சனி, 2 மார்ச், 2013

Patrice Lumumba

லுமும்பாவைப் பற்றிய ஆவணப்படம் 2000ம் ஆண்டு வெளிவந்தது, சமீபத்தில் ஒரு வலைப்பூ மூலமாக அந்த படத்தை பார்த்தேன். அவசியம் காண்வேண்டிய ஆவணப்படம் இது, நேர்மையான ஒரு பிரதமர், தமது சொந்த மக்களின் நலனிற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற 200வது நாளில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஏகாதிபத்தியம் எல்லா நாடுகளிலும் தனக்கு சாதகமான அரசியல்வாதிகளை வென்றெடுக்கிறது அவர்களின் நலனிற்கு எதிரானவர்களை ஆட்சியிலிருந்து இறக்குவதற்கு அந்தந்த நாட்டில் அவர்களோடு ஒத்துழைக்கிற அரசியல் கட்சிகளுக்கு உதவுகிறார்கள். ராணுவ ஜென்ரல்களை விலைக்கு வாங்குகிறார்கள். அப்படி ஏகாதிபத்தியம் மக்களாட்சியை ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்த கதை. லுமும்பாவை கொல்வதற்கு அவரால் ராணுவத்தில் உயர்பதவியில் நியமிக்கப்பட்ட மொபுடு கைப்பாவையாகிறான், அவனுடைய சுவிஸ் வங்கிகணக்குகளில ஊழல் செய்த பணம் 15 பில்லியன் டாலர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு 1885ம் ஆண்டிலிருந்து அடிமை நாடாக இருக்கிறது, ஐரோப்பாவில் சின்னஞ்சிறிய நாடான பெல்ஜியம் அதை அடிமைப்படுத்திவைத்திருந்தது, காங்கோவில் ஏராளமான இயற்கை வளங்கள் கிடைக்கின்றன, தாமிரவயல்கள், வைரச்சுரங்கம், ரப்பர் காடுகள், கோபால்ட், டைட்டானியம் அங்கு கிடைக்கிற முக்கிய பொருட்கள். இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொள்ளையடித்ததைப் போல் ஆப்பிரிக்காவை ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் கூறுபோட்டார்கள். இரண்டாம உலகப்போருக்குப் பின்னால் காலனிநாடுகளில் தேசிய இயக்கங்களின் விடுதலை போராட்டம் வலுவடைந்தது.  காங்கோவிலும் பெல்ஜிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டு விடுதலைக்காக போராடினார்கள். 1958ல் காங்கோவின் தேசிய காங்கோலிச இயக்கத்தின் தலைவராக தேர்தெடுக்கப்படுகிறார். சாதாரண விவசாயிக்கு மகனாகப் பிறந்த பாட்ரிச் லுமும்பா பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு தபால்துறையில் கிளார்க் வேலை பார்க்கிறார். 1950களில் காங்கோவில் பள்ளிக்கல்வியை தாண்டுவதே பெரியவிசயம், மொத்தத்தில் 100பேர் கல்லூரிப்படிப்பை கடந்திருப்பார்கள்.  போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்கி சிறையில் தள்ளுகிறது பெல்ஜிய அரசு. காலனி நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறை, ராணுவத்தில் உயர்ந்த பதவியில் பெல்ஜியத்தினர் இருந்தார்கள். 1958ல் லுமும்பா சிறையில் அடைக்கப்படுகிறார்.

1959ல் மக்கள் இயக்கம் மேலும் வலுவடைதற்கு முன்னால் பெயரளவில் சுதந்திரம் வழங்க பெல்ஜியம் முன்வருகிறது, அதற்கான வட்டமேஜை மாநாடு பிரசல்ஸ் நகரில் நடைபெற உள்ளதால் அதில் விடுதலை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் பிரதிநிதியாக கலந்துகொள்வதர்கு சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மாநாட்டில் 1960 ஜூன் மாதம் 30தேதி சுதந்திரம் வழங்க பெல்ஜியம் ஒப்புக்கொண்டது. அச்சமயத்தில் எந்த இயக்கத்திடம் ஆட்சியை ஒப்படைப்பது என்ற வாக்கெடுப்பில் லுமும்பாவின் தேசிய காங்கோலிச இயக்கம் அதிக வாக்குகளை பெறுகிறது, ஆனாலும் அவர் நாட்டின் பிரதமராகி  ஆட்சிப்பொறுப்பில் இரண்டாம் இடத்தை வகித்தார். பெல்ஜியத்தின் ஆளும் வர்க்கம் சுதந்திர காங்கோ பெல்ஜியத்தின் அதிகாரத்தையும், ராணுவத்தையும், பெல்ஜிய நிதியையும் சார்ந்திருக்குமாறு விரும்பினார்கள்.

சுதந்திரம் வழங்கும் நாளில் பெல்ஜிய மன்னன் ஒன்றாம் பதோயின் கலந்துகொள்ள வந்திருந்தான், கால்னிஆதிக்கவாதிகளும், அடிமைப்பட்டவர்களும் பரஸ்பரம் புகழுரைத்துக்கொண்டு பழைய நடைமுறை அப்படியே தொடரவேண்டும் என்று விரும்பினான், அவனது பேச்சில் “கனவான்களே, நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்கள் என நிரூபிப்பது இனி உங்கள் பொறுப்பு! ” என்றான்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லுமும்பா மேடையேறியதும் அரங்கில் அம்ர்ந்திருந்த காங்கோ மக்கள் எழுச்சியும் உற்சாகவும் கொள்ளத்துவங்கினார்கள். பெல்ஜியத்தின் கீழ் தம்மக்கள் அனுபவித்த இன்னல்களையும், அடிமைகாளாக நடத்தப்பட்டத்தையும் எதிர்கால  நாட்டில் இனி யாரும் அடிமையில்லை, கறுப்பர்களும் பெல்ஜியர்களும் சமம் என்று தமது எதிர்கால எண்ணங்களயும் லுமும்பா எடுத்துரைத்தார், அவரது பேச்சு வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அவரது பேச்சைக் கேட்ட பெல்ஜிய அரசனுக்கு பேயரைந்தது போலிருந்தது. ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் காங்கோ மக்கள் சிலர் பெல்ஜியர்களை தாக்கினார்கள், காங்கோ சிப்பாய்கள் பெல்ஜிய ராணுவ அதிகாரிகளிடம் அடிபணிய மறுத்தார்கள். பெல்ஜிய ராணுவ அதிகாரிகளோ காங்கொவின் புதிய அமைச்சரவையின் உத்தரவை சட்டைசெய்யவில்லை. இப்படி ஏராளமான பிரச்சனைகளை லுமும்பா சந்தித்தார். ஒருமுறை காங்கோ சிப்பாய்கள் பிரதம அலுவலக்கத்தை முற்றுகையிட்டு பெல்ஜிய ராணுவத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று மிரட்டிவிட்டு சென்றார்கள், மறுநாள் ராணுவத்தின் ஜென்ரலான பெல்ஜியத்தவரை பதவிவிலகுமாறு வலுயுறுத்தினார் அவன் மறுத்துப்பேசவும் பெல்ஜிய தூதரை வரவழைத்து உடனே பெல்ஜிய ஜெனரல் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டார். அந்த பதவிக்கு காங்கோ ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்த மொபுடு கர்னலாக லுமும்பாவால் நியமிக்கப்பட்டான். இந்த மொபுடு தான் பின்னர் அமெரிக்க கைக்கூலியாக மாறி லுமும்பாவை வீட்டுச்சிறையில் வைத்தான்.

ஏற்கனவே நாட்டின் பிரதமருக்கும் குடிய்ரசுத்தலைவரான ஜோசப் கெசவுபு க்கும் கொள்கை வேறுபாடு இருந்தது. காங்கோவின் தெற்குப் பிராந்தியமான கடாங்கா இயற்கைவளமிக்க பகுதி. அந்தப் பகுதியை சுரங்க நிறுவனங்கள், தங்களது நம்பகமான அரசியல்வாதிகளின் கையில் அரசியல் அதிகாரம் நீடிக்க விரும்பியது, அவர்களது உள்ளூர் கைப்பொம்மையான மோயீஸ் ஷோம்பே என்பவன், தொலைதூர கடாங்கா மாகாணம் காங்கோவிடமிருந்து விடுதலையடைந்து விட்டதாக, லுமும்பா பதவிக்கு வந்த ஒரு மாதத்திலேயே அறிவித்தான். பிரதமர் லுமும்பாவும் குடியரசுத்தலைவரும் கடாங்காவிர்கு செல்லும்போது அவர்களது விமானத்தை தரையிறங்க அனுமதி மறுத்தான் மோயீஸ். லுமும்பா விமானியை நீ தரையிரக்கு என்றபோது நான் பெல்ஜியன் எனது அர்சாங்கம் சொல்வதைத்தான் கேட்பேன் என்றான். ஒருவாறு தரையிரக்கபட்ட பின்னர் அங்கே பெல்ஜிய ராணுவம் குவிக்கப்பட்டதைக் கண்டார்கள்.

இதற்கிடையே அமெரிக்க உளவாளிகள் சில அரசியல்வாதிகளையும், ராணுவ அதிகாரிகளையும் ஏஜெண்டுகளாக வென்றெடுத்தார்கள், அதில் முக்கியமானவன் ஜோசப் டிசியரே மொபுடு.  லுமும்பாவிற்கு நாட்டின் நிலைமை புரிந்தது, கைமீறிபோய்விட்டது. தங்களுக்கான ஆயுதம் தாங்கிய குழுவை உருவாக்காதது மிகப்பெரிய தவறாக உணர்ந்தார். பிரிவினை சக்திகளை முறியடிக்க ஐநாவின் உதவியை நாடினார், ஆனால் பயனளிக்கவில்லை. சோவியத்தின் உதவியை நாடப்போவதாக குடியரசுத்தலவரிடம் சொன்னார், இதற்கிடையில் ஊடகங்கள் லுமும்பாவை கம்யூனிஸ்ட் முத்திரை குத்தியது, சோவியத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று பத்திரிக்கைகள் எழுதின. நாடாளுமன்றத்தில் காரசார்மான விவாதங்கள் நடைபெற்றன.

அமெரிக்க ஏஜெண்டாக மாறிய ராணுவ ஜெனரல் மொபுடு 1960ம் ஆண்டு செப்டம்பரில் அரசியல் கட்சிகளை தடைசெய்து உத்தரவு செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுபோன்ற சூழலை ஏற்படுத்தினான். குடியரசுத்தலவர் பிரதமரை பதவிநீக்கம் செய்ததாகவும் பிரதமர் லுமும்பாவை வீட்டுச்சிறையில் அடைத்தான். 1960 ஆண்டு நவம்பர் 27ம் தேதியன்று ஒரு மழையிரவில் வீட்டுக்காவலில்இருந்து தப்பி தன்னுடைய செல்வாக்குள்ள ஸ்டான்லிவில்லெ பகுதிக்கு தப்பியோட முயன்றார், ஆனால் மொபுடுவின் ஆட்களால் சங்குரு நதிக்கரையில் டிசம்பர் 2ம்தேதி கைதுசெய்யப்பட்டார். அங்கிருந்த ஐநா படைகள் அமெரிக்க ஆணைக்கு இணங்க வெறுமனே வேடிக்கை பார்த்தன.


கைதுசெய்யப்பட்ட லுமும்பாவும் சக அமைச்சரவை சகாக்கள் இருவரும் பெல்ஜியத்துருப்புக்களின் கட்டுப்பாட்டில் சித்ரவதைக்குள்ளானார்கள். பெல்ஜியாவும் அமெரிக்காவும் லுமும்பாவை சுட்டுக்கொள்வதற்கு ஏற்பாடுசெய்தன. கடைசியில ஏகாதிபத்தியத்தின் கைப்பவையான ஷோம்பே வின் கட்டுப்பாட்டிலுள்ள கடாங்கா மாகாணத்த்இற்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்து தான் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தன்னுடைய மனைவிக்கு எழுதிய கடிதத்தில்,

 “எந்தவொரு அடக்குமுறையும், சித்திரவதையும் என்னைப் பணிய வைக்க முடிந்ததில்லை. ஏனெனில், அடிமைப்பட்டும், தலை குனிந்தும் எனது புனிதமான கொள்கைகளுக்கு துரோகம் செய்தும் வாழ்வதை விட, எனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைக் கைவிடாமலும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமலும் மரிக்கவே நான் விரும்புகிறேன். எனது கூற்றை வரலாறு ஒரு நாள் சரியென நிரூபிக்கும். அந்த வரலாறு பிரஸ்ஸல்சும், பாரிசும், வாஷிங்டனும், ஐ.நாவும் கற்பிக்கும் வரலாறாக இராது. மாறாக காலனியாதிக்கத்திலிருந்தும், அதன் கைப்பொம்மைகளிலிருந்து விடுபட்ட ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் வரலாறாக இருக்கும்.” இவ்வாறு எழுதினார்.

ஜெனரல் மொபுடு ஆட்சியைக் கைப்பற்றினான், அரசாங்க விழாவில் கான்கோவின் தேசிய நாயகன் “லுமும்பா” என்றான், அதே சமயம் 1960ம் ஆண்டு ஜனவரி 18ம்தேதி லுமும்பாவும் அவரது இரு தோழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தடயங்களை அழிப்பதற்கு உடல்களை ரம்பத்தால் அறுத்து அமிலக்கரைசலில் தீயிட்டு எரித்தார்கள். உலகெங்கும் ஏகாதிபத்தியம் விலைக்கு வாங்கமுடியாத மக்கள் தலைவர்களை  கொலைசெய்தார்கள், அதில் பாட்ரிச் லுமும்பா கடைசிவரை அனைத்து சித்திரவதைகளையும் உறுதியோடு எதிர்கொண்டதாகவும், தனது மரண நொடியிலும் கூட கொலையாளிகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் பிற்காலத்தில் அவரது கொலையாளிகள் ஒப்புக் கொண்டனர்.

அவர் கொல்லப்பட்டபோது அவருடைய வயது 35, இளம் வயதில் ஒரு நாட்டிற்கு பிரதமராவது ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடியாக லுமும்பா இருந்தார்.

கருத்துகள் இல்லை: