திங்கள், 31 மே, 2010

பொது விநியோகமுறையை சீரழிக்க FICCI ன் ஆலோசனை


இந்திய அரசு நெடுங்காலமாகவே பட்ஜெட்டுக்கு முன்னர் பல்வேறு தரப்பினரை அழைத்து ஆலோசனை கேட்பது வழக்கம். பல்வேறு தரப்பு என்றதும் சமூகத்தில் விவசாயிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள்,பத்திரிக்கையாளர்கள் அல்லது சிறு தொழில் செய்வோரை அல்ல, இந்திய கார்ப்பரேட்டுகளின் பல்வேறு அமைப்புகளான FICCI, CII, மற்றும் ASSOCHAM ஆகியவற்றுடன் மட்டும் தான்.

இவர்களுடைய ஆலோசனையெல்லாம் எப்படி இருக்கும். கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு அரசு என்னசெய்யவேண்டும், புதிய தொழில்களை அவர்கள் தொடங்குவதற்குப் பதிலாக லாபமீட்டும் பொதுத்துறையை தனியார்மயமாக்குவது, இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்ற போர்வையில் எல்லாவற்றிற்கும் சுங்கம் ( நெடுஞ்சாலைகள், விமான நிலையம், பாலங்கள்) செலுத்திவிட்டு மக்களை பயன்படுத்துமாறு அரசுக்கு ஆலோசனை கூறுவது, வரிகளை அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைப்பது என்று மக்களின் நலன் சாராத ஆலோசனைகள் என்பதில். அதையே அவர்கள் நலனுக்காகவே தொழில் நடத்தும் ஊடகங்கள் இந்தியா அப்படி செய்தால் வல்லரசாகும் மானியம் கொடுத்தால் நாம் அழிந்து போவோம் என பொதுப்புத்தியை விதைக்கிறார்கள்.

சமீபத்தில் FICCI ன் அக்கறை சாமானியர்களின் மேல் வந்துவிட்டது போலும். ஏற்கனவே இருக்கின்ற பொதுவிநியோக முறையை அரசு கைவிட்டுவிட்டு OUTSOURSE மூலம் மக்களுக்கு ரேசன் வழங்க வேண்டுமாம், அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள “FOOD STAMP” களை இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு அரசு வழங்க வேண்டுமாம். அவர்கள் எந்த கடைகளிலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாமாம். இதில் என்ன உள்நோக்கம் அல்லது அவர்களுக்கு லாபம் இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் தான் விளங்கும்.



இந்திய பொதுவிநியோக முறையை மேம்படுத்தும் ஆலோசனைகளுக்குப் பதிலாக அதை தனியார் நிறுவனங்கள் அதில் லாபமீட்டும் வழிகளை ஆராயத்தொடங்கிவிட்டார்கள். பொது விநியோகம் அரசு செயல்படுத்துவதால் அதற்கு்த் தேவையான் உணவு தானியங்களை அரசு நேரடியாக விவசாயிகளிடம் அரசே கொள்முதல் செய்வதால் அவர்களுக்குக் குறைந்தபட்ச அல்லது கட்டுபடியாகிற விலைக் கிடைக்கிறது. மேலும் அரசின் கைவசம் தானிய இருப்பு உள்ளதால் சந்தையில், பதுக்கவோ, ஊகவணிகமோ செய்ய முடியாது. உலக வங்கி, பன்னாட்டுநிதி நிறுவனங்கள் அறிவுரை வழங்குவது போல அரசின் வசம் போலீஸ், நீதிமன்றம், பாராளுமன்றம், ஜெயில் ஆகியவை மட்டும் இருக்கவேண்டும், மக்கள் நல அரசாங்கம் தேவையில்லை.

அரசு உண்மையாக ஜனநாயகத்தை மதிப்பதாக இருந்தால் யாருடைய ஆலோசனையை கேட்கவேண்டும் அமல்படுத்தவேண்டும். இந்தியமக்கள் தொகையில் 0.1 சதமானத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள கார்ப்பரேடுகளின் ஆலோசனையையா அல்லது பெரும் பகுதி மக்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள்,விவசாயிகளின் சங்கங்கள் ஆகியனவற்றின் ஆலோசனையையா? தேர்தலில் வாக்களித்த இந்திய தொழிலாளர்களும் பொதுமக்களும் விவசாயிகளும் குறைந்தபட்ச தேவைகளுக்காக அரசின் மன்றாடியும் போராடியும் கேட்டாலும் கிடைப்பதில்லை. சமூகத்தின் ஒருபகுதி மக்கள் மட்டும் வளர்ச்சியடைவது அதை வளர்ச்சி என்று சொல்வதற்கு பதிலாக “வீக்கம்” என்று தான் சொல்லவேண்டும். நீண்ட நாட்களாகவே இணையத்தில் ஒருவரின் பயோடேட்டா உலாவந்தது, அவர் படித்த கல்வி மட்டும் ஒரீரு பக்கங்கள் நீண்டது, அவர் வகித்த பொறுப்புகளும் அப்படியே பின்னர் அவர் யார் என்றால் சாட்சாத் பிரதமர் மன்மோகன் சிங் தான்.அவர் படித்த படிப்பிற்கும் சிந்தனைக்கும் சம்பந்தமில்லை போலிருக்கிறது. சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் பொருந்தும்.


courtesy:The peninsula

கருத்துகள் இல்லை: