வியாழன், 2 ஜூன், 2011

ஏர் இந்தியா இனி மெல்லச் சாகும்....



வாங்கிய பெட்ரோலுக்கு காசு கொடுக்கமுடியாமல் ஏர் இந்தியா 60 விமானங்களை ரத்துசெய்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் விமான சேவை நிறுவனங்கள் சிக்கலில் தவித்தபோது மத்திய அரசு அவர்களுக்கு பல வரிகளை தள்ளுபடி செய்தும் எரிபொருளுக்கு மானியம் அளித்தும் அவர்களை லாபமீட்டச் செய்தது. ஆனால் ஏர் இந்தியா விமானத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளும் அமைச்சரவைகளும் தங்கள் சுயலாபத்திற்காக இஷ்டத்துக்கும் விமானத்தை இயக்கி இன்று திவாலாகும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். பிரதமர் அலுவலகம் உட்பட பல அமைச்சரவைகள் வைத்துள்ள கட்டணபாக்கி, லிபியாவில் இந்தியர்கள் சிக்கலை சந்தித்தபோது அவர்களை தாயகம் அழைத்துவந்தது என பலவற்றிற்கும் அரசு பணம் கொடுக்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு ஊழியர்களின் வேலைநிறுத்தம் அதை காதில் வாங்காத அமைச்சகத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமல்ல, எதிர்கால வியாபாரமும் பாதித்தது. இப்போது எரிபொருளுக்கு பணம் தராததால் அர்சு பொதுத்துறை நிறுவனமே மற்றொரு பொதுத்துறை நிறுவனத்திற்கு உதவ மறுக்கிறது. பெரும்பாலான உள்ளூர் ,சர்வதேச பயணிகள் ஏர் இந்தியா மீது நம்பிகையை இழந்துவிட்டார்கள்.ஏர் இந்தியாவில் டிக்கெட் எடுத்தால் விமானத்தை எப்போது இயக்குவார்கள் எப்போது கேன்சல் செய்வார்கள் எனப்து தெரியவில்லை.

மன்மோகன் சிங் அரசால் ஒரு விமானசேவையைக் கூட சரிவர நடத்தமுடியவில்லை யென்றால் இதில் மத்திய அரசு ஓரேடியாக “மஹாராஜாவை’ கொல்ல சதி செய்கிறதோ என ஐயம் ஏறப்டுகிறது. ஒவ்வொரு நாடும் தேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை திறம்பட இய்க்குகிறது. அது ஒரு நாட்டின் பெருமையும் அடங்கியிருக்கிறது, ஏர் இந்தியாவை மூடிவிட்டால் திருவாளர் மன்மோகன்சிங் வெளிநாட்டிற்கு அரசுமுறை பயணத்தில் எந்த ஏர்லைன்ஸில் பயணம் செய்வார். ஏர் இந்தியா மூடப்பட்டால் மத்திய அரசுக்கு ஒன்றும் நஷ்டமில்லை அவர்கள் அதிகமாக காசு கொடுத்து தனியார் விமானத்தில் பறப்பார்கள்.லிபியாவிலும், ஈராக்கிலும் முன்பு குவைத்திலும் உள்நாடு பிரச்சனை ஏற்பட்டபோது அங்கு பணிபுரியும் இந்தியர்களை யார் காப்பாற்றி அழைத்துவந்தார்கள். தனியார் நிறுவனங்கள இக்கட்டான நேரத்திலும் வியாபாரம் செய்துகொண்டிருக்கும். ஏர் இந்தியாவை காப்பற்றவேண்டியது மக்களின் தேவை. உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் விமான கட்டணங்கள் பங்குச்சந்தை புள்ளிகள போல ஏற்ற் இறக்கம் காணுகின்றன, ஆனால் ஏர் இந்தியாவில் முதலில் புக் செய்தவர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் என நியாயமான கட்டணக்கொள்கை வைத்துள்ளது.

அரசு நிறுவங்களின் தவறான நிர்வாகத்திற்கு ஊழியர்கள் பலியாகிறார்கள், தாய் நாட்டில் இயற்கையில் கிடைக்கின்ற சிறிய அளவு எண்ணெய் வளத்தையும் அம்பானிகளுக்கு எழுதிவைத்துவிட்டார்கள். வருடந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்ற பேலன்ஸ் சீட்டில் நஷ்டக்கணக்கு வந்ததே இல்லை. நாள் தோறும் எண்ணெய் நிறுவனக்கள் சர்வதேச விலை உயர்வால் நஷ்டமடைகின்றன என கூசாமல் பொய்யுரைக்கின்றாரே? பண்டிட் நேருவால் நவ இந்தியாவின் கோவில்கள் என்றழைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மன்மோகன் சிங் அரசால் இனிமெல்லச் சாகும்!

1 கருத்து:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! தனியார் லட்சணம் அதைவிட மோசம். மினிபஸ் மாதிரி ஆள்வந்தால்தான் விமானம்புறப்படும்.இல்லையென்றால் ரத்து செய்து விடுகிறார்கள். பங்களுருவில் விமான நிலயத்திலிருந்து நகரத்திற்கு வர 1000ரூ டாக்சி. இதே நிலைதான்
ஹைதிராபாத்திலும்.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்