ஞாயிறு, 16 மே, 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்- 2

வித விதமாய் அரசுகள்-ஆட்சிகள்

அரசியல் என்ற சொல்லில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. அரசு+இயல்=அரசியல். அதாவது அரசு சம்பந்தப்பட்டது தான் அரசியல். அப்படியானால் அரசு என்றால் என்ன?

தமிழக அரசு என்கிறோம்.மத்திய அரசு என்கிறோம்.தி.மு.க அரசு அரசு-அதிமுக அரசு என்கிறோம்.அப்புறம் அரசாங்கம் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. தனியார் துறையா, அரசுத்துறையா என்கிற இடத்திலும் அரசு வருகிறது. ஆங்கில அகராதியில் அரசு என்பதற்கு ஸ்டேட் என்றுபோட்டிருக்கிறான். ஸ்டேட் என்றால் மாநிலம் என்று ஒரு அர்த்தம் வேறு போட்டிருக்கிறான்.அந்த ஸ்டேட் வேறு இந்த ஸ்டேட் வேறா?

அட, எதைத்தானய்யா அரசு என்கிறோம்?

இதே கேள்வியை கொஞ்சம் மாற்றி போட்டு எதையெல்லாம் அரசு என்கிறோம்? என்று கேட்டால் மள மளவென்று பதி வரும்.

கலெக்டர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ், பஞ்சாயத்து யூனியன், போலீஸ், ஜெயில், கோர்ட், போஸ்ட் ஆபீஸ், ராணுவம், சட்டமன்றம், பாராளுமன்றம், அமைச்சர்கள், ஆளும்கட்சி-எதிர்கட்சி, ஏராளமான அரசுத்துறைகள், அரசு நிறுவனங்கள் (அரசு சாராயக்கடை உட்பட.

இப்படி அரசு என்ற வார்த்தையைக் கேட்டதும் நமக்கு இத்தனையும் நினைவுக்கு வருகிறது. களா புளா என்று மேலே உள்ள எல்லாத்தையும் ஒரு ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தினால் கீழே உள்ள நான்கு பிரிவுகளில் அடங்கி விடும்.

இப்படி இந்த நான்கும் சேர்ந்ததுதான் அரசு. இந்த அரசைப் பற்றியதுதான் அரசியல். ஆனால் நாம் இந்த நான்கில் ஒரே ஒரு பிரிவான சட்டமன்றம் / பாராளுமன்றம் மற்றும் அதில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை யார் போய் உட்கார்வது என்பதுதான் அரசியல் என்று நம்பிக்கொண்டு குழம்பிக் கிடக்கிறோம். முதல் மூன்று பிரிவுகளான நிர்வாகம், இராணுவம்,போலீஸ்,சிறைச்சாலை, நீதி இவைதான் நிரந்தரமாக இருக்கின்றன.இவை இல்லாமல் அரசு ஏது?

பல நாடுகளில் சட்டமன்றம் பாராளுமன்றம் இல்லாமலே கூட அரசு என்பது இருக்கிறது.ரொம்ப தூரம் போக வேண்டாம் நமது அண்டை நாடான பாகிஸ்தானைப் பாருங்கள். கொஞ்சநாள் சட்டமன்றம் தேர்தல் எல்லாம் இருக்கும் பிறகு கொஞ்ச நாளில் இதெல்லாம் இல்லாதநிலை இருக்கும்.ஆனால் எப்போதும் அரசு இருந்து கொண்டுதான் இருக்கும்.இந்த அரசை நாம் தேர்ந்தெடுப்பதில்லை அது இருந்து கொண்டே அல்லவா இருக்கிறது. நீதி,நிர்வாகம், இராணுவம்,போலீஸ் இதையெல்லாம் நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதில்லை ஆகவே,நமது விருப்பம்,தேர்வுகளுக்கு அப்பால் கல்லாக நின்று நம்மீது இடையறாது ஆட்சி செலுத்திக்கொண்டே இருக்கிறது அரசு. கீழே பட்டியலிட்டது போல ஆட்சிகளில் பல ரகம் உண்டு.ஆனால் அரசு ஒன்று தான்.

1.ராணுவ ஆட்சி; ஒரு இராணுவ அதிகாரியே அதிபராக இருப்பார். அமைச்சரவை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அதை அதிபரே நியமிப்பார் அல்லது அதற்கு மட்டும் தேர்தல் நடக்கலாம் (பாகிஸ்தான்,மியான்மர் மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளில் இருப்பது).

2.முடியாட்சி: மன்னராட்சி முறை – ஜோர்டானிலும் பல அரபு நாடுகளிலும் இருப்பது.அரபு மன்னர்கள் எமிர் என அழைக்கப்படுவர் – அந்நாடு எமிரேட் என அழைக்கப்படும்.

3.சர்வாதிகார ஆட்சி: ஒரு தனி நபர் சர்வ அதிகாரம் படைத்தவராக இருப்பார்.அவர் இட்டதுதான் சட்டம்.சென்ற நூற்றாண்டில் பல தென் அமெரிக்க நாடுகளில் இந்த ஆட்சிமுறை இருந்தது.

உதாரணமாக, சிலி நாட்டில்-ஜெனரல் அகஸ்டோ பினோசெட் அர்ஜென்டினாவில் 1. ஜூவான் மானுவெல் டி-ரோசஸ் 2. ஜூவான் பெரோன், மெக்சிகொவில்- அந்தோனியோ-லொபெஸ்-டி-சண்டா அன்னா

4. பாசிஸ்ட் ஆட்சி: நாட்டு மக்களை ஒருபோலி தேசிய உணர்வில் அமிழ்த்தி வைத்து-பிற தேசிய இனங்களை அழித்தொழிப்பது- தனி நபரோ ஒரு குழுவோ இப்பணியைத் தலைமை தாங்கும்.

ஜெர்மனியில் – ஹிட்லர் (1933-1945)
இத்தாலியில் – முசோலினி (1922-1943)
ஸ்பெயினில் – பிரெடெரிக்கொ பிராங்கோ (1939-1975)

இந்தியாவில் இப்போது பாஜக தலைமையில் வளர்ந்து வரும் இந்துத்வா. குஜராத்தில் முஸ்லீம் மக்களைக் கொன்று குவித்து இந்தியாவுக்கே முன்மாதிரியாக ஒரு சோதனை செய்துள்ளதாகக் கூறுகிறது. நாடு முழுவதும் சக்திமிக்க ஒரு கட்சியாக பாஜக ஆட்சிக்கு வருமானால் அது பாசிஸ்ட் ஆட்சியாகவே இருக்கும் என்று வரலாற்றாளார்களும் அரசியல் அறிஞர்களும் கணிக்கின்றனர்.

5. காலனி ஆட்சி: எங்கோ இருக்கும் ஒரு நாடு வேறு எங்கோ இருக்கும் பிற நாடுகளை அடிமைப்படுத்தி ஆள்வது. இந்தியாவை பிரிட்டன் ஆண்டது போல- பல ஆப்பிரிக்க நாடுகளை ஐரோப்பிய நாடுகள் ஆண்டது போல.

6.ஜனநாயக ஆட்சி: தேர்தல் மூலம் ஓட்டுப்போட்டு ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில் இருப்பது.

இப்படி ரகரகமாக ஆட்சி முறைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசமாக இருக்கின்றன. இதைத்தான் அரசாங்கம் என்பார்கள். ஆனால் அரசு என்பது வேறு. அது எப்போதும் எல்லா நாடுகளிலும் ஒரேவேலையைத்தான் செய்து வந்துள்ளது; நீதி, நிர்வாகம், ராணுவம்/ போலீஸ் தான். ஒரே நாட்டிலேயே கூட மேலே சொன்ன பலவிதமான ஆட்சி முறைகளும் அமுலில் இருந்தது உண்டு. நமது இந்திய நாட்டிலும்கூட அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆண்ட முடியாட்சி இருந்தது. பிறகு வெள்ளைக்காரன் ஆண்ட காலனி ஆட்சி இருந்தது.1947க்குப் பிறகு ஜனநாயக ஆட்சி வந்தது.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது?ஆட்சி முறைகள் என்னவாக இருந்தாலும் அரசு என்பது நீதி, நிர்வாகம் போலீஸ்,ஜெயில், ராணுவம் இம்மூன்றும் சேர்ந்ததுதான் அரசு. நீதி என்பது வேறு. அது எல்லோருக்கும் பொதுவானது என்று மக்கள் தவறான ஒரு அரசின் ஒரு பகுதிதான் என்பது.


அப்படியாகப்பட்ட அரசு எப்போது பிறந்தது?அதன் கதை என்ன?ஆனால், கதையைச் சொல்லவிடாமல் இன்னொரு கேள்வி வந்து வழி மறிக்கிறது. இதுவரை மேலே சொல்லப்பட்ட ஆட்சி முறைகள் அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். சட்டையை மாற்றி மாற்றிப் போடுவதால் மக்களுக்கு அது வேறு இது வேறு போலத்தோற்றம் காட்டலாம். ஆனால் எல்லா ஆட்சிகளுமே தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கிற ஒரே வேலையைத்தான் காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கின்றன.மேலே சொன்ன எல்லாமே தனியுடமையைப் பாதுகாக்கும் ஆட்சிகள் தான். இவை எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டது சோசலிச ஆட்சி அல்லது பொதுவுடமை ஆட்சி ஒன்று மட்டும் தான். அதைப்பற்றி இதுவரை ஒன்றுமே சொல்லவில்லையே ஏன்? என்கிற கேள்வி இப்போது நம்முன் நிற்கிறது.

--ச.தமிழ்ச்செல்வன்

கருத்துகள் இல்லை: