சனி, 4 மே, 2013

சாதிசமத்துவ போராட்டக்கருத்துக்கள்


தமிழ்நாட்டில் தமிழினத்திற்கான போராட்டம் முடிவடைந்து சாதிவெறி அலைந்து கொண்டிருக்கிறது, இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. பேஸ்புக்கில்  ஒவ்வொரு சாதிக்கும் இளைஞர் சங்கம், என்ற பெயரில் முகவரிகள் உலாவுகின்றன, ஏன் டாக்டரே சாதிவெறியை சொந்த நலனுக்காக தூண்டிவிடுகிறாரே! இது சொந்த நலனா? அல்லது உழைப்பாளி மக்களை சாதீரீதீயில் கூறுபோட யாராவது ஸ்பான்சர் செய்கிறார்களா? என்பதையும் ஆராயவேண்டியுள்ளது. சாதிகள் தோன்றிய விதம் அவரவர் சாதியை மேன்மைபடுத்தி எழுதி ‘வரலாறு’ படைக்கிறார்கள். விவரம் தெரியாத வயசிலேயே இந்த சாதியெல்லாம் நமக்கு மேலே இந்த சாதியெல்லாம் நமக்குக்கீழே என்று பெற்றோர் இல்லையென்றால் அந்த சமூகம் சொல்லிவிடுகிறது. நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு இது புதுசா இருக்கலாம், ஆனா நிலத்தை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புறங்களில் பழய்ய மிச்சசொச்சங்கள் இன்னும் இருக்கிறது. ஊருக்கு வருகிற புதுமனுசன்கிட்ட எந்த வர்ணம்/சாதி கேட்காமல் மரியாதையை தேவையில்லாமல் செலவிடமாட்டார்கள் மனுஷர்கள். ஒருமையில் விளிப்பதா, அண்ணே என்பதா, சாமீ என்பதா அல்லது அப்பச்சி என்பதா ஹோட்டல் இல்லாத ஊரில் தண்ணீயை புழங்குற சொம்புல கொடுப்பதா இல்ல ஈய கிளாசில் இன்னொன்னு கூரையில் சொருகிவச்சிருக்கிற சிரட்டையில கொடுப்பதா? என்பெதெல்லாம் வர்ண்ம் தெரிஞ்சவுடன் தான்.

வெறெந்த நாட்டிலும் இல்லாத சாதிமுறை இந்தியத் துணைக்கண்டத்தில் எப்படி உருவானது?  தமிழகத்தின் சமூகவளர்ச்சியில் தொழில் பிரிவினையால் சாதிகள் தோன்றின என்பதை உவேசா புறநானூற்றின் முகவுரையில் பட்டியல் தருகிறார்.  ஆனால் தொழில் புரியும் வர்க்கங்களுக்கிடையே சமத்துவம் இல்லை. தொழில் செய்யாத சுரண்டல் வர்க்கத்தினர் தொழில் புரிபவர்களுக்கிடையே சாதி உயர்வு தாழ்வுகளைக் கற்பித்து தங்களை உயர்தோரென்றும் உழைப்பாளிகளைத் தாழ்ந்தவர்களென்றும் கருதினர், தொழில் செய்வோர் ஒன்றுபடாமல் தடுத்துவைத்திருந்தனர், உயர்ந்த சாதியர்களின் நீதிநூல்கள் இதை நிலைநாட்டின.

சாதிப்படிநிலையில் கீழுள்ள சாதிகள் தங்களுக்கு மேலே உள்ள சாதிகள் தங்களுக்கு நிகரானவர்கள் என்பதை உருவாக்க சாதிசமத்துவத்தை விளக்கும் நூல்களை எழுதினார்கள். பிராமணர்கள் சாதி அமைப்பின் உச்சியிலிருந்தாலும் அவர்கள் எல்லோரினும் மேம்பட்டவர்கள் என்பதை புராணங்களில் மிகுந்திருந்தாலும் ‘கீழ்ச்சாதியார்’ பிராமணர்களின் சிறப்பைத் தாக்குவதன் மூலம் அவர்களைவிட தாங்கள் உயர்வானவர்கள் என்பதை நிலைநாட்டினார்கள்.

வேளாளர் உயர்வைக் கூறும் நூல் ‘வருண சிந்தாமணி’ 1901ல் கனகசபைப் பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. அதில் வேதம், உபநிசதம், புராணம் என்பது ‘ஆரியவேதம்’ திருக்குறள், சைவத்திருமுறைகள் ‘திராவிடவேதம்’. சைவசமயத்தை பின்பற்றும் சைவர், ஆரிய வேதத்தைப் பின்பற்றும் பிராமணருக்கு மேலானவர் என்று சொல்கிறது, ஆனால் நால்வருணப் பிரிவை ஏற்றுக்கொண்டு தங்களை வைசியரென்றும் மற்ற ஏவல் தொழில்முறை சாதிகளை சூத்திரர்கள் என்று சொல்லத்தயங்கவில்லை. பிற்கால சோழர்கள் காலத்தில் வலங்கை இடங்கை சாதிப்ப்ரிவினை இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வலங்கை சாதியினர் நிலத்தொடர்புடையவர்களாகவும் இடங்கை சாதியினர் வணிகம் , கைத்தொழில்களோடு தொடர்புடையவர்களாகவும் இருந்தார்கள். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின்போது வலங்கை, இடங்கை சாதிச்சண்டைகள் நடந்ததை அனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்பு தெரிவிக்கிறது. வணிகம் செய்தவர் முதலிமார்கள் தெருவில் பல்லக்கில் வந்ததற்கு கவர்னருக்கு புகார்  அளித்திருக்கிறார்கள்.

வலங்கைச் சாதிகளில் நிலப்பிரபுக்கள் தலைமை பெற்றிருந்தனர், அவர்கள் நிலத்தில் உழைப்போரின் உழைப்பில் வாழ்வோர். இடங்கைச் சாதிகளில் பெருவணிகர்கள் தலைமை தாங்கினார்கள், இவர்கள் கைவினைஞர்களின் உழைப்பை சுரண்டி வாழ்பவர்கள். சமூக-அரசியல் ஆதிக்கப்போட்டியில் நிலப்பிரபுக்கள் வலங்கை சாதியினரை தங்களோடு சேர்த்துக்கொண்டு வணிகர்களைத் தாக்கியபோது, வணிகர்கள் இடங்கை சாதியினரைத் தம்பக்கம் சேர்த்துக்கொண்டார்கள். வலங்கை சாதியில் உழைப்பாளிகள் கீழ்ச்சாதியினர், இவர்கள் இடங்கைசாதியினரோடு ஒன்றுபடாமலிருக்க  உயர்சாதியினர்  சச்சரவுகளை உருவாக்கிவந்தனர்.  அந்தத்தீ இன்னும் அணையாமலிருக்க டாக்டர்கள் வேலைசெய்கிறார்கள்.

-தமிழ்நாட்டில் சாதிசமத்துவ போராட்டக்கருத்துக்கள் என்ற நூலிலிருந்து.
ஆசிரியர்- நா.வானமாமலை.

கருத்துகள் இல்லை: