வெள்ளி, 8 ஏப்ரல், 2011

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே...

இன்றைக்கு வலைப்பக்கங்களில் அன்னா ஹசாரேவைப் பற்றி இல்லாத பதிவே இல்லையெனலாம அந்த அளவிற்கு வலைப்பதிவர்கள் ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர் மகிழ்ச்சியான செய்திதான்.அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக பல நகரங்களில் மக்கள் கூட்டங்கள் நடத்தி ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவருடைய உண்ணாவிரதத்தின் முக்கிய கோரிக்கை ஜன் லோக்பால் மசோதாவில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர்களும் அந்த குழுவில் இடம்பெறவேண்டும், இம்மசோதா உடனே அமல்படுத்தப் படவேண்டும் என்பதுதான்.

நாம் அன்றாடவாழ்வில் லஞ்சம் கொடுக்காமல் எந்த அரசுத்துறையிலும் வேலை நடப்பதில்லை என்றாகிவிட்டது, நியாயமாக உரிமையாக பெறவேண்டிய அரசு உதவிகளைக்கூட லஞ்சம் அளித்துப் பெறவேண்டியிருக்கிறது, சில சமயங்களில் நம்முடைய சுயநலத்திற்காக லஞ்சம் கொடுத்து அரசிற்கு இழப்பு ஏற்படுத்துகிறோம். நாம் செய்கிறவற்றிற்கு நாம் நியாயம் கற்பிக்கிறோம், ஆனால் லஞ்சம் பெறுவபவர்களை இகழ்கிறோம். அவர்கள் கேட்கவில்லையானால் நாம் ஏன் கொடுக்கிறோம் என்ற நியாயம் வேற, கேட்டும் கொடுக்காமல் புகார் செய்கிறவர்கள் நம்மில் வெகுசிலரே. அப்படி சிலரால் தான் ஊழலுக்கு எதிரான போராட்டம் முன்கை எடுத்து நடத்தப்படுகிறது.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்துள்ளன, கர்நாடகாவில் முதல்வராக குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டு பதவிக்குவந்த குமாரசாமியின் தந்தை தேவகெளடாவின் ஆதரவும் உண்டு. ஆயுதபேரம், சவப்பெட்டி, கர்நாடகத்தில் சுரங்க ஊழல் செய்த பாஜக வின் ஆதரவும் உண்டு. பத்து வருடங்களாக குற்றப்பத்திரிக்கையை மொழிமாற்றத்திற்காக வாய்தா வாங்கும் ஜெயலலிதாவும் இன்று மாலை ஆதரவு தெரிவித்துள்ளார். பீகாரின் அழகிரி என்று சொல்லப்படுகிற பப்பு யாதவ் சிறையிலிருந்து கொண்டு ஹசாரே விற்காதரவாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆதரவு தெரிவிப்பவர்கள் குட்டையை குழப்புகிறார்களோ மீன் பிடிப்பதற்கு..

அன்னா ஹசாரேவிற்கும் ஊழலின் ஊற்று என்பது என்னவென்று தெரியவில்லையோ என்னவோ, இருந்தாலும் அவர் சிறைநிரப்பும் போராட்டம் தொடங்கப்போவதாக இருக்கிறார். இந்திய மெடில்கிளாஸ் மக்கள் லிபியாவைப்போலும், எகிப்தைப்போலும் தேசியக்கொடிகளை தூக்கிக்கொண்டு இன்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.எத்தனை பேர் சிறை நிரப்பச்செல்வார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்தமுயற்சி வெற்றியடைய வேண்டும். ஜன லோக்பால் செயல்பட ஆரம்பித்தால் அரசியல் நடத்துவதற்கு எந்த முதலாளித்துவக் கட்சியிலும் ஆளிருக்காது. புதிய கட்சிகள் நிறைய வரும் அந்த இடத்தை நிரப்புவதற்கு வேற வழி.....

3 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! அன்னா ஹசாரே பற்றி பத்திரிகைகள் எழுதுகின்றன. மஹாராஷ்ற்ற சட்டமன்றத்தில் சுரெஷ் ஜெயின் என்பவர்(சிவ சேனை) அவர்மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அறக்கட்டளை ஒன்றின் பணத்தை அவர் கையாடல் செய்துவிட்டதாக . ஸ்பெக்ற்றம்,சி.ட்பிள்யு .சி ஆதர்ஷ் என்று விஸ்வரூபம் எடுத்ததை திசை திருப்ப பத்திரிகைகள் மாய்மாலம் செய்கின்றனவோ என்று அஞ்சுகிறென்.அமெரிக்காவுடன் மிக் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டலே இப்படித்தான் முடியும். இந்தியாவிலிருந்து சென்ற நூற்றாண்டில் கஞ்சா எற்றுமது செய்தவன் தொழிலதிபர்.மத்திய இந்தியாவில் பயிரான கஞ்சாவை எற்றுமதி செய்ய உருவான துறைமுகம் தான் பம்பாய். அலகும் பிடியும் மாற்றி அமைக்கணும் என்றார் நம்பூதிரிபாடு.அதற்காக அவர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.---காஸ்யபன்

hariharan சொன்னது…

உலகக்கோப்பை அல்லது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் சமயத்தில் ஹசாரே உண்ணாவிரதம் இருந்திருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஊடகங்கள் மிகுந்த பசியோடு இருக்கின்றன, மக்களையும் பரபரப்பிற்காக காத்திருக்க வைக்கின்றன.

அலகும் பிடியும் மாற்றி அமைக்கணும் என்று இஎம்எஸ் சொன்னது எனக்குப் புரியவில்லை, கொஞ்சம் விளக்கவும்.

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! விவசாயிக்கு மிகமுக்கியமானது மண்வெட்டி. வயல்களில் வாய்க்கால் வெட்டவோ,வரப்பு வெட்டாவோ புல் செதுக்கியால் முடியாது. மண்வெட்டிக்கு இலை,மற்றும் கைப்பிடி என்று இரண்டு உண்டு.இதனை அலகும் பிடியும் என்று மலையாளத்தில் சொல்வார்கள். அகலமான இலையும்(அலகும்) நீளமான கைப்பிடியும் (பிடியும்) இருந்தால தான் பணி செய்ய முடியும். நமது அரசியல் சட்டத்தை முழுமையாக மாற்றீ அமைத்தால் தான் சரியாக இருக்கும் என்ற கருத்தில் அலகும் பிடியும் மாற்றி அமைக்க வேண்டும் என்றார் இ.எம்.எஸ்.---காஸ்யபன்