருடைய காருக்குச் சென்று சூப்பர்வைசரின் லஞ்ச்பேக் கை தூக்கிவருவார். இதுமட்டுமல்ல, மதிய உணவிற்கு மேசையில் உணவு சாப்பிடும் தட்டு எல்லாம் எடுத்து வைக்கப்பட்டிருக்கும். இவர் சென்று சாப்பிட்டுவிட்டு தான் உண்ட தட்டைக்கூட கழுவாமல் செல்வார்.எல்லாவற்றையும் அந்த காண்ட்ராக்ட் லேபர் தான் செய்யவேண்டும். இதை விரும்பி அந்த லேபர் செய்வரா? நிர்பந்தம் அந்த வேலையில் தொடர்ந்து நீடிக்கவேண்டுமே என்பது அந்த தொழிலாளியின் விருப்பம். சில மனிதர்கள் இதை சாதகமாக எடுத்துக்கொள்வதை நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். புதிய பொருளாதரக் கொள்கையின் விளைவாக இந்தியாவில் தொழிலாளர்களை "Hire and Fire" முறை அதாவது நிறுவனம் நேரடித்தொழிலாளர்களை நியமிப்பதற்குப் பதிலாக காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை எல்லா இடத்திலும் வந்துவிட்டது. முதலில் வேலையை அவுட்சோர்ஸ் முறையில் செய்து, பின்னர் வேலைசெய்யுமிடத்தும் இந்த காண்ட்ராக்ட் முறை வந்துவிட்டது. சமவேலையை செய்யக்கூடிய காண்ட்ராக்ட் தொழிலாளிகள் அற்ப சம்பளத்தையும், பணிப்பாதுகாப்பு, குடிடிருப்புவசதி, குழந்தைகளுக்கு கல்வி என எந்தஒரு வசதிகளை பெறும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

வளைகுடா நாடுகளில் காண்ட்ராக்ட் தொழிலாளியாக வேலைசெய்பவர்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்கள் என்பதிலும் கூட பாகுபாடு இருக்கிறது, ஐரோப்பியர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மரியாதையோ அதேவேலையைச் செய்யும் ஒரு இந்தியருக்கு கிடையாது, ஒரு இந்தியருக்கு கிடைக்கும் மரியாதை வங்காளதேசத்தவருக்கோ, பாகிஸ்தானியற்கோ அல்லது இலங்கையை சேர்ந்தவருக்கோ கிடையாது. மனிதர்கள் திறமையைவிட பின்புலம் பிரதானமானது. ஒரு நிறுவனம் எப்படி காண்டிராக்ட் ஊழியரை வைத்துக்கொண்டால் எளிதாக வேலையை பெறமுடியும் என்று எண்ணுகிறதோ அதேபோல் அதன் நேரடி ஊழியர்களும் விரும்புவதும் காண்கிறோம். ஏனென்றால் அவர்களது வேலையின் சுமையைச் சேர்த்து காண்ட்ராக்ட் தொழிலாளியை வைத்து செய்திடலாம். நாம் அரசு ஊழியர்களை குறைசொல்லியே பழக்கப்பட்டவர்கள் அது பொதுப்புத்தியில் ஊறியிருக்கிறது, தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் சிறப்பாக வேலைசெய்கிறார்கள் என்றால் அங்கேயும் ஏன் காண்ட்ராக்ட் முறை அமலில் இருகிறது என்பது யோசிக்கவேண்டும். ஆனால் நேரடியாக வைத்துக்கொண்டிருகிற ஊதியத்தின் அளவைவிட காண்ட்ராக்ட் ஊழியருக்கு அதிகமான செலவை செய்கிறது. ஆனால் அந்த ஊழியர் சொற்பமான கூலியே பெறுகிறார்.

இழிவான தொழில்களை செய்வதற்கும், பாதுகாப்பற்ற சூழலில் பணிசெய்வதற்கும் ஏழைகள் இல்லாவிட்டால் யார் செய்வார்கள்? ஆட்சியாளர்கள் ஏழ்மையை ஒழித்துவிடுவார்களா என்ன?

5 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரகன் அவர்களே! இழிவானதொழில்களைஸச் செய்வதற்கும்,ஆபத்தானபணிகளைச்செய்வதற்கும் ஏழைகளைவிட்டால் யர்செய்வார்கள். அதனால் எழைகளை வைத்துக்கொண்டுதான் இருப்பர்கள்.அதொடு மலிவாகவும் கிடைப்பார்களே! ---காஸ்யபன்

காமராஜ் சொன்னது…

கிராமங்களீல் விவசாயம் நசிந்து போவதற்கு கூலிக்காரர்மேல் பலிபோடுவது மேம்போக்கானது.பண்ணைஅயடிமைக்காலத்தில் இருந்து இன்று வரை விவசாயம் செய்வோர்.குறைந்த பட்சக்கூலி,அல்லது பண்ணையடிமை,அல்லது ரெண்டுவேளைச்சாப்பாடு கொடுத்து உழைப்பைச்சுரண்டினார்கள்.பின்னர் கூலியாகத்தானியங்கள் வழங்கப்பட்டது.ஆனால் கேரளம் தவிர்த்து எந்த மநிலத்திலும் நிர்ணயைக்கப்பட்ட 236 குறைந்தபட்சக்கூலி கொடுக்கப்படுவதில்லை.

கூலியாகத்தானியமும் கிடைக்காது,வெறும் 40.50 சம்பளத்தில் கூலிக்காரன் எதைச்சாப்பிடுவான்.ஆதலால் 200 முதல் 300 வரை கூலிகிடைக்கிற க

hariharan சொன்னது…

தோழர் காஸ்யபன் அவர்களே, மலிவான கூலிக்காகவே பட்டினிப் பட்டாளங்களை உருவாக்குகிறார்கள்.

தோழர் காமராஜ் அவர்களே, கூலிக்காரர்களை எல்லாம் குறுவிவசாயிகளாக மாற்றிவிட்டால் இந்த நூறுநாட்கள் வேலையை எல்லா விவசாயிகளும் வேலையில்லா கோடைகாலத்தில் பயன்படுத்தமுடியும். கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு முன்பைவிட இப்போது பல்மடங்கு அதிகமாகிவிட்டது ஆனால் விளைச்சலில் கிடைக்கிற் தானியங்களுக்கு கட்டுபடியாகவில்லை. அதனால் விவசாயத்தொழிலாளிக்கு கொடுக்கிற கூலி அதிகமாகத்தெரிகிறது.

காமராஜ் சொன்னது…

கூலியாகத்தானியமும் கிடைக்காது,வெறும் 40.50 சம்பளத்தில் கூலிக்காரன் எதைச்சாப்பிடுவான்.ஆதலால் 200 முதல் 300 வரை கூலிகிடைக்கிற கட்டுமான வேலைகளையும் இன்ன பிற தொழிற்சாலை வேலைகளையும் தேடிப்போனது கீழ்தட்டு சமூகம்.

இப்போது தான் இந்த வர்க்க அரசியலுக்கும் ஜாதி அரசியலுக்குமிடையிலான ஒரு தகிடுதத்தம் ஆரம்பிக்கிறது. சுரண்டப்படுகிற எல்லோரும்,தனக்கு அடுத்து மேலே இருக்கும் படி நிலைச்சமூகததைத்தான் விரோதியாகப்பார்க்கிறது.
மூலகாரணி அம்பானிபோல,கொயாங்கா போல,அமெரிக்கா போல சூட்சுமக்கயிறுகளை ஆட்டிக்கொண்டிருக்க இங்கே க்ஜாதிச்சண்டைகள் மலிந்து கிடக்கிறது

காமராஜ் சொன்னது…

விவசாய நிலங்கள் மட்டும் அவரர் கைகளில் இருக்கிறது.தரிசு நிலங்கள் அத்துணையும் பெயர் தெரியாத மொழி தெரியாத எவனோ ஒருவன் கைகளில் இருக்கிறது.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் விஸ்தரிக்கப்பட்ட இந்த நில வேட்டை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்துத்தான் பூதாகரமாக உருவெடுக்கும். ஏக்கர் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்க நாதியற்று கிடந்த எங்க ஊர் செவக்காடுகள் மூன்று லட்சத்துக்குகிடைக்கவில்லை.
யாரிடம் வாங்கி இந்த நிலமற்ற கூலிக்காரர்களுக்கு கொடுக்கப்போகிறோம் ?