செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அடியாள் (பொருளாதாரம்).

அடியாள் என்றால் கையில் என்னேரமும் கத்தி, அரிவாள்,சோடாபாட்டில் அல்லது நவீன ஆயுதங்களான துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைபவர்கள் என்று நினைக்காதீர்கள். இந்த அடியாளை ‘பொருளாதார அடியாள்’ என்று சொல்லலாம். பொதுவாக வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டிகளுடன் அலைவார்கள், வேட்டியில் கண்டிப்பாக கரையிருக்கும் (கறை நல்லதுதானே), வட இந்தியாவில அந்த ஊருக்குத் தகுந்தமாதிரி ஆடை. இந்த அடியாளைச் சுத்தியும் நிஜ அடியாள்கள் இருப்பார்கள்.

எல்லாரும் அறிந்த அடியாள் பெரிய தலைவர்கள், முக்கியப்புள்ளிகளின் மெய்காப்புக்காக உள்ளவர்கள். மிகவும் விசுவாசமானவர்கள் எஜமானர் சொன்னதை யோசிக்காமல் செய்துமுடிப்பார்கள், சில சமயங்களில் எஜமானருக்கு கிடைக்கிற கொள்ளையிலும் பங்குண்டு. இந்த ’பொருளாதார அடியாள்’ க்கு நாட்டோட பொருளாதாரத்தைப் பத்தி எந்தக் கவலையும் கிடையாது, இவங்களோட உண்மையான வேலை வேற! அதாவது மக்களுக்கு தொண்டாற்றுவது, அதுக்குத்தான் தேர்தல்களில் நின்று மக்களுக்கு பணம் கொடுத்தாவது ஜனநாயக கடமையை ஆற்றச்சொல்கிறார்கள்? ஆனால் சட்டசபைக்கோ நாடாளுமன்றத்திற்கோ போனவுடனே தான் ‘பொருளாதார அடியாளா’ மாறிவிடுகிறார்கள். சாதா அடியாள் கொலையோ குற்றமே செஞ்சா அத ஏவினருக்கும் அதாவது அவரோட எஜமானருக்கும் தண்டனை உண்டு, சமயத்துல அவர் தான் முதல் எதிரியாக குற்றப்பத்திரிக்கையில் இருப்பார். இங்க பாவம் இந்த அடியாளு தான் மாட்டிக்குவாரு அவரோட எஜமான் ‘புனிதப்பசுவா’ தான் எப்பவும் இருப்பார். அவரு சீன்லயே வரமாட்டாரு, புனிதப்பசுக்களை காப்பத்தற வேலை மீடியாவோடது. இந்த அரசியல் அடியாள் செய்யற வேலைக்கு ஊழல் னு வெளியில சொல்றாங்க, 1.70 இலட்சம் கோடியை பலனாக பெற்ற ‘புனிதப்பசு’களுக்கு எந்த தண்டனையும் இல்ல, ஆனா பாவம் அடியாளுக்கு கமிஷன் எவ்வளவு வந்ததுன்னு தெரியல, பாவம் திஹார்ல கொண்டு போய் வைச்சுண்டாங்க! இவரு மட்டுமா தப்பு செஞ்சாரு ஸ்பெக்டரத்தை விட அரசுக்கு பெரிய இழப்பை செய்திருக்காங்க அதாவது 2005ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரைக்கும் செலுத்தவேண்டிய கார்ப்பரேட் இன்கம்டாக்ஸ் 3,74,937 கோடிரூபாயை தள்ளுபடி செய்திருக்காங்க.(7th March The Hindu சாய்நாத் கட்டுரை) அதப்பத்தி யாரும் கேள்வி கேட்க முடியாது ஏன்னா அதை legal லா ஊழல்ன்னு சொல்லமுடியாதே. எதை ஊழல்ன்னு சொல்றதுன்னே தெரியல.

மன்னராட்சி காலத்தில் அடுத்த நாட்டின்மீது படையெடுக்கும்போது (கொள்ளையடிப்பது) கொள்ளையில் போர்வீரர்களுக்கும் பங்கு கொடுக்கப்படும் என்று அறிவிப்பார்கள். அதனால ரெம்ப உற்சாகமா சண்டை போடுவாங்க, அத மாதிரி இங்க தாராளமயத்தை தாரளாமா செய்யுங்க உங்கள தாரளமா கவனிக்கிறோம்னு அறிவிக்கிறாங்க. நம்மூர்ல யாரெல்லாம் அடியாள் (பொருளாதார அடியாள்) வேலை செய்றாங்க.... எதுக்கு தனித்தனியா, அதுக்குப் பேரு தான் முதலாளித்துவ அரசியல்.

கருத்துகள் இல்லை: