வெள்ளி, 4 ஏப்ரல், 2014

சாப்ளின் கதை - 1

சார்லி சாப்ளினை தெரியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா?  இருக்கமுடியாது, சிறுவர்கள் முதல் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் அவரை பிடிக்கும். யூ டியூப்பில் அவருடைய படைப்புகள் எளிதாக இப்போது கிடைப்பதை காணமுடிகிறது. அதுவும் தரமான பிரிண்ட் வடிவத்தில். சில ஆண்டுகளுக்கு முன்னால் குறுந்தகட்டில் பார்த்த சாப்ளின் படங்களைவிட இணையத்தில் நன்றாக இருக்கிறது. மெளன மொழி படத்தில் சார்லி சாப்ளினை விட்டால் புகழ்பெற்றவர்கள் யாருமே கிடையாது எனலாம். அவர் தேர்ந்தெடுத்த நாடோடி வேடம் அவர் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பாக இருக்கலாம், குழந்தைப் பருவத்திலிருந்து 17 வயதுவரை அத்தனை கஷ்டங்களையும் சந்தித்துவிட்டார்.  13வயதிலேயெ நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார், இன்னும் சொல்லப்போனால் அவர் மேடை யேறியது 4 அல்லது 5 வயதில். அது ஒன்றும் பள்ளிக்குழந்தைகளின் மேடை நிகழ்ச்சி அல்ல. பட்டாளக்காரர்கள் மது அருந்திவிட்டு கலாட்டா செய்யும் நாடக அரங்க மேடை. சினிமா என்பது தோன்றியிருக்காத காலம். சினிமா என்பது சார்லியோடு வளர்ந்தது என்று சொன்னால் மிகையில்லை.

சார்லியின் குழந்தைப்பருவம்.

1889ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி சார்லஸ் பிறந்தார், சாப்ளின் என்பது தந்தைவழி குடும்பத்தின் பெயர். அவருடைய தந்தை ஒரு நாடகக் கலைஞர், தமிழகம் இப்போது டாஸ்மாக்கில் தடுமாறுவது போல விக்டோரியன் மாகாராணி காலத்தில் இங்கிலாந்தில் உழைப்பாளி மக்களை மதுபோதையில் மூழ்கடித்தார்கள். நாடக அரங்கங்களில் நாடகத்தை பார்ப்பதைவிட மக்களும் பெரும்பாலும் பட்டாளக்காரர்களும் மது அருந்துவதற்கு வந்தார்கள். சார்லியின் அப்பா நாடகம் பார்க்கவந்த ரசிகர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு மதுவிற்கு அடிமையாகிப் போனார். சார்லியின் அம்மாவை விட்டு தந்தை பிரியக் காரணமாக இருந்தது மதுபோதை,  தந்தை 37வது வயதில் நோயுற்று மரணமடைந்தார். சார்லிக்கு எல்லாமே அம்மாதான். அம்மா ஒரு மேடை நாடகக்கலைஞர் இளம்வயதில் ஒரு பிரபுவோடு ஆப்பிரிக்காவுக்கு சென்றார்கள் அங்கே சார்லியின் அண்ணன் ஸிட்னி பிறந்தான், அந்த மணம் நீடிக்காமல் இங்கிலாந்து திரும்பிவந்த சார்லியின் அம்மா நாடகசாலையில் நடித்து வாழ்ந்துவந்தார்கள் , அதே நாடக அரங்கில் நடித்த சாப்ளின் என்பவரோடு மீண்டும் திருமணம். அப்படித்தான் சார்லி தாயின் இரண்டாவது கணவனுக்கு பிறந்தவர். நம் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாடு எல்லா சமூகத்திலும் இல்லை, இங்கேயும் அறுத்துக்கட்டுகிற சாதிகள் உண்டு, ஆனால் மேல்சாதிகளின் கலாச்சாரம் தான் இந்தியக்கலாச்சாரம் என்றாகிப் போனபிறகு இங்கிலாந்தின் பண்பாடு வேறுபட்டது. ஆனால் தாய்மை என்பது எல்லா ஜீவராசிக்கும் பொதுவானது, நாடுகளோ, மொழியோ, மதமோ இனமோ தடையல்ல. கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகள் எல்லா தேசங்களிலும் தாய்மார்களிடம்தான் வளர்கிறார்கள் என்பதும் பொதுவிதி.

மதுப்பழக்கத்தில் அடிமையாகிப்போன தந்தையைவிட்டு தாய் பிரிந்துவிட்டார்கள். வாடகைவீட்டில் இந்திய மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கையை வாழ்ந்துவந்த சார்லியின் குடும்பம் அம்மாவுக்கு வந்த தொண்டைவீக்க நோயால் குரல்வளம் பாதிக்கப்பட்டது. அதனால் மேடை நாடகத்தில் பார்வையாளர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். அப்போது சார்லிக்கு ஐந்து வயதிருக்கும், தாயுடன் சென்ற சார்லியை நாடக ஏற்ப்பாட்டளர்கள் மேடையேற்றினார்கள். ‘ஜாக் ஜோன்ஸ்’ என்ற புகழ்மிக்க பாடலை பாடி பார்வையாளர்களை கவர்ந்தார். பாட்டு பாதியளவு வந்தபோது மேடையில் பணமழை பொழிந்தது, பாடலை நிறுத்திவிட்டு சார்லி பணத்தை பொறுக்கியெடுத்தபின் பாடுகிறேன் என்றான். இது சபையினரிடம் சிரிப்பை வரவ்ழைத்தது.  சார்லி ஏறிய முதல்நாடகமேடை, அம்மாவின் கடைசி மேடைநிகழ்ச்சியாகிப் போனது. நாடகங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் மூன்று அறைகொண்ட வீட்டிலிருந்து, இரண்டு அறைகொண்ட வீட்டிற்கு மாறினார்கள், வீட்டில் அம்மா சமைப்பதேயில்லை, சமைப்பதைவிட விடுதியில் வாங்கி சாப்பிடுவது குறைவான செலவு என்று வாழ்க்கையை ஓட்டினார்கள். வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளையும் விற்றுத் தின்னவேண்டிய நிலை ஏற்பட்டது. தனக்குத் தெரிந்த தையல் தொழிலைக் கொண்டு நாடக அரங்கிற்கு உடைகள் தைத்துக்கொடுத்து பிழைத்துவந்தார்கள். சார்லியின் அண்ணன் ஸிட்னி அப்போது இரவுப்பள்ளிக்கூடம் சென்றுவந்தான்.

தன்னுடைய உடைந்துபோன குரல் வளம் வேண்டி தாய் யேசுவிடம் முறையிட்டார்கள், பைபிளை சதாநேர்மும் வாசித்தார்கள். கஷ்டமான காலத்தில்  ஒற்றைத்தலைவலியும் வந்து சேர்ந்தது, அதனால் செய்து வந்த தையல் வேலையையும் செய்யமுடியவில்லை. ஸிட்னி பள்ளிநேரம் போக மீதிநேரத்தில் செய்தித்தாள் விற்பனை செய்து உதவினான். ஒருநாள்பேருந்தில் செய்தித்தாள் விற்கும்போது ஒரு பர்ஸை கண்டெடுத்தான் உடனே நேராக அம்மாவிடம் சென்று கொடுத்தான். அம்மா அப்படியே வைத்துவிட்டார்கள். அம்மாவின் உடல்நலம் கொஞ்சம் தேறியவுடன் பர்ஸைத் திறந்து பார்த்தார்கள், வெள்ளி, செம்பு மற்றும் சில தங்க நாணயங்கள் இருந்தன, மகிழ்ச்சிக்கின் உச்சத்திற்கு சென்று கடவுளே நன்றி ! என்றார்கள். வறுமைச்சூழலில் பர்ஸைத் தவறவிட்டவரின் துரதிஷ்டத்தைக் குறித்த துயரம் விரைவிலேயெ அகன்றது. அதைவைத்து குழந்தைகளுக்கு புத்தாடை நல்ல உணவு, சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றுவந்தார்.


பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதேயில்லை என்ற நிலையில் காலனி நாடுகளை கொள்ளையடித்துவந்த பிரிட்டிஷ் நாட்டில் சார்லியின் குடும்பத்தைப் போல் ஏழ்மைநிலையில் சேரிகளில் நிறைய மக்கள் வாழ்ந்தார்கள். பிரிட்டிஷ் காலனிநாடுகளில் கொள்ளையடித்த செல்வம் பிரபுக்களும் ஆளும் வர்க்கமும் பங்கிட்டுக் கொண்டார்களே தவிற அந்தநாட்டின்  ஆம் ஆத்மிகளுக்கு எந்த பலனும் இல்லை. வறியவர்கள் தெருக்களில் திரிந்தால் அவர்களை காவல்துறை தொழிலகத்தில் கொண்டு சேர்ப்பார்கள். அப்படி சார்லியும் ஸிட்னியும் தொழிலகத்தில் சேர்ந்தார்கள். அம்மாவை தனியாக ஒரு விடுதியில் அடைத்தார்கள். அங்கே வேலைசெய்தால் சாப்பிடமுடியும். சுதந்திரமான வாழ்க்கை கிடையாது. இப்படி வறியவர்களை தெருவில் சுதந்திரமாக விட்டால் கனவான்களிடம் பிச்சை யேந்தியும், சிறு திருட்டுகளில் ஈடுபட்டு தொல்லை ஏற்படுத்துவார்களோ என்றுதான் இந்த ஏற்பாடு. அப்போது சார்லியைப் போல மற்ற குழந்தைகளுக்கு ‘பூச்சிவெட்டு’ நோய் வந்திருந்தது. மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்று அவர்களை தனியாக ஒரு விடுதியில் அடைத்து பராமரித்தார்கள். சார்லிக்கும் ஒருநாள் ‘பூச்சிவெட்டு’ வந்துவிட்டது என்று தலையில் மொட்டையடித்து அயோடின் களிம்பு தடவியிருந்தார்கள். அச்சமயம் சார்லியின் தாய் மகனை காணவந்தார், அப்போது அங்கிருந்த செவிலி, “ அவனுடைய அசிங்கமான முகத்தைப் பார்த்து நீங்கள் எதுவும் நினைத்துக்கொள்ளாதீர்கள்’’ என்று சொன்னார். அம்மா சிரித்துவிட்டு  “அவனுடைய அத்தனை அசிங்கங்களுடன் சேர்த்து நான் இப்போதும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றாராம்.

                                                                                                                                    தொடரும்.....

கருத்துகள் இல்லை: