வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஸ்டீபன் ஹாக்கிங் - சக்கரநாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்.

மனிதர்கள் பிரமிப்பு நீங்காமல் இருப்பது இந்த பிரபஞ்சத்தை பற்றிதான், பிரபஞ்சம் எப்போது தோன்றியது, யாராவது படைத்தார்களா? இன்னும் எவ்வளவு நாள் உலகம் / பிரபஞ்சம் நீடிக்கும்? பூமியில் மட்டும் உயிரினமா? வேற்று கிரகங்களில் மனிதர்கள் உண்டா? குழந்தைகள் எல்லாவற்றையும் வியப்பதைப்போல் மனிதர்கள் பிரபஞ்சத்தை பார்த்து வியக்கிறார்கள். இயற்பியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மர்மான முடிச்சுகளை ஒவ்வொன்றாக கட்டுடைத்துவருகிறார்கள்.அப்படிப்பட்ட விஞ்ஞானிகளில் நீயூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையி ல் சமகால விஞ்ஞானியாக அறியப்படுபவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங். பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சி நடந்தாலே கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வி வந்துவிடும். அப்படி பிரபஞ்சத்தின் தோற்றுவாய் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் கேட்கப்பட்டபோது “அப்படியெல்லாம் ஒருவருமில்லை; அவருக்கு இங்கு வேலையுமில்லை; அப்படியொருவர் இங்கு அவசியமுமில்லை” என்று சொல்லிவிட்டார். பைபிளில் சொன்னதற்கு மாற்றாக சூரியமையக்கருத்தை வலியுறுத்திய கலிலியோவுக்கு தனிமைச்சிறை தண்டனை, புரூனோவை உயிரோடு எரித்துக்கொன்றார்கள். 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானயுகத்தில் ஸ்டீபனுக்கு அப்படியொரு தண்டனைதந்துவிடமுடியுமா? சரி உட்கார்ந்து பேசுவோம் என்று வாடிகன் நகருக்கு விஞ்ஞானிகளை போப் ஆண்டவர் அழைத்தார், அதில் ஸ்டீபனும் கலந்துகொண்டார், மனம்விட்டுப் பேசினார்கள்.

போப்: கோளம் வெடித்துப்பிரபஞ்சம் தோன்றிய பரிணாமத்தைப் பேசுகிற உங்கள் கோட்பாட்டில், "what place you have assigned for God".

ஹாக்கிங்: In my theory there is no place for God! முற்காலத்தில் மழைக்கென்று ஒரு கடவுளையும், புயலை உற்[பத்தி செய்ய ஒரு கடவுளையும், நோய்வந்தால் அதையும் கூட ஒரு கடவுளின் தண்டனையாகவே கருதினோம். ஆனால் அவையெல்லாம், சில நியதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிற பிரபஞ்ச நிகழ்ச்சிகள் என்று நாம் இப்போது உணர்கிறோம். அப்போதெல்லாம் கடவுள்தான் எங்கோ உட்கார்ந்துகொண்டு எல்லாச்செயல்களயும் செய்துகொண்டு வருகிறார் என்று நம்பினோம். In those days God was full of jobs; but now we have made God incresingly jobless!

கனத்தமெளனம் நிலவிய சூழ்நிலையில் மறுபடியும்..

போப்: கோளம் வெடித்ததாகச் சொல்கிறீர்களே கோளத்தை வெடிக்கச்செய்தது யார்? who casused the Big Bang?
நிதானமாக...

ஹாக்கிங்: Perhaps there, to cause the Big Bang, We may require a God!

போப்: Thank God! God is there!

விடைதெரியாத கேள்விகளுக்கு எல்லாம் ஈசன்செயல் என்று சொல்வது மாதிரி போப்பிற்கு திருப்தியானவுடன், விஞ்ஞானிகளுக்கு அன்பான ஒரு எச்சரிக்கை விடுத்தார், “ பிரபஞ்சம் எங்கே எப்போது தோன்ரியது என்ற விசயத்தை விஞ்ஞானத்தின் கைகளில் விட்டுவிடமுடியாது, அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அதில் மூக்கை நுழைக்கவேண்டாம்”.

அடுத்த அமர்வில், “நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இப்பிரபஞ்சம், இன்று விரிந்து, விரிந்து சென்று கொண்டிருக்கிறது.ஒரு காலகட்டத்தில் அது சுருங்க ஆரம்பிக்கும்.சுருங்கிச் சுருங்கி மேலும் சுர்ங்கமுடியாத நிலையை அடையும்போது, மறுபடியும் அது விரிய ஆரம்பிக்கும்.விரிய ஆரம்பித்தவுடன் அப்படி, எப்போது தனிமங்கள் உருவாகின’ நடசத்திரங்கள் எவ்வாறு உருவாகின? அவைகளின் கதி என்ன?விதி என்ன? என்பதையெல்லாம் விரிவாக எடுத்துரைக்கும் கணிதங்கள் கைவசம் இருக்கின்றன; இதில் எங்கே கடவுள் வருகிறார்? அவர் வருவதற்கு என்ன அவசியம்; அவருக்கு இங்கே என்ன வேலை?” என்று கொஞ்சம் கடுமையாகவே வாடிகன் அமர்வில் ஸ்டீபன் பேசினார்.

அறிவியல்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அதுவரை அறிமுகமாயிருந்த ஸ்டீபன் ஹாக்கிங் “A Brief History of Time" என்ற புத்தகத்தை எழுதியதற்கு அவருடைய புகழ் மற்ற மக்களுக்கும் பரவியது, அந்த நூலை எளிமையாக அறிவியல் துறைக்கு அப்பாற்பட்ட மக்களுக்கும் புரியும்வண்ணம் எழுதியிருந்தார். உலகில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்றான இந்த புத்தகம் விற்பனையில் கின்னஸ் சாதனை புரிந்தது, உலகின் 60 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
                                -------------------

இவ்வளவு பிரபலமான அந்த இயற்பியல்வாதி எப்படி சக்கரநாற்காலியில் சிக்குண்டு கிடக்கிறார், அவருக்கு என்னவாயிற்று? சரியாக கலிலியோ பிறந்தபின் 300 வருடங்கள் கழித்து பிறந்தார் ஸ்டீபன். சாதாரணக்குடும்பத்தில் பிறந்த ஸ்டீபனின் தந்தை ஒரு மருத்துவர், அவருடைய தாயாரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.பள்ளிக்கல்வியை முடித்தவுடன், தந்தை தன்னைப்போல் மகனை மருத்துவம் படிக்கவிரும்பினார். ஆனால் ஸ்டீபனுக்கு இயற்பியல் படிப்பதில் ஆர்வம். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் வேதியியலையும் தெரிவுசெய்து படித்தார். அங்கு படித்த மூன்று ஆண்டுகளில் எப்போதும் தனிமையாக இருப்பார், விளையாட்டு எதிலும் ஆர்வமில்லை. ஒரே ஒரு விளையாட்டில் மட்டும் படகுச்சவாரி மட்டும் ஆர்வம். இயற்பியல் பாடம் மற்ற மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால், ஸ்டீபனுக்கோ மிகமிக எளிதாக இருந்தது. ஸ்டீபனுக்கு பிரபஞ்சவியல் பற்றிய படிப்பில் ஆர்வமிருந்தது. அதனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரபஞ்சவியல் படித்தார். பல்கலைக்கழகத்தில் கடைசிப் பருவம் முடிவுக்கு வந்தநேரம் ஒரு நாள் மாடிப்படிகளிலிருந்து தலைகுப்புற விழுந்தார். பின்னர் தற்காலிகமாக நினைவுகளை இழந்தார். மருத்துவத்துறை அவருக்கு நரம்புமண்டலத்தை தாக்கும் நோய் வந்துள்ளதாக அறிவித்தது.

 
அவருக்கு வந்த நோயை ALS என்கிறார்கள், அமியோட்ரோஃபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிக் என்ற விளக்கம். இன்னும் புரியவில்லையா? இதற்கு இன்னொரு பெயர் லூ கெஹ்ரிக் நோய். அதாவது முதன்முதலில் லூகெஹ்ரிக் என்ற கூடைப்பந்துவீரரை இந்த நோய் தாக்கியதால் நோய்க்கும் அந்த பெயர் வைத்துவிட்டார்கள். நமது உடலிலிரண்டுவகையான தசைகள் உள்ளன, ஒன்று தானாக வேலைசெய்பவை (இதயம், நுரையீரல்,கிட்னி) இன்னொன்று நமது விருப்பப்படி செயல்படும் உறுப்புகள் (கை,கால்,வாய்,கண்). ALS நோய் வந்தவர்களுக்கு நமது விருப்பப்படி செயல்படும் உறுப்புக்களை இயக்கமுடியாது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் காரணமில்லாமல் கீழே அடிக்கடி விழுந்துவிடுவார்கள், பேச்சு கொஞ்சம்கொஞ்சமாக குளறி விடும்,கை, கால்கள் பலவீனமாகிவிடும் சாப்பிடவோ, எழுதவோ கஷ்டமாகிவிடும்.அப்படி படிப்படியாக தாக்குண்டு 30 ஆண்டுகளாக சக்கரநாற்காலியில் வாழ்ந்துவருகிறார். மனபலம் உடல்பலத்தைவிட வலிமையானது என்பதை தன் வாழ்க்கையில் நிரூபித்துக்காட்டியவர் ஸ்டீபன ஹாக்கிங்.


அவருடைய வாழ்க்கை வரலாற்றை தமிழில் நாகூர்ரூமி “சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்” என்ற நூலை எழுதியிருக்கிறார். ஸ்டீபன் ஹாக்கிங்னுடைய இளமைப்பருவம், அவருக்குவந்த நோய், குடும்பம், அவருடைய சாதனை, விருதுகள் என்று எளிமையாக எழுதியிருக்கிறார். மற்றொரு நூல் டாக்டர். அழகர் ராமானுஜம் அவர்கள் “மூலத்தைத் தேடும் முதன்மை விஞ்ஞானி” என்ற நூல் எழுதியிருக்கிறார். 100 பக்க நூலில் 75 பக்கங்கள்வரை ஸ்டீபனுடைய ஆராய்ச்சி, குடும்பம்,கல்வி, கருங்குழி, ஆராய்ச்சிகள், ஸ்டீபன் எழுதிய நூல்பற்றி, இன்னும் ஒரு இயற்பியல்வாதியான இவர் நியூட்டனின் பிரபஞ்சம், ஐன்ஸ்டீனின் சார்பியல் என்று விளக்கிவிட்டு, கடைசியாக வேதாத்ரிமகரிஷி இதையெல்லாம் ஒரு மெய்ஞானியாக சிந்தித்திருக்கிறார், ஸ்டீபன் ஹாக்கிங் வேதாத்ரியின் தத்துவத்தை ஒட்டி சிந்தித்தால் மாமனிதராக வருவார். விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானி முடித்ததில் ஒன்னொருவர் தொடங்குகிறார், அவ்வாறே ஐன்ஸ்டீன் நீயூட்டனின் தோள்மீதிருந்து சிந்தித்தார், ஆனால் மெய்ஞானிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தத்துவங்கள் உருவாக்கினார்கள் என்ற விமர்சனத்தை வைக்கிறார்.

 
 
நியூட்டன் பிரபஞ்சத்தை காலம், வெளி, பொருள் மற்றும் ஆற்றல் என்று நான் அநாதிகள் கொள்கையை ஐன்ஸ்டைன் வெளியும் காலமும் ஒன்றில் அடங்கும்; பொருளும் ஆற்றலும் அவ்வாறே என புதுப்பார்வை கொடுத்தவர் என்கிறார். மூலம் என்பது ஒரு காலகட்டத்திற்கு முன்பு வெடித்த புள்ளி அல்ல, மாறாக அது என்றேன்றும், எங்கெங்கும் நிரந்தரமாக எல்லையற்றதாக உள்ள பெருவெளியே என விஞ்ஞானம் உணர ஸ்டீபன் அயராது முயலவேண்டும், ஸ்டீபன், வேதாத்ரிமகரிஷியாக மலரவேண்டும் என்று டாக்டர். அழகர்ராமானுஜம் அசைப்படுகிறார். அப்படி ஆராய்ந்தால்தான் நீயூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஸ்டீபனையும் இணைக்கமுடியும் என்கிறார். இந்த மாதிரி எல்லாம் பிரம்மம் என்று சொலலிவிட்டால் இத்தனை ஆராய்ச்சி தேவையில்லையே!  

புதன், 21 ஆகஸ்ட், 2013

'வெட்டுப்புலி' நாவல்


அண்மையில் வாசித்த நாவல் வெட்டுப்புலி, தமிழ்மகன் எழுதிய நாவல். சென்ற ஆண்டில் கோவை புத்தகத்திருவிழாவில் வாங்கி வாசிக்காமலேயெ இருந்தேன். தகவல்கள் நிறைந்த கட்டுரைகளைப் படித்து சலிப்புதட்டும்போது புனைவு இலக்கியம் நோக்கி மனம் செல்கிறது. எப்படி இந்த நூலை வாங்கினேன் என்று தெரியவில்லை, தமிழ்மகன் எழுதிய இன்னொரு புத்தகமும் வாங்கினேன் ‘ஆண்பெல்-பெண்பால்’ அதை வாசித்தபோது ஒன்றுமே புரியவில்லை, எனது துணைவியாரும் வாசித்துவிட்டு புரியாமல் கைவிடப்பட்டது அதேபோல் தான் இதுவும் இருக்குமோ! என்று விமர்சனங்கள் சிலவற்றை வாசித்தபோது இந்நாவல் ஒரு தமிழகத்தின் குறிப்பீட்ட பகுதி மக்களின ஏறத்தாழ நூற்றாண்டுவரலாற்றை தந்திருக்கிறார். அந்த நாவலில் வருகின்ற மொழி சென்னை மொழியல்ல, திருவள்ளூர் பகுதியின் மொழி. எனக்கு ஏற்கனவே மணலி, ஆண்டார்குப்பம், புழல், செங்குன்றம், கொசப்பூர் பகுதி மக்கள் பேசும் மொழி எனக்கு பரிச்சயமாக இருந்தது. எண்ணற்ற சொற்களுக்கு கடைசிபக்கத்தில் பொருள் கொடுத்திருக்கிறார். தமிழ்-தமிழ் அகராதி தேவைப்படுகிறது. கரிசல் வட்டார மொழிக்கென்றே கி.ரா. ஒரு நூல் எழுதியிருக்கிறார். இதை ஒரு வரலாற்றுப்புதினம் என்று கூடச்சொல்லலாம். மன்னர்களைப் பற்றி அவர்களின் வீரம்,போர்கள், அந்தப்புரம் மட்டும் வரலாறுகள் அல்லவே! மக்கள் அந்த காலகட்டத்தில் எப்படி வாழ்ந்தார்கள், என்ன சாப்பிட்டார்கள், கல்விமுறை எப்படி, தொழில் என்ன? அறிவியல் வளர்ச்சி, உடைகள், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவியதா,எப்படி பயணம் மேற்கொண்டார்கள், நாட்டு விடுதலையில் கிராமபுற மக்களின் பங்கு என்ன? வெள்ளையர்களின் ஆட்சியை எப்படி பார்த்தார்கள்? சினிமாவின் வளர்ச்சி, திராவிட இயக்கங்களின் தோற்றம், பெரியாரின் தாக்கம் என பல தகவல்கள் அடங்கிய நாவலாக அமைந்திருக்கிறது.

ஒரு தீப்பெட்டி அட்டையில் ’வெட்டுப்புலி’ படத்தை தாங்கி பார்த்திருக்கிறோம், அது திருவெற்றியூரில் இருக்கிற விம்கோ தீப்பெட்டி தொழிற்சாலையின் தயாரிப்பு. ஊத்துக்கொட்டை அருகே சென்னாரெட்டி என்பவர் ஒரு சிறுத்தையை கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறார், வெள்ளைக்காரர்கள் துப்பாக்கிகொண்டு சிரமப்பட்டு வேட்டையாடிக்கொல்லும் சிறுத்தையை கத்தியை வைத்து கொன்றது வீரதீரச்செயலாக செய்தித்தாளில் அச்சாகிறது, அந்த பிரபலத்தினால் தீப்பெட்டியின் அட்டையில் அந்தப் படத்தை அச்சடித்து விறப்னையாகிறது. இவர் சிறுத்தையைக் கொன்றது பூண்டி அருகேயுள்ள சின்னாரெட்டியின் சொந்த ஊரான ரங்காவரத்தில் ஒருமாதிரியாகவும் லட்சுமணன் ஊரான ஜகந்தாதபுரத்தில் வேறுமாதிரியாகவும் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவரை சிறுத்தைசென்னாரெட்டி என்று சொன்னால் சுற்றுவட்டாரத்திற்கே தெரியும். லட்சுமணன் வசிக்கும் ஜெகன்நாதபுரத்தை பற்றிய சொல்லப்படுகிறது, அந்த ஊர் சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள ஊர்.வெள்ளையர்களின் ஆட்சியில் கிராமங்களில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதே தெரியாமலே இருக்கிறார்கள், அது ஏதோ நகரத்தில் இருப்பவர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான சண்டை என்றே கருதுகிறார்கள். கிராமங்களில் அக்ரஹாரங்கள் என்ற அகரம் தனியாகவும், கொஞ்சம் நிலம் வைத்திருக்கும் பிறசாதிகள் அக்ரஹாரத்திற்கு அருகேயும், விவசாயிகளுக்கு கலப்பை செய்யும் ஆசாரிகளும் இருந்தார்கள். பறைசேரிகள் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகவும் இருக்கின்றன, செத்துப்போன மாடுகளை எடுத்துக்கொண்டுபோய் சாப்பிடும் ‘சக்கிலிப்பாளையம்’ இன்னும் கொஞ்சம் தள்ளியிருக்கிறது. விவசாயிகள் வருடந்தோறும் விளைச்சலில் பாதியை ஜமீனுக்கு அளக்கவேண்டும்.கல்விபண்டு என்று வருசாவருஷம் விளைச்சலில் வரி அளப்பார்கள், எந்த வாத்தியானும் ஊருக்குள் வந்து பாடம் சொல்லித்தந்ததில்லை. ஜமீந்தார்கள் ஒவ்வொரு ஊரையும் நானூறு ரூபாய் ரொக்கம் கொடுத்து வாங்கியிருந்தார்கள். மாட்டுவண்டி வைத்திருப்பதையே விவசாயிகளுக்கு பெரியவிசயம், “குதிரை வச்சிருந்தா ஜமீன் எதிரியா நினைச்சி சுட்டே போடுவான்”.
 

 சீதாரமையரு ஆத்துல குளிச்சிட்டு கரையேறும்போது கலப்பையை தூக்கிட்டு ஆளுங்க, மாடு-கன்னு நடமாட ஆரம்பிச்சுரும், பதபதைச்சுபோவாரு ஐயரு. ‘தீட்டாப்போச்சு தீட்டாப்போச்சு’ நு துடிச்சு போய்டுவாரு. சாதி விசயங்களில் கறாராக இருந்தார்கள். பள்ளு பறைகள் மற்றவர்களை தொட்டு தீட்டு ஏற்படும் பாவம் இவர்களுக்கு வந்துசேரும் என அஞ்சினார்கள். பெண்கள் கிராமங்களில் எப்படி இருந்தார்கள் என்பதற்கு, லட்சுமணனின் தாய், “எல்லாரும் சாப்பிட்டுவிட்டு முடித்துப் படுத்த பின்னாடி சுவர் பக்கமாக திரும்பி உட்கார்ந்து மிச்ச்மிருக்கும் சாப்பாட்டை குழம்பு ஊற்றி நான்கு உருண்டையாக வாயில் போட்டுக்கொள்வாள்”. செருப்பு அணிவதற்கே கிராமத்தில் பெண்கள் ‘யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க’ என்று லட்சுமணனின் மனைவி சொல்கிறார். ஆண்கள் எல்லாரும் குடுமி வைத்திருந்தார்கள், சிலர் சுத்தமாக தலைகுளித்து பேன் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் சிலர் பக்கத்தில் வந்தாலே வேப்பெண்னெய் வாசம் அடிக்கும். அந்த ஊரில் இருந்த மணி ஐயருடைய தாத்தா காலத்தில் நவாப் வரிவசூலுக்காக அந்த ஊருக்கு வருகிறார், ஊர்க்காரர்கள் எல்லாரும் வணங்கி மரியாதை செலுத்துகிறார்கள்.மணி ஐயரின் தாத்தாவும் பாட்டியும் சாஷ்டங்காமக நவாப் காலில் விழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள். நவாபின் மனைவியை ‘பூ நாகம்’ தீண்டாமல் காப்பாற்றியதற்கு இருநூறு காணியை இனாமாகத் தந்தான் ஐயருக்கு, அதுவே இனாம் அகரம் ஆகிப்போனது. சேரிமக்களுக்கு ஏன் காணிகள் இல்லாமல் விவசாயக்கூலிகளாக இருந்தார்கள் என்பதற்கு, தரிசு நிலத்தை திருத்தி உழவுசெய்து விளைச்சலில் பாதியை ஜமீனுக்கு அளந்தால் நிலம் சொந்தமாகிவிடும். சேரிஜனம் அவ்வளவு சரியாக நெல்லை அளந்து நிலத்தை தக்கவைத்துக்கொள்வதில்லை. ஆனால் திருத்திய நிலத்தை ஒருமூட்டை நெல்லுக்கும், கேழ்வரகிற்கும் கொடுத்துவிடுவார்கள், மீண்டும் தரிசு நிலத்தை பண்படுத்திக்கொள்ளலாம் என முயற்சிப்பார்கள். ஆனால் பண்படுத்திய நிலத்தை மீண்டும் தானியத்திற்கு கொடுத்துவிடுவார்கள். அறியாமையும் கூடவே பெரிய அளவில் நிலத்தை ஆக்ரமித்து உழுது பயிர் செய்வதில் அவர்களுக்கு வெட்கமும் தயக்கமும் இருந்தது.

தெலுங்குக்காரர்களுக்கு விவசாயம் செய்பவன் ரெட்டி, அதே சாதிப்பெயரே ஆந்திரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் வன்னியர்களுக்கும் ஆகிப்போனது, இன்னும் நாயகர்கள் என்றும், கொஞ்சம் தெற்கே போனால் படையாச்சி, வன்னியர்கள் என்றும் சாதி பெயர்களில் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். சாதியை குலகவுரவத்தை தசரதரெட்டியின் முன்னோர்கள் காலத்திலிருந்தே காப்பாற்றி வருகிறார்கள் என்பதால் யாரும் மீறத்துணியவில்லை. லட்சுமணனை வெள்ளைக்கார ஜேம்ஸ்க்கு அவனுடைய குதிரையில் ஏறியதிலிருந்து பிடிக்காமல்போனது, வெள்ளைக்காரனிடமிருந்து காப்பாற்ற அவனுடைய பெரியம்மாவீட்டிற்கு தசரதன் அனுப்பிவைக்கிறார். அங்கே ரங்காவரம் பூண்டி ஏரியை அப்போதுதான் கட்டுகிறார்கள், அது சென்னையின் குடிநீர் சப்ளைக்காக வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்படுகிறது. ஏரியின் காண்ட்ராக்ட் வேலை சிறுத்தை சென்னாரெட்டியின் மகனுக்கு கிடைக்கிறது, அங்கே ஏரியை ஆழப்படுத்தவும் அகலப்படுத்தும் பணிக்கு லட்சுமணனும் செல்கிறான். அங்கே குணவதிமீது காதல்வருகிறது. அவள் சேரிப்பெண் என்று தெரிந்தும் அவளை மணக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறான். அதுவரை அவனும் சேரி ஜனக்களை அவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் பேர் சொல்லி அழைப்பது, ஒருமையில் விளிப்பது தான் ஊர்ப்பழக்கம். குணவதி லட்சுமணனை ரெட்டியாரே! என்றுதான் அழைக்கிறாள், தன்னுடைய காதலை அவளிடம் சொல்கிறான், இனிமேல் ரெட்டியாரே என்று சொல்லாதே! என்கிறாள். “நான் ரெட்டியார்னு சொல்லாட்டா எல்லாம் சரியாடுமா? நீ எங்க சித்தப்பனை வாடா போடானு கூப்புடறே.. எங்கம்மாவ பேடிட்டுத்தான் கூப்பிடுறே. அதையெல்லாம் வுட்டுடமுடியுமா? அவள் கேட்ட கேள்விக்கு நிலைகுலைந்து போனான்.

 நாம் இனிமேல் அவர்களை வேறுமாதிரி அழைக்கமுடியுமா?சாத்தியா? எப்பேர்பட்ட பைத்தியக்காரத்தனம்? குணவதியின் அம்மாவை எப்படி அத்தையென்றும், அவளுடைய சித்தப்பனை மாமா என்றும் எப்படி அழைக்கமுடியும்? எல்லோரையும் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள முடியுமா? நினைத்துப்பார்ர்க்க முடியாத செயலாக அந்தக் கணம் உணர்ந்தான். இப்போதுதான் ஞானம் வந்தமாதிரி யோசித்தான். அவர்களும் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள், கேட்கிறார்கள் , உழைக்கிறார்கள் என்பது அவர்களையும் நம்மையம் ஒரே தராசில் வைக்கப்போதாதா? அவன் உலகைப் புதிதாகப்பார்த்தான். அந்தக்காதலினால் சேரி ஜனங்கள் குடியிருப்பை காலிசெய்ய நேர்ந்தது. லட்சுமணனின் அப்பா தசரதனும் ஊர்க்காரர்களைப்போல் மூர்க்கமாக சேரி ஜனங்களை நடத்துவதில்லை, ஒருமுறை மீதமிருந்த கூழை சேரிப்பெண்ணிடம் குடிக்கச்சொன்னபொது சக உழவுக்காரர்கள் எதிர்த்தார்கள் அதை சட்டை செய்யாமல், நாய்க்கு கூட ஊத்துவ, மனுசாளுக்குதரக்கூடாதோ என்ற தசரதனின் சொல்லுக்கு அவள் குடித்த பானையில் நாளை நான் எப்படி கூழ் குடிக்கமுடியும் என்கிறான். லட்சுமணனுக்கு பெரியார் கொள்கையில் நாட்டம் ஏற்படுகிறது.

 தசரதனின் குடும்பக்கதை தனியாகவும், ஆறுமுகமுதலி குடும்பக்கதை தனியாக சொல்லப்படுகிறது, ஆறுமுகமுதலி ஊத்துக்கோட்டையில் விவசாயம் செய்பவர், அவருடைய அண்ணன் கணேசன் சென்னையில் ரயில்வேயில் வேலைசெய்துகொண்டு மாம்பலத்தில் குடியிருக்கிறார் கணேசன் பெரியார் கொள்கையுடையவர், அண்ணனின் கொள்கை எதுவும் ஆறுமுகமுதலிக்கு பிடிக்கவில்லை. ஏன் பிராமணர்களை எதிர்க்கவேண்டும் என்கிறார். கணேசமுதலி என்ற சாதி அடையாளத்தை துறப்பதே பெரியார் கட்சியில் சேருவதற்கு முன்னுரை. கணெசனின் மகன் நடேசன் அப்பவைப்போல பெரியார் சிந்தனையிருந்தாலும் பிரிவினையை எதிர்த்தான், அப்பா பாரதிதாசனை வாசிக்கும்போது நடேசன் பாரதியைப் புகழ்ந்தான். ஆறுமுகமுதலி சினிமா தயாரிக்கும் ஆசையில் அலைகிறார், முயற்சி தோற்று ஒரு சினிமாக்கொட்டகை கட்டுகிறார். சுயமரியாதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு , அண்ணா பெரியாரை விட்டு பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தது என்று செல்கிறது. ஜஸ்டீஸ் பார்ட்டியில் முதலியார்களின் ஆதிக்கம்தான் இருந்தது, அதன் தாக்கம் பச்சையப்பா (முதலி) கல்லூரியிலும் சுயமரியாதை சிந்தனை வளர்ந்தது.

 சென்னை என்றாலே அது வேப்பேரி,செண்ட்ரல்,  புரசைவாக்கம் பகுதிகளில் வீடுகள் இருந்தன, பூந்தமல்லி சாலையின் மருங்கில் விவசாயம் நடைபெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. காபி குடித்தேன் என்று வெளியில் சொல்வதற்கே வெட்கப்பட்டார்கள். சைக்கிள் வைத்திருப்பவர்கள், ஓட்டத்தெரிந்தவர்கள் வசதியானவர்கள்.( இன்னும் எனது கிராமத்தில் சிலருக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது) 40களில் ஜப்பான்காரன் சென்னைப்பட்டணத்தில் குண்டுவீசியதையடுத்து நகரவாசிகள் காலிசெய்து அவரவர் சொந்தங்களைத் தேடி அசலூருக்கு ஓடுகிறார்கள். சினிமா பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆறுமுகமுதலிக்கு சினிமாப்படம் தயாரிக்க கிறுக்குபிடித்து சென்னைவந்து ஸ்டுடியோவுக்கு சென்று விசாரிக்கிறார், அப்போது எல்லாம் பக்திப்படங்கள் தான், கம்சவதம், பிரகலாதா, வள்ளிதிருமணம் என்ற படங்கள் தான். ஆறுமுகமுதலியின் அண்ணன் கணேசன், அந்த மாதிரி குப்பையெல்லாம் கிளராதே, வெளிநாட்டில் சமூகபடங்கள், குடும்ப உறவுகள் பற்றிய ப்டங்கள் எல்லாம் வருது அதைமாதிரி எடுக்கனும் என்கிறார். சென்னை கெயிட்டி தியேட்டரில் சினிமா பார்ப்பதற்கு ஆறுமுகமுதலி சென்ற போது மக்கள் “சினிமாக்கொட்டகையின் முன்னே பசித்திருப்பவன் சாப்பாட்டுக்கடைப் பார்க்கிற தோரணையில் ஏக்கம் கொண்டு காத்திருந்தார்கள்”. சென்னையில் போக்குவரத்து டிராம்கள் இருந்ததை பதிவு செய்கிறது. இன்றைக்கு இருக்கிற ‘பெரியார்திடல்’ காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை ஏலம்போடும்போது அதில் பெரியாரும் டெண்டர்மனு போட்டிருந்தார், பெரியாருக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக போட்டியாளர்களான ஜி;டி.நாயுடுவையும் ஆதித்தனாரிடம் பேசி ஏலத்திலிருந்து வாபஸ் வாங்கச்சொன்னார் காமராஜர். இந்த விபரம் பெரியாருக்குத் தெரிந்தால் கோபப்பட்டிருப்பார், அவரும் அவ்வளவு நேர்மை, ஈரோடு ரயில்நிலையத்திற்கே அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுத்தவர் பெரியார் என்ற தகவலும் உண்டு.

 நாற்பதுகள், முப்பதுகள், ஐம்பதுகள் என நாவலின் வரலாறு வளர்ச்சிபெறுகிறது. ஐம்பதுகளில் காந்தியைக்கொல்ல சதிசெய்தவராகக் கருதிய சாவர்க்கரின் படமும் காந்தியின் படமும் பாராளுமன்றத்தில் மாட்டப்பட்டன.பெரியார் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்தது அண்ணாவை பெரியாரிடமிருந்து முற்றிலுமாக விலகச்செய்தது. தென்னிந்திய நலுரிமைச்சங்கம் விக்டோரியா ஹாலில் 1915-16ல் துவக்கப்பட்டது, அதிலும் ஜஸ்டீஸ் பார்டியிலும் முதலியார் சமூகம் அதிக பங்குவகித்ததாலும் பச்சையப்பர் கல்லூரியில் அதன் தாக்கம் இருந்தது, அதே சமயத்தில் சாதி ஈடுபாட்டை வெளிக்கட்டிக்கொள்வதை மாணவர்கள் இழிவாகக்கருதினர் என்ற செய்தி இன்று முரணாக உள்ளது. பெரியார், அண்ணாத்துரையை சார்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக இருப்பார்கள் என்ற செய்தி எவ்வளவு சரி!ஐம்பதுகளில் திராவிட இயக்கத்தினர் ‘கருணாநிதி வகிடு’ சீவியிருப்பார்கள். இப்போது நடிகர்கள் ஸ்டைலில் முடிவெட்டுகிறார்கள் என்பது மாற்றம். இந்த நாவலை கல்லூரிப்பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து ‘காலஎந்திரத்தில்’ பயணம் செய்வது போல் உள்ளதென ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார். http://cdmissmdu.blogspot.in/2013/05/vettupuli-novel-what-i-taught-and.html இதை வாசித்தால் நாவலை வாசிக்க நிச்சயம் தூண்டும்.
 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கனிமக்கொள்ளை - விவாதம்

எல்லா இடங்களிலும் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகிறார்கள், அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. கோதாவரி ஆற்றுப்படுகையில் அரசாங்கத்துக்கு சொந்தமான இயறகை எரிவாயுவை ரிலையான்ஸ் காரனிடம் கொடுத்துவிட்டு அதற்கான விலைகளையும் இரண்டு மடங்காக்கி அம்பானிக்கு சொத்துசேர மத்திய அரசு வழிசெய்கிறது ஒரு புறம், தண்டகாரண்ய வனப்பகுதிகளில் கிடைக்கின்ற இரும்புத்தாது, அலுமினியம் , இன்னபிற தாதுக்களை தங்குதடையின்றி வெட்டியெடுத்து கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட்டுகள், அவர்களுக்கு தடையாக இருக்கின்ற பழங்குடிகளை காட்டைவிட்டு விரட்டிவிடுகிறார்கள். இதுவும் ஒரு பக்கம். கர்நாடாகாவில் பெல்லாரி சகோதரர்கள் பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் எதியூரப்பா ஆசியோடு இந்திய நாட்டின் இரும்புத்தாதுவை கப்பல்கள் வழியாக வெளிநாட்டிற்கு கடத்தினார்கள், தேசபக்தர்கள் செய்கிற காரியம் தேசவளத்தை கொள்ளையடிப்பது! கையிலிருக்கிற இரும்பைக் (கள்ளத்தனமாக) வெளிநாடுகளுக்கு கொடுத்துவிட்டு எப்படி நாம் வல்லரசாகப் போகிறோமே தெரியவில்லை, தவறு செய்தவர்கள் முற்றிலுமாக சுரண்டிய பின்னர் பிடிபட்டார்கள், அவர்களை என்ன செய்துவிடமுடியும் நமது சட்டத்தால்! இது ஒரு புறமிருக்க, தமிழ்நாட்டில் எத்தனையோ ஆண்டுகளாக கிரானைட்டு கற்களை வெட்டியெடுத்து துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்தார்கள், அதை கண்டுபிடித்து ? கண்ணுக்குத்தெரியாத ஒன்றை கண்டுபிடிக்கலாம்! ஆனால் எத்தனையோ லாரிகளில் கண்டென்ர்களில் ஏற்றிச் செல்லும் கிரானைட் கற்கள் அரசு நிர்வாகத்திற்கு தெரியவில்லையா? இப்பொழுது அங்கு செயல்பட்ட நிறுவனக்களை குவாரிகளை இழுத்துமூடியிருகிறார்கள், அந்த சூடு தணிவதற்குள் தூத்துக்குடி பகுதியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தாதுமணலை அள்ளி ஏற்றுமதி செய்துவருவது இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது????. அந்த மணலில் Ilmenite, Rutile, Zircon, Sillimanite, Garnet and Monazite போன்ற முக்கியமான கனிமங்கள் உள்ளன.

மண்ணிற்கு அடியே கிடைக்கும் தாதுக்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு அதாவது நாட்டு மக்களுக்குச் சொந்தம், அப்படியிருக்க ஆட்சிசெய்யும் அரசியல்வாதிகள், சில அதிகாரிகள் துணையுடன், அவர்களின் பினாமிகளாகவும் இயற்கை வளங்களை மாபியாக்கள் சூறையாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்காண பணத்தை சம்பாதிக்கிறார்கள், ஆனால் அந்தக் கொள்ளையினால் அரசாங்கத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்துவதோடு எதிர்கால தேவையை அழித்துவிடுகிறார்கள். இயற்கை செல்வங்களை அள்ளும்போது பின்பற்ற வேண்டிய எந்த உத்தியையும், சட்டத்தையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. கிரானைட் கற்கள் தோண்டியெடுக்கும்போது சரி இப்போது தாதுமணலை கடற்கரையில் அள்ளும்போது சரி பாதிக்கப்பட்ட கிராம மக்களை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை உயிரோடு விடமாட்டார்கள் என்பது ஆற்றுமணலை அள்ளும் சம்பவத்திலேயே தமிழகம் பார்த்தது. சுற்றுச்சூழல் மாசு, குடிநீர் ஆதாரத்தை அழித்தல், விவசாயநிலங்கள் பயனற்றுப்போதல் என்பது பெரும்பகுதி மக்களின் வாழ்க்கையை குலைத்துவிடுகிறது. ஆனால் அரசு இயந்திரம் பெரும்பகுதி மக்களின் நலனுக்கு அல்லாமல் கோரமான மூலதனத்தின் பக்கம் நிற்கிறது.

இதைப்பற்றிய ‘நேர்படப்பேசு’ நிகழ்ச்சி 14-8-2013 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர். கனகராஜ், திரு. வெங்கட்ராமன் என்ற வேதியியல் பொறியாளர்,திரு. சீனிவாசன் என்பவர் பூவுலகின் நண்பர்கள் மற்றும் திருமதி. எமி என்பவர் தூத்துக்குடி பஞ்சாயத்து அமைப்பிலிருந்து பேச வந்திருந்தார்கள். பூவுலகின் நண்பர்கள் இயற்கை அப்படியே விடவேண்டும், தொந்தரவு செய்யக்கூடாது.சுற்றுச்சூழலை பாதிக்கும் மணற் கொள்ளையை நிறுத்தவேண்டும் என்று வாதிட்டார். மணவாளக்குறிச்சியில் அரசாங்கத்தின் நிறுவனம் தாது மணலை அள்ளுவதால் சுமார் 900 பேருக்கு புற்றுநோயால் முடமாக இருக்கிறார்கள் என்றார்.

திரு.வெங்கட்ராமன் என்ற வேதியல் பொறியாளர், எல்லா நாடுகளிலும்தான் கனிமவளங்களை விற்கிறார்கள் நாம் விற்பதில் தவறேதுமில்லை என்றார். சீனிவாசன் சொன்ன radition காரணமாக புற்றுநோய் ஏற்பட்டது என்பதை மறுத்து நான் அந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகாலம் பணியாற்றுகிறேன் என்று கையை காமிச்சார். அவர் ஒரு அதிகாரி இதுவரை மண்லை கையினால் கூட தொட்டிருக்கமாட்டார். அந்த வேலைகளை கையாள் அள்ளும் தொழிலாளிகளுக்கு வருகின்ற நோய் இவருக்கு வர வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் scien technilogy வந்திருச்சு, ஜீரோ effluent discharge தான் தொழிற்சாலைகளெல்லாம் செய்கின்றன என்று ஏனோ தெரியவில்லை எல்லா பெருமுதலாளிகளுக்கும் ஸ்டெர்லைட் உட்பட சர்டிபிகேட் கொடுக்கிறார். இந்தமாதிரி அதிகாரிகள் ஒன்று தனியாரின் துஷ்பிரயோகத்திற்கு அஞ்சுகிறார்கள் அல்லது உடந்தையாக இருக்கிறார்கள். இன்னும் சொன்னார், பூவுலகின் நண்பர்கள் இந்த மாதிரி சுற்றுச்சூழல் கேடுனா கோர்டுக்கு போங்கோ! டிவி ஸ்டேசன் ல சொன்னா நடக்குமா என்கிறார். எல்லாத்தும் இப்பெல்லாம் science technology இருக்குனு சரடு விட்டார். அவர் ஏன் அப்படி பேசுனாரு என்பது புரியவில்லை. இந்தியாவுல எந்த கம்பெனியும் ஜீரோ effluent discharge விதிகளை மீறவில்லை என்று திரும்பத்திரும்ப சர்டிபிகேட் கொடுக்கிறார். ஒரு கம்பெனிய சொல்லுங்கன்னு கனகராஜ் கேட்டார், அது குஜராத்துல இருக்கு என்கிறார். கோர்ட்டுக்கு எத்தனையோ போன ஸ்டெர்லைட் ஆலையை ஒன்னும் செய்யமுடியலை. அதுக்கெல்லாம் தொழிற்சாலையை மூடிடமுடியுமான்னு கேட்குறார். அரசாங்கத்த நம்பனும், கம்பெனிய நம்பனும, கோர்ட்ட நம்பனும் சொல்றாரு. அரசாங்கம் சட்டம் எல்லா நல்லாத்தான் போடுது, அத நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கு, சுற்றுச்சூழல் பாதிப்புன்னா pollution control board ஐ கேட்கனும் சொல்லிக்கிட்டே இருந்தார்.

திருமதி.எமி என்கிற பெண்மனி நான் வி.வி.மினரல்ஸ்க்கு எதிரா 1000 மனு போட்டுருக்கேன், தாது மணலை பேசும் போது இந்தியா முழுக்க இருக்கிற எல்லா கொள்ளையையும் நிறுத்தனும்னு நிக்கிறாரு. இந்த மண்லை அள்ளவில்லையென்றால் அது அப்புறம் வேற நாட்டுக்கே போயிடுமாம், கடல்தான.. அந்த கலெக்டர் ரெண்டு வருசமா கோடிக்கணக்க வாங்கிட்டு இப்ப நல்லபேரு வாங்கிட்டாரு, இப்ப ஏதோ தொழில் போட்டியிலதான் இந்த கொள்ளையே வெளியுலகத்து வருதுன்னு சொன்னாரு.

 மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்.கனகராஜ், இந்த தனியார் அள்ளுகிற மணலால் அந்த அபகுதியில் ஏற்படுகிற சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாயம், குடிநீர் கெடுதல், அள்வுக்கு மீறி மண்லை அள்ளியதால் மீனவர்கள் பாதிப்பு பற்றி சொன்னார். தாது வளம் என்பது அள்ளப்படவேண்டும், ஆனால் இது தேச நலனிற்கும் மக்கள் நலனிற்கும் உகந்ததல்ல. ஒரு சில மணல் அள்ளும் மாபியாக்கள் கொள்ளையடிப்பதற்கு எதிர்கால சமூகமும் அந்தப்ப்குதி மக்களும் ஏன் பாதிக்கப்படவேண்டும் என்றார். கலெக்டர் அந்தப் பகுதியில் ஆய்வுசெய்து மணற்கொள்ளை சட்டவிரோதம் என்று அறிவித்தபின்பும் இதுவரை காவல்துறை எப் ஐ ஆர் போடவில்லை என்பது கலெக்டர் சொன்னபடி கேட்காமல் தூத்துக்குடி, திருனெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் மாபியாக்கள் சொன்னபடி நடக்கிறது என்பது தான். வேதியியல் பொறியாளர் திரு.வெங்கட்ராமனுக்கு சரியான கேள்விகளை முன்வைத்தார். 100க்கு மேற்பட்ட இடங்களில் மணல் அள்ளும் பணியில் நிறுவனக்கள் செயல்படும்போது வெறுமனே 6 இடங்களில் மட்டும் ஆய்வு செய்து மதிப்பிடுவது என்பது சரியல்ல, அதுவும் மூன்று மாவட்டங்களிலும் பணியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்படவேண்டும் என்றார்.

மீனவர் தரப்பிலிருந்து திரு.அமலன் தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவிக்கும்போது மணல் அள்ளுவதால் மீன்வர்களின் வாழ்வாதாரம், படகுகளை கரைக்கு கொண்டுவந்து செர்ப்பதில் ஏர்படும் மனிதசக்தி, தாதுக்களை எடுத்துவிட்டு திரும்பக்கொட்டும் மணலால் ஏர்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விவரித்தார். இந்த மணற்கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடந்தால் அங்கே திட்டமிட்டு கலவரம் உருவாக்குகிறார்கள் என்றார். விவாதத்தில் பங்கேற்ற திரு.வேதியியல் பொறியாளர் வெங்கட்ராமன் சொல்வதை கேட்கும்போது அவர் தனியார் நிறுவனக்களுக்கும் மாபியாக்களுக்கும் சார்பாக பேசுவது மாதிரி இருந்தது. தோழர்.கனகராஜ் சமீபகாலமாக அடிக்கடி நேர்படப் ப்ச்சு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவர் பங்கேற்கிற ஒவ்வொரு விவாதத்திலும் கருத்துக்களை ஆணித்தரமாக சொல்கிறார். அந்த கருத்துக்களும் கவலைகளும் மக்கள் சார்பாக இருக்கிறது என்பது தான் ஏற்புடையது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

விக்கிரமாதித்தன் கதைகள்


விக்கிரமாதித்தன் கதை தமிழகத்தில் அதிகமான விற்பனையான புத்தகங்களில் ஒன்று, அந்த கதைகளை சின்னவயதில் கேள்விப்பட்டிருகிறேன். அந்த கதைகள் முன்னர் தினமலர்-சிறுவர்மலர் இதழில் காமிக்ஸ் வடிவில் வரும், அதற்காக பள்ளிமுடிந்ததும் சிறுவர்மலர் இதழுக்காகவே நூலகம் செல்வோம். அந்த கதைப்புத்தகத்தை சென்ற ஆண்டில் வாங்கினேன் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள அந்த புத்தகம் 26ம் பதிப்பைக் கண்டுள்ளது. அதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, வடமொழியிலிருந்து மற்றமொழிகளுக்கு சென்றிருக்கிறது. அந்த கதைகள், போஜரானுக்கு சிம்மசானம் சொல்லியகதை, விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொல்லியகதை என்ற வடிவில் இருக்கிறது. படிக்கும்போது அது திட்டமிட்டு ஒரு பிரச்சார வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்தமாதிரி பிரச்சாரம் என்றால் பிராமணீய மேலாண்மை, பெண்களைப்பற்றி மோசமான கருத்துக்களையும் அந்த காலத்தில் பகுதிவாரியாக ஆட்சிசெய்த ராஜாமார்கள் நீதிதவறாமல் ஆட்சிசெய்தமாதிரி சித்திரம் தீட்டியிருக்கிறார்கள். அரசர்கள் பிராமணர்களை நடத்தியவிதம், இளவரசர்கள் கண்ணில்பட்ட பெண்களை கண்டு மோகம் காதல் கொள்வது, ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியப்பண்பாடு என்று கதையை ஏற்படுத்தி அது அரசர்களுக்கு அல்ல என்பது, ஒரு அரசன் 1000 பெண்களை மணந்து அந்தப்புரத்தை அழகு செய்தானாம். பண்பாடு என்பது ஒரேமாதிரி இல்லை. முதல் ஐம்பது பக்கங்களை வாசிக்கும்போதே அலுத்துவிட்டது, இவ்வளவு மோசமான பிரச்சார நூல் எவ்வள்வு விற்பனையாகியிருக்கிறது. இன்னும் என்ன்வெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்பதற்காக 670 பக்கம் கொண்ட நூலில் 200 பக்கங்கள் கடந்துள்ளேன்.

அந்த கதைகளில் பெண்கள் மோசமானவர்களாம், மயானத்தில் வைக்கப்படும் பண்டங்களுக்கு நிகராக அவர்களை ஒதுக்கவேண்டுமாம். பெண்கள் என்றால் நம் அன்னையர்களை, சகோதரிகளையெல்லாம் இழிவுசெய்திருக்கிறார்கள். காடுகழ்னிகளில் ஆண்களுக்கு நிகராக இன்னும் அதிகமாக வீட்டுவேலையை பெண்கள் மட்டும் செய்கின்ற பெண்களை, மென்மையானவர்கள், பேராசைபிடித்தவர்கள், பழிவாங்கும் குணமுடையவர்கள், காம இச்சைகள் தீராதவர்கள், அழகான யாரைக்கண்டாலும் மோகிப்பவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள். இதைவைத்துதான் ஆட்டோக்களில் `பாம்பை நம்பினாலும் பெண்ணை நம்பாதே` போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிட்டுள்ள வரிகள் சிலவற்றைஅப்படியே தருகின்றேன்.

நந்தமன்னன் ஒருவன் தன்னுடைய அரசியை பொதுசபையில் உட்காரவைத்தானாம், மந்திரிபஹூசுருதன் உட்காரவெண்டிய இடத்தில் அவனுடைய சகதர்மினியை உட்காரவைத்ததால் மந்திரி இப்படி சொல்கிறான், ``பொதுச்சபையில் பேரழகியான ஒரு பெண்ணை தன்னுடன் உட்காரவைத்துக்கொள்கிறான். மக்கள் அவளைப்பார்க்கிறார்கள், மக்கள் கூட்டத்தில் வாலிபர்களும் இருப்பார்கள், காணாத கனியைக் காண்பவர்கள் போலவே பலர் பட்டமகிஷியைப் பெரு மூச்சுடன் பார்க்கிறார்கள். ஆடவனின் ஆசை வழியும் விழிகளை ஆரணங்கு பார்ப்பாளேயாகில் அவளால் நிஷ்டூரமாகப் புறக்கணிக்கமுடியாது, அவளுடைய சித்தமும் குழம்பக்கூடும்``.

அந்த மன்னனின் ராஜகுரு சொல்கிறார், ``பெண்கள் ஒருவனுடன் வாயால் பேசுகிறார்கள். அதே சமயம் கருவிழிகளால் மற்றவனின் மனதைக் கிளரும் விதமாகப் பார்க்கிறார்கள்; மூன்றாம் மனிதனைப் பற்றி மனதிலே நினைக்கிறார்கள். ஒருவனொடு பெண்கள் திருப்தி அடைவதில்லை, எரிப்பதற்கு விறகுக்கட்டை எவ்வளவு இருந்தாலும் நெருப்புக்கு போதாது; ஆற்று நீர் எவ்வளவு விழுந்தாலும் கடலின் நீர்மட்டம் உயராது; எல்லா ஜீவவர்க்கங்களின் உயிர்களைத் தின்றாலும் கூற்றுவன் திருப்தி அடையமாட்டான்; அவ்விதமே அழ்கிய கண்களை உடைய பெண்களும் ஆடவர்கள் விசயத்தில் திருப்தியடையந்து விடமாட்டார்கள்``.

மேலும் சொல்கிறான், காக்கையிடம் சுத்தம், சூதாடியிடம் நியாயம், பேடியிடம் வீரம், குடிகாரனிடம் வாக்குறுதி, பாம்பினிடம் தயை, பெண்களிடையே நிரந்தர மோகவிகாரம் இல்லாமை ஆகியவற்றை யார்தான் கண்டும் கேட்டும் இருக்கிறார்கள்.

இன்னொரு அரசனைப்பற்றிய கதை வருகிறது, சந்திரவர்ணன் என்கிற பிராமணன் ஆறுமாதம் அன்னம் ஆகாரமின்றியும் நித்திரையின்றியும் காட்டில் தவம்செய்தான், அவன் காட்டிலிருந்து நாட்டிற்கு வந்தபோது களைப்பால் தாசிவீட்டுத்திண்ணையில் உறங்கிப்போனான் பின்னர் அவனுக்கு ஆகாரம்கொடுத்து பசியை நீக்கி உடல்நலத்தை கவனித்தாள், தன்னையே மணக்கவேண்டுமென்று தாசி அரசசபையில் முறையிட சபையிலிருந்த புரோகிதர், பிராமண குலத்தில் பிறந்த ஒருவன் தங்கள் குலத்திலல்லாமல் வேறு குலத்தின் பெண்ணை மணந்தால் நான்கு வர்ணப்பெண்களையும் ஒரே முகூர்த்தத்தில் மணக்க வேண்டுமென் சாஸ்திரம் சொல்கிறது என்றான்,. அப்படியே தாசி அலங்காரவல்லியையும், புரோகிதரின் குமாரத்தி கல்யாணியையும் மன்னனின் குமாரத்தி சித்திரரேகையையும், சபையிலிருந்த வைசியகுலச் சோமசேகர செட்டியாரின் குமாரத்தி கோமளாங்கியையும் ஒரே முகூர்த்தத்தில் சந்திர்வர்ணன் என்ற அந்த பிராமணுக்கு மணம் முடித்தார்கள். அந்த நாட்டு மன்னன் இறந்தவுடன் வாரிசு இல்லாததால் சந்திரவர்ணனுக்கு ஆட்சிப்பொறுப்பு அளித்தார்கள்.

சந்திரவர்ணனுக்கு பிராமணஸ்திரீயிடம் பிறந்தவன் வல்லவரிஷி  காட்டுக்கு தவம் செய்யப்போய்விட்டான், வைசியப்பெண் வயிற்றில் பிறந்தவன் பட்டி  என்பவன், அரசகுமாரிக்கு பிறந்தவன் விக்கிரமாதித்தன் என்றும், தாசிவயிற்றில்  பிறந்தவன்  பர்த்ருஹரி என்ற நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். சந்திரவர்ணன் அந்திமகாலத்தை நெருங்கும்போது புதல்வர்களை அழைத்தான், அப்போது தாசிக்கு பிறந்த பர்த்ருஹரியைப் பார்த்து, இவனுக்கு கல்யாணம் செய்தால் புத்திரர்கள் பிறப்பார்கள் அது நல்லதல்ல என்றான், அப்படியே பர்த்ருஹரி ,கல்யாணம் செய்துகொண்டாலும் பிள்ளைகள் பெற்று உங்கல் நற்கதிக்குத் தடையாக ஒருபோதும் இருக்கமாட்டேன் என்று சத்தியம் செய்துகொடுக்கிறான்.

தாசியை கல்யாணம் செய்ததால்தான் மற்ற மூன்று மனைவியரை அடைந்தேன், அதனால் தாசி வயிற்றுப்பிள்ளையான பர்த்ருஹரிக்கு பட்டம் சூட்டவேண்டும் என்றான். அவ்வாறே பர்த்ருஹரி ராஜாவானான், அவனுக்குப்பின்னர் ஷ்த்திரகுலப்பெண்ணுக்கு பிறந்த விக்கிரமாதித்தன் அரசபொறுப்பேற்றான் அவனுக்கு மதியூகமந்திரியாக வைசியப்பெண்ணுக்கு பிறந்த பட்டி என்பவன் இருந்ததாக கதை வருகிறது.ராஜா பர்த்ருஹரி பெண்ணாசை கொண்டு 360 அழகிகளை மணந்து தன் அரண்மனை அந்தப்புரங்களைக் கலைக்கூடமாக்கினானாம். ராஜா பர்த்ருஹரி அனங்கசேனை என்பவளிடம் அலாதிப்பிரியம் கொண்டான், ஆனால் அவளுக்கு குதிரைப்பாகன் ஒருவன் சோரநாயகனாக இருந்தானாம். பர்த்ருஹரியின் அரசியைப்பற்றி சொல்லப்பட்ட வரிகள்..

`` மனதைக்கவரும் உருவம்,யெள்வனம் ஆகிய இரண்டிலும் ஆடவன் கொள்ளும் அபிமானம் வீந்தான். வில்போன்ற புருவங்களுடைய பெண்கள் உள்ளத்தில் மன்ம்தன் தான் விரும்பியதையே செய்வான். பெண்களின் எண்ணங்களயும் செயல்களையும் ஒருவராலும் அறியமுடியாது``

``குதிரையின் பாய்ச்சல், தேவேந்திரனின் இடிமுழக்கம், பெண்களின் சித்தம், மனிதனுடைய பாக்கியம், அதிகமழை, மழையின்மை- இவைகளை தெய்வத்தாலேயே தடுக்க முடியாது``

``மலட்டுப்பெண்ணின் குழந்தை அரசுக்கட்டில் ஏறலாம் என்றும், வானத்தில் பூக்கள் மலர்வதைக் காணமுடியும் என்றும் நினைக்கலாம், ஆனால் பெண்களின் உள்ளத்தில் புனிதத்தன்மையைப் பற்றிச் சிறிதுகூட நினைக்க முடியாது``

``ஜபம், மந்திரம், தந்திரம், விநயம், அறிவு, ஆகியவை இல்லாமலேயே பேரறிவு படைத்த ஒருவனையும் பெண்கள் ஒரு கணத்தில் ஏமாற்றும் சக்தி வாய்ந்தவர்கள்``

``பெண்கள் சுயலாபத்திற்காகச் சிரிக்கவும் அழவும் செய்வார்கள்; தங்களிடம் நம்பிக்கை வைக்கும்படி அவர்கள்கெஞ்சுவார்கள்; ஆனால் அதே சமயம் அவர்கள் யாரிடமும் நம்பிக்கை வைப்பதில்லை; நல்ல குடும்பத்தில் பிறந்தவனும் புத்தியுள்ளவனும் , அவர்களை மயானத்தில் கிடக்கும் பணியாரங்களைப் போல் தவிற்க்கவேண்டும்``

இவ்விதம் ராஜாபர்த்ருஹரி தன்னுடைய ஆசைநாயகி அனங்கசேனையைப் பற்றி சிந்தித்தான். இந்த அரசிகளைப் பற்றிய வசைகள் எல்லாப்பெண்களுக்கும் பொதுவான குணமாக சித்திரத்துள்ளார்கள். ராஜாபர்த்ருஹரி ஒரு ஷ்த்திரியன் அல்லாதவன், அதேபோல நந்தமன்னனின் மனைவியைப் பற்றியும் வசைவருகிறது அவனும் ஷ்த்திரிய வம்சமல்ல.

வேதாளம்  இன்னொரு கதையைக்கூறி யார் அதிக புத்திசாலி என்று விக்கிரமாதித்தனைக் கேட்கிறது. விக்கிரமாதித்தன், ``ஆடாகயிருந்தாலும்
பெண் புத்தி கேளாதிருந்தமையால் அதுவே அதுவே அதிக புத்திசாலி`` என்று விடை சொல்கிறான், இதன் மூலம் பெண்புத்தி பின்புத்தி என்ற வசை நிலவுகிறது.

அர்த்தசாஸ்திரத்தில் தண்டனைகள் , ஒரே குற்றத்திற்கு ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனித்தனியான தண்டனைகள் இருக்கிறது. அந்தனன் ஒருவனுடைய நிலத்தின் பயிரை போஜராஜனின் படைகள் பசியில் அழிமானம் செய்கிறார்கள். அப்போது அந்த அந்தணன் போஜராஜனைப்பார்த்து சொல்கிறான், ``தாங்கள் எல்லா நீதி சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர். அப்படியிருக்கத் தாங்களே அந்தணன் ஒருவனுடைய சொத்தைப் பாழாக்குகிறீர்கள். அந்தணன்  சொத்து தான் உண்மையான விஷம் என்று சொல்லப்படுகிறது. விஷம் என்பது அறிஞன் ஒருவனுடைய சொத்துடன் ஒப்பிடும்போது விஷமாகது; அந்தச் சொத்தே உண்மையான விஷமாகும்; ஏனென்றால் விஷம் அருந்திய ஒருவனை மட்டுமே கொல்லக்கூடியது; ஆனால் அறிஞன் சொத்தோ அபகரித்தவனின் சந்ததியையும், அவர்களின் சந்ததிகளையும் கூட அழித்துவிடும் அன்றோ? இதைத் தாங்கள் அறிவீர்களே என்கிறான். இதைவைத்து கிராமங்களில் கதைகள் இருக்கின்றன.

 எல்லாக்கதைகளிலும் நீதிதவறாத மன்னர்கள், தவத்தில் சிறந்த அந்தணர்கள் நிச்சயம் வருவார்கள், சாதாரணகுடிகளைப் பற்றி எந்தக் கதையிலும் பதிவுகள் இல்லை. அந்தப்புரங்கள், ராணிகள் மென்மை, இளவரசர்களின் கண்டவுடன் காதல், மோகம் இது நிரம்பியிருக்கிறது. இந்த கதைகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களிடம் வாய்மொழியாக சென்றிருக்கிறது. இந்தக் கதைகளை தேசத்தின் பண்பாடு என்று கொண்டாடுபவர்களும் இருப்பார்கள்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தாய் - பெண் - தெய்வங்கள்.


 ஒரு நாவலை வாசித்தபோது அங்கே முத்தாலம்மன் பற்றிய உபகதை ஒன்று வருகிறது, மூக்கச்சாம்பான் என்பவனின் மூதாதையர்கள் சோழதேசம், அந்த சேரிமக்கள் அனைவரும் கைலாசநாதர் கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட அடிமைகளாக இருக்கிறார்கள். சோழமாமன்னன் தஞ்சைப்பெருவுடையார் கோவிலை கட்ட கடைக்கால் நாட்டும்போது துவாரபாலகர்கள் நரபலி கேட்க ஆயிரம பஞ்சமர்களைப் பிடித்து நரபலிகொடுக்க சோழமன்னன் முடிவுசெய்து பறையறிவிக்கிறான். இதைக் கேள்விப்பட்ட சேரி ஜனங்கள் பயந்து தப்பிக்கிறார்கள். அப்போது மூக்கச்சாம்பானும் அவனது மனைவியும் நள்ளிரவில் சேரியை விட்டு அமாவாசை நாளில் தப்பித்து வேற நாட்டுக்கு தஞ்சம்புகலாம் என்று கிளம்புகிறார்கள். இரவில் அடைமழைவேறு..சேரி ஜனங்கள் தப்பித்து ஓடுவதை கேள்விப்ப்ட்ட சோழமன்னர் பிரதானிகள் படைகளை அனுப்பி அவர்களை பிடித்துவர உத்தரவு போடுகிறார்கள். காவிரியாற்றை நெருங்குகிறார்கள், ஆற்றில் கரைதொட்டு வெள்ளம் சென்றுகொண்டிருக்கிறது, பின்னால் சோழபடைகள் விரட்டிவருகிறது, ஆற்றில் இறங்கினால் வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும், படையினரிடம் சிக்கினால் சிரச்சேதம் உறுதி. இந்த சூழ்நிலையில் மழைக்கு ஒரு ஆலமரத்தின்கீழே ஒதுங்கிறார்கள். அப்போது ஒரு பெண் சிறிய விளக்குவைத்துக்கொண்டு இவர்களை நோக்கிவருகிறாள், பின்னர் தானும் காவிரியை தாண்டி அக்கறை செல்லப்போவதாகவும் தன் பின்னே வருமாறு பெரியமூக்கன் தம்பதியை அழைக்கிறாள். அந்தப் பெண் வெள்ளம் புரண்டு ஓடுகிற காவிரியில் அசாத்தியமாக இறங்குகிறாள் இவர்களும் பிந்தொடர்கிறார்கள் காவிரி அவர்களுக்கு வழிவிடுகிறது பின்னால் துரத்திவந்த சோழப்படையினர் ஆற்றில் இறங்கியபோது வெள்ளம் அவர்களை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. அந்த பெண்ணிற்கு அம்மைநோய் கண்டு சிலதினங்களில் இறந்துபோகிறாள், இறப்பதற்கு முன்பு தான் ஒரு தெய்வப்பிறவி என்றும் இவர்களை காப்பதற்கே வந்ததாகவும் இறந்தவுடன் அடக்கம்செய்து எரித்த சாம்பலை குறிப்பிட்ட ஊருக்குச்சென்று மரத்தில் போடுங்கள் அது ஒரு புற்றாக வளரும், அதை முத்தாலம்மன் என பெயரிட்டு வழிபடுங்கள் என்று சொன்னதாக அந்த கதை அமைகிறது.

 இதே கதை மாதிரியே, கி.ரா. எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலில் ஒரு குழுமக்கள் தெலுங்கு தேசத்தின் துலுக்கராஜாக் களிடமிருந்து தப்பித்து அரவதேசம் வருகின்ற ஒரு குடும்பத்திற்கு ஒரு கன்னிப்பெண் விளக்குடன், பனை நாரினால் செய்யப்பட்ட பெட்டியோடு வந்து ஒரு ஆற்றைக்கடக்க உதவுகிறாள், அவர்களை துரத்திவந்த துலுக்கராஜாவின் படைகளால் வெள்ளம் பொங்கிவரும் ஆற்றைக்கடக்க இயலவில்லை. அவர்களை காப்பாற்றிய கன்னிப்பெண் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறாள் அவளை ரேணுகாதேவி என்ற பெயரில் குலசாமியாக வழிபடுகிறார்கள் என்பது நடைமுறையாகவும் இருக்கிறது.

 தமிழகத்தில் பெண் தெய்வங்கள் அதாவது ஆண் துணையின்றி இருக்கும் சாமிகள் யாவும் வைதீகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதது, சில பெண் தெய்வங்கள் ஊருக்கு பொதுவாகவும், சில தெய்வங்கள் சில குடும்பங்களுக்கு மட்டும் என நடப்பில் பார்க்கிறோம். எல்லா ஊர்களிலும் மாரியம்மன் போன்ற சினங்கொண்ட தெய்வங்கள் ‘வடக்கு’ நோக்கியே பார்த்திருக்கிறது, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகம் என்பது கேரளம் உள்ளிட்ட பகுதி முப்புரமும் கடல் சூழ்ந்தது, அதனால் பகைப்படை என்பது வடக்கிலிருந்துதான் வரமுடியும் அதை தடுக்கவே அம்மன் வடக்கு நோக்கி இருக்கிறார். இந்த கோவில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக இல்லை , பண்டாரம், குயவர் போன்ற சாதியினரே பூசாரிகளாக இருக்கிறார்கள்.வைதீகம் பெண் தெய்வத்தை சிவனுக்கு மனைவியாக, திருமாலுக்கு தங்கையாக மாற்றியபோதும் ‘தாய்’த்தெய்வத்தின் தனித்த அடையாளம் முற்றிலும் நீங்கிவிடவில்லை. தீச்சட்டி எடுப்பது, பொங்கலிடுவது முளைப்பாரி, வீதிஉலாவரும்போது சாமிசிலை எடுத்துவருவதர்குப் பதிலாக சாமியாடிகள்மேல் அருள் வந்து ஆடுவது, இரத்தப்பலி போன்றவை தாய்த்தெய்வத்தின் தனி அடையாளம்.

 சில பெருந்தெய்வக் கோவில்களில் தந்தைத் தெய்வத்தைவிட தாய்தெய்வம் ஆழ்ந்த பக்திக்கும் மரியாதைக்கும் உரியதாக உள்ளது, கன்னியாகுமரியில் குமரித்தெய்வம், திருநெல்வேலி காந்திமதி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், திருவானைக்கால் அகிலாண்டேசுவரி, காஞ்சி காமாட்சி போன்றவற்றில் தாய்த்தெய்வத்தின் மீதான வழிபாடு சிறப்புடையதாக இருக்கிறது. சில தாய்த்தெய்வங்கள் குறிப்பிட்ட மக்கள்திரள்களுக்கு உரியவையாக இருக்கிறது, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் சங்கராச்சியர்களுக்கு முன்பு கம்மாளர் ‘விசுவகர்மா’’ சாதியாருக்கு சொந்தமானது, காமாட்சிதெய்வம் கொளதமபுத்தரின் தாயார் தாராதேவி வழிபாட்டிலிருந்து தோன்றியிருக்கவேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேபோல் ’பத்திரகாளி’ அம்மனை தமிழகத்தில் நாடார்கள் அதிகமாக வழிபடுகிறார்கள். பத்ரம் என்ற வடசொல்லுக்கு ஓலை என்று பொருள். மரபுவழியாக பனைத்தொழிலோடு தொடர்புகொண்ட மக்கள்திரளின் (clan)தெய்வமாக தோன்றியிருக்கவேண்டும்.

 தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தில் இயேசுவைப்போல மரியமாதாவை வழிபடும் வழக்கமுள்ளது, தொடக்ககால மதம் பரப்புநர்கள் தமிழர்களின் தாய்தெய்வ வழிபாட்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உண்ர்ந்து அதை கிறிஸ்தவத்தில் ஏற்படுத்தியிருக்கலாம். 18ம் நூற்றாண்டில் திருச்சிக்கு அருகே ஏலங்குறிச்சியில் தூயமரியாளுக்கு வீரமாமுனிவர் கோவில் கட்டினார், அந்த கோவிலின் மாதாவுக்கு ‘பெரியநாயகி’ என்று பெயரிட்டார்.அங்கு அமைந்த குடியிருப்புகளுக்கு அன்னையின் காவலில் உள்ள ஊர் என்பதற்கு ‘திருக்காவலூர்’ என்று பெயரிட்டார். இன்னும் கத்தோலிக்க தேவாலயத்தை மாதா கோவில் என்று அழைக்கும் வழக்கம் கிறிஸ்தவர் அல்லாத மக்களிடமுண்டு.

 மனிதர்களாக வாழ்ந்து மரித்தவர்களையும் அம்மனாக வழிபடும் மரபும் இருக்கிறது, பூப்பெய்தும் பருவத்திலோ இளவயதிலோ இறந்த பெண்கள் அந்த குடும்பத்திற்குரிய கன்னித் தெய்வமாக வழிபடப்படுகின்றனர்.திருமணமாகி குழந்தைபெற்று இளவயதில் இறந்துபோன பெண்களும் குடும்ப தெய்வங்களானார்கள் அவர்களை மாலையம்மன் என்று வழிபடுகிறார்கள். பேரரசர்கள் இறந்தபின் அவர்களுக்கு பள்ளிப்படை (சமாதி) அமைப்பது இருந்தது போல, அரசன் மனைவி மங்கலப்பெண்ணாக இறந்திருந்தால் பள்ளிப்படை கோவில் எழுப்பியிருக்கிறார்கள். சமயபுரம் மாரியம்மன் கோவில் சோழப்பெருந்தேவி ஒருவர் அம்மை நோய்கண்டு இறந்தபின் எழுப்பப்பட்ட பள்ளிப்படை என்கிறார்கள் பண்பாட்டு ஆய்வாளர்கள்.

(தகவல்கள்- தொ.பரமசிவன்  எழுதிய  தாய்தெய்வம் கட்டுரையிலிருந்து)

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

டி.செல்வராஜ் எழுதிய “தோல்” நாவல்..

டி.செல்வராஜ் எழுதிய “தோல்” நாவல்..



இந்த நாவல் வெளிவந்த நேரத்தில் எழுத்தாளர் தோழர்.காஷ்யபன் சொன்னார் (2011) இந்த ஆண்டில் சிறப்பான படைப்புகளில் ஒன்றாக “தோல்” இருக்கும் என்றார். அது பொய்த்துப் போகவில்லை 2012ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பதனிடும் ஆலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களைப் பற்றிய நாவல் என்றபோதும் தொழிற்சங்க இயக்கம், இடதுசாரி இயக்கம் தடைசெய்யப்பட்ட காலம், வர்க்கப் போராட்டத்துடன் அடித்தட்டுமக்களின் சமூக பரிணாமங்களையும் நாவல் சொல்கிறது. இந்த நாவலில் 117 பாத்திரங்கள் வருகிறார்கள், யார் இதில் கதாபாத்திரம் ஒசேப்புவா, சங்கரனா,வேலாயுதமா, இருதயசாமியா, சாமியார் தங்கசாமியா என்று முடிவுக்கு வரமுடியவில்லை.தோல் ஷாப்பில் பணிபுரியும் பாட்டாளிகள், நகராட்சியில் பீயள்ளும் தொழிலாளர்கள் கதையின் மாந்தர்கள். உழைப்பாளி மக்களை, சமூகத்தின் அடித்தட்டு மக்களை நாயகர்களாகக் கொண்டுள்ள இலக்கியம் மிகவும் குறைவு. தலித் இலக்கியங்கள் அவர்கள் படும் அவலங்களையும் வஞ்சிக்கப்படுவதையும் மட்டுமே காட்டுகின்றன. இந்த நாவல் வஞ்சிக்கப்பட்டவர்களான தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் தங்கள்மீது திணிக்கப்பட்ட இழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக ஓரணியில் திரண்டு போராடுகிறார்கள், அவர்களுக்கு ஜீவனாக சங்கம் இருக்கிறது. இந்த காலகட்டத்தின் கதைமாந்தர்கள் வீரர்கள் அல்லர், வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று சொன்ன ரேமண்ட் வில்லியம்ஸ் வரிகளை எழுத்தாளர் கையாண்டுள்ளார்.

“தோல்” ஷாப்புகளில் பணிபுரிபவர்கள் அந்த நகரத்தின் பறையர்களும் அருந்ததியினர்களும், எந்தவித பாதுகாப்பு சாதனங்களின்றியும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறையின்றியும் 8 மணி நேரம் வேலை என்றல்லாமல் சுரண்டப்படுகிறார்கள். ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்கள் பணியிடங்களில் பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள், நகரத்தில் பிரபலமான ஹாஜியார் அஸன் ராவுத்தர் தோல்ஷாப்பில் சின்னக்கிளி என்ற இளம் பெண்ணை அஸன் ராவுத்தரின் மைத்துனன் காமுகன் முஸ்தபா மீரான் பாலியல் வன்புணர்ச்சி செய்கிறான், அதைத்தட்டி கேட்க காலங்காலமாக அம்மக்களுக்கு துணிவு இல்லை. அதே ஷாப்பில் வேலைசெய்யும் ஓசெப்பிற்கு ‘ஸ்டோர் ரூமிலிருந்து’ கதறும் சின்னக்கிளியின் கதறல் அவனது இதயத்தை கூறுபோடுவதுபோல் இருந்தது, அந்த அறையின் கதவை உடைத்து முஸ்தபாமீரானை அடித்து தாக்கிவிடுகிறான். இச்சம்பவத்தையடுத்து என்ன நடக்கும் என்பதையுணர்ந்த சகபெண் தொழிலாளியும் அவனது காதலியுமான அருக்காணி ஒசேப்பை தப்பியோடவைக்கிறாள். பின்னர் தோல்ஷாப்பு முதலாளிகளின் அடியாள் கழுவத்தேவனிடம் பிடிபட்டு சித்திரவதைக்குள்ளாகிறான். அவ்வழியே சென்ற கத்தோலிக்க பள்ளியில் ஆசிரியராக இருக்கும் இருதயசாமி ஒசேப்பை கழுவத்தேவனிடமிருந்து காப்பாற்றுகிறார்.

வன்புணர்ச்சிக்குள்ளான சின்னக்கிளி இறந்துபோகிறாள், அவளை அடக்கம் செய்வதற்கு வழக்கமாக சேரிமக்கள ஊர்தெருவழியாக அல்லாமல் ஊருணிவழியாகத்தான் செல்வார்கள். அப்போது பெய்த மழையில் ஊருணி நிறைந்து வழிந்ததால் பிணத்தை அவ்வழியே கொண்டுசெல்லமுடியாமலும் ஊரின் தெருவழியே கொண்டுசெல்ல திராணியில்லாமலும் தவித்தார்கள். அந்த ஊரில் சுந்தரேசய்யர் ஒரு வழக்கறிஞரும் காந்தியவாதியுமாவார். அவர் ஹரிஜனசேவா சங்கத்தின் முக்கியபுள்ளியும் மதுரை வைத்தியநாதய்யரின் ஆத்ம சீடரும் ஆவார்.அவரிடம் சென்று சுடுகாட்டுப் பாதைக்காக முறையிட்டார்கள், அந்த மக்கள் சார்பாக ஏற்கனவே அந்த வழக்கை சுந்தரேய்யர் வாதாடி நீதிபெற்றிருக்கிறார்கள் ஆனால் அந்த தீர்ப்பை மேல்சாதியினர் ஏற்றுக்கொள்ளச்செய்ய கையாளாகாத அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சுந்தரேசய்யர் தன்னுடைய மகன் சங்கரனை பிரச்சனைக்கு தீர்வுகாண அனுப்புகிறார். சங்கரனின் நண்பனும் சப்-கலெக்டருமான வாட்ஸனுன் மேல்சாதிக்காரர்களை அணுகி பேசுகிறார்கள், பொருளாதாரபலமும், சாதிஆதிக்கமும் கொண்டவர்கள் பிடிவாதமாக அரசாங்கத்தின் பேச்சைக்கேட்கமறுக்க பிணத்தை பிராமணன் சங்கரனும் சப்-கலெக்டரும் தூக்கி நீதிமன்றத்தீர்ப்பையும் மனித உரிமையையும் நிலைநாட்டுகிறார்கள். அந்த மக்களின் சுடுகாட்டுப் பாதையுரிமை அமல்செய்யப்படுகிறது.

அந்த காலத்தில் பிராமணர்கள் அருகில் வருவதற்கே தாழ்த்தப்பட்ட மக்கள் அஞ்சுவார்கள், பார்த்தால் தீட்டு, பேசினால் தீட்டு என மடமை கொண்டகாலத்தில் பிராமணனான சங்கரன் அதுவும் ஒரு சக்கிலியப்பெண்ணின் பிணத்தை தூக்கினால் அக்ரகாரம் பொறுத்துக்கொள்ளுமா? சுந்தரேசயர்ரின் குடும்பத்தால் அக்ரகாரம் தீட்டுப்பட்டுவிட்டது என்று வந்தார்கள், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. வரலாற்றில் திலகரின் பிணத்தை மகாத்மா காந்தி தூக்கவந்தபோது பிராமணர்கள் அவரை தள்ளிவிட்டார்கள், ஒரு வைசியன் பிராமணனின் பிணத்தை தூக்கலாமோ என்று? பிராமணசாதியில் பிறந்த சங்கரன் படிப்படியாக “தோல்” ஷாப் தொழிலாளிகளுக்காக அரசாங்க நிர்வாகத்திடம் ஒரு வக்கீலாகவும் தொழிற்சங்கவாதியாகவும் போராடினார். சுந்தரேசய்யர் மகனின் இந்த நடவடிக்கைகள் தன்னுடைய செயலின் தொடர்ச்சியாகவே பார்த்தார். ஆரம்ப காலத்தில் முடநாற்றம் வீசும் அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒரு அசூயையுடன் சென்ற சங்கரன் தொடர்ந்து அவர்களோடு ஒன்றாக உணவருந்துவது அந்த மக்கள் சமைத்த உணவை உண்ணப்பழகிப்போனார். அந்த மக்கள் வேலைசெய்யும் தோல் ஷாப்பிலிருந்து கொண்டுவரும் மாமிசம் அதாவது பச்சைத்தோலிலிருந்து வழித்து எடுப்பது , விட்டுப்போன கொழுப்பு, சவ்வு போன்றவைகளை குச்சிக்கிழங்குடன் சமைத்த உணவுதான் சங்கத்தலைவர்களுக்கு விருந்து. இன்னமும் இரட்டை குவளைகள் அமலில் இருக்கிற சூழ்நிலையில் ஒரு சங்கரன் செய்த காரியம் சாதாரணமானதா?

சங்கரன் தலைமையில் தோல் தொழிலாளர்கள் சங்கம் அமைத்து தங்கள் உரிமைகளுக்காக போராடினார்கள். இதுவரை முதலாளிகளைக்கண்டு கூனிக்குறுகிய சக்கிலியர்கலும் பறையர்களும் சங்கத்தின் நிர்வாகிகள் என்பதால் அரசங்கத்தின் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமதையாக உட்காருவதை கண்டு அஸன் ராவுத்தரும், வரதராஜூலு நாயுடுவும் சுந்தரம் அய்யரும் முதலான தோல் ஷாப் உடமையாளர்கள் கொதித்துப்போனார்கள். அவர்களின் ஆத்திரம் சங்கரன்மேல் பெருகியது, அவனை ஒழித்தால் இவர்கள் அடங்கிவிடுவார்கள் என்று அடியாட்கள் மூலம் கொலைமுயற்சி செய்தார்கள். காவல்துறையை விலைக்குவாங்கி ஏவிப் பார்த்தார்கள். அந்த மக்கள் குடியிருந்த சேரி அடிக்கடி காவல்துறையின் வன்முறைக்கு இலக்காக இருந்தது. தொழிற்சங்க வரலாற்றோடு,அரசியல் இயக்கவரலாறும் இடம்பெறுகிறது. இக்கதையின் மாந்தர்கள் யாவரும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களும் அந்நகரில் வாழ்ந்த பாட்டாளிகளுமாவர். நாவலின் காலம் இந்திய விடுதலைக்கு முன்னர் ஆரம்பித்து 1952 வரை செல்கிறது. தோல் ஷாப்பின் தொழிலாளி அந்த நகரத்தின் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். சங்கரன் பூனூலை  அறுத்தெரிந்து சாதியற்றவானாக மாறுகிறார், தேவசாதி குலத்தில் பிறந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார்.

இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் வரலாறாகவும், அருந்ததியர்கள், பறையர்களின் வாழ்க்கைப் பதிவாகவும் தொழிற்சங்க இயக்கத்தின் வர்லாறாகவும், பொதுவுடமை இயக்கத்தின் வரலாறாகவும் இருக்கிறது.