ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நள்ளிரவில் சுதந்திரம்

"நள்ளிரவில் பெற்றோம்
இன்னும் விடியவேயில்லை”


என்ற மொழிபெயர்ப்பாளர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்நாவல் டொமினி லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ் ஆகிய எழுத்தாள இரட்டையர்களால் எழுதப்பட்ட “Freedom at Midnight" என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாகும். 600 பக்கங்களைக் கொண்ட மூலநூலை தமிழ் வாசகர்களுக்காக சிரத்தையுடன் “நடை” மாறாமல் வி.என்.ராகவன் மற்றும் மயிலை பாலு என்ற இரு பத்திரிக்கையாளர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சார்ந்த இனக்குழு / சாதி மற்றும் ஒவ்வொரு தேசத்திற்கும் வரலாறு இருக்கிறது, “ஒரு வரலாற்று ஆசிரியரின் பணி கடந்த காலத்தை நேசிப்பதோ வெறுப்பதோ அல்ல; கடந்த காலத்தை புரிந்து கொள்வதே”. இந்த வகையில் வரலாற்றை எழுதுவது என்பது மிகவும் சிரமமானதாகும். இந்தியாவில் கடந்தகால வரலாற்றையும் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக திருத்தியிருக்கிறார்கள். சிந்துவெளி நாகரீகத்தை ஆரிய நாகரீகமாக மாற்ற காளையை குதிரையாக மாற்றிய பெருமை மத்தியில் ஆட்சி நடத்திய பாஜக வுக்கு உண்டு. இந்த நூல் வரலாற்று வரிசையில் உள்ள நூலேயாகும், தொடங்கும் காலம் 1947 புத்தாண்டு தினம், காந்தியின் கொலை “இரண்டாவது சிலுவையேற்றம்” நடந்த ஜனவரி30 1948 ல் நிறைவடைகிறது.


மெளண்ட்பேட்டன் பிரபுவை மையமாக வைத்து எழுத்தப்பட்டது போல் தோன்றினாலும் காந்தி,நேரு,ஜின்னா மற்றும் படேல் என ஒவ்வொருவரைப் பற்றியும் நிறைய தகவல்கள் உள்ளன. காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகவும் அவரது போராட்ட வடிவமான ‘அகிம்சை’ தத்துவத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.இந்த நூலின் முதல்பதிப்பு 1975ல் வெளிவந்தவுடனேயே உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்திருக்கிறது, ஆனால் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது அதற்குக் காரணம் ஜின்னாவின் வாழ்க்கைமுறையை பற்றி எழுதியது தான், அவர் முஸ்லீமாக இருந்தாலும் மேற்கத்திய கலாச்சார வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார், காலை உணவில் மதுவோடு இஸ்லாமியர்கள் வெறுக்கும் பன்றி இறைச்சியை சாப்பிட்டார் என்பதற்காகத்தான்.

நள்ளிரவில் சுதந்திரம்’ பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இறுதிக் கட்டங்களில் வளர்ந்த ப்ரிவினை வாதமும், அதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் இலட்சணக்கான மக்கள் மனிதநேயத்தை மாய்த்து ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டார்கள், போன்ற சம்பவங்களை காட்சிப்படுத்துகிறது, இந்தக்கொடூரமான வரலாறு மீண்டும் வேண்டாம், மத நல்லிணக்கமே தேவை என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்தியப்பிரிவினையால் புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை, இரண்டாம் உலகப்போரில் தோற்ற நாடுகளில் அகதிகளின் இடப்பெயர்வோடு ஒப்பிடலாம். இந்தியப்பிரிவினை ரணத்தை உணர்ந்து கொள்ள உதவுகிறது. மதக்கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட லாகூர், அமிர்தசர்ஸ், பஞ்சாப் முழுவதிலும் ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாத மதமோதல்களை காந்திஜி கல்கத்தாவில் தனிநபராக அமைதியை விதைத்தார். இது போன்ற காந்திஜியின் மதநல்லிணக்க கொளகை மட்டுமில்லாது பிரிவினையின் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய 55கோடி ரூபாயை உடனடியாக இந்தியா வழங்கவேண்டுமென்று உண்ணாநோன்பிருந்தார். காந்திஜி கொண்ட இந்தக்கொள்கைகளை வெறுத்த மதவெறிபிடித்த கோட்சே தேசப்பிதாவை கொன்றான்.

இன்றளவும் நேருவுக்கும் எட்வினாவிற்கும் இருந்த அந்தரங்கத்தை அலசுவோருக்கு நேருவின் சகோதரி பதிலளிக்கிறார். இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டதன் காரணமாக அதனுடைய பொருளதாரம் அதலபாதளத்திற்கு சென்றுவிட்டது, அப்போது நடைபெற்ற இங்கிலாந்துத் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியா போன்ற காலனி நாடுகளை விடுதலை செய்வோம் என்ற பிரச்சாரத்தினால் அட்லி பிரதமாகத் தேர்ந்தெடுக்கபட்டார். அவர் பதவியேற்ற சமயத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியப்பிரிவினை வாதமும் மதக்கலவரங்களும் கட்டுப்படுத்தமுடியாத அளவில் இருந்திருக்கிறது, இந்த காரணத்தினால் மெளண்ட்பேட்டன் பிரபு அதிகாரமாற்றத்தை(அதாவது கைகழுவ)சீக்கிரம் முயன்றிருக்கிறார்.

இந்தியாவிற்கு நள்ளிரவில் ஏஅன் சுதந்திரம் வழங்கப்பட்டது என்று யோசிக்கும் போதும் பலரிடம் விடை கேட்டபோதும் விடை கிடைக்கவில்லை, இந்த நூலில் உள்ளது. அந்த பாழாய்ப்போன நாளும் கிழமையும் தான், இந்தியமன்னர்களை பற்றி இதுவரை கொண்ட கருத்துக்கள் எல்லாம் தலைகீழாக மாற்றியது இந்நூல் என்றால் மிகையாகாது. இந்திய மக்கள் வறுமையில் வாடியிருக்க சமஸ்தான மன்னர்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். பாட்டியாலா மன்னரின் ஆடம்பரம் நம்மை கோபம் கொள்ளச்செய்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்திருக்கின்றன, ஒவ்வொரு மன்னரையும் இந்திய யூனியனில் சேர்க்க கெஞ்சல், மிரட்டல், விண்ணப்பம் என பல வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். இன்றும் எரிந்து கொண்டிருக்கின்ற காஷ்மீர் பிரச்சனையை இந்நூல் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
600 பக்கங்கள் கொண்ட இந்நூலை வாசிக்க ஆரம்பிக்கும் போது மலைப்பாக இருந்தாலும் அதன் நடையின் சிறப்பால் நம்மை தொடர்ந்து வாசிக்க உத்வேகமளிக்கிறது. நீங்களும் வாசியுங்கள், இந்த நூலை தமிழில் படைத்த திரு.வி.என்.ராகவன் மற்றும் திரு.மயிலை பாலு அவர்களுக்கும் நூலை வெளியிட்ட ‘அலைகள் வெளீயீட்டக’ திற்கும் வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

Narayanan.N சொன்னது…

Thanks for introducing a good and famous book. Though it is a famous one, your way of Introduction is appreciable. Impotant thing is that to know about its Tamil version.

hariharan சொன்னது…

Welcome Narayanan...thanx for ur visit.