![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjOeWztY_j-ulNmpU5eZPuDKEA5IfCzYl9uHyo0ncfPjUZcQ9Epvp1ynluBtOGFAWfR6AxWbNSui8NS591JZ2xeqGh8U4SrRI9sQXWgmdQ-SnCZENLyp4AAdmIfsG9tx9RtNo3SZFL7G8/s400/image008.jpg)
இந்தியாவில் காலத்திற்கு ஏற்றவாறு சில சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை அல்லது நீதிபதியை விமர்சனம் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிறது. தீர்ப்பு வழங்குகிற நீதிபதியும் மக்களில் ஒருவர்தான். அவரும் மற்ற அரசு ஊழியர்களைப் போல லஞ்சம் பெற்று தவறான நீதியை வழங்கும் போது எப்படி விமர்சனம் பண்ணாமல் இருப்பது. சில சமயங்களில் சட்டமன்றம், பாராளுமன்றங்களினால் செயல்படுத்த முடியாதவற்றை நீதித்துறை தீர்ப்பின் மூலம் கட்டாயமாக அமலாக்கப்படுகிறது. நீதித்துறையில் “இறையாண்மை” என்ற பெயரால் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. நீதித்துறையின் மீது எந்த வித குற்றச்சாட்டு வைக்கப்படும்போது அதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. ஊழலின் வடிவங்கள் கோடிகளில் பரிமாணம் பெற்றுள்ள சூழலில் நீதித்துறையின் களங்கத்தை தாமாகவே துடைக்க வேண்டும். லஞ்சஒழிப்பை எங்கிருந்து தொடங்குவது, மேலிருந்து கீழா அல்லது கீழிருந்து மேலா எனும் கேள்வி வரும் போது முதலில் அதிகாரம் படைத்த மேல் நிலையில் இருந்து தொடங்கும் போது கீழ் நிலையில் தானாக மாறிவிடும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9R_XjcVyk8iFcVbUpqpOozlsoYDvY7Y_f7NhWYEWP-cSyUmJqJkJ16OcriOJDQK4y95x4fO01Y_1WEds6vS_QI8JIiWkasHXcPX1fIVTJYBBD5PgtgmIcCMMy0SJKkw8wNSLa6k0xnSs/s400/Prashant-and-Shantibhushan.gif)
உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதிகளில் 16 பேரில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பிரசாந்த்பூஷன் “Tehelka” விற்கு பேட்டியளித்த பின்பு அவர் மீது உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. அத்துடன் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு பிரசாந்பூஷனின் தந்தையும் முன்னால் சட்ட அமைச்சருமான சாந்திபூஷன் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஊழல் புகார் சுமத்தியுள்ள 8 நீதிபதிகளின் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். சாந்திபூஷன் உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர், இவர் மொராஜிதேசாயின் மந்திரி சபையில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர். இந்திராகாந்தியின் “தேர்ந்தெடுப்பு” செல்லாது என்று வாதாடியவர். அவர் வழியில் பிரசாந்பூஷன் CAMPAIGN FOR JUDICIAL ACCOUNTABLITY என்ற அமைப்பை நிறுவி நீதித்துறை செய்யவேண்டிய சீர்திருத்தம், தீர்ப்புகளின் விமர்சனம், நீதிபதிகளின் முறைகேடான தீர்ப்புகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிவருகிறார்.
கர்நாடக முன்னால் தலைமை நீதிபதி P.D.தினகரன் சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக பதவிவுயர்வு வழங்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்குழு முடிவு செய்ததை எதிர்த்து ஊழல் கறைபடிந்த நீதிபதியை உச்சநீதி மன்றத்தின் படியேறாமல் தடுத்து நிறுத்துயவர். நீதிபதி தினகரனை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். அது என்னவாயிற்று என்று இதுவரை எதுவும் தெரியவில்லை. முடிவாக சிக்கிம் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்னமும் பதவியில் நீடித்து வருகிறார்.
சென்ற ஐக்கிய முன்னனியின் ஆட்சியில் நிரைவேற்றப்பட்ட மூன்று முக்கிய மசோதாக்களில் தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதா இடது சாரிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக இச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் இன்று இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளில் தற்போதைய UPA அரசு முனைப்பாக உள்ளது. சமீபகாலமாக இச்சட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்த சூழ்நிலையில் அந்த சட்டம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஆர்வலர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். தன்னார்வ நிறுவனங்கள் செய்து வரும் இவ்வியக்கத்தை இடதுசாரிக் கட்சிகள் பொறுப்பேற்று நடத்த வேண்டும். பொதுவாழ்வில் நேர்மையைக் கடைபிடிப்பவர்களால் மட்டுமே இந்த இயக்கத்தை நடத்த முடியும். இந்தியாவில் பொதுவாழ்க்கையில் உயர் பதவி வகிப்பவர்கள் தங்களின் வருடாந்திர சொத்து பற்றிய விவரங்களை மக்களுக்குத் தாமாகவே தெரியப்படுத்த வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் அதிகரிகள், நீதிபதிகள் தலைமை நீதிபதி உட்பட அனைவரும் மக்களுக்கு தகவல் அளிக்க கடமைப்பட்டுள்ளனர். அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் நடைபெரும்.
நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் முதல் பத்து இடத்திற்குள் இருந்தாலும் உலகில் வறுமையானவர்கள் இந்தியாவில் பாதிப்பேர் உள்ளனர். ஊழலின் தரவரிசையில் 180 நாடுகளில் நாம் 80-வது இடத்தில் உள்ளோம் . அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் சோதனை செய்வதன் மூலம் இந்தியா வல்லரசு வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம், அது நமக்கு வேண்டாம், நமக்குத் தேவை “நல்லரசு” அது மக்களால் மக்களுக்காக மட்டுமே. மத்திய அரசோ மாநில அரசோ நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும் ஆளும் வர்க்கமும் பங்குபோட்டுக் கொள்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி சமீபத்திய காமன்வெல்த் போட்டிகளில் அரங்குகள் அமைப்பது வரை ஆட்சியாளர்கள் ஊழல் புரிந்துள்ளனர். இந்த நாட்டின் இயற்கை வளங்கள் தனியார் நிறுவனங்களாலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் சூறையாடப்படுகின்றன. நீதித்துறையும் அதன் பங்கிற்கு லஞ்சப்பணத்திற்காக சுற்றுச்சூழலை மதிக்காத பெரு முதலாளிகளின் நலன்களூக்காக தீர்ப்பு வழங்குகிறது.
மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைகளின் தீர்ப்புகள் விரைவாக அமையவேண்டும், சமீபத்திய ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசுபடுத்தியதால் அந்நிறுவனத்தை மூட தீர்ப்பு அளித்துள்ளது, மத்திய அரசின் உணவு தானியக்கிடங்கில் உண்வு தானியங்கள் புளுத்துப்போவதற்குப் பதிலாக எழை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் அரசை சாடியதை பாராட்டப்படவேண்டும். அதே நேரத்தில் குடிமக்களின் நீதியின் மீதான விமர்சனங்களை ஆராயவேண்டும். வெளிப்படையான நிர்வாகத்தில் தீர்ப்புகளை விமர்சனம் செய்வதில் என்ன தவறு? குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதிகளின் மீது வழக்கு தொடர்ந்து நீதித்துறை அதன் களங்கத்தை துடைக்க முயற்சிக்கவேண்டும்.