திங்கள், 16 மே, 2011

தமிழக தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இப்படி ஏகபோகத்திற்கு கொண்டுபோகுமென்று யாருமே கருதவில்லை, எல்லோரும் பார்க்கிற வாசிக்கிற மீடியாக்களை வைத்துதான் இந்த அணி ஜெயிக்கும் அந்த அணி ஜெயிக்கும் என்று சொல்றோம். Opinion poll, Exit poll எல்லாம் அந்த பத்திரிக்கைகள் யார் ஆட்சிக்கு வரவேண்டுமென்று நினைக்கிறார்களோ அந்த மாதிரி சர்வே எடுக்கிறார்கள். எல்லா சர்வேயும் பொய்யாய் போனது தமிழ்நாட்டில். ஊழல் ஆட்சியும் குடும்ப ஆட்சியும் ஒழியவேண்டும் நினைத்தவர்கள் இப்போது சர்வாதிகாரத்திற்கு சொந்த செலவில் வழிசெய்து விட்டோமே என மக்கள் அஞ்சுகிறார்கள். 500 கோடிகள் செலவு செய்து புதிய மாளிகையில் அவசர அவசரமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குடிபோனார், இப்ப அவரு கட்டின மாளிகையில நான் எப்படி உட்காருவேன், வெள்ளைக்காரன் கட்டுனதிலேயெ இருந்துக்கிறேன்னு ஆரம்பிச்சாட்டாங்க.

திமுக கூட்டணி தேர்தலில் தோற்றதற்கு என்ன காரணம் என ஆராயத்தேவையில்லை, குடும்பத்தைச் சுற்றியே பதவிகள், சுயநலத்திற்க்காக மத்தியில் அமைச்சரவையில் பங்குகொண்டு ஊழலில் பெரும்பங்கு வகித்தது, நான்கு வருடங்களாக மின் தட்டுப்பாடு அதே நிலைமை இன்று வரை, விலைவாசி உயர்வு அதுக்கு வாங்கும் சக்தி ஜாஸ்தியாகிபோச்சு என சப்பைக்கட்டு, சாலைகள் போட்டார்கள்,பாலங்கள் கட்டினார்கள் இல்லையென்று சொல்லமுடியாது மக்கள் நலனைவிட மந்திரிகள் நாலுகாசு பார்ப்பதற்க்காகவே பணி செய்தார்கள். அப்படி இல்லையென்று அவர்கள் கொடுத்த சொத்துவிவரமே (சொன்னது பாதியா?) காமிக்குதே. கட்சிக்காரர்கள் பல இடங்களில் நிலங்களை வளைத்துப் போட்டார்கள். இப்ப கருணாநிதிக்கு தில்லியில கனிமொழியால பிரச்சனை, தமிழ்நாட்டில தேர்தல் முடிவால பிரச்சனை. மத்தியில கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டுறுவாங்களோ ங்கிற பயம்வேற.

முன்னாடியெல்லாம் தேர்தலுக்கு திமுக ஐம்பெரும் தலைவர்கள் இருந்தார்கள், இப்ப மானாட மயிலாட ஜட்ஜூகள், வடிவேலு, குஷ்பூ நிலைமை இப்படி ஆகிப்போச்சு, வடிவேலு இப்ப வெளியில தலகாட்டமுடியல. விஜயகாந்த் எப்பவும் போதையில் இருக்கார்னு சொல்லி கூலிக்காக கூவுனாறு, இப்ப வடிவேலு வரப்போற ஆபத்தை நினைச்சு பீதியில இருக்காரோ, சினிமாவுல அடிவாங்கியே பழக்கமான வடிவேலுவுக்கு நிஜவாழ்க்கையிலுமாவா? பாவம்..

இந்தத் தேர்தல்ல திமுக கூட்டணி தோற்கிறத்துக்கு முக்கிய காரணம் திமுகவும் காங்கிரஸும் உள்குத்து வேலைய காமிச்சிட்டாங்கலோ என்னவோ, 63 பேர் நாயன்மார்களாக மாறுவாங்கன்னு பாத்தா பஞ்சபாண்டவரா ஆயிட்டாங்க. ஒரு தகுதியான எதிர்க்கட்சியாகூட திமுக இல்லாது போயிருச்சே. கூட்டணி சேர்ந்து போட்டியிட்டா கூட்டணிக்குள்ளேயெ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசயிருக்கும், பெரிய கட்சி எப்படியாவது தனியா ஆட்சி அமைக்கிறமாதிரி ஜெயிக்கனும், சின்னக்கட்சிகளுக்கு நம்ம இல்லாம ஆட்சி அமையக்கூடாதுங்கிற ஆசயிருக்கும்.இப்படி ரிசல்டு கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி ஆகிப்போச்செங்கிற கவலைதான் நமக்கு. அஞ்சு வருசத்துக்கும் அராஜகம் பண்ணமுடியாது இடையில லோக்சபா தேர்தல் வருது, முன்னாடியே பஞ்சாயத்துத் தேர்தல் வருது அதான் கொஞ்சம் ஆறுதல். பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கலங்கிறது நல்ல செய்திதான். இந்த தடவை தமிழ்நாட்டில 20 இடதுசாரி உறுப்பினர்கள் சட்டசபைக்கு போறாங்க. இந்தக் கூட்டணி எத்தனை மாதத்திற்கென்று தெரியவில்லை, அது அம்மாவோட ஆட்சியைப் பொறுத்தது.

இந்த சமுதாய அமைப்பில் இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சி வந்தா நல்லாயிருக்குமோ என மக்கள் நினைக்கிறாங்க, ஆட்சி மாற்றங்கிறது ஒருத்தரை விரட்டுறதுக்கு பயன்படுது ஆனா நல்லாட்சிக்கு வழியிருக்கான்னு தெரியில. இந்த தேர்தல் முடிவு மூலமா மம்தா பானர்ஜி உலகம்பூராவும் பிரபலமாயிட்டாங்க , கத்தார்ல ஒரு பேப்பர்ல முதல்பக்கத்துல அந்த செய்தி வருது, ஏன் கம்யூனிஸ்ட்களை தோற்கடித்தற்காக.கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியமைக்கிற அளவிற்கு சீட் கிடைக்கவில்லை யென்றாலும் சட்டமன்றத்தில் பெரிய கட்சியாக இருக்கிறார்கள். மேற்குவங்கத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவிடவேண்டும். பொறுமையாக வாசித்ததற்கு நன்றி.

கருத்துகள் இல்லை: