வெள்ளி, 7 மே, 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்- அணிந்துரை





அணிந்துரை

அரசியல் என்றால் முகம் சுளிப்பவர்கள் உண்டு. தேர்தல் வந்தால் ஓட்டு போடுவோம்; ஆனால் அரசியலில் இருந்து விலகியே நிற்போம் என்று சொல்பவர்கள் உண்டு. மாநிலத்தில், மத்திய அரசில் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகளை கேட்போர் பொதுவாகவே அரசியலை வெறுப்பதுண்டு. நேற்று ஒரு கட்சியில் இருந்தார்; இன்று வேறு கட்சிக்கு தாவி விட்டார்; அவர் போகாத கட்சி இல்லை என்று செய்தி வருகிற போது பொதுவாக அரசியல்வாதிகள் இப்படித்தான் என்று கருதுபவர்கள் உண்டு.

அரசியலில் இத்தகைய நிகழ்ச்சி போக்குகளை ஆதாரமாக காட்டி அரசியல் என்பது ஒரு சிறந்த தொழிலாகிவிட்டது; அதிலும் மூலதனமில்லத தொழிலாகி விட்டது ‘ என தலையங்கம் எழுதி அரசியல்வாதிகளை ஒரு சில நாளேடுகள் கடுமையாக விமர்சித்தன.

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுவாரும் உண்டு. அரசியல் என்பது பிழைப்பு அல்ல; மாறாக அர்ப்பணிப்போடு செய்யும் உழைப்பு என்ற மன நிறைவோடு செயல்பட்டு வருபவர்களும் உண்டு. வசதியற்றவர், வசதிபடைத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவரது அன்றாட தேவைகளை சாதகமாகவோ பாதகமாகவோ தீர்மானிப்பது அரசு தான். குறிப்பாக ஏழை எளிய, உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் குவிந்து கிடக்கும் அத்துணை பிரச்சனைகளுக்கும் அடிப்படையானது அரசு கடைபிடிக்கும் ஆட்சிக்கொள்கை தான்.

ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, நான் உண்டு என் வேலை உண்டு; எனக்கு அரசியல் பிடிக்காது என்று ஒதுங்கி நிற்போர் ஒருவகையில் அரசின் நடவடிக்கையை ஆதரிப்பவராகிவிடுகிறார். நமது வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அரசியல் இரண்டற கலந்து கிடக்கிறது. ஒருவரின் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திற்கு அரசும் காரணம் என்கிற போது அந்த அரசு பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா/ அப்படி கவலைப்படுவது தான் அரசியல்.

அரசு, அரசியல் அரசாங்கம் போன்றவற்றை எளிய நடையில் கலந்துரையாடல் பாணியில் பத்து சிறு சிறு அத்தியாயங்களில் தமிழ்செல்வன் விளக்கி இருக்கிறார். அரசைப் பற்றி விளக்குகிற போது அது எல்லோருக்கும் பொதுவானது, பாரபட்சமற்றது என்ற தோற்றம் இருப்பினும் உண்மையில் அரசு சமூகத்தில் உள்ள ஒரு சாராருக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்ற உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய இரு மேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவாக்கிய மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்குகிறார்.

அரசு மட்டுமா? இயங்கிவரும் அரசியல் கட்சிகளும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் நலன்களை பாதுகாக்க பாடுபடும் அமைப்புகள்தான், அது எல்லோருக்கும் பொதுவானது அல்ல என்பதை படிப்போர் ஏற்றுக்கொள்ளும் படி விளக்கியிருக்கிறார். நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரையிலும் இதற்கு இடைப்பட்ட நடுத்தரப்பகுதியினர் என நாம் வாழும் இச்சமூகம் ஒரு சமதளப் பிரதேசம் போன்றதல்ல. உழைத்து வாழ்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என இரண்டு பகுதிகளாக, இரண்டு வர்க்கங்களாக சமூகம் பிரிந்து கிடக்கிறபோது எந்த ஒரு அரசியல் கட்சியும் எந்த அரசும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது என்ற நுட்பமான அம்சட்தை நூலாசிரியர் தெளிவாக விள்க்கியிருக்கிறார். இதற்காக மனிதகுல வரலாற்றை சுருக்கச் சொல்லி விளங்க வைக்கிறார்.

உழைப்பாளி மக்கள் மத்தியில் அரசியல் பற்றியும் அரசு பற்றியும் எழும் பல கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு இச்சிறு நூல் அமைந்துள்ளது.

புதிய பாணியில் இந்நூலை எழுதியுள்ள தமிழ்செல்வன் தொழிற்சங்கப் பணியாற்றிக்கொண்டே அறிவொளி இயக்கத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றினார். பரந்துபட்ட மக்களோடு நெருக்கமாக இருந்து படிப்பறியா மக்கள் மத்தியில் மத்தியில் ஆற்றிய பணியின் அனுபவத்தில் இருந்து எளிய முறையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.

ஜி.ராமகிருஷ்ணன்,
பாரதி புத்தகாலயம்

கருத்துகள் இல்லை: