வெள்ளி, 6 ஜூலை, 2012

சுற்றுச்சூழல் சீர்கேடு



இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை, வருடந்தோறும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது, உலகின் தாழ்வான பிரதேசங்கள் கடல்நீரில் மூழ்குகின்றன, நிலத்தடி நீர் குறைந்துகொண்டேவருகிறது இதற்கெல்லாம் என்ன காரணம்?

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் விளைவின் தாக்கம் தான் இவ்வளவு பிரச்சனைகளைன் காரணம்? யார் அப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறார்கள். அரசாங்கமா?  மக்களா? பொருளுற்பதியில் ஈடுபடும் நிறுவனங்களா?

யார் பொருட்களை அதிகமாக நுகர்கிறார்களோ அவர்களால் தான் சூழல் மாசுபடுகிறது! அப்படியானால் வசதி படைத்த நாடுகள் அதிக அளவு மின்சாரத்தை, எரிபொருளை செலவிடுகின்றன. ஏழை நாடுகள் இன்னும் வளர்ச்சிய்டையாத நாடுகளில் மின்சாரமே காணாத மக்கள், கார் பைக் பார்த்திருதா மக்கள் இருக்கிறார்கள். ஆனால் புவியில் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு சகல நாடுகளையும் , ஏழை, பணக்கார நாடு என்ற வித்தியாசம் பார்க்காமல் தான் பாதிப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டிலும் மக்கள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்கிறதால் நுகர்வின் அளவும் மாறுபடுகிறது. அமெரிக்கா ஐரோப்பா வில் உமிலப்படுகின்ற கரியமிலவாயுவால் புவி வெப்பம் அதிகரித்து அது கடல் நீர்மட்டத்திலிருந்து குறைந்த உயரித்திலுள்ள ஏழை வங்காளதேசத்தை தண்ணீரில் மூழ்கடிக்கிறது? இதற்கு யார் பொறுப்பு?

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வருடந்தோறும் உலக நாடுகள் மாநாடுகள் நடத்துகிறார்கள், வளர்ந்த, வளர்ச்சிய்டையாத மற்றும் வளரும் நாடுகளுக்கிடையே ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமாக கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது என்ற வளர்ந்த நாடுகள் குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் இங்கே ஜனத்தொகை இரண்டு நாடுகளுக்கும் சேர்த்து உல்கின் 50 விழுக்காடு அளாவிற்கு உள்ளனர் என்பதை கணக்கில் எடுக்கமறுக்கிறார்கள். உலகமயம் என்ற பெயரில் மூன்றாம் உலகநாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளின் சேரிகள் ஆக்கப்பட்டுவிட்டன. அவர்களின் எலக்ட்ரானிக் குப்பை இங்கே வந்து கொட்டப்படுகிறது, அங்கே காலாவதியான தொழில்நுட்பம் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரும்பு, தாமிரம், ரப்பர், தோல், இன்னும் சூழலை அதிகம் மாசுபடுத்துகிற ஆலைகளை அந்நியமூலதனம் என்ற பெயரில் இங்கே அமைக்கிறார்கள். சுற்றுச்சூழலை பாதிப்பு ஏற்படுத்துகிற நிறுவனக்கள் அரசாங்க இயந்திரத்தை கட்டுப்படுத்துகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும் வேறொரு நீதிமன்றம், நிபுணர் அறிக்கை என்ற பேயர்களில் மோசடி செய்யப்பட்டு ஆலை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மக்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை, நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கமே நாட்டை சீரழிக்கிறது. பன்னாட்டு நிறுவனக்களுக்காக இந்திய வனப்பகுதிகள் அழிக்கப்படுகின்றன, ஒரிஸ்ஸாவில் அமைக்கப்பட்ட பாக்சைட் நிறுவனத்தால் வனப்பகுதியில் வாழ்ந்த மக்கள் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டனர். காடுகளை அழித்து வேறொரு நாட்டின் நிறுவனத்தின் இலாபத்திற்காக இந்தியாவின் பழங்குடியினர் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. இதை ஊடகங்களும் பெரிதாக கருதுவதில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்கள் நலனை கைகழுவிவிட்டு பன்னாட்டு நிறுவனக்களின் நலன்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. 

மாறிவரும் வாழ்க்கை முறையினாலும் சூழல் அதிகளவு பாதிக்கப்படுகிறது, பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியவில்லை. காலை எழுந்தவுடன் பயன்படுத்தும் பால் பாக்கெட் தொடங்கி கேரி பேக் இல்லாமல் யாரும் வீடு திரும்புவதில்லை, மளிகை, காய்கறி, பழங்கள், மாமிசம்,ஹோட்டல் உணவுகள் ஜவுளி என எல்லாமே பிளாஸ்டிக் பொருட்களால் பேக்கிங் செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்க்கையை நடத்திய மக்கள்தான் நாம்.

தமிழகத்தில் ஆறுகள் தொழிற்சாலைகளால் அழிந்துபோயின. பாலாறு தோல் தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத நீராலும் ராட்சத மணல் அள்ளும் இய்ந்திரங்கள் உதவியால் லாபம் ஈட்டியவர்களாலும் அழிக்கப்பட்டது. ஆனால் மணல் இல்லாமல் வீடுகள் எப்படி கட்டுவது, உள்ளூரில் வீடுகட்ட பயன்படுத்தினால் பாதிப்பு இருந்திருக்காது,  தனி நபர் இலாப வெறியில் மணலை அண்டை மாநிலத்திற்கும் கடல் கடந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டதால் அதிக மணல் கொள்ளைபோனது. இன்று குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் ஆறு பயன்படவில்லை. திருப்பூர், ஈரோடு பகுதியில் சாயக்கழிவினால் நிலத்தடி நீர், ஆற்று நீர் மாசடைந்தது. ஏற்றுமதி , அந்நிய டாலர் ஈட்டுவதற்காக ஊக்கப்படுத்தப்பட்டதன் விளைவுகள் தான் இவை.

எதிர்கால சந்ததியினர் இந்தப்புவியில் வாழவேண்டும் என்ற அக்கறை நமக்கு எப்போது வரும். அடுத்த உலகப்போர் குடிநீருக்காக ஏற்படும் என்கிறார்கள். நாடுகளுக்கிடையேயான சண்டையை விட இந்திய மாநிலங்களுக்கிடையில் சண்டையும் ,அண்டை  இன ,மொழி மீதான வெறுப்பு தண்ணீர் பற்றாக்குறையால் வள்ர்க்கப்படுகிறது. எப்படி சமாளிக்கப்போகிறோமோ?

கருத்துகள் இல்லை: