வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நல்லாசிரியர்

ஒவ்வொரு வருசமும் ஆசிரியர் தினம் கொண்டாடுறோம், அரசாங்கம் அந்த தினத்தையொட்டு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து “நல்லாசிரியர்” விருது கொடுக்கிறது. நம்ம படிச்ச ஸ்கூல்ல நல்லாசிரியர் யாராக இருக்குமென்று ஒரு கேள்வி ஓடியது. ஆரம்பப் பள்ளியில் மாணவர்களை கால்நகத்தை வெட்டச்சொன்ன ஆசிரியரை நினைத்துப் பார்த்தேன், மாணவர்களை வாய்ப்பாடு பாடச்சொல்லிவிட்டு வேட்டி விலகியதுகூட தெரியாமல் தூங்கியவாத்தியார்கள் உண்டு. சேரிப்பிள்ளைகளை அவர் தொட்டு அடிக்காமல் மற்ற மாணவர்களைச்சொல்லி குட்டச்சொன்ன வாத்தியார். வீட்டுவேலைக்கு மாணவர்களை கூப்பிடுகிற வாத்தியார்கள். டியூசனில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் பரீட்சைக்கு வரவுள்ள முக்கிய கேள்விகளை குறித்துக்கொடுத்து எல்லாரையும் டுயூசன் படிக்கத்தூண்டுகிற வாத்தியார்கள். இப்படிப்பட்ட வாத்தியார்கள்தான் நிறையவந்தார்கள். நல்லாசிரியர் என்ற வாத்தியார் தகுதி சிலுவைமுத்து சாருக்கு மட்டும்தான். அவர் வரலாறு பாடம் நடத்துவார், புத்தகத்தை புரட்டமாட்டார், மேப் கண்டிப்பாக மாட்டிவைக்கனும். கடைசி பென்ஞ் மாணவனுக்கு புரியவைப்பது தான் அவருடைய குறிக்கோள். டுயூசன் எடுக்கிற வாத்திமார்களை வைவார், மாணவர்களையும்தான். ஸ்பெசல் கிளாஸ் என்றால் ஒரு பயலும் வரமாட்டான், காசுகொடுத்துப் படிச்சாதான் தரமானது என்ற சிந்தனை மோசமானது என்பார். தினமும் செய்தித்தாளை வாசித்துவிட்டு முக்கிய செய்திகளை சொல்லுவார்.

  “கனவு ஆசிரியர்” என்ற கட்டுரைத்தொகுப்பு சென்ற ஆண்டில் வாசித்தேன், அதை தொகுத்தவர் கே.துளசிதாசன், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில் முதல்வராக இருக்கிறார். அந்த பள்ளியில் ஆண்டுதோறும் சமூக ஆர்வலர்களை வரவழைத்து கவுரவிப்பது, எழுத்தாளர்களை, கலைஞர்களை அழைத்து மாணவர்களிடம் பேசச்சொல்வது, அறிஞர்களை அழைத்து மாணவர்களுடன் உரையாட வாய்ப்பு அளிப்பது என்ற புதுமுறையை கையாளுகிறார்கள் என்று அறிந்தேன். அந்த துளசிதான் ஆசிரியருக்கு இந்தவருடம் அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. அந்த நூலில் எழுத்தாள்ர்கள் கல்வியாள்ர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் ஏதோ அவருக்குத் தெரிந்தவற்றை மாணவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள் அல்லர், அவர்களும் மாணவர்களுடன் சேர்ந்து கற்கவேண்டியவர்கள். சந்தேகம் கெட்கிற மாணவர்களை ஆசிரியர்களுக்குப் பிடிக்காது, எனக்குத்தெரிந்து யாரும் புரியவில்லை என்று கேட்டதுகிடையாது. தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்குகிறவர்களைத்தான் டீ வாங்க அனுப்புவார்கள்.

இரா.நடராஜன் அவர்கள் எழுதிய “ஆயிஷா” நாவல் ஆசிரியர்- மாணவர்கள் உறவைப்பற்றியது. அறிவியல் ஆர்வமுள்ள ஒரு மாணவி பாடப்புத்தகம் அல்லாமல் மற்ற அறிவியல் நூல்களை வாசித்துவிட்டு அத்லிருந்து சந்தேகம் எழுகிறது. விடை ஆசிரியரிடம் இல்லை. புதிய முறைகளை தெரிந்துகொண்டு மாணவியின் சந்தேகத்தை போக்கவில்லை. தேர்வுகளுக்கு நோட்ஸ் லுள்ள விடைகளைத்தவிற சொந்தமான எழுதினால் மார்க் கிடையாது. கேள்வி கேட்டால் அடிக்கிறார்கள். எல்லா பாடநூல்களுக்கும் நோட்ஸ் வந்துவிட்டது அப்போதே! கணிதத்திற்கும் உண்டு. ஆயிஷா என்ற அந்த மாணவி ஒரு ஆசிரியரை புத்தகம் எழுதத்தூண்டினாள். எட்டாம்வகுப்பு படிக்கிற உனக்கு லைப்ரரியிலுள்ள பெரிய ஆங்கிலப்புத்தகம் புரியுதா? கொஞ்சம் கொஞ்சம் புரியுது மிஸ்! ஆனா தாய்மொழியில இருந்தா நல்லாயிருக்கும் நீங்க எழுதுங்க மிஸ் என்று ஆசிரியரை தூண்டுகிறாள். வேதியியல் பிரிவு ஆசிரியர் கொடுத்த அடிகளுக்கு வலிக்காமல் இருக்க நைட்ரஸ் ஆக்சைடு மருந்தை உடலில் செலுத்தி, டீச்சர் எனக்கு இப்ப எதைவச்சி அடிச்சாலும் வலிக்கல மிஸ்! என்று இறந்துபோனாள் என்று முடிகிறது அந்த நாவல். அந்த குறுநாவல் குறும்படமாகவும் வந்துள்ளது www.youtube.com/watch?v=8-BuyTExd_o.

ருஷ்ய நாவலஒன்று “முதல் ஆசிரியன்” சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதியது, நகரிலிருந்து தொலைதூர கிராமமொன்றில் குதிரை லாயத்தை பள்ளிக்கூடமாக மாற்றி பாடம் சொல்லித்தருகிறார். அவருக்கு பாடத்திட்டம் என்றால் என்ன, என்ன சொல்லிக்கொடுக்க வேண்டுமென்பதே தெரியாது. ஆனால் ஆடு, மாடு, குதிரை மேய்த்த குழந்தைகளை வகுப்பறைக்கு கொண்டுசென்றார். அவரிடம் பயின்ற ஒரு மாணவி நாட்டின் சிறந்த கல்வியாளாராக உருவாகி பள்ளியின் ஆண்டுவிழாவிற்காக் அந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருடைய ஆசிரியர் ஒரு தபால்காராரக உழைத்துக்கொண்டிருந்தார். இதை தழுவியே தமிழில் “வாகைசூடவா” என்ற திரைப்படம் வந்தது. ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று சமீபத்தில் வந்த மற்றொரு திரைப்படம் “சாட்டை”.

அரசாங்கப்பள்ளிகளை ஆசிரியர் சமுகத்தைவைத்தே அரசாங்கம் ஒழித்துக்கட்டியது, கட்டணக்கல்வி தான் சிறந்தது என்ற பொதுப்புத்தியை விதைத்த ஊடகங்கள். மாணவர்கள் சேர்க்கை குறைவு என்ற காரணம் காட்டி அரசாங்கப்பள்ளியை மூடிவிட்டு தனியார் பள்ளிகளை ஊக்கும்விக்கும் அரசின் கொள்கை. கல்வி என்பது சாராயவியாபாரிகளின் கையில் இருந்தால் அவர்கள் ஆசிரியர்களை எப்படி நடத்துவார்கள், மாணவர்கள் என்பவர்கள் வெறும் சரக்குகள் தான். சிறந்த ஆசிரியர்கள் தான் சிறந்த சமூகத்தை உருவாக்கமுடியும்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஸ்டீபன் ஹாக்கிங் - சக்கரநாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்.

மனிதர்கள் பிரமிப்பு நீங்காமல் இருப்பது இந்த பிரபஞ்சத்தை பற்றிதான், பிரபஞ்சம் எப்போது தோன்றியது, யாராவது படைத்தார்களா? இன்னும் எவ்வளவு நாள் உலகம் / பிரபஞ்சம் நீடிக்கும்? பூமியில் மட்டும் உயிரினமா? வேற்று கிரகங்களில் மனிதர்கள் உண்டா? குழந்தைகள் எல்லாவற்றையும் வியப்பதைப்போல் மனிதர்கள் பிரபஞ்சத்தை பார்த்து வியக்கிறார்கள். இயற்பியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மர்மான முடிச்சுகளை ஒவ்வொன்றாக கட்டுடைத்துவருகிறார்கள்.அப்படிப்பட்ட விஞ்ஞானிகளில் நீயூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையி ல் சமகால விஞ்ஞானியாக அறியப்படுபவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங். பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சி நடந்தாலே கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வி வந்துவிடும். அப்படி பிரபஞ்சத்தின் தோற்றுவாய் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் கேட்கப்பட்டபோது “அப்படியெல்லாம் ஒருவருமில்லை; அவருக்கு இங்கு வேலையுமில்லை; அப்படியொருவர் இங்கு அவசியமுமில்லை” என்று சொல்லிவிட்டார். பைபிளில் சொன்னதற்கு மாற்றாக சூரியமையக்கருத்தை வலியுறுத்திய கலிலியோவுக்கு தனிமைச்சிறை தண்டனை, புரூனோவை உயிரோடு எரித்துக்கொன்றார்கள். 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானயுகத்தில் ஸ்டீபனுக்கு அப்படியொரு தண்டனைதந்துவிடமுடியுமா? சரி உட்கார்ந்து பேசுவோம் என்று வாடிகன் நகருக்கு விஞ்ஞானிகளை போப் ஆண்டவர் அழைத்தார், அதில் ஸ்டீபனும் கலந்துகொண்டார், மனம்விட்டுப் பேசினார்கள்.

போப்: கோளம் வெடித்துப்பிரபஞ்சம் தோன்றிய பரிணாமத்தைப் பேசுகிற உங்கள் கோட்பாட்டில், "what place you have assigned for God".

ஹாக்கிங்: In my theory there is no place for God! முற்காலத்தில் மழைக்கென்று ஒரு கடவுளையும், புயலை உற்[பத்தி செய்ய ஒரு கடவுளையும், நோய்வந்தால் அதையும் கூட ஒரு கடவுளின் தண்டனையாகவே கருதினோம். ஆனால் அவையெல்லாம், சில நியதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிற பிரபஞ்ச நிகழ்ச்சிகள் என்று நாம் இப்போது உணர்கிறோம். அப்போதெல்லாம் கடவுள்தான் எங்கோ உட்கார்ந்துகொண்டு எல்லாச்செயல்களயும் செய்துகொண்டு வருகிறார் என்று நம்பினோம். In those days God was full of jobs; but now we have made God incresingly jobless!

கனத்தமெளனம் நிலவிய சூழ்நிலையில் மறுபடியும்..

போப்: கோளம் வெடித்ததாகச் சொல்கிறீர்களே கோளத்தை வெடிக்கச்செய்தது யார்? who casused the Big Bang?
நிதானமாக...

ஹாக்கிங்: Perhaps there, to cause the Big Bang, We may require a God!

போப்: Thank God! God is there!

விடைதெரியாத கேள்விகளுக்கு எல்லாம் ஈசன்செயல் என்று சொல்வது மாதிரி போப்பிற்கு திருப்தியானவுடன், விஞ்ஞானிகளுக்கு அன்பான ஒரு எச்சரிக்கை விடுத்தார், “ பிரபஞ்சம் எங்கே எப்போது தோன்ரியது என்ற விசயத்தை விஞ்ஞானத்தின் கைகளில் விட்டுவிடமுடியாது, அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அதில் மூக்கை நுழைக்கவேண்டாம்”.

அடுத்த அமர்வில், “நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இப்பிரபஞ்சம், இன்று விரிந்து, விரிந்து சென்று கொண்டிருக்கிறது.ஒரு காலகட்டத்தில் அது சுருங்க ஆரம்பிக்கும்.சுருங்கிச் சுருங்கி மேலும் சுர்ங்கமுடியாத நிலையை அடையும்போது, மறுபடியும் அது விரிய ஆரம்பிக்கும்.விரிய ஆரம்பித்தவுடன் அப்படி, எப்போது தனிமங்கள் உருவாகின’ நடசத்திரங்கள் எவ்வாறு உருவாகின? அவைகளின் கதி என்ன?விதி என்ன? என்பதையெல்லாம் விரிவாக எடுத்துரைக்கும் கணிதங்கள் கைவசம் இருக்கின்றன; இதில் எங்கே கடவுள் வருகிறார்? அவர் வருவதற்கு என்ன அவசியம்; அவருக்கு இங்கே என்ன வேலை?” என்று கொஞ்சம் கடுமையாகவே வாடிகன் அமர்வில் ஸ்டீபன் பேசினார்.

அறிவியல்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அதுவரை அறிமுகமாயிருந்த ஸ்டீபன் ஹாக்கிங் “A Brief History of Time" என்ற புத்தகத்தை எழுதியதற்கு அவருடைய புகழ் மற்ற மக்களுக்கும் பரவியது, அந்த நூலை எளிமையாக அறிவியல் துறைக்கு அப்பாற்பட்ட மக்களுக்கும் புரியும்வண்ணம் எழுதியிருந்தார். உலகில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்றான இந்த புத்தகம் விற்பனையில் கின்னஸ் சாதனை புரிந்தது, உலகின் 60 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
                                -------------------

இவ்வளவு பிரபலமான அந்த இயற்பியல்வாதி எப்படி சக்கரநாற்காலியில் சிக்குண்டு கிடக்கிறார், அவருக்கு என்னவாயிற்று? சரியாக கலிலியோ பிறந்தபின் 300 வருடங்கள் கழித்து பிறந்தார் ஸ்டீபன். சாதாரணக்குடும்பத்தில் பிறந்த ஸ்டீபனின் தந்தை ஒரு மருத்துவர், அவருடைய தாயாரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.பள்ளிக்கல்வியை முடித்தவுடன், தந்தை தன்னைப்போல் மகனை மருத்துவம் படிக்கவிரும்பினார். ஆனால் ஸ்டீபனுக்கு இயற்பியல் படிப்பதில் ஆர்வம். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் வேதியியலையும் தெரிவுசெய்து படித்தார். அங்கு படித்த மூன்று ஆண்டுகளில் எப்போதும் தனிமையாக இருப்பார், விளையாட்டு எதிலும் ஆர்வமில்லை. ஒரே ஒரு விளையாட்டில் மட்டும் படகுச்சவாரி மட்டும் ஆர்வம். இயற்பியல் பாடம் மற்ற மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால், ஸ்டீபனுக்கோ மிகமிக எளிதாக இருந்தது. ஸ்டீபனுக்கு பிரபஞ்சவியல் பற்றிய படிப்பில் ஆர்வமிருந்தது. அதனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரபஞ்சவியல் படித்தார். பல்கலைக்கழகத்தில் கடைசிப் பருவம் முடிவுக்கு வந்தநேரம் ஒரு நாள் மாடிப்படிகளிலிருந்து தலைகுப்புற விழுந்தார். பின்னர் தற்காலிகமாக நினைவுகளை இழந்தார். மருத்துவத்துறை அவருக்கு நரம்புமண்டலத்தை தாக்கும் நோய் வந்துள்ளதாக அறிவித்தது.

 
அவருக்கு வந்த நோயை ALS என்கிறார்கள், அமியோட்ரோஃபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிக் என்ற விளக்கம். இன்னும் புரியவில்லையா? இதற்கு இன்னொரு பெயர் லூ கெஹ்ரிக் நோய். அதாவது முதன்முதலில் லூகெஹ்ரிக் என்ற கூடைப்பந்துவீரரை இந்த நோய் தாக்கியதால் நோய்க்கும் அந்த பெயர் வைத்துவிட்டார்கள். நமது உடலிலிரண்டுவகையான தசைகள் உள்ளன, ஒன்று தானாக வேலைசெய்பவை (இதயம், நுரையீரல்,கிட்னி) இன்னொன்று நமது விருப்பப்படி செயல்படும் உறுப்புகள் (கை,கால்,வாய்,கண்). ALS நோய் வந்தவர்களுக்கு நமது விருப்பப்படி செயல்படும் உறுப்புக்களை இயக்கமுடியாது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் காரணமில்லாமல் கீழே அடிக்கடி விழுந்துவிடுவார்கள், பேச்சு கொஞ்சம்கொஞ்சமாக குளறி விடும்,கை, கால்கள் பலவீனமாகிவிடும் சாப்பிடவோ, எழுதவோ கஷ்டமாகிவிடும்.அப்படி படிப்படியாக தாக்குண்டு 30 ஆண்டுகளாக சக்கரநாற்காலியில் வாழ்ந்துவருகிறார். மனபலம் உடல்பலத்தைவிட வலிமையானது என்பதை தன் வாழ்க்கையில் நிரூபித்துக்காட்டியவர் ஸ்டீபன ஹாக்கிங்.


அவருடைய வாழ்க்கை வரலாற்றை தமிழில் நாகூர்ரூமி “சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்” என்ற நூலை எழுதியிருக்கிறார். ஸ்டீபன் ஹாக்கிங்னுடைய இளமைப்பருவம், அவருக்குவந்த நோய், குடும்பம், அவருடைய சாதனை, விருதுகள் என்று எளிமையாக எழுதியிருக்கிறார். மற்றொரு நூல் டாக்டர். அழகர் ராமானுஜம் அவர்கள் “மூலத்தைத் தேடும் முதன்மை விஞ்ஞானி” என்ற நூல் எழுதியிருக்கிறார். 100 பக்க நூலில் 75 பக்கங்கள்வரை ஸ்டீபனுடைய ஆராய்ச்சி, குடும்பம்,கல்வி, கருங்குழி, ஆராய்ச்சிகள், ஸ்டீபன் எழுதிய நூல்பற்றி, இன்னும் ஒரு இயற்பியல்வாதியான இவர் நியூட்டனின் பிரபஞ்சம், ஐன்ஸ்டீனின் சார்பியல் என்று விளக்கிவிட்டு, கடைசியாக வேதாத்ரிமகரிஷி இதையெல்லாம் ஒரு மெய்ஞானியாக சிந்தித்திருக்கிறார், ஸ்டீபன் ஹாக்கிங் வேதாத்ரியின் தத்துவத்தை ஒட்டி சிந்தித்தால் மாமனிதராக வருவார். விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானி முடித்ததில் ஒன்னொருவர் தொடங்குகிறார், அவ்வாறே ஐன்ஸ்டீன் நீயூட்டனின் தோள்மீதிருந்து சிந்தித்தார், ஆனால் மெய்ஞானிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தத்துவங்கள் உருவாக்கினார்கள் என்ற விமர்சனத்தை வைக்கிறார்.

 
 
நியூட்டன் பிரபஞ்சத்தை காலம், வெளி, பொருள் மற்றும் ஆற்றல் என்று நான் அநாதிகள் கொள்கையை ஐன்ஸ்டைன் வெளியும் காலமும் ஒன்றில் அடங்கும்; பொருளும் ஆற்றலும் அவ்வாறே என புதுப்பார்வை கொடுத்தவர் என்கிறார். மூலம் என்பது ஒரு காலகட்டத்திற்கு முன்பு வெடித்த புள்ளி அல்ல, மாறாக அது என்றேன்றும், எங்கெங்கும் நிரந்தரமாக எல்லையற்றதாக உள்ள பெருவெளியே என விஞ்ஞானம் உணர ஸ்டீபன் அயராது முயலவேண்டும், ஸ்டீபன், வேதாத்ரிமகரிஷியாக மலரவேண்டும் என்று டாக்டர். அழகர்ராமானுஜம் அசைப்படுகிறார். அப்படி ஆராய்ந்தால்தான் நீயூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஸ்டீபனையும் இணைக்கமுடியும் என்கிறார். இந்த மாதிரி எல்லாம் பிரம்மம் என்று சொலலிவிட்டால் இத்தனை ஆராய்ச்சி தேவையில்லையே!  

புதன், 21 ஆகஸ்ட், 2013

'வெட்டுப்புலி' நாவல்


அண்மையில் வாசித்த நாவல் வெட்டுப்புலி, தமிழ்மகன் எழுதிய நாவல். சென்ற ஆண்டில் கோவை புத்தகத்திருவிழாவில் வாங்கி வாசிக்காமலேயெ இருந்தேன். தகவல்கள் நிறைந்த கட்டுரைகளைப் படித்து சலிப்புதட்டும்போது புனைவு இலக்கியம் நோக்கி மனம் செல்கிறது. எப்படி இந்த நூலை வாங்கினேன் என்று தெரியவில்லை, தமிழ்மகன் எழுதிய இன்னொரு புத்தகமும் வாங்கினேன் ‘ஆண்பெல்-பெண்பால்’ அதை வாசித்தபோது ஒன்றுமே புரியவில்லை, எனது துணைவியாரும் வாசித்துவிட்டு புரியாமல் கைவிடப்பட்டது அதேபோல் தான் இதுவும் இருக்குமோ! என்று விமர்சனங்கள் சிலவற்றை வாசித்தபோது இந்நாவல் ஒரு தமிழகத்தின் குறிப்பீட்ட பகுதி மக்களின ஏறத்தாழ நூற்றாண்டுவரலாற்றை தந்திருக்கிறார். அந்த நாவலில் வருகின்ற மொழி சென்னை மொழியல்ல, திருவள்ளூர் பகுதியின் மொழி. எனக்கு ஏற்கனவே மணலி, ஆண்டார்குப்பம், புழல், செங்குன்றம், கொசப்பூர் பகுதி மக்கள் பேசும் மொழி எனக்கு பரிச்சயமாக இருந்தது. எண்ணற்ற சொற்களுக்கு கடைசிபக்கத்தில் பொருள் கொடுத்திருக்கிறார். தமிழ்-தமிழ் அகராதி தேவைப்படுகிறது. கரிசல் வட்டார மொழிக்கென்றே கி.ரா. ஒரு நூல் எழுதியிருக்கிறார். இதை ஒரு வரலாற்றுப்புதினம் என்று கூடச்சொல்லலாம். மன்னர்களைப் பற்றி அவர்களின் வீரம்,போர்கள், அந்தப்புரம் மட்டும் வரலாறுகள் அல்லவே! மக்கள் அந்த காலகட்டத்தில் எப்படி வாழ்ந்தார்கள், என்ன சாப்பிட்டார்கள், கல்விமுறை எப்படி, தொழில் என்ன? அறிவியல் வளர்ச்சி, உடைகள், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவியதா,எப்படி பயணம் மேற்கொண்டார்கள், நாட்டு விடுதலையில் கிராமபுற மக்களின் பங்கு என்ன? வெள்ளையர்களின் ஆட்சியை எப்படி பார்த்தார்கள்? சினிமாவின் வளர்ச்சி, திராவிட இயக்கங்களின் தோற்றம், பெரியாரின் தாக்கம் என பல தகவல்கள் அடங்கிய நாவலாக அமைந்திருக்கிறது.

ஒரு தீப்பெட்டி அட்டையில் ’வெட்டுப்புலி’ படத்தை தாங்கி பார்த்திருக்கிறோம், அது திருவெற்றியூரில் இருக்கிற விம்கோ தீப்பெட்டி தொழிற்சாலையின் தயாரிப்பு. ஊத்துக்கொட்டை அருகே சென்னாரெட்டி என்பவர் ஒரு சிறுத்தையை கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறார், வெள்ளைக்காரர்கள் துப்பாக்கிகொண்டு சிரமப்பட்டு வேட்டையாடிக்கொல்லும் சிறுத்தையை கத்தியை வைத்து கொன்றது வீரதீரச்செயலாக செய்தித்தாளில் அச்சாகிறது, அந்த பிரபலத்தினால் தீப்பெட்டியின் அட்டையில் அந்தப் படத்தை அச்சடித்து விறப்னையாகிறது. இவர் சிறுத்தையைக் கொன்றது பூண்டி அருகேயுள்ள சின்னாரெட்டியின் சொந்த ஊரான ரங்காவரத்தில் ஒருமாதிரியாகவும் லட்சுமணன் ஊரான ஜகந்தாதபுரத்தில் வேறுமாதிரியாகவும் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவரை சிறுத்தைசென்னாரெட்டி என்று சொன்னால் சுற்றுவட்டாரத்திற்கே தெரியும். லட்சுமணன் வசிக்கும் ஜெகன்நாதபுரத்தை பற்றிய சொல்லப்படுகிறது, அந்த ஊர் சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள ஊர்.வெள்ளையர்களின் ஆட்சியில் கிராமங்களில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதே தெரியாமலே இருக்கிறார்கள், அது ஏதோ நகரத்தில் இருப்பவர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான சண்டை என்றே கருதுகிறார்கள். கிராமங்களில் அக்ரஹாரங்கள் என்ற அகரம் தனியாகவும், கொஞ்சம் நிலம் வைத்திருக்கும் பிறசாதிகள் அக்ரஹாரத்திற்கு அருகேயும், விவசாயிகளுக்கு கலப்பை செய்யும் ஆசாரிகளும் இருந்தார்கள். பறைசேரிகள் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகவும் இருக்கின்றன, செத்துப்போன மாடுகளை எடுத்துக்கொண்டுபோய் சாப்பிடும் ‘சக்கிலிப்பாளையம்’ இன்னும் கொஞ்சம் தள்ளியிருக்கிறது. விவசாயிகள் வருடந்தோறும் விளைச்சலில் பாதியை ஜமீனுக்கு அளக்கவேண்டும்.கல்விபண்டு என்று வருசாவருஷம் விளைச்சலில் வரி அளப்பார்கள், எந்த வாத்தியானும் ஊருக்குள் வந்து பாடம் சொல்லித்தந்ததில்லை. ஜமீந்தார்கள் ஒவ்வொரு ஊரையும் நானூறு ரூபாய் ரொக்கம் கொடுத்து வாங்கியிருந்தார்கள். மாட்டுவண்டி வைத்திருப்பதையே விவசாயிகளுக்கு பெரியவிசயம், “குதிரை வச்சிருந்தா ஜமீன் எதிரியா நினைச்சி சுட்டே போடுவான்”.
 

 சீதாரமையரு ஆத்துல குளிச்சிட்டு கரையேறும்போது கலப்பையை தூக்கிட்டு ஆளுங்க, மாடு-கன்னு நடமாட ஆரம்பிச்சுரும், பதபதைச்சுபோவாரு ஐயரு. ‘தீட்டாப்போச்சு தீட்டாப்போச்சு’ நு துடிச்சு போய்டுவாரு. சாதி விசயங்களில் கறாராக இருந்தார்கள். பள்ளு பறைகள் மற்றவர்களை தொட்டு தீட்டு ஏற்படும் பாவம் இவர்களுக்கு வந்துசேரும் என அஞ்சினார்கள். பெண்கள் கிராமங்களில் எப்படி இருந்தார்கள் என்பதற்கு, லட்சுமணனின் தாய், “எல்லாரும் சாப்பிட்டுவிட்டு முடித்துப் படுத்த பின்னாடி சுவர் பக்கமாக திரும்பி உட்கார்ந்து மிச்ச்மிருக்கும் சாப்பாட்டை குழம்பு ஊற்றி நான்கு உருண்டையாக வாயில் போட்டுக்கொள்வாள்”. செருப்பு அணிவதற்கே கிராமத்தில் பெண்கள் ‘யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க’ என்று லட்சுமணனின் மனைவி சொல்கிறார். ஆண்கள் எல்லாரும் குடுமி வைத்திருந்தார்கள், சிலர் சுத்தமாக தலைகுளித்து பேன் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் சிலர் பக்கத்தில் வந்தாலே வேப்பெண்னெய் வாசம் அடிக்கும். அந்த ஊரில் இருந்த மணி ஐயருடைய தாத்தா காலத்தில் நவாப் வரிவசூலுக்காக அந்த ஊருக்கு வருகிறார், ஊர்க்காரர்கள் எல்லாரும் வணங்கி மரியாதை செலுத்துகிறார்கள்.மணி ஐயரின் தாத்தாவும் பாட்டியும் சாஷ்டங்காமக நவாப் காலில் விழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள். நவாபின் மனைவியை ‘பூ நாகம்’ தீண்டாமல் காப்பாற்றியதற்கு இருநூறு காணியை இனாமாகத் தந்தான் ஐயருக்கு, அதுவே இனாம் அகரம் ஆகிப்போனது. சேரிமக்களுக்கு ஏன் காணிகள் இல்லாமல் விவசாயக்கூலிகளாக இருந்தார்கள் என்பதற்கு, தரிசு நிலத்தை திருத்தி உழவுசெய்து விளைச்சலில் பாதியை ஜமீனுக்கு அளந்தால் நிலம் சொந்தமாகிவிடும். சேரிஜனம் அவ்வளவு சரியாக நெல்லை அளந்து நிலத்தை தக்கவைத்துக்கொள்வதில்லை. ஆனால் திருத்திய நிலத்தை ஒருமூட்டை நெல்லுக்கும், கேழ்வரகிற்கும் கொடுத்துவிடுவார்கள், மீண்டும் தரிசு நிலத்தை பண்படுத்திக்கொள்ளலாம் என முயற்சிப்பார்கள். ஆனால் பண்படுத்திய நிலத்தை மீண்டும் தானியத்திற்கு கொடுத்துவிடுவார்கள். அறியாமையும் கூடவே பெரிய அளவில் நிலத்தை ஆக்ரமித்து உழுது பயிர் செய்வதில் அவர்களுக்கு வெட்கமும் தயக்கமும் இருந்தது.

தெலுங்குக்காரர்களுக்கு விவசாயம் செய்பவன் ரெட்டி, அதே சாதிப்பெயரே ஆந்திரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் வன்னியர்களுக்கும் ஆகிப்போனது, இன்னும் நாயகர்கள் என்றும், கொஞ்சம் தெற்கே போனால் படையாச்சி, வன்னியர்கள் என்றும் சாதி பெயர்களில் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். சாதியை குலகவுரவத்தை தசரதரெட்டியின் முன்னோர்கள் காலத்திலிருந்தே காப்பாற்றி வருகிறார்கள் என்பதால் யாரும் மீறத்துணியவில்லை. லட்சுமணனை வெள்ளைக்கார ஜேம்ஸ்க்கு அவனுடைய குதிரையில் ஏறியதிலிருந்து பிடிக்காமல்போனது, வெள்ளைக்காரனிடமிருந்து காப்பாற்ற அவனுடைய பெரியம்மாவீட்டிற்கு தசரதன் அனுப்பிவைக்கிறார். அங்கே ரங்காவரம் பூண்டி ஏரியை அப்போதுதான் கட்டுகிறார்கள், அது சென்னையின் குடிநீர் சப்ளைக்காக வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்படுகிறது. ஏரியின் காண்ட்ராக்ட் வேலை சிறுத்தை சென்னாரெட்டியின் மகனுக்கு கிடைக்கிறது, அங்கே ஏரியை ஆழப்படுத்தவும் அகலப்படுத்தும் பணிக்கு லட்சுமணனும் செல்கிறான். அங்கே குணவதிமீது காதல்வருகிறது. அவள் சேரிப்பெண் என்று தெரிந்தும் அவளை மணக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறான். அதுவரை அவனும் சேரி ஜனக்களை அவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் பேர் சொல்லி அழைப்பது, ஒருமையில் விளிப்பது தான் ஊர்ப்பழக்கம். குணவதி லட்சுமணனை ரெட்டியாரே! என்றுதான் அழைக்கிறாள், தன்னுடைய காதலை அவளிடம் சொல்கிறான், இனிமேல் ரெட்டியாரே என்று சொல்லாதே! என்கிறாள். “நான் ரெட்டியார்னு சொல்லாட்டா எல்லாம் சரியாடுமா? நீ எங்க சித்தப்பனை வாடா போடானு கூப்புடறே.. எங்கம்மாவ பேடிட்டுத்தான் கூப்பிடுறே. அதையெல்லாம் வுட்டுடமுடியுமா? அவள் கேட்ட கேள்விக்கு நிலைகுலைந்து போனான்.

 நாம் இனிமேல் அவர்களை வேறுமாதிரி அழைக்கமுடியுமா?சாத்தியா? எப்பேர்பட்ட பைத்தியக்காரத்தனம்? குணவதியின் அம்மாவை எப்படி அத்தையென்றும், அவளுடைய சித்தப்பனை மாமா என்றும் எப்படி அழைக்கமுடியும்? எல்லோரையும் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள முடியுமா? நினைத்துப்பார்ர்க்க முடியாத செயலாக அந்தக் கணம் உணர்ந்தான். இப்போதுதான் ஞானம் வந்தமாதிரி யோசித்தான். அவர்களும் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள், கேட்கிறார்கள் , உழைக்கிறார்கள் என்பது அவர்களையும் நம்மையம் ஒரே தராசில் வைக்கப்போதாதா? அவன் உலகைப் புதிதாகப்பார்த்தான். அந்தக்காதலினால் சேரி ஜனங்கள் குடியிருப்பை காலிசெய்ய நேர்ந்தது. லட்சுமணனின் அப்பா தசரதனும் ஊர்க்காரர்களைப்போல் மூர்க்கமாக சேரி ஜனங்களை நடத்துவதில்லை, ஒருமுறை மீதமிருந்த கூழை சேரிப்பெண்ணிடம் குடிக்கச்சொன்னபொது சக உழவுக்காரர்கள் எதிர்த்தார்கள் அதை சட்டை செய்யாமல், நாய்க்கு கூட ஊத்துவ, மனுசாளுக்குதரக்கூடாதோ என்ற தசரதனின் சொல்லுக்கு அவள் குடித்த பானையில் நாளை நான் எப்படி கூழ் குடிக்கமுடியும் என்கிறான். லட்சுமணனுக்கு பெரியார் கொள்கையில் நாட்டம் ஏற்படுகிறது.

 தசரதனின் குடும்பக்கதை தனியாகவும், ஆறுமுகமுதலி குடும்பக்கதை தனியாக சொல்லப்படுகிறது, ஆறுமுகமுதலி ஊத்துக்கோட்டையில் விவசாயம் செய்பவர், அவருடைய அண்ணன் கணேசன் சென்னையில் ரயில்வேயில் வேலைசெய்துகொண்டு மாம்பலத்தில் குடியிருக்கிறார் கணேசன் பெரியார் கொள்கையுடையவர், அண்ணனின் கொள்கை எதுவும் ஆறுமுகமுதலிக்கு பிடிக்கவில்லை. ஏன் பிராமணர்களை எதிர்க்கவேண்டும் என்கிறார். கணேசமுதலி என்ற சாதி அடையாளத்தை துறப்பதே பெரியார் கட்சியில் சேருவதற்கு முன்னுரை. கணெசனின் மகன் நடேசன் அப்பவைப்போல பெரியார் சிந்தனையிருந்தாலும் பிரிவினையை எதிர்த்தான், அப்பா பாரதிதாசனை வாசிக்கும்போது நடேசன் பாரதியைப் புகழ்ந்தான். ஆறுமுகமுதலி சினிமா தயாரிக்கும் ஆசையில் அலைகிறார், முயற்சி தோற்று ஒரு சினிமாக்கொட்டகை கட்டுகிறார். சுயமரியாதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு , அண்ணா பெரியாரை விட்டு பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தது என்று செல்கிறது. ஜஸ்டீஸ் பார்ட்டியில் முதலியார்களின் ஆதிக்கம்தான் இருந்தது, அதன் தாக்கம் பச்சையப்பா (முதலி) கல்லூரியிலும் சுயமரியாதை சிந்தனை வளர்ந்தது.

 சென்னை என்றாலே அது வேப்பேரி,செண்ட்ரல்,  புரசைவாக்கம் பகுதிகளில் வீடுகள் இருந்தன, பூந்தமல்லி சாலையின் மருங்கில் விவசாயம் நடைபெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. காபி குடித்தேன் என்று வெளியில் சொல்வதற்கே வெட்கப்பட்டார்கள். சைக்கிள் வைத்திருப்பவர்கள், ஓட்டத்தெரிந்தவர்கள் வசதியானவர்கள்.( இன்னும் எனது கிராமத்தில் சிலருக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது) 40களில் ஜப்பான்காரன் சென்னைப்பட்டணத்தில் குண்டுவீசியதையடுத்து நகரவாசிகள் காலிசெய்து அவரவர் சொந்தங்களைத் தேடி அசலூருக்கு ஓடுகிறார்கள். சினிமா பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆறுமுகமுதலிக்கு சினிமாப்படம் தயாரிக்க கிறுக்குபிடித்து சென்னைவந்து ஸ்டுடியோவுக்கு சென்று விசாரிக்கிறார், அப்போது எல்லாம் பக்திப்படங்கள் தான், கம்சவதம், பிரகலாதா, வள்ளிதிருமணம் என்ற படங்கள் தான். ஆறுமுகமுதலியின் அண்ணன் கணேசன், அந்த மாதிரி குப்பையெல்லாம் கிளராதே, வெளிநாட்டில் சமூகபடங்கள், குடும்ப உறவுகள் பற்றிய ப்டங்கள் எல்லாம் வருது அதைமாதிரி எடுக்கனும் என்கிறார். சென்னை கெயிட்டி தியேட்டரில் சினிமா பார்ப்பதற்கு ஆறுமுகமுதலி சென்ற போது மக்கள் “சினிமாக்கொட்டகையின் முன்னே பசித்திருப்பவன் சாப்பாட்டுக்கடைப் பார்க்கிற தோரணையில் ஏக்கம் கொண்டு காத்திருந்தார்கள்”. சென்னையில் போக்குவரத்து டிராம்கள் இருந்ததை பதிவு செய்கிறது. இன்றைக்கு இருக்கிற ‘பெரியார்திடல்’ காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை ஏலம்போடும்போது அதில் பெரியாரும் டெண்டர்மனு போட்டிருந்தார், பெரியாருக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக போட்டியாளர்களான ஜி;டி.நாயுடுவையும் ஆதித்தனாரிடம் பேசி ஏலத்திலிருந்து வாபஸ் வாங்கச்சொன்னார் காமராஜர். இந்த விபரம் பெரியாருக்குத் தெரிந்தால் கோபப்பட்டிருப்பார், அவரும் அவ்வளவு நேர்மை, ஈரோடு ரயில்நிலையத்திற்கே அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுத்தவர் பெரியார் என்ற தகவலும் உண்டு.

 நாற்பதுகள், முப்பதுகள், ஐம்பதுகள் என நாவலின் வரலாறு வளர்ச்சிபெறுகிறது. ஐம்பதுகளில் காந்தியைக்கொல்ல சதிசெய்தவராகக் கருதிய சாவர்க்கரின் படமும் காந்தியின் படமும் பாராளுமன்றத்தில் மாட்டப்பட்டன.பெரியார் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்தது அண்ணாவை பெரியாரிடமிருந்து முற்றிலுமாக விலகச்செய்தது. தென்னிந்திய நலுரிமைச்சங்கம் விக்டோரியா ஹாலில் 1915-16ல் துவக்கப்பட்டது, அதிலும் ஜஸ்டீஸ் பார்டியிலும் முதலியார் சமூகம் அதிக பங்குவகித்ததாலும் பச்சையப்பர் கல்லூரியில் அதன் தாக்கம் இருந்தது, அதே சமயத்தில் சாதி ஈடுபாட்டை வெளிக்கட்டிக்கொள்வதை மாணவர்கள் இழிவாகக்கருதினர் என்ற செய்தி இன்று முரணாக உள்ளது. பெரியார், அண்ணாத்துரையை சார்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக இருப்பார்கள் என்ற செய்தி எவ்வளவு சரி!ஐம்பதுகளில் திராவிட இயக்கத்தினர் ‘கருணாநிதி வகிடு’ சீவியிருப்பார்கள். இப்போது நடிகர்கள் ஸ்டைலில் முடிவெட்டுகிறார்கள் என்பது மாற்றம். இந்த நாவலை கல்லூரிப்பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து ‘காலஎந்திரத்தில்’ பயணம் செய்வது போல் உள்ளதென ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார். http://cdmissmdu.blogspot.in/2013/05/vettupuli-novel-what-i-taught-and.html இதை வாசித்தால் நாவலை வாசிக்க நிச்சயம் தூண்டும்.
 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கனிமக்கொள்ளை - விவாதம்

எல்லா இடங்களிலும் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகிறார்கள், அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. கோதாவரி ஆற்றுப்படுகையில் அரசாங்கத்துக்கு சொந்தமான இயறகை எரிவாயுவை ரிலையான்ஸ் காரனிடம் கொடுத்துவிட்டு அதற்கான விலைகளையும் இரண்டு மடங்காக்கி அம்பானிக்கு சொத்துசேர மத்திய அரசு வழிசெய்கிறது ஒரு புறம், தண்டகாரண்ய வனப்பகுதிகளில் கிடைக்கின்ற இரும்புத்தாது, அலுமினியம் , இன்னபிற தாதுக்களை தங்குதடையின்றி வெட்டியெடுத்து கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட்டுகள், அவர்களுக்கு தடையாக இருக்கின்ற பழங்குடிகளை காட்டைவிட்டு விரட்டிவிடுகிறார்கள். இதுவும் ஒரு பக்கம். கர்நாடாகாவில் பெல்லாரி சகோதரர்கள் பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் எதியூரப்பா ஆசியோடு இந்திய நாட்டின் இரும்புத்தாதுவை கப்பல்கள் வழியாக வெளிநாட்டிற்கு கடத்தினார்கள், தேசபக்தர்கள் செய்கிற காரியம் தேசவளத்தை கொள்ளையடிப்பது! கையிலிருக்கிற இரும்பைக் (கள்ளத்தனமாக) வெளிநாடுகளுக்கு கொடுத்துவிட்டு எப்படி நாம் வல்லரசாகப் போகிறோமே தெரியவில்லை, தவறு செய்தவர்கள் முற்றிலுமாக சுரண்டிய பின்னர் பிடிபட்டார்கள், அவர்களை என்ன செய்துவிடமுடியும் நமது சட்டத்தால்! இது ஒரு புறமிருக்க, தமிழ்நாட்டில் எத்தனையோ ஆண்டுகளாக கிரானைட்டு கற்களை வெட்டியெடுத்து துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்தார்கள், அதை கண்டுபிடித்து ? கண்ணுக்குத்தெரியாத ஒன்றை கண்டுபிடிக்கலாம்! ஆனால் எத்தனையோ லாரிகளில் கண்டென்ர்களில் ஏற்றிச் செல்லும் கிரானைட் கற்கள் அரசு நிர்வாகத்திற்கு தெரியவில்லையா? இப்பொழுது அங்கு செயல்பட்ட நிறுவனக்களை குவாரிகளை இழுத்துமூடியிருகிறார்கள், அந்த சூடு தணிவதற்குள் தூத்துக்குடி பகுதியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தாதுமணலை அள்ளி ஏற்றுமதி செய்துவருவது இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது????. அந்த மணலில் Ilmenite, Rutile, Zircon, Sillimanite, Garnet and Monazite போன்ற முக்கியமான கனிமங்கள் உள்ளன.

மண்ணிற்கு அடியே கிடைக்கும் தாதுக்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு அதாவது நாட்டு மக்களுக்குச் சொந்தம், அப்படியிருக்க ஆட்சிசெய்யும் அரசியல்வாதிகள், சில அதிகாரிகள் துணையுடன், அவர்களின் பினாமிகளாகவும் இயற்கை வளங்களை மாபியாக்கள் சூறையாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்காண பணத்தை சம்பாதிக்கிறார்கள், ஆனால் அந்தக் கொள்ளையினால் அரசாங்கத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்துவதோடு எதிர்கால தேவையை அழித்துவிடுகிறார்கள். இயற்கை செல்வங்களை அள்ளும்போது பின்பற்ற வேண்டிய எந்த உத்தியையும், சட்டத்தையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. கிரானைட் கற்கள் தோண்டியெடுக்கும்போது சரி இப்போது தாதுமணலை கடற்கரையில் அள்ளும்போது சரி பாதிக்கப்பட்ட கிராம மக்களை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை உயிரோடு விடமாட்டார்கள் என்பது ஆற்றுமணலை அள்ளும் சம்பவத்திலேயே தமிழகம் பார்த்தது. சுற்றுச்சூழல் மாசு, குடிநீர் ஆதாரத்தை அழித்தல், விவசாயநிலங்கள் பயனற்றுப்போதல் என்பது பெரும்பகுதி மக்களின் வாழ்க்கையை குலைத்துவிடுகிறது. ஆனால் அரசு இயந்திரம் பெரும்பகுதி மக்களின் நலனுக்கு அல்லாமல் கோரமான மூலதனத்தின் பக்கம் நிற்கிறது.

இதைப்பற்றிய ‘நேர்படப்பேசு’ நிகழ்ச்சி 14-8-2013 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர். கனகராஜ், திரு. வெங்கட்ராமன் என்ற வேதியியல் பொறியாளர்,திரு. சீனிவாசன் என்பவர் பூவுலகின் நண்பர்கள் மற்றும் திருமதி. எமி என்பவர் தூத்துக்குடி பஞ்சாயத்து அமைப்பிலிருந்து பேச வந்திருந்தார்கள். பூவுலகின் நண்பர்கள் இயற்கை அப்படியே விடவேண்டும், தொந்தரவு செய்யக்கூடாது.சுற்றுச்சூழலை பாதிக்கும் மணற் கொள்ளையை நிறுத்தவேண்டும் என்று வாதிட்டார். மணவாளக்குறிச்சியில் அரசாங்கத்தின் நிறுவனம் தாது மணலை அள்ளுவதால் சுமார் 900 பேருக்கு புற்றுநோயால் முடமாக இருக்கிறார்கள் என்றார்.

திரு.வெங்கட்ராமன் என்ற வேதியல் பொறியாளர், எல்லா நாடுகளிலும்தான் கனிமவளங்களை விற்கிறார்கள் நாம் விற்பதில் தவறேதுமில்லை என்றார். சீனிவாசன் சொன்ன radition காரணமாக புற்றுநோய் ஏற்பட்டது என்பதை மறுத்து நான் அந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகாலம் பணியாற்றுகிறேன் என்று கையை காமிச்சார். அவர் ஒரு அதிகாரி இதுவரை மண்லை கையினால் கூட தொட்டிருக்கமாட்டார். அந்த வேலைகளை கையாள் அள்ளும் தொழிலாளிகளுக்கு வருகின்ற நோய் இவருக்கு வர வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் scien technilogy வந்திருச்சு, ஜீரோ effluent discharge தான் தொழிற்சாலைகளெல்லாம் செய்கின்றன என்று ஏனோ தெரியவில்லை எல்லா பெருமுதலாளிகளுக்கும் ஸ்டெர்லைட் உட்பட சர்டிபிகேட் கொடுக்கிறார். இந்தமாதிரி அதிகாரிகள் ஒன்று தனியாரின் துஷ்பிரயோகத்திற்கு அஞ்சுகிறார்கள் அல்லது உடந்தையாக இருக்கிறார்கள். இன்னும் சொன்னார், பூவுலகின் நண்பர்கள் இந்த மாதிரி சுற்றுச்சூழல் கேடுனா கோர்டுக்கு போங்கோ! டிவி ஸ்டேசன் ல சொன்னா நடக்குமா என்கிறார். எல்லாத்தும் இப்பெல்லாம் science technology இருக்குனு சரடு விட்டார். அவர் ஏன் அப்படி பேசுனாரு என்பது புரியவில்லை. இந்தியாவுல எந்த கம்பெனியும் ஜீரோ effluent discharge விதிகளை மீறவில்லை என்று திரும்பத்திரும்ப சர்டிபிகேட் கொடுக்கிறார். ஒரு கம்பெனிய சொல்லுங்கன்னு கனகராஜ் கேட்டார், அது குஜராத்துல இருக்கு என்கிறார். கோர்ட்டுக்கு எத்தனையோ போன ஸ்டெர்லைட் ஆலையை ஒன்னும் செய்யமுடியலை. அதுக்கெல்லாம் தொழிற்சாலையை மூடிடமுடியுமான்னு கேட்குறார். அரசாங்கத்த நம்பனும், கம்பெனிய நம்பனும, கோர்ட்ட நம்பனும் சொல்றாரு. அரசாங்கம் சட்டம் எல்லா நல்லாத்தான் போடுது, அத நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கு, சுற்றுச்சூழல் பாதிப்புன்னா pollution control board ஐ கேட்கனும் சொல்லிக்கிட்டே இருந்தார்.

திருமதி.எமி என்கிற பெண்மனி நான் வி.வி.மினரல்ஸ்க்கு எதிரா 1000 மனு போட்டுருக்கேன், தாது மணலை பேசும் போது இந்தியா முழுக்க இருக்கிற எல்லா கொள்ளையையும் நிறுத்தனும்னு நிக்கிறாரு. இந்த மண்லை அள்ளவில்லையென்றால் அது அப்புறம் வேற நாட்டுக்கே போயிடுமாம், கடல்தான.. அந்த கலெக்டர் ரெண்டு வருசமா கோடிக்கணக்க வாங்கிட்டு இப்ப நல்லபேரு வாங்கிட்டாரு, இப்ப ஏதோ தொழில் போட்டியிலதான் இந்த கொள்ளையே வெளியுலகத்து வருதுன்னு சொன்னாரு.

 மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்.கனகராஜ், இந்த தனியார் அள்ளுகிற மணலால் அந்த அபகுதியில் ஏற்படுகிற சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாயம், குடிநீர் கெடுதல், அள்வுக்கு மீறி மண்லை அள்ளியதால் மீனவர்கள் பாதிப்பு பற்றி சொன்னார். தாது வளம் என்பது அள்ளப்படவேண்டும், ஆனால் இது தேச நலனிற்கும் மக்கள் நலனிற்கும் உகந்ததல்ல. ஒரு சில மணல் அள்ளும் மாபியாக்கள் கொள்ளையடிப்பதற்கு எதிர்கால சமூகமும் அந்தப்ப்குதி மக்களும் ஏன் பாதிக்கப்படவேண்டும் என்றார். கலெக்டர் அந்தப் பகுதியில் ஆய்வுசெய்து மணற்கொள்ளை சட்டவிரோதம் என்று அறிவித்தபின்பும் இதுவரை காவல்துறை எப் ஐ ஆர் போடவில்லை என்பது கலெக்டர் சொன்னபடி கேட்காமல் தூத்துக்குடி, திருனெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் மாபியாக்கள் சொன்னபடி நடக்கிறது என்பது தான். வேதியியல் பொறியாளர் திரு.வெங்கட்ராமனுக்கு சரியான கேள்விகளை முன்வைத்தார். 100க்கு மேற்பட்ட இடங்களில் மணல் அள்ளும் பணியில் நிறுவனக்கள் செயல்படும்போது வெறுமனே 6 இடங்களில் மட்டும் ஆய்வு செய்து மதிப்பிடுவது என்பது சரியல்ல, அதுவும் மூன்று மாவட்டங்களிலும் பணியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்படவேண்டும் என்றார்.

மீனவர் தரப்பிலிருந்து திரு.அமலன் தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவிக்கும்போது மணல் அள்ளுவதால் மீன்வர்களின் வாழ்வாதாரம், படகுகளை கரைக்கு கொண்டுவந்து செர்ப்பதில் ஏர்படும் மனிதசக்தி, தாதுக்களை எடுத்துவிட்டு திரும்பக்கொட்டும் மணலால் ஏர்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விவரித்தார். இந்த மணற்கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடந்தால் அங்கே திட்டமிட்டு கலவரம் உருவாக்குகிறார்கள் என்றார். விவாதத்தில் பங்கேற்ற திரு.வேதியியல் பொறியாளர் வெங்கட்ராமன் சொல்வதை கேட்கும்போது அவர் தனியார் நிறுவனக்களுக்கும் மாபியாக்களுக்கும் சார்பாக பேசுவது மாதிரி இருந்தது. தோழர்.கனகராஜ் சமீபகாலமாக அடிக்கடி நேர்படப் ப்ச்சு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவர் பங்கேற்கிற ஒவ்வொரு விவாதத்திலும் கருத்துக்களை ஆணித்தரமாக சொல்கிறார். அந்த கருத்துக்களும் கவலைகளும் மக்கள் சார்பாக இருக்கிறது என்பது தான் ஏற்புடையது.