ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உலகமொழி - வடமொழி



சில வாரங்களுக்கு முன்பு ” ஹிந்தி” இந்தியாவில் தோன்றிய மொழி அல்ல, அது தற்போதைய துருக்கியில் தோன்றியது என்பதாகும். ஹிந்தி நேரடியாக அங்கே பேசப்பட்டிருக்கிறதா என்பதைவிட ஹிந்தியின் மூலமொழியான சமஸ்கிருதத்திற்கும் ,கிரேக்கம், இலத்தீன் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மிடையே ஒப்புமையுள்ளது.  சமஸ்கிருதத்தை இந்தோ-ஐரோப்பிய மொழி என்றே மொழியியலாளர்கள் அழைக்கிறார்கள்.  இந்த கருத்தின் மூலம் வேதங்களை இயற்றிய ஆரியர்கள் மத்திய ஆசியா அல்லது மேற்கு ஐரோப்பாவில் வசித்திருக்கவேண்டும் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதினால் புதிய கிளைமொழிகள் தோன்றினாலும் சில பொதுவான சொற்கள் தொடரவே செய்யும். தமிழுக்கும் , மலையாளத்திற்கும் உள்ள ஒற்றுமை இதற்கு சான்று.

சுமார் 200 ஆண்டுகளாக வடமொழி, கிரேக்கம்,லத்தீன் முதலிய மொழிகள் தொடர்புடையன என அறிஞர்கள் அறிந்திருந்தனர். குறிப்பாக புனைவுக்கதைகள்,சொற்கள் முதலியவற்றில் ஒப்புமை அமைந்திருப்பது இனம்காணப்பட்டது. பரவலாகப் பயன்படுத்தபடும் பொருட்கள், உடலின் பகுதிகள், அடிப்படைக் கருத்துக்கள், உறவினர்களைச் சுட்டும் பெயர்கள் என பல அம்சங்களில் ஒப்புமை அமைந்திருக்கிறது.

வடமொழியில் ‘தேயூஸ் பித்தர்’ என்பது ஆகாயத்திற்கு தந்தையாக இருப்பவன் எனும் பொருள தரும். கிரேக்கத்தில் ஆகாயக்கடவுளுக்கு ‘தேயுஸ் பட்டர்’ என்றும் லத்தீனில் ‘ஜூப்பிட்டர்’ என்றுஇம் வழங்கப்படுகிறது. எண்கள் வரிசையிலும் ஒப்புமை உள்ளது. குதிரையை வடமொழியில் அஸூவ என்கிறார்கள், அவெஸ்டா (ஈரான்) மொழியில் அஸ்பா, கிரேக்கத்தில் ஹப்போஸ், லத்தீனில் இக்கியுஸ். தேர் என்பதை வடமொழியில் ரத என்றும், ஜெர்மனில் ராட் லத்தீனில் ரோட்டா என்றழைக்கப்படுகிறது. 18ம் நூற்றாண்டில் வில்லியம் ஜோன்ஸ் வடமொழி மற்ற ஐரோப்பிய மொழியின் சாயல் உள்ளது என்று கண்டுபிடித்தார்.


 இந்தோ-ஐரோப்பியர்கள் ஆரியர் என்றழைக்கப்படுகின்றனர்.  ‘ஆர்ய’ எனும் சொல் ரிக் வேதத்திலும் ‘அவெஸ்டா’விலும் குறிக்கப்பட்டுள்ளது. ஈரானியர்களாகவும் மற்றும் இந்தியர்களாகவும் பிரிவதற்கு முன்பிருந்த ஆரியர்களால் பேசப்பட்ட மொழியினைக் குறிக்கும் சொல் இந்தோ-ஈரானியன் என்பதாகும். இந்தோ-ஐரோப்பிய  மொழிக்கூறுகள் வடசிரியாவில் அல்லது மித்தானிஸ் நிலப்பகுதியில் கி.மு.1400 களில் தோன்றிவிட்டன. மித்தானின் கல்வெட்டுகளில் சில சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை கச்சிதமாக (Mitra)மித்ர,  (Varuna) வருண,  (Indra) இந்த்ர, (Nasatya)  நாசத்ய போன்றவற்றை ஒத்துள்ளன. இதே கடவுளகள் ரிக்வேதத்திலும் காணப்படுகின்றன. மித்தானியர்களின் மன்னர்களின் பெயர்களில் இந்தோ-ஆர்ய சொற்கள் உள்ளன. கி.மு. 14 அல்லது 15ம் நூற்றாண்டுகளில் ஹிட்டைட் பனுவல்களில் இந்தோ-ஐரோப்பிய மொழியே ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பனுவல்களில் தேர், குதிரை பற்றிய செய்திகள் உள்ளன. தேர் பற்றிய அள்வுகளைக் குறிக்கப் பயன்படுத்திய எண்கள் குறித்த சொற்கள் சமஸ்கிருத எண்களை மிகவும் ஒத்துள்ளன. அவை aika(eka), tera (tri), Panza (Panca), satta (sapta) , anna (nava). அதேபோல் குதிரைகளின் நிறங்களை குறிக்க  babu (babhru) , parita (palita) , pinkar (pingala) போன்ற சொற்கள் அரக்கு, சாம்பல், சிவந்த நிறங்களைக் குறிக்கும்.

கி.மு. 1600 வாக்கில் இந்தோ-ஐரோப்பியச் சொற்கள் பாபிலோனியாவிலும், இன்றைய ஈராக் பகுதிகளிலும் உள்ள காசிட் (Kassite) கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காசிட்கள் ஆட்சி கி.மு. 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது, அக்கல்வெட்டுகள் சூர்யஷ் (Suryash) , மருதாஷ் (Marutash), என்ற இரு குறிப்புகளைத் தருகின்றன, இவையிரண்டும் ரிக் வேதத்தின் சூர்ய(Surya) , மருத் (Marut) என்ற இரண்டையும் அடையாளம் காட்டுகின்றன. காசிட் மொழியில் காற்றுக்கான கடவுள் புரியாஷ் (Buriyash) என்றழைக்கப்பட்டுள்ளது. இச்சொல்லை வேதக்கடவுளான ‘ வாயு’ என்பதுடன் தொடர்பு படுத்தலாம். ‘வாயுவை’ குறிக்கும் Bayar எனும் சொல் இந்தியில் இருந்துவருகிறது.

வேதநாகரீகமே இந்திய நாகரீகம், உண்மையில் ஆரியர்களின் பூமி இந்தியா: இங்கிருந்து தான் உலகம் முழுமைக்கும் ஆரியர்கள் பரவினர்” என்ற கருத்தெல்லாம் இந்திய இன மேன்மையை உயர்த்திப் பிடித்து ‘இந்து’ என அனைவரையும் அணிதிரட்டப் பயன்பட்டது. 
தொன்மையான நாகரீகங்கள் பாபிலோனியா, எகிபது மட்டுமே என்று வரலாற்று அறிஞர்கள் கருதியிருந்தார்கள். ஆரிய வருகைக்குப் பின்னர் தான் இந்தியாவில் நாகரீகம் எனவும் கருதியிருந்தனர். வேத நாகரீகமே இந்தியாவின் தொடக்கம் எனக்கருதி யிருந்தோருக்கு சிந்துவெளி நாகரீகம் பெரும் சவாலாக அமைந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய சிந்துவெளி நாகரீகங்கள் 5000 ஆண்டுகள் பழமையானவை. இச்சான்று ஒரு வளர்ந்த வேதநாகரீத்திற்கு வெகுமுன்பே இந்தியாவில் வளர்ந்த நாகரீகம் இருந்துள்ளதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

# தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு மறைந்த இந்திய வரலாற்று அறிஞர் ராம்சரன் சர்மா அவர்கள் எழுதிய looking for the aryans என்ற நூலின் தமிழாக்கம் ‘ஆரியரைத்தேடி’ என்று என்சிபிஎச் நிறுவனம் வெளிட்ட நூலில் உள்ளது.
#மொழி ஒப்புமை சான்றுகள் The Aryans - V.Gordon Childe 1926ல் எழுதிய நூலில் கிடைத்தது.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாத பல தகவல்கள்...

நன்றிங்க...