வெள்ளி, 10 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸூம் ஜனநாயகமும்..



அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ், ஓவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரங்கள் அமெரிக்க அரசுக்கு அனுப்பும் ரகசிய அறிக்கைகளையும் இப்போது வெளியிட்டுவிட்டது.திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய செய்திகளை மறுக்கமுடியவில்லை என்னசெய்வது பழிவாங்கல் தான். விக்கிலீக்ஸின் தலைவர் ஜூலியன் அசாங்கே பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். உலகத்திற்கே ஜனநாயகம் பற்றி டியூசன் எடுக்கும் அமெரிக்கா உண்மைச்செய்திகளை வெளியிட்ட விக்கிலீக்ஸின் இணையதளத்தை தடை செய்துள்ளது. எப்படியும் உண்மைகளை மறைக்கமுடியாது. அமெரிக்கா உலகின் பிற நாடுகளில் தூதரகத்தை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் அந்த நாடுகளின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் ஒரு நாடு தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கிறது என்று தெரிந்திருந்தும் அந்த நாட்டுடன் ராணுவதளவாடங்கள் விற்பதற்கு 60பில்லியன் டாலர் அளவிற்கு ஓப்பந்தம் போட்டுள்ளது. அந்த நாடு ஈரானை அமெரிக்கா தாக்கவேண்டும் என திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டுள்ளது. மத்தியகிழக்கில் பல நாடுகளின் முகமூடியையும் கிழித்துவிட்டது விக்கிலீக்ஸ்.உண்மைகளை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸை ஆதரிப்போம்.



விக்கிலீக்ஸ் விவகாரம் பற்றி ஒவ்வொரு நாடும் வெவ்வேறு அணுகுமுறையை கையாண்டுள்ளன. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் விக்கிலீக்ஸிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது, விக்கிலீக்ஸை நடத்துபவர்களுக்கு அடைக்கலம் தரவும் தயாராக உள்ளது. வெனிசூலா அதிபர் ஹூகோ சாவேஸ், அமெரிக்கா பிற நாடுகளில் செய்துள்ள உளவு வேலைகளுக்கு பொறுப்பேற்று ஹிலாரி கிளிண்டன் பதவி விலகவேண்டும் என அறிக்கை விட்டுள்ளார்.இந்தியா அமைதிகாத்து வருகிறது, மன்மோகன் சிங்கிற்கு உள்ளூர பயம் இருக்கத்தான் செய்யும். இப்பதான் ஸ்பெக்ட்ரம், நீரா ராடியா விவகாரம் பிடித்து ஆட்டிவருகிறது அதுக்குள்ள இன்னொரு பூதம் என்னைக்கு கிளம்புதோ தெரியலையே...

கருத்துகள் இல்லை: