திங்கள், 25 அக்டோபர், 2010

உலக அரங்கில் இந்தியா

ஐ நா சபையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, 2015ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கவேண்டும், சிசுமரணம், கல்லாமை, எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோயை ஒழிப்பது, அனைவருக்கும் உணவுபாதுகாப்பு அளிப்பது, அடிப்படை கல்வியை உரிமையாக்குவது என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் சுதந்திரதின உரையில் வாசிப்பது போன்று தான் இருக்கிறது, ஏனென்றால் இந்த வாசிக்கவேண்டிய உரையை 1947 லிருந்து இன்னமும் மாற்றவில்லை, பிரதமர்கள், கட்சிகள் மாறியிருக்கலாம், ஆனால் வறுமையை ஒழிப்பது நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறவில்லை மாறாக பட்டினி பட்டாளங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. உண்மையிலேயே இந்தியாவிடம் வளமையில்லையா? இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாகாந்தி “Inclusive Growth” பற்றி பேசுகிறார், அவரின் வாரிசான ராகுல்காந்தி இந்தியாவிற்குள்ளே இரண்டு இந்தியாக்கள் அதாவது ஒளிரும் இந்தியா, வறுமை இந்தியா இருக்கிறது என ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதை மாற்றுவதற்கான எண்ணமோ, திண்ணமோ நிச்சயமாக இவர்களிடம் இல்லை.

மக்களின் சார்பாக பேசுகிற காங்கிரஸ் கட்சியில் உள்ள மணிசங்கர் ஐயர் தான் அரசின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்கிறார், பணக்காரகளுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவத்திற்குப் பதிலாக ‘பங்குச்சந்தையை’ அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவம் இங்கே ஆட்சி செய்கிறது என்றார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் 70,000 கோடி ரூபாய் செலவு செய்து காமன்வெல்த் விளையாட்டை நடத்துவது தேவையற்றது என்றார். இந்தியா –ஈரான் எரிவாயு குழாய் மூலம் நீண்டகால எரிசக்திக்கு தேவையான பாதையை வகுத்த மணிசங்கர் ஐயரின் பெட்ரோலிய அமைச்சர் பதவி யாரால் பறிக்கப்பட்டது என தெரியவில்லை.

உலக அரங்கில் 50 பில்லிணியர்களில் இந்தியர்கள் 6 பேர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஆசியாவிலேயே முதல் பணக்காரர் என்ற பெருமையை இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை தேடித்தந்திருக்கிறது. நாட்டின் இயற்கை எரிவாயு வளங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தருவதன் மூலம் நாட்டின் எரிசக்தி செலவை குறைப்பதற்கு மாறாக கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் படுகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்துள்ளது, மற்றொரு புறம் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் மூடப்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களை மீண்டும் சந்தைக்கு வர பெட்ரோலிய பொருட்களின் விலைகளை ‘derugulate’ செய்து அம்பானிகளின் சொத்து மதிப்பை கூட்டுவதோடு மக்களின் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையை மறைமுகமாக ஏறுவதற்கு உதவிசெய்கிறது.

இந்திய பில்லிணியர்கள் உலக அரங்கில்………….. முதல் 50 இடத்தில்

முகேஷ் அம்பானி - $ 29 பில்லியண் – 4 வது இடம்
லஷ்மி மிட்டல் - $ 28.7 பில்லியண் – 5 வது இடம்
அஸிம் பிரேம்ஜி - $ 17 பில்லியண் 28 வது இடம்
அனில் அம்பானி - $ 13.7 பில்லியண் 36 வது இடம்
எஸ்ஸார் குழுமம் - $ 13 பில்லியண் 40 வது இடம்
ஜிண்டால் குழுமம் - $ 12.2 பில்லியண் 44 வது இடம்

பில்லிணியர்கள் எத்தனை பேர் …….அமெரிக்கா - 329 ,
சீனா - 79
இந்தியா - 58 மூன்றாவது இடம்
ஜெர்மனி - 54
ரஷ்யா - 32
இங்கிலாந்து - 25
ஜப்பான் - 17 (நமக்குப் பின்னாடி தான்)

ஆசியப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில்…

ASIA’S RICHEST GNP

சீனா - $ 7.7 பில்லியண்
ஜப்பான் - $ 3.8 பில்லியண்
இந்தியா - $ 3.4 பில்லியண்
ரஷ்யா - $ 1.4 பில்லியண்
கொரியா - $1.0 பில்லியண்

உலகப்பொருளாதாரத்தில் இந்தியா 4வது இடத்தில்……….
Richest GDP 2006

அமெரிக்கா - $ 13 டிரில்லியண்
சீனா - $ 10 டிரில்லியண்
ஜப்பான் - $ 4.17 டிரில்லியண்
இந்தியா - $ 4.16 டிரில்லியண்
ஜெர்மனி - $ 2.6 டிரில்லியண்

2050ம் ஆண்டில் இந்தியா உலக அரங்கில் சீனா, அமெரிக்கா வை அடுத்து மூன்றாவது இடத்திற்கு வரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இந்தியாவின் வளர்ச்சி என்பதே பெருமுதலாளிகளின் வளர்ச்சி என்று வாசிக்கவேண்டும், இந்தியா மக்களின் நலன்களில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

Hunger Index ல் நாம் 23.9 புள்ளிகளில் அதாவது மோசமான பசியால் அதிகம் வாடும் மக்கள் கொண்ட 30 நாடுகளில் இந்தியாவும் ஒன்று Hunger Index ‘0’ என்பது No Hunger, 20 புள்ளிகள் முதல் 29.9 வரை ‘alaraming’ என்ற நிலையில் உள்ளோம்,

நம்மோடு இதில் போட்டி போடும் நாடுகள் …..

எத்தியோப்பியா 30.8, நேபாளம் 20, சூடான் 20.9, தான்சானியா 20.9, ருவாண்டா 23, கம்போடியா 20.9, உகாண்டா 14.8, இலங்கை 13.7, சீனா 5.7, கியூபா <5 (நாம் யாருடன் போட்டி போடுகிறோம்).

Poverty- இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மக்கள் 37 சதவீதம், கிராமப்புறங்களில் 22% பேரும் நகர்ப்புறங்களில் 15% பேரும் இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு $1.25 சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் 41.6%, ஐநா வின் வறுமை பட்டியலில் நாம் 88வது இடத்தில் இருக்கிறோம்(out of 134).

மக்களின் மருத்துவ வசதிகளைப் பார்ப்போம்…………

இந்தியாவில் மலேரியா காய்ச்சலால் வருடத்திற்கு 1,25,000 பேர் இறப்பதாக The Lancet என்ற மருத்துவ இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது, ஐநா வின் திட்டப்படி உலகம் முழுவதிலும் 1,00,000 பேர் இறக்கின்றனர் என்ற கூற்றை விட இந்தியாவில் அதிகமாக இறக்கிறார்கள். இந்த நோயால் மரணிப்பதை தடுக்கமுடியதா?

காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வளரும் நாடுகளில் உள்ள விகிதத்தை விட இந்தியாவில் அதிகம் இந்தியாவில் ஒரு இலட்சம் பேருக்கு 23 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் / மரணிக்கின்றனர். அதே நிலைமை மற்ற ஏழை நாடுகளில் ..
இலங்கை யில் 10 பேரும், நேபாளத்தில 22 பேரும், சீனாவில் 12 பேரும், கென்யாவில் 19 பேரும், கினியா-பிசோவில் 25 பேரும், உகாண்டாவில் 27 பேரும், பாகிஸ்தானில் 39 பேரும் இறக்கின்றனர்.

குழந்தைகள் பிறந்தவுடன் சரியான மருத்துவ வசதி, சத்தான உணவு கிடைக்காமல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தியாவில் மரணமடைவது அதிகமாக உள்ளது. (மரணவிகிதம் /1000 குழந்தைகள் பிறக்கும்போது)

இந்தியாவில் 69, பங்களாதேஷில் 54, நேபாளத்தில் 51, எரித்ரியாவில் 51, கானா வில் 76, பாகிஸ்தானில் 89, சூடானில் 200, இலங்கை 17, சீனாவில் 21 குழந்தைகளும் இறக்கின்றனர்.

அதே போல் ஐந்து வயதிட்குட்ட குழந்தைகள் எடை குறைவாக இந்தியாவில் 43.5%..

பங்களாதேஷில் 41.3%, நேபாளத்தில் 38%, எத்தியோப்பியாவில் 34.6%, சூடானில் 31.7%, சோமாலியாவில் 32.8, நைஜீரியாவில் 37.9% இலங்கையில் 21.1%, வடகொரியாவில் -20.6%, சீனாவில் 6.8%, ருவாண்டா 18% , கியூபாவில் 3.9% குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் வளர்ந்த நாடுகளோடு போட்டியிடும் நாம் மக்கள் நலனில் உள்நாட்டுக் கலவரங்களாலும், பஞ்சத்தாலும் அவதிப்படும் நாடுகளைவிட கீழேயுள்ளோம்.

இந்தியாவில் கழிவறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட செல்போனை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஐ நா கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் 100 சதவீத மக்கள் சுகாதரமான கழிவறையை உபயோகப்படுத்தும் போது இந்தியாவில் 31சதவீத மக்களே சுகாதரமானக் கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளில்…………….

அமெரிக்காவில் 100%, இலங்கையில் 91%, சீனாவில் 55%, பங்களாதேஷில் 53%, பிரேசிலில் 80%, உகாண்டாவில் 48%, ருவாண்டாவில் 54%, நேபாளத்தில் 31% பேரும் சுகாதாரமான கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை 10,000 மக்களுக்கு 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். பிற நாடுகளில்…………………….

அமெரிக்காவில் 27 மருத்துவர்களும், கியூபாவில் 64 மருத்துவர்களும், எகிப்தில் 25 மருத்துவர்களும், சீனாவில் 14 மருத்துவர்களும், பாகிஸ்தானில் 8 மருத்துவர்களும், ஜமைக்காவில் 9 மருத்துவர்களும், ரஷ்யாவில் 43 மருத்துவர்களும் உள்ளனர்.

இந்தியா மருத்துவம் மற்றும் சுகாதார நலன்களுக்கு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) 4.1% மட்டுமே ஒதுக்குகிறது. மற்ற நாடுகள் சுகாதரத்துறைக்கு ஒதுக்கும் GDP யின் அளவைக் காண்போம்.
அமெரிக்கா 15.7% கியூபா 10.4%, சீனா 4.3%, கனடா 10.1%, பிரேசில் 8.4%, கானா 8.3%, நேபாளம் 5.1%, உகாண்டா 6.3%,பாகிஸ்தான் 2.7%,ரஷ்யா 5.4% அளவிற்கு ஒதுக்குகிறது.

இந்தியா விண்வெளியிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறியுள்ளது, ஆனால் ‘ஆம் ஆத்மி’ யைப் பற்றிய அக்கறை ஆள்வோருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த தகவல்கள் யாவும் ஐ நாவின் ஆய்வறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.

2 கருத்துகள்:

தருமி சொன்னது…

திரும்புமிடமெல்லாம் ஊழல்; non-accountability; விரையம் ... இதனையும் தாண்டி நாம் வளர்கிறோம். ஆச்சரியம்.

இந்தத் தடைகள் இல்லாவிட்டால் ....

hariharan சொன்னது…

வருகைக்கு நன்றி தருமி சார்!!!

ஊழல் இருக்கும் போது அதற்கு எதிரான போராட்டமும் இருக்கிறது. நேர்மையான மனிதர்கள்,ஆர்வலர்கள் இருப்பதால் தான் இந்த நிலையிலாவது இருக்கிறது.