வியாழன், 9 மே, 2013

கடவுள் இருப்பு.....

குழந்தைகளுக்கு ஒரு பழக்கம் உண்டு அது ‘போலச்செய்தல்’ அப்படி சின்னக்குழந்தையில ஆரம்பிக்கிற பழக்கம் சாவுறவரைக்கும் தொடருவதுல ஒண்ணு சாமி கும்புடுறது, அது அல்லாவா யிருக்கலாம், இயேசுவாகவோ கிருஷ்ணனாகவோ அல்லது 30 கோடி சாமிகளில் ஒரு சாமியாகவும் இருக்கலாம்.  ஏன் சாமி கும்புடுற? எங்க வீட்ல அப்பா, தாத்தா கும்பிட்டாரு அவங்க சொன்னாங்க நம்மை மீறிய சக்தி ஒண்ணு இருக்கு அதுக்கு நாம கட்டுப்படனும் அதான். குழந்தைங்க சாமி கும்புடுறதை பெரியங்க ஆகா நம்ம குழந்தை என்னமா! விழுந்து கும்புடுறான், பக்தியா இருக்கான் ந்னு பெருமைபடுறதை பாத்துட்டு அவங்கள இன்னும் கொஞ்சம் சந்தோஷப்படுத்தனும் நல்லபேரு வாங்கனும்னு ஆரம்பிக்கும். என்னோட சிறுவயதுல நான் ரெம்ப கடவுள் பக்தியா இருப்பேன், மார்கழி மாசம் பூராவும் காலையில பஜனைக்கு பச்சதண்ணீல குளிச்சிட்டு தெருவழியா கோஷ்டியோட பாடுவேன் நிறைய பாட்டெல்லாம் மனப்பாடம், திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி அர்த்தம் தெரியாம மனப்பாடமா சொல்லுவேன்.  கிராமத்துல வைணவம் என்கிறது ஒரு தனி மதம்! அதை மரியாதையாகவோ அல்லது வியப்பாகவோ அல்லது உயர்வாகவோ பார்ப்பார்கள். என்னொட அண்ணனுக்கு இந்த பழக்கம் சுத்தமா கிடையாது பஜனை, கோவிலு இதை கிண்டல் பண்ணுவான் அதனால வீட்டு பெரியவங்களுக்கு அவனைவிட என்னைய பிடிக்கும். ஆனா இப்ப நிலமை தலைகீழாப்போச்சு. அவன் மெட்ராஸ் போனதுலருந்தே மாறிட்டான், கோயிலுக்கு வரமாட்டான் பெரியார் கட்சியில சேர்ந்திட்டான் இப்படிதான் வீட்டுல முடிவு பண்ணீட்டாங்க! என்னோட பெரியம்மா போனவருச லீவுல சொன்னாங்க, அவனுக்கு நேரம் சரியில்லை அவனை அப்படி (நாஸ்திகமா) பேசவைக்குது, கொஞ்ச நாளானா மாறிடுவான்னு சொன்னாங்க.. நல்லவேளை பேய்பிடிச்சிருக்குன்னு வேப்பிலை அடிக்கல.

இந்திய விடுதலைப்போரில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துல மூனுபேரு சேர்ந்து குண்டு வீசுனாங்க   அந்த குண்டு யாரையும் கொல்லறதுக்கு இல்ல, ஏகதிபத்தியத்துக்கு ஒரு எச்சரிக்கை செய்றதுக்கு அதுல முக்கியமானவர் பகத்சிங் அவருக்கு சோஷலிசத்தில் நம்பிக்கை , அதே சமயம் கடவுள்நம்பிக்கை கிடையாது, நான் ஏன் நாத்திகனானேன்? என்ற புத்தகம் எழுதியிருக்கிறாரு. அந்த புத்தகம் அவர் சிறையில் தூக்குத்தண்டனை கைதியா இருக்கும்போது எழுதுனது.. அதுல அவர் கடவுள் ஏன் மனுசங்களை நல்லபுத்தியோட படைக்கக்கூடாதுன்னு கேள்வி வைக்கிறாறு.. அந்த செய்தியை பேஸ்புக்ல வந்தது, நானும் அதை பிரச்சாரம் பண்ணுனேன்!  அதுக்காகநேத்து என்னொட நண்பர் ஒருத்தர், ஏன் ஹரி ஒனக்கு என்ன பிரச்சனை??? கேட்டாரு. கடவுள் இருப்பை நாம் கேள்வி கேட்டால் நமக்கு பிரச்சனைதான். ஒரு தெய்வீக சக்தியை ஏன் நாடுறோம்? நம்மால முடியாது, அந்த வேலைக்கு நமக்கு இன்னொருத்தர் உதவி செய்யமாட்டார், அதனால கண்ணுக்கு தெரியாத ஒரு சக்திகிட்ட வேண்டுகோள் வைக்கிறோம். கடவுள் எதுக்குன்னா நம்ம தேவையை நிறைவேத்துறதுக்கு, பசங்களுக்கு பரீட்சியில பாஸாகனும் நல்ல மார்க் வாங்கனும், அப்புறம் வேலை கிடைக்கனும், அப்புறம் கல்யாணம், குழந்தை பெறக்கனும், செல்வம் சேரனும் சேர்த்த செல்வம் பாதுகாப்பா இருக்கனும் அப்புறம் என்பையன் நல்லா இருக்கனும் திரும்பவும் கோரிக்கைகள். பிரச்சனைகள் அதிகம் சந்திக்க சந்திக்க அதை தீர்க்க அரசாங்கமோ, நண்பர்களோ சமூகமோ தீர்வுகாணத போது மார்க்ஸ் சொல்றமாதிரி ‘’இதயமில்லா உலகத்தின் இதயம்தான் கடவுள்’’ .

பகுத்தறிவு என்பது மேலைநாட்டு சமாச்சாரம் மாதிரி சிலர் பேசுறாங்க, மேலை நாட்டுல பகுத்தறிவு கிரேக்கத்துல கேள்வி கேட்குற சிந்தனை ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடியே இங்கே சார்வாகம், உலகாயுதம், மீமாம்சம்,சமணம் போன்றவவை கடவுள் இருப்பை கேள்வி கேட்டவை. பகுத்தறிவு சிந்தனையை புத்தர் மகாவீரர் போன்றவர்கள் ஆரம்பித்துவைத்தார்கள் அவர்களையே கடவுளாக மாற்றியது அந்தந்த மதங்கள் அது வேற விசயம். இந்த உலகம் எப்படி உருவானது? யாராவது கட்டுப்படுத்துகிறார்களா? ஜீவராசிகளில் மனிதர்கள் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக எப்படி மாறினார்கள்? இயற்கை சமன்பாடு? உயிர்களின் தோற்றம்? தேடுவதில் கிடைக்காத விடைகளுக்கு அது பரம்பொருள் என்றார்கள் சிலர், ஆனால் சிலர் இந்த உலகம் பொருட்களால், அணுக்களால் ஆனாது என்று பொருள்முதல்வாத சிந்தனையை வளர்த்தார்கள்.  ஆனால் சில விஞ்ஞானிகளே கடவுள் நம்பிக்கையாளராக இருக்கிறார்களே! டாக்டர்கள் நோயிலிருந்து மனித உயிரை காப்பாற்றுகிறார்கள் ஆனால் சிலநேரம் ஆண்டவன் மேல பாரத்தை போடுங்கன்னு சொல்றாரு. ஒருத்தர் ஏதாவது விபத்துல சிக்கி ஆஸ்பத்திரில சேர்த்தா.. பார்க்கவர்றவங்க ஆமா நேரம் சரியில்லை என்ன பண்றது சொல்லுவாங்க அதே நேரம் விபத்துக்கான காரணகாரியத்தை ஆராய்கிறோம். ஒரு ரயில் விபத்துக்குள்ளானால் அந்த டிரைவர் நான் என்ன பண்றது, இப்படி நடக்கனுமுன்னு எழுதியிருக்குன்னா யாரால மாத்தமுடியுமுன்னு சொன்னா நிர்வாகம் ஏத்துக்குமா? நிலப்பிரபுத்துவ சிந்தனை என்பது எல்லாம் அவன் செயல், அதிலிருந்து அறிவியல் முன்னேற்றம் கண்ட முதலாளித்துவ சிந்தனை காரண காரியங்களை ஆராய்வது. ஆனால் மனிதர்கள் அறிவியலில் ஒரு காலையும் மூடநம்பிக்கையில் ஒரு காலையும் வைத்திருக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் நடக்கும் விவாதம் முற்றுப்பெறாது, ஆனால் இந்த விவாதத்தின் வயது 2000 வருடமிருக்கலாம். அதற்கு முன்பே மனிதன் இருந்தான். தாய் தந்தையர் செய்ததை அப்படியே கேள்வி கேட்காமல் நாமும் பின்னர் நம் சந்ததியினருக்கும் அறிவுறுத்த வேண்டுமென்பது ஒருவகை மடமைதான்.

கருத்துகள் இல்லை: