செவ்வாய், 11 மே, 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்- 1

1. நமக்கு எதுக்கு வம்பு?

“இவ்விடம் அரசியல் பேசக்கூடாது” என்று சில டீக்கடைகளிலும் முடிதிருத்தும் நிலையங்களிலும் எழுதிப்போட்டிருப்பார்கள். பொது இடங்களில் புகை பிடித்தல் தவறு என்பது போல அரசியலையும் அதில் சேர்த்து விட்டார்கள். சின்னப்பிள்ளைகள் பீடி, சிகரெட் குடிக்கக்கூடாது. அரசியலிலும் ஈடுபடக்கூடாது. எந்தத் தாயும் தகப்பனும் தன் பிள்ளைகள் அரசியலில் ஈடுபடுவதை பொதுவாக விரும்புவதில்லை. காசு பணம் சம்பாதிக்க வழி உள்ள சில கட்சிக்காரர்கள் வேண்டுமானால் பிள்ளைகளை அரசியலுக்கு அனுப்பலாம்.



பொதுவாக யாரிடம் கேட்டாலும் நமக்கு எதுக்குங்க அரசியலெல்லாம் என்று சொல்லுவார்கள். உண்டான சோலியப் பாக்கவே நமக்கு நேரம் இல்லை. இதிலே எங்கே அரசியலைப்பத்திக் கவலைப் பட?என்பார்கள். பொதுவாக நாம் என்ன நினைக்கிறோம் என்றால்,

மாணவர்கள் என்றால் படிக்கவேண்டும்
இளைஞர்கள் வேலை தேடவேண்டும்
தொழிலாளிகள் ஒழுங்காக வேலை பார்க்கவேண்டும்
விவசாயிகள் விவசாயம் செய்யவேண்டும்
ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும்
கண்டக்டர் விசில் கொடுக்கவேண்டும்
டிரைவர் வண்டி ஓட்டவேண்டும்
பெண்கள் சோறு பொங்கவேண்டும்


யாரும் அரசியலுக்குப் போய்விடக்கூடாது.அது நம்ம வேலை இல்லை.ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அவன் அப்படி இவன் இப்படி அவ என்ன கிழிச்சா என்று உற்சாகமாகப் பேசுவோம். பிறகு அஞ்சு வருசத்துக்கு எவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று இருந்து விடுவது. கேட்டால்,அரசியலே சாக்கடை சார்…என்பது.இது ஒரு ரகம்.

இன்னொரு பக்கம்-யாராவது கமுக்கமாகச் சில காரியங்களைச் செய்தால் “ஏ…அவன் பயங்கர பாலிக்ட்டிக்ஸ் பண்றாம்ப்பா” என்போம்.

“உங்க பாலிடிக்ஸ்லே என்னை மாட்டிவிஆதிங்க”
“நாம ஒண்ணும் இங்க பாலிடிக்ஸ் பண்ண வரலே”


என்றெல்லாம் பேசுகிறோம்.இந்த இடத்தில் அரசியல் என்றால் சதி,வஞ்சகம்,சூது என்ற அர்த்தத்தில்தான் பேசுகிறோம்.

இன்னும் ஒரு வாதம் உண்டு . “இப்பெல்லாம் என்ன சார் அரசியல் நடக்கு? கக்கன்,காமராஜ் காலம் மாதிரியா இப்ப இருக்கு? அரசியல்னாலே துட்டு அடிக்கிறதுன்னு ஆகிப்போச்சு. நல்ல தமிழ் பேசி துட்டு அடிக்கப்போறியா இல்லாட்டி கான்வெண்ட் இங்கிலீக்ஷ் பேசித் துட்டு அடிக்கப்போறியாங்கிறது தான் கேள்வி. ஆனால் கக்கன்,காமராஜர் காலத்தில் என்ன பேச்சிருந்ததென்றால் “என்ன சொல்லுங்க வெள்ளக்காரனை மாதிரி நிர்வாகம் பண்ண முடியுமா?”

இன்னொரு பக்கம் லஞ்சம், ஊழல்கூடப் பரவாயில்லை அடிதடி, வெட்டுக்குத்து,சொந்தக் கட்சிக்காரனையே போட்டுத்தள்றது-இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாப் போச்சு. இதுகெல்லாம் மேலே தலைவர்கள், தலைவிகள் காலில் விழுந்து கும்பிடுகிற அசிங்கம். சேச்சே…மானம் ரோஷம் உள்ளவன் அரசியலுக்குப் போவானா?

மேலே சொன்ன வாதங்களில் பொய் ஒன்றும் இல்லைதான். ஆனால், இவையே முழு உண்மையும் இல்லை. இது மட்டுமே அரசியல் என்பதும் சரி இல்லை. காலம் காலமாக-ராஜாக்கள் ஆண்ட காலம் முதல்-அரசியல் என்றால் அது அரண்மனைக்குள் நடப்பது-மந்திரிகளும் சேனாதிபதிகளும் ராஜரிஷிகளும் சகுனிச்சூதுகளும் சம்பந்தப்பட்டது என்றுதான் மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளது.அரண்மனை அரசியலை விட்டு மக்கள் வெகுதொலைவில் வைக்கப்பட்டிருந்தனர்.ஆண்டாண்டு காலமாக அப்படி தொலைவிலேயே இருந்த மக்கள் மனங்களில் “இது நமக்குச் சம்பந்தமில்லாதது-ராசாங்க விசயம்” என்று பதிவாகிவிட்டது.

“விரலுக்குத் தக்கன வீக்கம் வேணும்”
“ராஜா வீட்டு நாய் சிம்மாசனத்திலே ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியில் ஏறலாமா?”
“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருடந்தாக முடியுமா?”
“ஏழை சொல் அம்பலம் ஏறுமா?”


ராஜாக்கள் போய்,வெள்ளைக்காரனின் காலனி ஆட்சி வந்து அதுவும் போய் மக்களாட்சி வந்து 57 வருஷம் ஓடிவிட்டது. பல தலைமுறைகள் வாழ்ந்தும் முடிந்துவிட்டது.ஆனாலும் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் மனசில் படிந்துவிட்ட தாழ்வு மனப்பான்மை-அரசியல் நம்மோடு தொடர்புடையது அல்ல என்ற நினைப்பு இன்றளவும் நீடிக்கிறது.

ஆனால்,ஒரு முக்கியமான உண்மையை நாம் எல்லோரும் மறந்துவிடுகிறோம். சாக்கடை என்றும் மானங்கெட்டது என்றும் நாம் பேசுவது இந்த அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை வருகிற தேர்தல் அரசியலைத்தான்.இப்படி இந்த அரசியலை சாக்கடையாக வைத்திருப்பதன் மூலம் நல்லவர்கள்,உழைப்பாளிகள் இதைவிட்டு விலகி இருக்கும்படி செய்யப்படுகிறது. இது திட்டமிடப்பட்ட சதியாகும்.தொழிலாளிகளை, விவசாயிகளை, நடுத்தர வர்க்கத்தை- என பாடுபடும் எல்லோரையும் மேலும் மேலும் அரசியலற்றவர்களாக ஆக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள உண்மையான அரசியலாகும்.

நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல முடிவுகளை எடுப்பது அரசியல் அல்லவா? அதுபற்றி நாம் அக்கறையில்லாமல் இருப்பது எப்படி சரியாகும்? உன்னை என்ன செய்யிருதுன்னு அங்க நாலு பேர் உட்கார்ந்து முடிவு செஞ்சிக்கிடு இருக்கான். நீ அதைப்பத்திக் கவலைப்படாம இருப்பியா? என்பது தான் கேள்வி.

ஆகவே அரசியல் என்பது………



--ச.தமிழ்ச்செல்வன்

1 கருத்து:

bhas சொன்னது…

neengal solvathu sari.